வியாழன், 16 ஏப்ரல், 2015

கல்கி - 7: சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ : பட விமர்சனம்
கல்கி

ஏப்ரல் 16.
சார்லி சாப்ளினின் பிறந்ததினம்.
டிசம்பர் 25. சாப்ளினின் நினைவு தினம்.

1931- இல் வந்த சாப்ளின் படம் ‘ சிட்டி லைட்ஸ்’.


1932-இல்  ஆனந்த விகடனில் , கே.ஆர். சர்மா சாப்ளினின்  இரு தோற்றங்களை உடனே வரைந்தார்!  ( சி.வி.மார்க்கன் ( மார்க்கபந்து) என்ற ஓவியருக்குப் பின்னர் விகடனில் சேர்ந்தவர் சர்மா என்று தெரிகிறது.)

[ நன்றி: விகடன் ] 

1933-இல்  இந்தப் படம் பற்றி 'கல்கிதன் ‘ஆடல் பாடல்’ பகுதியில்
எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி: 

'சார்லி சாப்ளின் பெயர் பெற்ற ஹாஸ்ய நடிகராயிற்றே? இந்தக் கதை சோகரஸம் பொருந்தியதாகவல்லவோ இருக்கிறது?' என்று மேற்படி காட்சியைப் பாராதவர்கள் கேட்கலாம். ஆமாம்; சோகரஸம் பொருந்திய இந்தக் கதையிலேதான் ஆரம்ப முதல் கடைசி வரையில் பார்ப்பவர்கள் குலுங்கக் குலுங்கச் சிரிக்கும்படி பண்ணுகிறார் சார்லி. இந்தக் கதையை சினிமா காட்சியில் பார்க்கும்போது சிரிப்பும் கண்ணீரும் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது.


எந்த உணர்ச்சியையும் வாய்ப் பேச்சினால் உண்டாக்குவதைவிட அதிக தீவிரமான அளவில் நடிப்பினால்தான் உண்டாக்க முடியும் என்பது சார்லியின் கருத்து. இதை முன்னிட்டுத்தான் இக் காட்சியின் ஆரம்பத்தில் டாக்கி பரிகசிக்கப்பட் டிருக்கிறது போலும்!

குபேர பட்டணமான நியூயார்க்கில், ஆயிரம் தையலுடன் கூடிய கந்தல் துணி உடுத்தியவனும், வீடு வாசலற்றவனும், ஜீவனத்துக்கு வழியில்லாத வனுமான ஒரு நாடோடியைத் தமது கதாநாயகனாகவும், ஏழைக் குருட்டுப் பெண் ஒருத்தியை கதாநாயகியாகவும் அமைத்துக்கொண்ட சார்லியின் தைரியந்தான் என்ன? தற்கால நாகரிக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வளவும் கடூரமாக அவர் பரிகசிக்கிறார்?



தமிழ்நாட்டிலுள்ள நடிக சிகாமணிகளுக் கெல்லாம் ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். 'ஸிடி லைட்ஸ்' என்னும் காட்சியைப் பார்க்க மட்டும் தப்பித் தவறிப் போய்விட வேண்டாம். அதைப் பார்த்தால் ஒருவேளை, 'நாமும் பவுடர் பூசி வேஷம் போடுவதா? வேண்டாம் நமக்கு இந்த நாடகத் தொழில்!' என்று தீர்மானித்து விடக் கூடும். ஆகவே, ஜாக்கிரதை!

[ நன்றி : விகடனின் ‘காலப் பெட்டகம்’ ]

தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி படைப்புகள்

’கல்கி’யைப் பற்றி

2 கருத்துகள்:

King Viswa சொன்னது…

சார், இது ஒரு மிகப்பெரிய, மிக முக்கியமான விஷயம். இதன் வரலாற்று முக்கியத்துவம், இந்தப் பதிவை மிக முக்கியமானதாக்குகிறது.

சொல்லஒ போனால், போன வாரம் இதே தேதியில் சுதேமித்ரன் வாரப்பதிப்பைப் பற்றித்தான் நானும் சின்னஞ்சிறு கோபு சாரும் பேசிக்கொண்டிருந்தோம்.


வாழ்த்துகள்.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, king viswa. http://s-pasupathy.blogspot.com/2017/08/802-5.html - ஐப் பற்றித்தானே சொல்கிறீர்கள்?