செவ்வாய், 21 ஜூலை, 2015

கவிதை எழுத வாங்க! : கவிதை

கவிதை எழுத வாங்க!




கணினி மூலம் இணையம் புகுந்து
. கவிதை எழுத வாங்க!
இணையம் மூலம் உலகத் தமிழர்
. இதயம் நிறைக்க வாங்க!
கணைக ளோடு கனிவும் கலந்து
. கடமை சுட்ட வாங்க!
அணிகள் இட்டு, அன்னை தமிழுக்
. கழகு சேர்க்க வாங்க!   (1)

உலகச் சுழலில் உமக்கு நேரும்
. உரசல் கவிதை ஆகும்!
கலந்த இதயக் காதல் உணர்வுக்
. கனவு கவிதை ஆகும்!
பலகை மனதில் நினைவுப் பலப்பம்
. பதித்தல் கவிதை ஆகும்!
அலைக்கும் பணியில் அமைதி கொடுக்கும்
. அன்பும் கவிதை ஆகும்!  (2)

அன்பு(உ)ம் நெஞ்சில் அமர்ந்த பின்னர்
. அழைக்கும் குரலே கவிதை
வன்மை வழியில் மாந்தர் சென்றால்
. வாடும் மனமே கவிதை
பெண்மைக் கொருவன் பின்னம் செய்தால்
. பிடரி சிலிர்த்தல் கவிதை
தொன்மை மரபில் துளிர்க்கும் புதுமைத்
. துள்ளல் யாவும் கவிதை!   (3)


பார்க்கும் பொருளில் பார்ப்போன் கலந்து
. பார்வை ஆதல் கவிதை
தீர்க்க மான தேடல் விளைக்கும்
. தெளிவின் வெளிச்சம் கவிதை
ஆர்க்கும் சொற்கள் ஓய்ந்த பின்னர்
. அமையும் அமைதி கவிதை
மார்க்கம் தேடி வெற்றி கண்ட
. மனத்தின் ராகம் கவிதை     (4)

இசையுள் கார்வை போலக் கவிதை
. இழைந்து மீட்ட வேண்டும்
கசையைப் போலச் சொல்லைச் சொடுக்கிக்
. கவனம் ஈர்க்க வேண்டும்
நிசமும் புனைவும் கைகள் கோத்து
. நேர்மை ஒளிர வேண்டும்      
திசைகள் எட்டும் எதிரொ லிக்கும்
. சிந்தை மேன்மை வேண்டும்      (5)

பழமைத் தமிழின் விழுமம் யாவும்
. பழுது போக வில்லை !
அழகுத் தமிழின் ஓசை இன்பம்
. அதுவும் மறைய வில்லை!
செழுமை புனைவும் உணர்ச்சி சேர்த்துச்
. செய்யுள் எழுத வாங்க!
நிழலை ஒதுக்கி நேர்த்திப் பாடல்
. நிறைய எழுத வாங்க!      (6)


பசுபதி 

[ வாட்டர்லூ தமிழ் அரங்கம் , கனடா ; புத்தாண்டுக் கவியரங்கம், 2006 ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

11 கருத்துகள்:

Iniya சொன்னது…

அழகான விருத்தப்பா கண்டு ஆனந்தப் பட்டேன் அருமை அருமை ! ஒவ்வொரு வரிகளையும் ரொம்பவே ரசித்தேன். நன்றி!தொடர வாழ்த்துக்கள் ...!

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் !

வண்ணம் கொஞ்சும் மீனோ !
வார்த்தை தேனோ பூவோ !
எண்ணம் கொண்ட ஏக்கம்
இங்கே பாக்கள் கேட்கும் !
மண்ணில் பெற்ற பேறு
மாத வமே உன்னைக்
கண்ணால் கண்டேன் இங்கே
காலம் தோறும் பாடு !

வந்து விட்டேன் ஐயா !
குருவின் ஆசியும் திருவின் ஆசியும் பெற்று
கவிதை வடிப்போம் வலைத் தளத்தில் நாளும்
தங்களைப் போன்றவர்கள் வழிகாட்டும் போது
அச்சம் இனி இல்லை எமக்கு .மிக்க நன்றி ஐயா
அழைப்பிற்கு .

