புதன், 31 மே, 2017

735. சிறுவர் மலர் - 3

பாப்பா இலக்கணம்
சுத்தானந்த பாரதியார் 



‘பாப்பா மலர்’ப்  பகுதியில் தமிழ் இலக்கணப் பாடங்களும் வரும்!

1939 -இல் ‘சக்தி’ இதழில் வந்த முதல் கட்டுரை இதோ!
( எழுதியவர் பெயர் இல்லாவிட்டாலும் இது ‘சக்தி’ ஆசிரியரான சுத்தானந்த பாரதியார் எழுத்து தான் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை !  )




 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவு:
சிறுவர் மலர்

செவ்வாய், 30 மே, 2017

734. சுந்தர ராமசாமி - 3

சுராவின் எழுத்துக்கோர் ஷொட்டு
பசுபதி

மே 30.  பிரபல எழுத்தாளர் அமரர் சுந்தர ராமசாமியின் பிறந்தநாள். 

  திண்ணை யில் 2001-இல் நான் எழுதிய ஒரு வெண்பா : 

சொல்லேர் உழவர்
மண்நேய நல்லுரத்தில் மார்க்ஸீய செம்புனல்பாய்
பண்ணைப் பயிர்பெற்ற பாராட்டைக் காணீர்!
தொராந்தோ இயல்விருது சொல்லேர் உழவர்
சுராவின் எழுத்துக்கோர் ஷொட்டு.

இது  பிரபல எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி (சு.ரா) வுக்குக் கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக் கழகத்தின் தென் ஆசியப் பிரிவும், 'தமிழ் இலக்கியத் தோட்ட 'மும் இணைந்து மே 25, 2001 -அன்று 'இயல் விருது ' வழங்கிய நிகழ்ச்சி கண்டு எழுதியது.  இதுவே “இலக்கியத் தோட்ட”த்தின் முதல் இயல் விருது என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்று வழங்கப்பட்ட, வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது :

இயல் விருது
திரு சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி 1931ல் நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951ல் தோட்டியின் மகனை மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951ல் புதுமைப்பித்தன் நினைவு மலரை அவர் வெளியிட்டபோது அவரது முதல் கதையான முதலும் முடிவும் அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் 60க்கு மேற்பட்ட சிறுகதைகளும் பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். 1988ல் காலச்சுவடு இதழை தொடங்கி எட்டு இதழ்களையும் ஒரு ஆண்டு மலரையும் பதிப்பித்தார்.

தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டு, பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கினார். எழுத்தாளர்களிடையே ஒரு தொடர்பு மையமாக அவர் ஆற்றிய பணி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கியமானதாகும்.

இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். இவருடைய முதல் நாவலான புளியமரத்தின் கதை ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, ஹிபுரு போன்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஜேஜே சில குறிப்புகள் நாவல் தமிழ் எழுத்து நடையிலும், கட்டுமானத்திலும், கருத்திலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. நவீனத் தமிழ் இலக்கியத்தில், இவர் எழுதிய நினைவோடைகளும், மொழிபெயர்ப்புகளும் தமிழுக்கு கிடைத்த பெரிய கொடை. தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள்.

சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் நேர்காணல்கள் அனைத்துமே அவரின் உயர்ந்த தரத்துக்கு சாட்சியங்கள். எந்தப் படைப்பென்றாலும் அக்கறையுடனும் ஆழமாகவும் விரிவாகவும் கலைத்தன்மை குலையாமலும் நேர்மையுடன் வெளிப்படுத்தியவர். தமிழ் நவீனத்துவத்தின் போக்குக்கும் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய பங்கை ஆற்றியவர் திரு சுந்தர ராமசாமி.

கடந்த ஐம்பதாண்டு காலமாக அவர் தொடர்ந்து ஆற்றிவந்த சேவைக்காக திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2001ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.


தொடர்புள்ள பதிவுகள்:
 களும்

திங்கள், 29 மே, 2017

732 சுப்புடு -1

டொராண்டோவில் சுப்புடு 


டொராண்டோ -94
மே 28, 2017. இன்று பிரபல இசை விமர்சகர் ‘சுப்புடு’ அவர்களின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப் படுகிறது.

டொராண்டோவிற்கு அவர் 94-இல் வந்தபோது, அவரைச் சந்தித்ததும், அவரிடம் இல்லாத அவருடைய பல விமரிசனங்களின் நகல்களை அவருக்குக் கொடுத்ததும் பற்றி ஏற்கனவே சங்கீத நினைவுகள் -1  என்ற பதிவில் எழுதியிருக்கிறேன்.

டொராண்டோ திருப்புகழ் அன்பர்களுடன் சுப்புடு
அவர் திருப்புகழ் அன்பர்களின்  இசைவழிபாடு ஒன்றுக்கு வந்து, எலெக்ட்ரானிக் ஆர்கனில் வாசித்து, பின்  அவருடைய பல இசை ‘அனுபவங்களை’யும்  எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.  ஒரே ஜோக் மயம் தான்!

நான் அவரை வரவேற்றுப் பேசினபோது , அவர் ரங்கூனில் 1928-இல் திருவிசை நல்லூர் ராமசாமி சாஸ்திரிகளின்  மிமிக்ரை நிகழ்ச்சியில், ‘குட்டி நாய்’ போல் சாஸ்திரிகள் போலவே சப்தங்கள் எழுப்பி , அவருடைய ‘சபாஷ்’ பெற்றதைப் பற்றிச் சொன்னேன்.  உடனே குறுக்கிட்ட சுப்புடு, “ என்னடா, நான் நாய் மாதிரி குரைக்கிறேன் என்கிறாயா? “ என்று ஒரு போடு போட்டார். மேலும், அவர் ‘கல்கி’யின் ஊக்கத்தால் தொடர்ந்து எழுதியது பற்றி எல்லாம் குறிப்பிட்டதை  ரசித்தார்.

எங்கள் திருப்புகழ் குரு தாரா கிருஷ்ணன், கிருஷ்ணன் மாமா இருவருக்கும் சுப்புடு மிகவும் நெருங்கியவர் ஆதலால் எங்களிடம் தயக்கமின்றிப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். காரசாரமான கமெண்ட்டுகளும்  நடு நடுவே  இருந்தன !

ஜோக் ஸெஷன் !

 உதாரணம்: அவரிடம்  ஒரு பிரபல வித்வானின் வர்ணங்களைப் பற்றிக் கேட்டேன். “போடா, போ! அதெல்லாம் சாயம் போன வர்ணம்டா! நான் ஒரு வலஜி ராக வர்ணம் செய்திருக்கிறேன்! பாலமுரளி பாடிக் கொடுத்திருக்கிறார்! நீ கேட்டுப் பார் ! “ என்றார்.

அவர் முத்துசாமி தீக்ஷிதரைப்  பற்றி எழுதி ‘வாங்கிக் கட்டினதை’ப் பற்றிக் கேட்டுக் கொஞ்சம் ‘உசுப்பி விட்டேன்’. அவர் சொன்னதை எல்லாம்  இன்னொரு நாள் எழுதுகிறேன்! :-)

இப்போது அவர் டொராண்டோவிலிருந்து அனுப்பின இரு கட்டுரைகள் இதோ!




கட்டுரையில் உள்ள படம் கீழே: ( இடது பக்கத்தில்  எங்கள் குரு தாரா கிருஷ்ணன் )

[  நன்றி: மீனா ராமநாதன் ] 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்
சுப்புடு

ஞாயிறு, 28 மே, 2017

733. சங்கீத சங்கதிகள் - 122

மைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 2




மே 28. மைசூர் வாசுதேவாச்சாரியாரின் பிறந்த தினம். 

‘சுதேசமித்திரனில்’ 1956-இல் வெளியான மூன்று கட்டுரைகள் இதோ.







[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]



தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

வியாழன், 25 மே, 2017

730. மு.சி.பூரணலிங்கம் பிள்ளை - 1

திறனாய்வுச் செம்மல் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை
முனைவர் வே.மாணிக்கம்


மே 25. பூரணலிங்கம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.
====
தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர் பூரணலிங்கம் பிள்ளை.

இவர் நம் மண்ணின் மரபுகளையும், மக்களின் அறிவியல் சிந்தனைகளையும், இயற்கையோடு இணைந்த வழிபாட்டு நெறிமுறைகளையும் உயர்த்திப் பிடித்தார். பிற்காலத்தில் திராவிட  இயக்கம் கையிலெடுத்த பல கொள்கைகளுக்கு இவர்தான் முன்னோடியாகத் திகழ்ந்தார் எனலாம்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமான நன்செய் வயல்கள் சூழ்ந்த "முந்நீர்ப்பள்ளம்" என்னும் கிராமத்தில் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தார். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய "பூரணலிங்கம்" என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த சைவர்கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி, ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1902ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பாடத்தை நீக்க முயன்றபோது பூரணலிங்கம் பிள்ளை அதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்தார்.

