வெள்ளி, 31 ஜனவரி, 2020

1449. கதம்பம் -2

ஜே.சி.குமரப்பா 10
ராஜலட்சுமி சிவலிங்கம்



ஜனவரி 30.  ஜே.சி.குமரப்பாவின் நினைவு தினம்.

பொருளாதார மேதை, காந்தியவாதியான ஜே.சி.குமரப்பா (J.C.Kumarappa)  பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l தஞ்சாவூரில் (4, ஜனவரி,1892) பிறந்தார். தந்தை அரசு ஊழியர். பெற்றோர் இட்ட பெயர் ஜோசப் செல்லதுரை கொர்னிலியஸ். இவரது 12-வது வயதில் குடும்பம் சென்னையில் குடியேறியது. சென்னை கிறிஸ் தவக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். 1913-ல் இங்கிலாந்து சென்று சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ் மற்றும் பொருளாதாரம் பயின்றார்.

l பம்பாயில் சிறிதுகாலம் ஒரு நிறுவனம் நடத்தினார். 1928-ல் அமெரிக்கா சென்று, பொருளாதாரத்தில் மேற்படிப்பு பயின்றவர், இந்தியாவின் ஏழ்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

l இந்தியாவின் ரத்தத்தை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுரண்டுகிறது என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிக் கட்டுரையை காந்திஜியின் முகவுரை வேண்டி அவருக்கு அனுப்பினார். இதுவே இருவருக்கும் நெருக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

l நாடு திரும்பியவர், 1934-ல் ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து ஓராண்டு காலம் பூகம்ப நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். டை, கோட் என இருந்தவர் கதர் ஜிப்பா, பைஜாமாவுக்கு பதிலாக ‘தோத்திஜாமா’ என்ற ஒன்றை வடிவமைத்து அணிந்தார். ‘கொர்னிலியஸ்’ என்ற பெயரை மாற்றி, குடும்ப பெயரான குமரப்பாவை சேர்த்து, ‘ஜோசப் செல்லத்துரை குமரப்பா’ ஆனார்.

l காந்திஜி தண்டி யாத்திரையின்போது ‘யங் இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராக இவரை நியமித்தார். காந்திஜி நினைப்பதை குமரப்பாவின் எழுத்துகள் சொல்லும் என்ற நிலை ஏற்பட்டது. ‘குமரப்பாவுக்கு நன்கு பயிற்சி அளித்துவிட்டீர்களே’ என்று மதன்மோகன் மாளவியா காந்திஜியிடம் பாராட்டிக் கூறியபோது, ‘நான் பயிற்சி அளிக்கவில்லை. அவர் எனக்கு ரெடிமேடாக கிடைத்தார்’ என்றார் காந்திஜி.

l ‘யங் இந்தியா’வில் வெளிவந்த இவரது கட்டுரைகள் ஆங்கிலேய அரசை தடுமாறச் செய்தன. அச்சகத்தை அரசு பறிமுதல் செய்தது. அசராத இவர், தட்டச்சு செய்து நகல்கள் எடுத்து வெளிட்டார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதும் ஆங்கில அரசுக்கு எதிராக கட்டுரைகள் எழுதினார். மூன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

l காந்திஜியைத் தலைவராகக்கொண்ட அகில பாரத கிராமத் தொழில்கள் சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். குடிசைத் தொழிலுக்கான பல உபகரணங்கள் இங்குள்ள ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்டன. இதற்கென்று ஒரு பத்திரிகையையும் நடத்தினார். குடில் ஒன்றைக் கட்டிக்கொண்டு 20 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்தார்.

l ‘இயற்கையோடு இயைந்த உற்பத்தி முறைதான் இயற்கை ஆதார வளங்களை சிதைக்காது’ என்பார். காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துகளுக்கு வடிவம் கொடுத்து அதை பொரு ளாதார அறிவியலாக மாற்றியவர். பல நூல்களை எழுதியுள்ளார். அதில் பலவற்றுக்கு காந்திஜி முன்னுரை எழுதியுள்ளார்.

l ஜெர்மானியப் பொருளியலாளர் ஷமாக்கர் தனது நூலில் ‘இந்திய தத்துவ மேதை’ என்று குமரப்பாவைக் குறிப்பிட்டுள்ளார். இவரது சித்தாந்தங்களை தனது வாதங்களுக்கு மேற்கோளாகவும் காட்டியுள்ளார்.

l பைக்கில் ஏறி காடு, மலைகளில் சுற்றுவார். புகைப்படக் கலையி லும் ஈடுபாடு கொண்டவர். சூழலியலைக் கெடுக்காத, வளம் கொடுக் கும் பொருளியல் மாதிரியை வடிவமைத்த பேரறிஞர் எனப் புகழப்பட்டார். 1960-ல் நோய்வாய்ப்பட்டவர் 68-வது வயதில், காந்திஜியின் நினைவு தினத்தன்று (ஜனவரி 30) மறைந்தார்.

[  நன்றி: https://www.hindutamil.in/news/blogs/201092-10.html  ]

குமரப்பா மறைந்தவுடன் 'கல்கி'யில் வந்த நினைவுக் குறிப்பு.



தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

கருத்துகள் இல்லை: