சனி, 3 டிசம்பர், 2016

லா.ச.ராமாமிருதம் -12: சிந்தா நதி - 12

8. சொல்
லா.ச.ராமாமிருதம் 
2016. லா.ச.ராவின் நூற்றாண்டு



===
    ”என் தாய், தந்தை, என் வீடு, என் நாடு, இமயத்தினின்று இலங்கைவரை ராமன், சீதை, அனுமன் என்ற பெயரில் எண்ணற்ற சீலர்கள். *வரைற்ற காலமாகத் திரிந்து, அவர்கள் பாதம் பதிந்த மண். இது என் மண். என் இறுமாப்பு. என் சொல்லின் இதழ்விரிப்பு.” -        லா.ச.ரா.


    அர்ச்சனை யெனும் ‘சொல்.'

    ராமன், கிருஷ்ணன், ரிஷிகள், புத்தர், சங்கரர், நபி, சாக்ரடிஸ், Zorasther, Confucius, யேசு, காந்தி இத்யாதி இதுவரை தோன்றி, அவ்வப்போது இனியும் தோன்றப் போவோர் யாவரும் சிருஷ்டியின் கடையலில் உண்டாகி, இயங்கி, அவரவர் சொல்லைச் சொல்லியானதும் அதிலேயே மறைந்தவர்தாம்.




    சிந்தனையெனும் சிருஷ்டி.

    சிந்தனைக்கென்றே ஒரு தக்ஷிணாமூர்த்தியைப் படைத்தேன்.

    அவனே சிவன்; அவனே தவன். சிந்தனையெனும் தவம். சிந்தனையின் படுக்கையில் அவன் ஆழ்ந்து கிடக்கும் இடமும் ஆழமும் அவனே அறியான். எங்கு இருக்கிறேன்? எங்கிருந்து வந்தேன்? ஏன் வந்தேன்?

    சிந்தனா நதியில் அவன் முகத்துக்குக் காத்துக் கிடக்கிறான்.

    மொழி முத்து.

    முத்தான சொல்.

    எழுத்தாய்க் கோர்த்த சொல் எனும் ஜபமணி.

    சொல் எனும் உருவேற்றம்.
    * * *

    எப்பவோ 'நான்' என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதில் எழுத்து வாக்கில் ஒரு சொற்றொடர்.

    'நெருப்பு என்றால் வாய் வெந்துபோக வேண்டும்', என்று விழுந்துவிட்டது. கேலியாகவோ, ஒரு சில சமயம் பாராட்டியோ, இன்னும் அபூர்வத்தில் சொந்த வியப்பில், இந்த வாக்கியம் இன்னமும் எனக்கு நினைவு மூட்டப்படுகிறது.

    சொல் எனும் உருவேற்றம்.
    * * *

    மனம் படைத்தேன் மானுடன் ஆனேன்.

    மனம் எனும் சிந்தனையின் அத்தர்.

    கும்-கும்-கம்-கம்-கமகம

    ஸரி கம ப த-என்ன இது? இதுதான் சொல்.

    மனம், மனஸ்-மனுஷ்-மனுஷ்ய....

    பவுருஷம், ஆணவம், மணம், மாண்பு, மானுடம்

    மானுடத்தின் மாண்பைச் சொல்லி

    மரபுக்குச் சாசனமாகும் சொல்.

    என் தாய், தந்தை, என் வீடு, என் நாடு, இமயத்தினின்று இலங்கைவரை ராமன், சீதை, அனுமன் என்ற பெயரில் எண்ணற்ற சீலர்கள். *வரைற்ற காலமாகத் திரிந்து, அவர்கள் பாதம் பதிந்த மண். இது என் மண். என் இறுமாப்பு. என் சொல்லின் இதழ்விரிப்பு.

    வழி வழி சிந்தனையில் பூத்து, பரம்பரையின் சாதகத்தில் மெருகேறிய சொல் எனும் நேர்த்தி.

    எண்ணத்தின் எழில். மணத்துடன், பூர்வ வாசனையும் கலந்து, ஓயாத பூப்பில், அழியாத என் புதுமையில் நான் எனும் ஆச்சர்யம்.

    என் சிந்தனையில் புவனத்தை சிருஷ்டித்தேன்.

    ஆகையால் சிந்தனையிலும் பெரிது நான்.

    ஆனால் நான் சிந்தனைக்கு அர்ச்சனை.

    இதுவே என் ஆச்சர்யம்.

    வசனா, கவிதா, வசன கவிதா, அர்ச்சனா, அக்ஷரா, அக்ஷரார்ச்சனா.

    புஷ்பா, புவனா, ஸரி, ரிக, கம, பதநி-ஸா.

    சிந்தா நதியின் தலை முழுக்கு ஆழத்துள், மண்டையோட்டுள் புயல் நடுவே.

    * * *
    ----------------------------------


[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

ஜீவி சொன்னது…

ஆஹா.. லா.ச.ரா! சிந்தா நதியாய்...

இதையும் வாசித்துப் பாருங்கள்:

http://jeeveesblog.blogspot.in/2016/11/blog-post_21.html