1885ஆம் ஆண்டு பூரணலிங்கனார் பரிதிமாற்கலைஞரையும் அழைத்துக் கொண்டு ஹர்சன் பிரபுவைச் சந்தித்து செம்மொழியாகும் தகுதி தமிழுக்கே முழுமையாக உள்ளது என வாதிட்டார். தமிழ்மொழியின் தொன்மையையும், உலக மனித இனத்தை ஒன்றென அன்பு கொள்ளும் நாகரிகத்தையும், இயற்கையோடு இணைந்து சிந்திக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகளையும், பல்வேறு மொழிகளுக்குத் தாயாகிய போதும் தன் தனித்தன்மை குன்றாத இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்டு விளங்குவதையும் தொகுத்து அரசுக்கு அவர் மனு அளித்தார். தமிழைச் செம்மொழியாக்க வேண்டிய தேவையை ஊர் ஊராகச் சென்று அவர் முழங்கினார்.

பூரணலிங்கம் பிள்ளை எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். "கருணாமிர்தசாகரம்" போன்ற அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களைக் கூட முழு மூச்சில் வாசித்து முடிப்பார். இவர் எழுதுவதிலும் வல்லவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது "ஞான போதினி" என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் "நீதி" என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.

தமிழ் நாட்டில், தமிழரின் பண்பாட்டையும், அறிவியல் சிந்தனைகளையும், தொழில் நுட்பங்களையும், மரபுகளையும், பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கும் வகையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வலியுறுத்தி எழுதியும், பேசியும் வந்தார். இவற்றின் பயனாக பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு இராமநாதபுரம் மன்னர் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். அம்முயற்சியின் விளைவே இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

பூரணலிங்கனாரின் படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழி மாற்றம், சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது.

இளமையில் கற்ற தமிழ்க் கல்வியும், தமிழறிஞர்களின் நட்பும்தான், இவரைத் தமிழ்ப் பற்றாளராக மாற்றின.

மேலப்பாளையம் பள்ளியில் பயிலும்போது, சுந்தரம் பிள்ளையிடம் இலக்கணமும் முத்துசாமிப் பிள்ளையிடம் திருக்குறளும் பயின்றார்.

பிற்காலத்தில், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர்
கோவை சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.

தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியா" என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற ஆங்கில நூலை எழுதினார்.

"பத்துத் தமிழ் முனிவர்கள்" என்ற நூலில் மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள சமயச் சான்றோர் பதின்மர் வரலாற்றையும், அவர்களுடைய தத்துவங்களையும் விளக்கியுள்ளார்.

இவர் எழுதிய, இராவணப் பெரியோன், சூரபதுமன் வரலாறு ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை. பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும் ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆசிரியர் பணியிலிருந்து 1926இல் ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளத்திற்குத் திரும்பி வந்த பின் பல்வேறு கட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1940) வழி நடத்தினார். உயர் ஜாதி அல்லாத மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் உழைத்ததை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் எழுதிய கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.

மனித குலத்தார் அனைவருக்கும் தன்னலத்திற்கு அப்பால் சமூக நீதிக்கான ஒரு இலட்சிய வாழ்க்கை இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டியவர் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை. அவ்வாறு வாழ்ந்த பூரணலிங்கம் பிள்ளை, தமது 81வது வயதில், 1947ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

அவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவரது தமிழ்ப் பணிக்கும், தமிழ் உணர்வுக்கும் அளிக்கப்பட்ட உயரிய மரியாதையாகும்.

[ நன்றி:- தினமணி]

தொடர்புள்ள பதிவு
மு. சி. பூரணலிங்கம் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா

புதன், 24 மே, 2017

731. அ.முத்துலிங்கம் - 1

இளையவரும் முதியவரும்
அ.முத்துலிங்கம்


மே 2017  ‘தாய்வீடு ‘ இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. முத்துலிங்கம் கேட்ட கேள்விகளும், என் விடைகளும் உள்ளன. 










[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி :  ஆசிரியர்,  http://thaiveedu.com/  ] 

செவ்வாய், 23 மே, 2017

729. கம்பதாசன் - 1

பிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன்


மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம்.
====
கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிய வாய்ப்பில்லை. இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கண்டிருப்பார்.

""காளிதாசன் (சம்ஸ்கிருத மொழிக்கவிஞர்-காளிதாசன் பாரதியாரின் புனைபெயர்), பாரதிதாசன் (சுப்புரத்தினம்), சுரதா (சுப்புரத்தின தாசன்), கம்பதாசன் இவர்கள் நம்நாட்டு முதல்தர கவிஞர்கள். இவர்கள் பிறவிக் கவிஞர்கள்'' என்று பாரதிதாசன் வரிசையில் கம்பதாசனையும் இணைத்து மூத்த எழுத்தாளர் வ.ரா., புகழ் மகுடம் சூட்டி மகிழ்ந்தது ஒன்றே போதும்.

""கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இயற்றப்பட்டவை. அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று!'' என்று கம்பதாசனின் "முதல் முத்தம்' நூலுக்கு அளித்த முன்னுரையில் பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டியுள்ளார்.


இயற்கையிலேயே கவியுள்ளத்துடன் பிறந்த கம்பதாசன், புதிய கோணத்தில் சிந்தித்து தமிழன்னைக்கு வாடாமலராக கவி மலர்களைச் சூட்டியவர். சென்ற நூற்றாண்டில் புகழ் பூத்த கவிஞர்களுக்கு உற்சாகம் அளித்தவர்கள், வழிகாட்டியாக மனத்தில் வரித்தவர்கள் மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். கம்பதாசன், பாரதி, பாரதிதாசன் பாதையில் பாட்டெழுதத் தொடங்கி, பிறகு தமக்கெனப் புதுப்பாதை அமைத்துக் கொண்டார்.

திண்டிவனம் அருகில் உள்ள உலகாபுரம் என்ற கிராமத்தில், சுப்பராயலு-கோகிலாம்பாள் தம்பதிக்கு 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஒரே மகன். மற்றவர்  ஐவரும் பெண்கள். பெற்றோர் "ராஜப்பா' என்று செல்லமாக அழைத்தார்கள்.


நடிப்புக் கலையிலே நாட்டம் ஏற்பட்டதால், ஆரம்பப் பள்ளிக்கு மேல் இவர் நாட்டம் கொள்ளவில்லை.  நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகங்களுக்குப் பாட்டெழுதினார். கம்பதாசனுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. நாடகங்களில் பாடுவார். பாடகராகவும் புகழ் பெற்றார். ஹார்மோனியமும் வாசிப்பார்.

தொழிலாளர் தோழராகவும், சோஷலிஸ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவருமான கம்பதாசனுக்குத் திரைப்படம் கைகொடுத்தது. பழைய முறையைப் பின்பற்றி திரைப்படங்களில் பாடல்களை எழுதி வந்த காலத்தில், தமிழில் மறுமலர்ச்சிப் பாடல்களை எழுதத் தொடங்கினார். சமதர்மக் கொள்கை கொண்ட கம்பதாசன், தாம் எழுதிய திரைப்படப் பாடல்களில் முற்போக்குக் கருத்துகளை எளிய நடையில் புகுத்தினார்.

முக்தா சீனிவாசன் இயக்கிய "ஓடி விளையாடு பாப்பா' எனும் திரைப்படத்துக்கு கம்பதாசன் எழுதிய பாடல் ஒன்று, உயிரோட்டமுள்ள இலக்கியமாகத் திகழ்கிறது. திரைப்படப் பாடலாக இருந்தாலும், கவிதை நயம் மிக்க இலக்கிய அந்தஸ்தை அப்பாடல் பெற்றுவிட்டது.

தமிழ் உணர்வுமிக்க அவருக்குப் போட்டிகள் நிறைந்த திரையுலகம் அதிக வாய்ப்பைத் தராவிட்டாலும், குரல் அசைவுப் படங்களுக்கு (டப்பிங்) அதிகம் எழுதியிருக்கிறார். அவற்றிலும் அவர், எளிய தமிழையே கையாண்டார்.

"வானரதம்' என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கப் பாடலில் எளிய தமிழைப் பயன்படுத்தினார். இந்தி மொழியின் நயம் தெரிந்து நேர்பொருளைத் தராமல், தமிழ் உருவில் தக்கபடி மாற்றியது பற்றிப் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.