Unknown சொன்னது…

மிகவும் அருமையாக உள்ளது . எளிமையான செந்தமிழில் ஏற்றமிகு எழுசீர் விருத்தம் பலமுறை என்னைப் படிக்கத்தூண்டுகிறது . மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா .

DVP சொன்னது…

கவிதை எழுதும் யாப்பின் வடிவம்
சொல்லித் தருவீர் நீங்க!
படித்து எழுதிப் பழகிக் கொள்ள
நேரம் இங்கே எங்க?
சீரும் தளையும் கற்றுக் கொண்டு
நிறைய எழுத நாட்டம்!
யாரும் எதுவும் சொல்லி விட்டால்
கேட்பதற்க்கு வெட்கம்!

தவறு செய்தால் திருத்திக் தர
நீங்க மனம் வைங்க!
தவறு என்ன என்று சொல்லி
ஈ மெயில் தாங்க!
தவறு கொண்ட கவிதை தன்னை
வெளியில் காட்டா தீங்க!
திருத்தித் தந்த பின்னர் மட்டும்
பெயரை சொல்லி போடுங்க!

Pas S. Pasupathy சொன்னது…

கருத்துரைத்த யாவருக்கும் நன்றி. ( @Prasad DV நான் பல வருடங்கள் இணையக் குழுக்களில் யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்த அனுபவத்தை என் ”கவிதை இயற்றிக் கலக்கு” நூலில் வடித்துள்ளேன். அது உதவும். கூட, சந்தவசந்தம் என்ற கவிதைக் குழு ... கூகிளிலும் , முகநூலிலும் உள்ளது. அவற்றில் சேர்ந்து பலரும் அக் குழுக்களில் மரபுக் கவிதைகள் எழுதி...அங்குள்ள அறிஞரின் வழிகாட்டுதலில் .... திருத்தங்கள் பெற்றுப் பயனடைகின்றனர்.)

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாசிக்க மிக அழகாக இருக்கிறது! அருமை! நீங்களும் கவிதை எழுத வாங்கனு அழைங்கின்றீர்கள்! ஆனால், என்ன செய்ய எங்களுக்கு எவ்வளவு முயன்றும் எழுத வரவில்லையே! காற்று வாங்கப் போனேன் நல்ல கவிதை வாங்கி வந்தேன் என்றில்லாமல் காற்று வாங்கப் போனேன் நல்ல கடலை வாங்கி வந்தேன் (இங்கு கடலை எப்படி அர்த்தம் கொள்கின்றீர்களோ அப்படி...அஹஹ்) என்ற கதையாகின்றது...

எங்களுக்குக் கவிதையை ரசிக்க மட்டும்தான் தெரியும் என்றாகிப் போனது...முயற்சிக்கின்றோம்...

எழிலவன் சொன்னது…

திருவாளர் பசுபதி அவர்களுக்கு எழிலவனின் வணக்கங்கள்.
தங்கள் வலைப்பகுதியைப் பார்த்தேன். வியந்தேன். களித்தேன். அனைத்தும் கவித்தேன். மலைத்தேன் என மலைத்தேன். அடியேனும் கலந்து கொள்ள முயல்கிறேன்.
அன்புடன்
பாரதி எழிலவன்.

பெயரில்லா சொன்னது…

Paarthen,rasithen,malaithen
Paravasathil thiLaithen
Pazhaiya pakkangal Kandu magizhdhen
Thedi irundha dhevamirdham
Thediye yennai vandhadhena
TheLindhen,aLLipparuginen

கிருஷ்ணன்பாலா சொன்னது…

அழகுத் தமிழில் அருமைக் கவிதை
அள்ளி அள்ளித் தந்து
செழுமை கொண்ட மனதை இங்கு
செப்பு கின்றீர் அய்யா!
முழுமை யாகப் படித்து நானும்
மூழ்கி விட்டேன்; அதனை
எழுதி இங்கு வாழ்த்து கின்றேன்;
இளமை பூத்து வாழ்க!

usharaja சொன்னது…

பேராசிரியர் பசுபதி உதவியுடன் கவிதை எழுத முயன்றேன். ஓரிரு முயற்சிக்குப்பின் அவர் கவிதைகளைப்படித்து மகிழ்வதே மிக்க நலம் என்றுணர்ந்தேன்!
அருமை உங்கள் கவிதை நண்பரே!!



Angarai Vadyar சொன்னது…

Superb.