""இந்தியில் "என்னுடைய வணக்கத்தை எடுத்துப்போ! என் மதிப்பான வந்தனத்தைத் தூக்கிச் செல்' என்று மொழியாக்கம் செய்திருப்பார்கள். ஆனால், நான் அவ்வாறு செய்யவில்லை. இந்தியில் வணக்கம் பற்றிச் சொல்வதாகச் சொற்கள் அமைந்தாலும், விடை தரும்போது காதலை, கனிவாகச் சொல்வதுதான் சிறப்பு. உதட்டசைவுக்கும் இசை மெட்டுக்கும் எளிமையாகப் பொருந்தும் வகையில் "மேரா சலாம் லேஜா' என்பதை -

"அன்பைக் கொண்டே செல்வாய்!

 அன்பைக் கொண்டே சொல்வாய்!'

என்று அமைத்தேன்'' என்று பாடி உணர்த்தியதை, கம்பதாசனைப் பற்றி முழுமையாக அறிந்த பேராசிரியர் மின்னூர் சீனிவாசன் கூறியுள்ளார்.

சோஷலிஸம், பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேச்சளவில் நிறுத்தி விடாமல் - கவிதையில் மட்டும் சேர்த்து விடாமல், தான் ஈட்டிய பொருளின் பெரும்பகுதியை சிரமம் என்று வருபவர்களுக்கு உடனே தந்து உதவுவார்.

தொழிலாளி என்றால் மில் தொழிலாளி, மோட்டார் தொழிற்சாலை தொழிலாளி என்று மட்டும் அவர் கருதாமல், சமூகத்தில் அல்லல்பட்டு, வாழ்க்கையில் எப்போதும் கண்ணீர் விடும் பலதரப்பட்ட உழைப்பாளிகளைப் பற்றி அவர் கவிதைகள் எழுதியுள்ளார்.

மனிதனை மனிதன் இழுக்கும் கொடிய வழக்கம் சுதந்திரம் பெற்ற பிறகு கூட நம் நாட்டில் இருந்தது. கை ரிக்ஷா இருந்த காலத்தில் வாழ்ந்தவர் கம்பதாசன்.

"மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனியுண்டோ?' என்று பாடினார் பாரதி. ஆனால், கை ரிக்ஷாக்காரர் துயர வாழ்க்கையைக் கவிதையாக வடித்துக் கண்ணீர் சிந்தியவர்; சிந்த வைத்தவர் கம்பதாசன்.

கம்பதாசன் கவிதையில் புதுமைக் கருத்துகள் பொங்கித் ததும்பும். பாட்டாளிகளின் பசித்துயரை - இதயக் குமுறலை கம்பதாசன் பல கவிதைகளில் பாடியுள்ளார். இவ்வுலகில் எல்லா பொருள்களுக்கும் இடம் உண்டு. ஆனால், பசி இளைப்பாற இடமுண்டோ? என்று கேள்விக்கணை வீசுகிறார் கவிஞர்.

""பாம்பு இளைப்பாற புற்று,

பருந்து இளைப்பாற கூடு

கண் இளைப்பாற தூக்கம்

கழுதை இளைப்பாற துறை...என்று

பறவைகளும் மற்ற விலங்கினங்களும்

இளைப்பாறிட இடம் உண்டு - எங்களுக்கு...?''

என்ற கவிதை இதுவரை எந்தக் கவிஞரும் சிந்திக்காதது.

கம்பதாசனின் மனித நேயமிக்க பார்வையில் கொல்லர், செம்படவர், உழவர், படகோட்டி, மாடு மேய்ப்பவர்... இவ்வாறு பலவித உழைப்பாளிகளைப் பற்றிய கவிதைகளை எழுதியுள்ளார்.

மற்ற கவிஞர்களைவிட, தன் கவிதை அதிகம் பேசப்பட வேண்டும் என்று நினைத்தாலும், மற்ற கவிஞர்களை மதிக்கும் பழக்கமுடையவர்.

கம்பதாசனின் கவித்திறமையை அடையாளங்காட்டி "கனவு' என்ற கவிதை நூல் 1941-இல் வெளிவந்தது. விதியின் விழிப்பு, முதல் முத்தம், அருணோதயம், அவளும் நானும், பாட்டு முடியுமுன்னே, புதுக்குரல், தொழிலாளி என்ற தலைப்புகளில் கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

ஆதிகவி, சிற்பி என்ற நாடக நூல்களும், முத்துச் சிமிக்கி என்ற சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. திரைப்படப் பாடலாசிரியர் என்ற அளவில் மக்களிடையே புகழ்பெற்றுள்ள கவிஞர் கம்பதாசன் 347 கவிதைகள் எழுதியுள்ளார்.

"கம்பதாசனின் கவிதைத் திரட்டு' என்ற பெயரில் சிலோன் விஜயேந்திரன் ஒரு நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஏராளமான திரைப்படங்களுக்குப் பாடல்கள், டப்பிங் படங்களுக்கு உதட்டசைவு உரையாடல்கள் எழுதி வறுமையில்லாமல் பொருளீட்டிய கம்பதாசன், பெண்களைப் பற்றி மிக உயர்வாகப் பாடியிருக்கிறார்.


அவ்வாறு பாடிய கவிஞரின் காதல், தோல்வியில் முடிந்தது. எந்தப் பெண் குலத்தைப் பற்றி உயர்வாகப் பாடினாரோ, அவரைக் காதலித்த அந்தப் பெண்குல மாதரசி, அவரை விட்டுச் சென்றுவிட்டார். அவர் இதயம் நொறுங்கியது. காச நோயும், ஈரல் நோயும் அவரை அணைத்துக் கொண்டன.

உடல்நலக் குறைவு காரணமாக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிக்கனல் கம்பதாசன், 1973-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள் இயற்கை எய்தினார்.

""மின்னல் போலாடுமிந்த வாழ்க்கையே

 வானவில் போலுமே இளமை ஆனதே;

 ஆம்! துன்ப கதையுனதே''

என்று 1953-ஆம் ஆண்டு எழுதிய பாடல், இவர் வாழ்க்கையிலும் நிஜமானது. கம்பதாசனின் வாழ்வும் துன்பக் கதையாக முடிந்தது.

""கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே''

""கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்''

என்ற திரைப்பட பாடல்கள் ஒலிக்கும் வரை கம்பதாசன் புகழும் நிலைத்து நிற்கும்.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கம்பதாசன் - தமிழ் விக்கிப்பீடியா

திங்கள், 22 மே, 2017

728. தமிழ்வாணன் - 4

தமிழ்வாணனைப் பற்றி ... 
புனிதன் 



மே 22. தமிழ்வாணனின் பிறந்தநாள். 

குமுதத்தில் உதவி ஆசிரியராய் இருந்த ‘புனிதன்’ எழுதிய கட்டுரை இதோ.
=================
நான் பத்திரிகைத் துறைக்கு வந்ததே ஒரு விபத்து மாதிரிதான். 

பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு எழுத்தில் ஆர்வம். குறிப்பாகக் கவிதைத் துறை. கி.ஆ.பெ., அவர்கள் 'தமிழ்நாடு' என்று ஓர் அரையணாப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் 'ஒட்டக் கூத்தன்' என்ற புனைப்பெயரில் எனது கவிதைகள் (மரபு) இடம் பெற்றன. 

முருகு சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'பொன்னி'யில் பாரதிதாசன் பரம்பரை என்ற சங்கப் பலகை என் கவிதைக்கு இடமளித்திருக்கிறது. 

நானாக இரண்டு மேடை நாடகங்கள் எழுதி, மேடையேற்றி நடித்தும் இருக்கிறேன். 

இத்தனையும் தெரிந்திருந்தும், என் தந்தையார் எனது எழுத்தார்வத்தின் மென்னியைத் திருகியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு என்னைப் பொறியியல் துறையில் புகுந்தே ஆகவேண்டும் என்று. முதலில் கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில், எல்.டி.எம்.,மில் சேர்த்தார். அதை முடிக்கு முன், இரண்டாண்டு போதுமென்று இழுத்து வந்து அவரது விசைத் தறிக் கூடத்தை மேற்பார்க்க விட்டார். 

புனிதன்
அப்போதும் என் கவனம் அந்த நாள் 'பிரசண்ட விகடன்,' 'ஆனந்த போதினி பத்திரிக்கைகளில் என் எழுத்தை அச்சேற்றி ஆனந்த படுவதிலேயே குறியாய் இருந்தது. விட்டாரா அப்பா? 

முன்னாள் ராணுவத்தினர் தொழில் பயிற்சி முகாமாய் இருந்த ஐ.டி.ஐ., சிவிலியன்களுக்கு திறந்து விடப்படுவதாய் '51ல் செய்தி வர, அந்தக் கல்லூரியில் தொழில் பயிற்சி பெறும்படி சொன்னார். என்ன தொழில்?
'விண்ணப்பித்து வை. கிடைக்கிற தொழிலில் சேர்ந்து கொள்.'
விண்ணப்பித்தேன். துரதிர்ஷ்ட வசமாய் நான் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களில் நல்ல மார்க் எடுத்திருந்ததால், 'ரேடியோ மெக்கானிஸம்' துறையில் அரசு உதவிச் சம்பளத்தோடு (ரூ.25) இடம் கிடைத்தது.
தி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடை ராஜாஜி அவர்கள் குடியிருந்த பஸ்லுல்லா ரோடு வெட்டிக் கொண்டு செல்லும் அந்த மூலைத் தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்தது அன்றைய ஐ.டி.ஐ., நான் சென்னைக்கு வந்து சேர்ந்ததே அப்போதுதான். அதற்குப் பிறகு நான் என் சொந்த ஊரான தர்மபுரி வாசத்தை இழந்துவிட நேரும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை. 

தமிழ்வாணன் சீண்டல் 
 
என் தோழர், குரு, வழிகாட்டி தமிழ்வாணன் 
உஸ்மான் ரோடு குறுக்குத் தெருக்களில் ஒன்றான வியாசராவ் தெருவில் பிரம்மசாரி தமிழ்வாணன், தன் சகோதரர் ஆனாருனாவுடன் குடியிருந்தார். ஆனாருனா நடத்தி வந்த மெஸ்ஸில் ராயவரம் நடராசன் சாப்பிட்டு வந்தார். 

நடராசன் எனது ரேடியோமெக்கானிஸம் வகுப்பு தோழர். எங்கள் விடுதி (பேரக்ஸ்)சில் எனக்கு அடுத்த கட்டில் அவருடையது. நாங்கள் இருவரும் நல்ல தோழர்கள். அவர்தான் ஒருநாள் என்னை அழைத்துச் சென்று தமிழ்வாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ' இவர் கூடப் பத்திரிக்கைக்கு எழுதுவார் அண்ணே,' என்றார். 

தமிழ்வாணன் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 'என்ன எழுதுவீங்க' என்று கேட்டார். 

'கவிதைதான் எழுதுவேன்,' என்றேன் மகா கர்வத்தோடு. 

உடனே கைதட்டி ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தாரே பார்க்க வேண்டும், எனக்கு மரண அடி. தொடர்ந்து, 'இப்பல்லாம் கவிதையை யார்சார் படிக்கிறாங்க? நீங்க ஏழெட்டு கதை எழுதிட்டு வந்து கொடுத்துட்டுப் போங்க. அதிலே ஏதாவது ஒண்ணை செலகட் பண்ணிக் கல்கண்டிலே வெளியிடலாம்,' என்றார். 

தமிழ்வாணன் மட்டும் என்னை இப்படிச் சீண்டி விடாமல் இருந்திருந்தால், நான் பத்திரிகைத் துறைக்கு வந்திருப்பேனா? என்பது சந்தேகம்தான்.
அவர் அப்படிச் சொன்னதும், எனக்குள்ளிருந்து ஓர் உத்வேகம். பேரறிஞர்களின் அங்கீகாரம் பெற்றுப் பெரியவர்களுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, சிறுவர்களுக்கான கதைகள் ஏழெட்டு எழுதித் தந்தால், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போடுவதாய் ஒருத்தர் சொல்லப் போச்சா? அதையும் பார்த்விடுவோம்! 

தமிழ்வாணன் வீட்டிலிருந்து என் விடுதிக்கு இரண்டு கி.மீ., தூரத்துக்குள்தான் இருக்கும். வந்து சேர்வதற்குள் இரண்டு சிறுவர் கதைகளுக்கான பிளாட் உதயமாயிற்று. அப்போதே முனைப்பாக உட்கார்ந்து எழுதி முடித்து விட்டேன் இரண்டு கதைகளையும்.
மறுநாள் ராயவரம் நடராசனிடம் இரண்டு கதைகளையும் கொடுத்து, 'கொண்டு போய் உங்கள் தமிழ்வாணனிடம் கொடுத்து விடு,' என்று சொல்லி அனுப்பிவிட்டேன். 

அதற்குப் பிறகு இரண்டு வாரத்துக்கு மேல் நான் தமிழ்வாணன் இருந்த திசையிலேயே திரும்பவில்லை. பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, நான் என் விடுதியில் இருந்து பனகல் பார்க் சென்று கொண்டிருந்தேன். பின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது.
திரும்பிப் பார்த்தால், தமிழ்வாணன்! அவரது அட்டகாச சிரிப்போடு என்னை நெருங்கி வந்து தோளில் தட்டிக்கொடுத்தார். 'என்ன நீ, கல்கண்டு பார்க்கலையா?' என்றார். 

'நான் அதெல்லாம் பார்க்கிற வழக்கமில்லை,' என்றேன் விறைப்பாக.
மறுபடியும் அதே சிரிப்பு. 'சரி, இப்ப பார்,' என்று அந்த வாரத்துக் கல்கண்டை என் முகத்தெதிரே நீட்டினார். 

ஓவியர் ரவியின் அட்டைப் படம். உள்ளே புரட்டினேன். அட்டையும், அடுத்த பக்கமும் புரட்டியவுடனே என் கதை. சிறுவர்களுக்காக நான் எழுதிய முதல் கதை! 'சண்முகம்' என்ற பெயரில் வெளிவந்திருந்தது.
நான் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். 'உம்... மேலே புரட்டு...' புரட்டினேன். நடுப் பக்கத்துக்கு அப்பால் என்னுடைய அடுத்த கதை. 'சுந்தரம் என்ற பெயரில். நான் கொடுத்தனுப்பிய இரண்டு கதைகளையும் வெளியிட்டு இருந்தார். சண்முகம் +சுந்தரம் =சண்முக சுந்தரம் - என் இயற்பெயர். 

அன்றிலிருந்து தமிழ்வாணனுக்கும் எனக்கும் நட்பு இறுகியது. 
 
கல்கண்டு உதவியாசிரியர் ஒருநாள், 'படித்து முடித்த பிறகு என்ன செய்யப் போறே?' என்றார் என்னிடம் கொஞ்சம் சீரியஸாக.

 'ஏதாவது வேலை தேடணும்...' என்று இழுத்தேன். 

என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு -படிப்பு முடியுமுன்னரே- ஆளாகியிருந்த நேரம் அது. 

'நீ என் கூடவே இருந்துடு,' என்றார். 

'சரி. இப்ப நான் என் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக வேண்டியிருக்கு. அதான் சொல்லிக்கிட்டுப் போக வந்தேன்,' என்று விடைபெற்றேன். 

நான் திருமணம் முடித்துக் கொண்டு உறவிலே பெண்- திரும்பி வந்து தமிழ்வாணனைப் பார்க்கக் குமுதம் அலுவலகம் சென்றேன். 
சிந்தாதிரிப் பேட்டை அருணாசல நாயக்கன் தெருவிலிருந்து குமுதம் அலுவலகம், இப்போதுள்ள கெல்லீஸ் கட்டிடத்துக்குப் பெயர்ந்த வேளை அது. 

தமிழ்வாணனின் உதவியாளராக, கல்கண்டு துணையாசிரியராக, அப்போது ரா.கி.ரங்கராஜன் இருந்தார். 

ஆசிரியரும், துணையாசிரியரும் 'வா, போ' என்று ஒருமையில் பேசிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். விசாரித்தபோது தெரிந்தது. இங்கு வருமுன்னர் இருவரும் 'சக்தி' பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்று! ரா.கி.ர., அப்போதெல்லாம் கொஞ்சம் 'ரிசர்வ் டைப்,' அவரிடம் பேசுவதற்கு எனக்கு கூச்சமாய் இருக்கும். 

தமிழ்வாணனுக்கு அடுத்த சீட் ரா.கி.ர.,வுடையது. நான் போயிருந்த சமையம் அந்த சீட் காலியாக இருந்தது. 'ரங்கராஜன் சார் வரலியா? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன். 

மணியடித்து ஆபிஸ் பையனை வரவழைத்து, 'அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரைக் கொண்டா,' என்றார். 

பையன் ரிஜிஸ்தரைத் கொண்டு வந்து என் முன் பிரித்து வைத்தான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. 1952, ஜூன் மாத ஆரம்பத்திலேயே என் பெயர் பதிவாகியிருந்தது. நான் இரண்டாவது வாரம்தான் சேர்ந்தேன். 

சற்றுப் பொறுத்து, 'சரி, வா. முதலாளியைப் பார்த்து விட்டு வரலாம்,' என்று கூட்டிப் போனார். 

அப்போதுதான் நான் முதன் முதலாக ஆசிரியர் எஸ்.ஏ.பி., அவர்களை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தது. ஏதோ காலங் காலமாய் உடனிருந்து பழகியவரைப் போன்ற அன்னியோன்னியத்துடன் அவர் புன்னைகைத்து கை குலுக்கியபோது, சிலிர்த்துப் போனேன். 'தமிழ்வாணன் உங்களைப் பற்றிச் சொன்னார். நல்லா செய்யுங்க. செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு, என்றார். 

அதற்கு மேல் அங்கு இருக்கத் தேவையில்லை என்ற பாவைனையில் தமிழ்வாணன் என்னை ஜாடையாக நோக்கித் தலையசைத்தார். நானும் எழுந்து கொண்டேன். அவருடன் வெளி நடந்தேன். 

அப்போது எனக்குப் பத்திரிகைத் துறையில் முன் அனுபவம் என்று சொல்லப் போனால், பள்ளியில் படிப்பு முடித்த கையோடு வந்த தேர்தலுக்கான, ஓட்டர் லிஸ்ட் புரூப் பார்த்த அனுபவம்தான். தாலுகா ஆபிஸில் ஓய்வு பெற்ற தாசில்தார் முனுசாமி முதலியார் புரூப் திருத்த நல்ல பயிற்சி அளித்திருந்தார். அதுவே பெரிய தகுதி போல் த.வா., பாராட்டினார். 

மற்றபடி பத்திரிக்கை தயாரிக்கத் தேவையான அத்தனை அறிவுக்கும் அஸ்திவாரம் போட்டவர் தமிழ்வாணன்தான்.

[ நன்றி:  www.appusami.com

தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 20 மே, 2017

727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1

தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் 

தேமொழி (முனைவர் ஜோதி தேமொழி )



மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம்.
===

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri) அவர்கள் பின்னங்குடி சாமிநாத சாஸ்திரி, மங்களாம்பாள் இணையரின் மூத்த மகனாக, திருச்சி மாவட்டம் பாலக்கிருஷ்ணம் பட்டியில் ஜூலை 29, 1890 ஆண்டு பிறந்தவர். இந்த ஆண்டு இவரது 125 ஆம் ஆண்டு நிறைவு ஆண்டாகும்[1]. பன்மொழி அறிஞரான பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் தமிழிற்கும் வடமொழிக்கும் ஆற்றிய இலக்கியப்பணிகள் குறிப்பிடத்தக்கது.

தமிழிலக்கணப் பணியும் மொழிநூற் பணியும் செய்த பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தொல்காப்பிய மொழி பெயர்ப்பு பணியை 1919ல் தொடங்கி 1956ல் நிறைவு செய்துள்ளார் [2]. தொல்காப்பிய எழுத்ததிகார மொழிபெயர்ப்பை 1930 லும், சொல்லதிகார மொழிபெயர்ப்பை 1937 லும், பொருளதிகார மொழிபெயர்ப்பை 1945 லும் வெளியிட்டார். தொல்காப்பியக் குறிப்பு என்று பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் எழுதிய நூல்கள் மிகச் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன.

தமிழ் அகராதியியலில் ஒரு திருப்புமுனையாக இருந்த “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி” உருவானதிலும் (1912ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை) இவருக்குப் பெரும் பங்கு உண்டு, அகராதியின் துணை ஆசிரியர்களுள் ஒருவராகப் பணியாற்றினார். வடமொழி நூலான பதஞ்சலியின் “மகாபாஷ்யா”வும் இவரால் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இவர் வடமொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனந்தவர்த்தனர் என்பவரின் “தொன்யாலோகம்” என்னும் வடமொழி அணி இலக்கண நூலை “தொனிவிளக்கு” எனத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் திருச்சி ஆண்டார் வீதியில் வசித்தவர். பள்ளிப்படிப்பை திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளியிலும் (National High School), கல்லூரிப் படிப்பை திருச்சி தூய வளனார் கல்லூரியிலும் (St. Joseph’s College), திருச்சியின் முதல் கல்லூரியான பிஷப் ஹீபர் கல்லூரியில் (இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் இக்கல்லூரி “எஸ்.பி.ஜி. கல்லூரி” என்று அழைக்கப்பட்டது, SPG College – Society for Propagation of Gospels) இளங்கலை கணிதமும் பயின்றார். கணித உதவி ஆசிரியராக திருவையாறு உயர்நிலைப்பள்ளியிலும் (இக்கால ஸ்ரீனிவாச ராவ் மேல்நிலைப்பள்ளி), திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளியிலும் சிறிது காலம் பணிபுரிந்தார்[3].

இலக்கணம் மற்றும் தத்துவ அறிஞரான நீலகண்ட சாஸ்திரியாரிடம் வடமொழியும், ஏரணம் (logic) மற்றும் அணியிலக்கணம் (Nyaya and Alankara Sastra/Poetics and Literary Criticism) ஆகியவற்றை சென்னை ராஜாதானிக் கல்லூரி பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரியாரிடமும், மொழியியலை (Mimamsa /Linguistics) காசி இந்துப் பல்கலைக்கழக பேராசிரியர் சின்னசாமி சாஸ்திரியாரிடமும் பயின்றார். வடமொழியில் முதுகலைப்பட்டமும், சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார் [1].

உரையாசிரியராகவும், மொழிபெயர்பாளராகவும் பலநூல்கள் எழுதிய இவருக்கு, தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்” என்ற பெருமையும் உண்டு.   ‘History of Grammatical Theories in Tamil and their relation to grammatical literature in Sanskrit’ (தமிழ் இலக்கணக்கொள்கை வரலாறும் அதன் வடமொழி இலக்கண உறவும்) என்ற ஆய்வறிக்கையை சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1930 ஆம் ஆண்டு சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழில் முதல் முனைவர்ப்பட்ட ஆய்வேடாக இது இருப்பினும் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அக்காலத்தில் தமிழ் இலக்கிய ஆய்வு அறிக்கைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. பிறகு, இந்த ஆய்வு 1934 ஆம் ஆண்டில் “History of Grammatical Theory in Tamil” என்ற நூலாகவும் வெளிவந்தது. இவரது சிறந்த மொழியியற் புலமையையும், மொழியிலக்கண அறிவையும், ஒப்பியல் ஆய்வுத் திறமையையும்,   கண்டு வியந்து இவரது பெயரான பி.சா. சுப்பிரமணியம் என்பதைச் சுருக்கி செல்லமாக “பிசாசு” என்றும் அழைக்கப்பட்டார். கணிதத்தில் இளங்கலை, வடமொழியில் முதுகலை, தமிழில் முனைவர் பட்டமும், ஆசிரியப் பயிற்சியும் என இவரது கற்றல் பலதுறைகளையும் தொட்டுச் சென்றுள்ளது.

தொல்காப்பியமும் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியாரும்:
தொல்காப்பியப் பதிப்பாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார். செம்மொழிகளான தமிழுக்கும் வடமொழிக்கும் இடையே தொன்றுதொட்டு தொடர்பு இருந்துவருகிறது. இருமொழிகளிலும் இலக்கண இலக்கிய படைப்புகளையும் ஆழ்ந்து பயின்ற பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் இம்மொழிகளுக்கிடையேயான உள்ள இலக்கணப் பொதுமைகள், வேற்றுமைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அறிவதில் ஆர்வும் கொண்டார்.

சொல்லதிகாரத்தின் முதல் நான்கியல்கள் “தொடரியல்” பற்றிப் பேசுவன எனவும், கிளவியாக்கம் எழுவாய் பயனிலைத் தொடர்புகள், தொடர் இயைபு, வழுக்கள் சிலவற்றை ஏற்றல் பற்றிக் கூறுவது எனக் கூறியுள்ளார் [4].

தொல்காப்பியத்தை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்ற பெருமையைக் கொண்டவர் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார்[1]. முதலில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இலக்குவனார் (இலக்குவனார், பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் மாணவர்) என்றும் சில தவறான கருத்துகள் உலவி வந்ததும் உண்டு.   இந்நாள் வரை பலரும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

பலர் தொல்காப்பியத்தின் பகுதிகளை மட்டும் மொழிபெயர்த்திருந்தாலும், தொல்காப்பியம் முழுவதையும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரி, தமிழறிஞர் முனைவர் சி. இலக்குவனார், வெ. முருகன் ஆகிய மூவர் மட்டுமே [5]. ஆங்கில அறிஞரான வெ. முருகன் அவர்களின் தற்கால மொழிபெயர்ப்பு அதன் மொழிநடைக்காகப் பாராட்டப் படுவதுண்டு.

தொல்காப்பியத்தின் புகழ் மேனாட்டு மொழி ஆய்வாளர்களைச் சென்றடையும் அரும்பணியைச் செய்த முன்னோடிகள் பேராசிரியர்கள் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியாரும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் என்று தமிழறிஞர் சி. இலக்குவனார் பாராட்டுவார். ஆனால் நாவலர் மேற்கொண்ட ஆய்வு தொல்காப்பியம் முழுமைக்குமாக அமைந்திருக்கவில்லை. முழுமையான ஆய்வாக இருந்தாலும், பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்களின் தொல்காப்பிய ஆய்வில் வடமொழி சார்பின் தாக்கம் அதிகம் என்ற கருத்து தமிழறிஞர்களிடையே உண்டு. பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் ‘அந்தணர் மறை’, என்னும் சொற்றொடருக்கு ‘scriptures of the Brahmins’ எனப் பொருள் தரும் பொழுது, தமிழறிஞர் இலக்குவனார் அதை மறுத்து ‘book of the learned’ எனப் பொருள்கொள்வதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தொல்காப்பியர் வடமொழி இலக்கணங்களின் அடிப்படையில் தொல்காப்பியத்தைப் படைக்கவில்லை என்பதை உறுதிபடப் பல்வேறு சான்றுகளுடன் இலக்குவனார் நிறுவியுள்ளார்[6].

பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியாருக்கும், இலக்குவனாருக்கும் தமிழில் வடமொழியின் தாக்கம் பற்றிய கருத்துவேறுபாடுகளும் எழுந்ததுண்டு. திருவையாறு கல்லூரியின் முதல்வர் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் பணியாற்றிய பொழுது அவரது மாணவரான இலக்குவனார், பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் வடமொழியை உயர்த்திப் பிடிக்கும் கருத்துகளை முன்வைக்கும் பொழுது அவருக்கு எதிர் குரல் கொடுத்துள்ளார். இதனால் இலக்குவனார் பல தொல்லைகளுக்கும் ஆளானதாகத் தெரிகிறது. “தகுதியற்ற தலைவரின்கீழ் தமிழ்க் கல்லூரியின் நிலை” என்ற துண்டறிக்கை ஒன்றினை வெளியிட்டு தனது கண்டனக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சி. இலக்குவனார்[7].

வடமொழி சார்பு இருந்தாலும் தமிழின் தனித்தன்மைகளைச் சுட்டிகாட்டியுள்ளார் என்பதும் மறுக்க முடியாத உண்மையும் கூட. ம.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியாரின் சொல்லதிகாரக் குறிப்பு நூலுக்கு வழங்கிய மறுப்புரைகளில், “வினைக்கு வேற்றுமையுருபைச் சேர்ப்பின் அது பெயராய்த் தமிழில் ஆகின்றது; அவ்வாறு வடமொழியில் இல்லை” என்று சுட்டிக்காடியுள்ளார்[8].

பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து, வீரசோழியம் என்ற வடமொழி சார்ந்த இலக்கணச் சிந்தனை, பாணினீயம், நிருக்தா, கயாதரம், கச்சாயனம் போன்ற வடமொழி நூல்களுடன் தொல்காப்பியம் ஒப்பிடப்பட்டாலும், தொல்காப்பியத் தனித்தன்மையும் கூறுகிறார் என்று பேராசிரியர் க.பூரணச்சந்திரன் சுட்டிக் காட்டுகிறார் [8]. அத்துடன் வடமொழியில் இலக்கணக் கருத்துகளையும், தமிழ் இலக்கணக் கருத்துகளையும் ஒப்பிட்டு ஆராய விரும்புவோர்க்கு இவை மிகச் சிறப்பான கையேடுகளாக உதவக்கூடியவை இந்நூல்கள் என்றும் பரிந்துரைக்கிறார்.

இவரது நூல்களின் இடம் பெறும் குறிப்புகளில் இருந்து, லண்டனிலுள்ள பேராசிரியர் ஆர்.எல்.டர்னர், பாரிஸிலுள்ள பேராசிரியர் ஜூல்ஸ் பிளாக், சிகாகோவின் மொழியியல் பேராசிரியர் லெனார்ட் புளூம்ஃபீல்டு, கோபன்ஹேகன் பேராசிரியர் ஹோல்கர் பெடர்சன், நார்வே பேராசிரியர் ஸ்டென் கோனோவும், எடின்பர்கிலிருந்த ஏ.பி.கீத் ஆகியோரது பாராட்டுரைகள் இவரது நூல்கள் உலகப்பெரும் ஆராய்ச்சியாளர்களால் எப்படி மதிக்கப்பட்டன என்றும் தெரியவருகிறது. அத்துடன் இலத்தீன் அல்லது ரோமன் எழுத்துகளில் தொல்காப்பியத்தை ஒலிபெயர்த்து, ஆங்கில மொழிபெயர்ப்புடன் (Tolkappiyam in Roman transliteration and English translation) வழங்கங்கப்பட்ட விதமும் உலக மொழியியல் அறிஞர்களால் பாராட்டு பெற்றது[8].

கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை கார்டினர் (Rev.Allan F.Gardiner) அவர்களால், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் 1917 முதல் 1926 வரை கீழைமொழித்துறைப் பேராசிரிராகவும் (Professor of Oriental Studies, Bishop Heber College, Trichinopoly), துறைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அப்பொழுது இளங்கலை மாணவர்களுக்கு, 1919 ஆம் ஆண்டு கால்ட்வெல் அவர்களின் திராவிட மொழியிலக்கணம் கற்பிக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது கால்டுவெல் தமிழ்மொழி பற்றிக் கூறியவை தமிழ் இலக்கணநூல்களில் குறிப்பிடப்படுள்ளனவா என்று ஒப்பிட்டு ஆராயும் நோக்கில் தொல்காப்பியத்தை ஆழ்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு மேற்கொண்ட ஆய்வை “செந்தமிழ்” பத்திரிக்கையில் 1927 ஆம் ஆண்டு அறிக்கையாகவும் வெளியிட்டார். தான் மாணவருக்கு இலக்கணம் கற்பிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஆர்வம் அவரது தொல்காப்பிய ஆராய்ச்சிக்கு வித்திட்டதை தனது நூலின் முகவுரையிலும் குறிபிட்டுள்ளார்[8].

பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் (1932 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு வரை) பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வடமொழி பேராசிரியராகவும், வடமொழித் துறைத் தலைவராகவும் 1942 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரைப் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் துறைத்தலைவர் பதவியேற்றபிறகு, வடமொழி கற்பித்தல் உயிர்த்தெழுந்தது. சிறப்புப் பாடங்கள், ஆங்கில வழி விரிவுரைகளால் கவரப்பட்டு பிற்காலத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக வடமொழி ஆய்வாளராகப் பணியாற்றிய ‘தாமஸ் டி பர்ரோ’ (Thomas T. Burrow) போன்றவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழி கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினர்[1].
பணி ஓய்விற்குப் பிறகும், திருவையாறு திரும்பி தனது மொழிப்பணியைத் தொடர்ந்தார். காஞ்சிப் பெரியவரின் அறிவுரையையும் ஆசியையும் பெற்று பதஞ்சலியின் மகாபாஷ்யாவை 4000 பக்கங்கள் கொண்ட 14 தொகுப்புகளாக ஆங்கிலத்தில் 1953 ஆம்ஆண்டில் மொழிபெயர்த்து முடித்தார். இவரது மொழிப்பணியைப் பாராட்டி இவருக்கு பல பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட்டன. ‘வித்யாரத்னா’ (காசி), ‘வித்யாநிதி’ (கேரளா), ‘வித்யாபூஷணா’ (கர்நாடகா), மஹோபாத்தியாய (அலகாபாத்), ‘வாணி திரிவேணி பிரயாக’ (காஞ்சி மடம்) என்ற பட்டங்கள் இவரைத் தேடி வந்தன. காஞ்சியின் மகாப் பெரியவர் ‘வாணி திரிவேணி பிரயாக’ என்ற பட்டம் வடமொழியையும், தமிழையும் குறிப்பதாகவும், இந்த இரண்டு மொழிகளின் பணிக்கு பின்புலத்தில் உதவிய ஆங்கிலம் சரஸ்வதி நதியைக் குறிப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழ், வடமொழி, ஆங்கில மொழிப் புலமைகளையும் தவிர்த்து ஜெர்மன், ஃபிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளையும் அறிந்ததிருந்த பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் 40 க்கும் மேலான நூல்களையும், பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்[1].

எளிமையை விரும்பிய இத்தமிழறிஞர் பல மாணவர்களுக்கு கல்விக்கான, தேர்வுக்கான கட்டணங்களை தாமே வழங்கி உதவியுள்ளார். மாணவர்களுக்கு நான்கு வேதங்களையும், தனது ஓய்வுகாலத்தில் பாமரமக்களுக்கு திருக்குறளும் கற்பித்து வந்தார். அயராது மொழிப்பணியில் ஈடுபட்டிருந்த இத்தமிழறிஞர் தமது 87 வது அகவையில் (மே 20, 1978 அன்று) திருவையாறு நகரில் மறைந்தார்[1].
______________________________________________________________________________________
உதவிக்குறிப்பு:
தமிழ், வடமொழி, ஆங்கிலம் என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொருவிதமாகவும், ஒவ்வொரு மொழி எழுத்தையும் பலவிதத்தில் கலந்து பலவிதமாகவும் இவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் பதிவிடப்படும் நிலையுள்ளது. எனவே, இவரது பெயரைக் கொண்டு இணையத்தில் இவரைப்பற்றித் தகவல் தேடும் பொழுது கீழ் காணும் பல வகைகளிலும் அவரது பெயர் கிடைக்கலாம்

பி. சா. சுப்பிரமணிய சாத்திரி (https://ta.wikipedia.org/s/4l9s) என்று கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பதிவிட்டுள்ளது. சாஸ்திரி என்பது சாத்திரி என்று தமிழ்ப்படுதப்பட்டது போலவே, ஆங்கிலத்தில் எழுதும்பொழுதும் சாஸ்திரி என்பது பலவித உச்சரிப்புகளுடன் வலம் வருகிறது. அவற்றில் சில, பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார், பி. சா. சுப்பிரமணிய சாத்திரி, பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார், பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி, டாக்டர் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார், பி.எஸ்.சுப்பிரமணியம், P.S. சுப்பிரமணிய சாஸ்திரியார், Prof.P.S.Subrahmanya Sastri, Dr.P.S.Subrahmanya Sastri, P. S. Subrahmanya Sastri


இவரது நூல்கள்:
A book Tamil grammar, orthography with elaborate commentary, 1937
A critical study of Valmiki-Ramayana, 1968
An Enquiry Into the Relationship of Sanskrit and Tamil, 1946
Comparative Grammar of the Tamil Language, 1947
Historical Tamil Reader, 1945
History of Grammatical Theories in Tamil and Their Relation to the Grammatical Literature in Sankrit, 1934
Lectures on Patanjali’s Mahabhashya, 6 volumes, 1950s and 1960s
Mummaiyāl ulakāṇṭa Mūrtti Nāyan̲ār carittiram: tirunīr̲u uruttirākṣam pañcākṣaram ivaikaḷin̲ makimaiyuṭan̲ : Periyapurāṇattaiyum Kantapurāṇa mūlattaiyum oṭṭi el̲utapper̲r̲atu, 193?
Tamil̲ mol̲i ilakkaṇam, 1930
Tamil̲mol̲i nūl, 1936
Teyvappulavar Tiruvaḷḷuvan̲ār iyar̲r̲iya Tirukkur̲aḷ: poruṭpālum kāmattuppālum, 1949
Thirukuratkurippu
Tolkāppiyac collatikārakkur̲ippu, 1930
Tolkappiyam Porulatikāram with English Translit, 1949
Tolkāppiyam, the earliest extant Tamil Grammar: text in Tamil and Roman scripts with a critical commentary in English. Poruḷ-Atikāram – Tamil poetics, Part 3, 1956
Tolkāppiyam: the earliest extant Tamil grammar : the earliest extant Tamil grammar : with a short commentary in English, 1930
Tolkāppiyam-Collatikāram, 1945
Tolkappiyam-eluttatikaram: with an elaborate commentary, 1937
Ton̲iviḷakku: translation of Sanskrit Dhvanyālōka – Ānandavardhana, ‎P. S. Subrahmanya Sastri – 1944.
Vaṭamol̲i nūlvaralār̲u, 1946
______________________________________________________________________________________
படம் உதவி:
https://commons.wikimedia.org/wiki/File:P_S_Subrahmanya_Sastri_(1890-1978).png
http://www.thehindu.com/multimedia/dynamic/02483/24fr_Sastri_jpg_2483518e.jpg
______________________________________________________________________________________
சான்றாதாரம்:
[1]The First Tamil Ph.D, by, DR. V. KAMESWARI
http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/dr-ps-subrahmanya-sastri-a-sanskrit-and-tamil-scholar-whose-125th-birth-anniversary-was-on-july-29-2015/article7456140.ece
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/celebrating-a-prolific-writer/article7457686.ece
[2]வளர்தமிழ்ச் சிந்தனைகள், முனைவர் மு.முத்துவேலு
[3] P.S.சுப்பிரமணிய சாஸ்திரியார் -தமிழ் மொழிநூல் வல்லுநர், http://thamilkalanjiyam.blogspot.com/2015/06/ps.html
[4] தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (சேனாவரையம்), http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/II_Year/matt08/html/mat08010tmp3.htm
[5] தமிழ்ச் செவ்விலக்கிய மொழிபெயர்ப்புகள், பேராசிரியர். க.பூரணச்சந்திரன், சிறகு http://siragu.com/?p=16509
[6] இலக்குவனாரின் பன்முக ஆளுமை, தொல்காப்பிய ஆராய்ச்சி, முனைவர் க. இராமசாமி (பொறுப்பு அலுவலர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), http://literaturte.blogspot.com/2011/10/multi-personality-of-drsilakkuvanar.html
[7] வாழ்க இலக்குவனார்! , விடுதலை http://viduthalai.periyar.org.in/20100206/news08.html
[8] தொல்காப்பியக் குறிப்புரை, பேராசிரியர். க.பூரணச்சந்திரன். சிறகு, http://siragu.com/?p=15928

[ நன்றி: http://siragu.com/?p=18087 ]

தொடர்புள்ள பதிவுகள்:
பி. சா. சுப்பிரமணிய சாத்திரி : விக்கிப்பீடியாக் கட்டுரை

வெள்ளி, 19 மே, 2017

726. சங்கீத சங்கதிகள் - 121

அருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 1
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 


மே 19. அரியக்குடியாரின் பிறந்த தினம்.

1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த இரு பாடல்கள் இதோ!






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

வியாழன், 18 மே, 2017

725. எம்.வி.வெங்கட்ராம் - 1

"மணிக்கொடி' எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம்
 பா.முத்துக்குமரன்



மே 18. ‘மணிக்கொடி’ எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் பிறந்த நாள்.
====

தோற்றத்தில் எளிமை; படைப்புகளில் முதிர்ச்சி; வாழ்ந்த காலம் வரையிலும் கள்ளமற்ற குழந்தைத் தனமான முக அமைப்புடன் எளிதில் காணக் கிடைக்காத அழகிய சிரிப்பு; கும்பகோணம் வெற்றிலையும், பன்னீர்ப் புகையிலையுமாய் வெற்றிலைச் சிவப்புடன் சேர்ந்து சிரிப்பு மணக்கும் வாயுடன் வலம் வந்தவர் - இத்தனை பீடிகைக்கும் சொந்தக்காரர் "மணிக்கொடி' எழுத்தாளரும் மூன்று எழுத்துகளால் (எம்.வி.வி.) இலக்கிய வட்டாரத்தில் அழைக்கப்படுபவருமான எம்.வி.வெங்கட்ராம்.

""பேசாமலே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை; எல்லோரிடமும் இப்படித்தான். எந்த மனிதனிடமும் வெறுப்போ, கசப்போ தோன்றாத, தோன்ற முடியாத மனது இவனுக்கு''- மோகமுள் நாவலில் ஒரு பாத்திரமாகவே தனது தோழரான வெங்கட்ராமைப் படைத்து அவரது இயல்பைப் பதிவு செய்துள்ளார் தி.ஜானகிராமன். இருவரும் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

கும்பகோணத்தில், சௌராஷ்டிரக் குடும்பத்தைச் சேர்ந்த வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்கு 1920-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி பிறந்த எம்.வி.வி., தனது ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதிக்கு சுவீகாரப் பிள்ளையானார். பி.ஏ., பொருளாதாரம் படித்த அவர், தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்தார். பின்னர் முழுநேர எழுத்தாளரானார்.

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியுள்ள வெங்கட்ராமின் முதல் சிறுகதையான "சிட்டுக்குருவி' அவரது 16-வது வயதில், 1935 டிசம்பர் 15-ஆம் தேதியிட்ட மணிக்கொடி இதழில் வெளியானது. தமிழ் இலக்கியத்தை பண்டிதர்களிடமிருந்து மீட்டுக் கொடுத்தவர் மகாகவி பாரதி. அவருக்குப் பின் தமிழ்மொழி, இலக்கிய மறுமலர்ச்சி இயக்கத்தில் ஏற்பட்ட தேக்கத்தைப் போக்கியதில் மாதமிருமுறை வெளியான "மணிக்கொடி' இதழுக்குப் பெரும் பங்கு உண்டு. இத்தனை சிறப்பு மிக்க அந்த இதழில் 1938 பிப்ரவரிக்குள் 15 சிறுகதைகளை எழுதிவிட்டார் எம்.வி.வி. அந்தக் காலகட்டத்தில் "மணிக்கொடி' ஆசிரியராக பி.எஸ். ராமய்யா இருந்தார்.



1941-1946-ஆம் ஆண்டுகளில் கலா மோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களில் எம்.வி.வி. அடிக்கடி எழுதியுள்ளார். ""ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜு, வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியவர்கள் தழுவலாகவோ சொந்தமாகவோ எழுதிய நாவல்களையும், கலைமகள், ஆனந்தவிகடன் உள்ளிட்ட மாத, வார இதழ்களையும் ஆர்வத்துடன் படித்ததால் நானும் ஏன் எழுதக் கூடாது? என்ற அபாயகரமான ஆசை எனக்குள் மூண்டது. இந்த ஆசை தவிர்க்க முடியாத துன்பமாகி எழுதுகிற முயற்சியில் ஈடுபட்டேன்'' என்று தான் ஒரு எழுத்தாளனாக உருவானதை மணிக்கொடி பொன்விழா மலரில் எம்.வி.வி.யே குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தொடங்கிய எழுத்து ஆர்வம் 2000-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அவர் மறையும் வரை தொடர்ந்தது என்றே சொல்லவேண்டும். எழுதாத போதும், எழுத முடியாத போதும், எழுதுவது பற்றிச் சிந்தனை செய்வதே அவரது இயல்பாக இருந்தது.




மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பஸ்தராய் இருந்தார் எம்.வி.வி. ""சென்னை பாண்டிபஜார் பழங்கட்டடம் ஒன்றின் மாடியறை. அதில் கூரை உயரத்துக்குப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், அந்த சிறு அறை ஐந்தாறு இருண்ட குகைகளாக மாற்றப்பட்டிருந்தது. அது ஒரு பதிப்பாளர் அலுவலகம். சென்னைக்கு வெங்கட்ராம் அவ்வப்போது வந்து அந்தக் குகைகளில் தங்கி, படுத்து, குளித்துத் துணி உலர்த்தி, தனிமை கிடைத்த நேரங்களில் அந்த இருட்டில் அயராமல் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார். பொருளாதாரப் பாதுகாப்பு படைத்திராத முழுநேர எழுத்தாளர் வேறென்ன செய்ய முடியும்?''-அசோகமித்திரன் கட்டுரைகள் நூலில் எம்.வி.வி. பற்றிய நினைவுகளை அசோகமித்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

""சென்னையில் எழுத்தாளனாகப் புகுந்து முதன்முதலில் பசியின் சுகத்தை உணர்ந்தேன்'' என்று சுய வாக்குமூலமே தந்துள்ளார் வெங்கட்ராம். வளமாக கலைஞன் வாழ்ந்தால், அவனுடைய படைப்பாற்றல் வற்றிப்போகும் என்கிற உண்மையைத் தமிழகம் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது என்பது அவரது ஆதங்கம்.


நித்தியகன்னி, இருட்டு, உயிரின் யாத்திரை, அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள், வேள்வித் தீ, காதுகள் ஆகியன வெங்கட்ராமின் நாவல்கள். மாளிகை வாசம், உறங்காத கண்கள், மோகினி, குயிலி, இனி புதிதாய், நானும் உன்னோடு, அகலிகை முதலிய அழகிகள், எம்.வி. வெங்கட்ராம் கதைகள், முத்துக்கள் பத்து, பனிமுடி மீது கண்ணகி ஆகியன அவரது சிறுகதைத் தொகுப்புகள்.

தி.ஜானகிராமன், க.நா.சு., மௌனி ஆகியவர்களைப் பற்றி எம்.வி.வி.யின் "என் இலக்கிய நண்பர்கள்' கட்டுரை பொக்கிஷப் படைப்பு. "நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற தலைப்பில் பெரும் தலைவர்களைப் பற்றி 40-க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார்.

மணிக்கொடி எழுத்தாளர்களில் எஞ்சி இருப்பவர்களுக்கு இடம் கொடுக்கவும், தரமான எழுத்தாளர்களைத் தேடி இடம் தரவும் "தேனீ' என்ற இலக்கிய இதழைத் தொடங்கி சில காலம் நடத்தினார் எம்.வி.வி. தி.ஜானகிராமனுக்கு இலக்கிய அந்தஸ்தைத் தேடித்தந்த "ரத்தப்பூ' சிறுகதை "தேனீ'யில் வெளியாயிற்று.

ஒரு நாவல் போல் மற்றொரு நாவல்; ஒரு சிறுகதைபோல் இன்னொரு சிறுகதை இருக்கக் கூடாது என்பது வெங்கட்ராமின் கருத்து. அதற்கேற்ப அவரது படைப்புகள் அமைந்தன.

தாயையும், தாய்மையையும் தெய்வநிலையில் வைப்பதே பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அதிலிருந்து மாறுபட்டதாய் எம்.வி.வி.யின் "பைத்தியக்காரப் பிள்ளை' கதை அமைந்துள்ளது. மனமுரண்களை அடிப்படையாகக் கொண்ட "பூமத்திய ரேகை' சிறுகதை அவரது எழுத்து ஆளுமைக்கு ஓர் உதாரணம். ஆனந்த விகடனில் 1970-களில் மாதத் தொடர் நாவலாக வந்த "நஞ்சு' வித்தியாசமான படைப்பு.

"பாலம்' இதழின் கௌரவ ஆசிரியராக இருந்த எம்.வி.வி., அதில் "காதுகள்' நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு "காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. ஒருவனுக்கு திடீரென்று காதுக்குள் வினோத சப்தங்கள் கேட்கும். அது இரைச்சலாகும். சமயத்தில் அதுவே இசையாகவும், பிசாசுக் குரலாகவும் ஒலிக்கும். வெங்கட்ராம் தம் காதுக்குள் கேட்ட குரலைத்தான் அந்நாவலில் எழுத்து வடிவில் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாவல் வெளியானபோது அதன் கருப்பொருளை பலர் ஒப்புக்கொள்ளவில்லை.

எம்.வி.வி.யின் படைப்புகளில் அவருக்கே மிகவும் பிடித்தது "அரும்பு' நாவல். இந்த நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பதாய் இருந்து, பின்னர் கடைசி நேரத்தில் மாறிவிட்டதாக "சாரதா' இதழுக்கு அளித்த நேர்காணலில் அவரே குறிப்பிட்டுள்ளார். சௌராஷ்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் "வேள்வித் தீ' நாவலும் கவனத்தில் கொள்ள வேண்டிய படைப்பு.

மகாபாரதத்தின் சிறு கதாபாத்திரமான மாதவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு மனம் வெதும்பி, அப்பெண்ணை மையமாகக்கொண்டு படைக்கப்பட்டது "நித்யகன்னி'. ""ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறம், தர்மம் என்ற பெயரால் கொடூரமான சாத்வீக வன் புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராண கால வாழ்வின் ஊடாகப் பேசும் ஒரே தமிழ் நாவல் இதுதான்'' என்று ஜே.பி.சாணக்கியா இந்நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

"எம்.வி. வெங்கட்ராம் கதைகள்' என்ற தொகுப்புக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. பரிசு வாங்க வேண்டிய நாளில் அவர் மறைவு நேர்ந்தது தாங்க முடியாத சோகம். சித்த சூரி ரத்ன விருது, லில்லி தேவசிகாமணி விருது, சாந்தோம் விருது, புதுமைப்பித்தன் சாதனை விருது உள்ளிட்ட விருதுகளும் அவருக்குக் கிடைத்துள்ளன.

"விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் எம்.வி.வி. கவிதைகள் எழுதியுள்ளார். 1952-53-களில் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

""என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பேசியதையும், பார்த்ததையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும், சிந்தை செய்ததையும்தான் எழுதினேன்'' என்பார் எம்.வி.வி. அவரது எழுத்து பின்னிரவின் மழை போல் அதிகம் அறியப்படாததாய் இருக்கலாம். ஆனால், அவை அதிஅற்புதம் மிக்கவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தான் மறைந்து விட்டாலும் என்றும் மறையாத இலக்கியச் செல்வத்தை அளித்துள்ள எம்.வி.வி.-யின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படவேண்டும் என்பது அவரது எழுத்தை நேசிக்கும் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களின் வேண்டுகோளாக உள்ளது.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.வி.வெங்கட்ராம்