சனி, 18 நவம்பர், 2017

909. பகைவன் : கவிதை

பகைவன் 
பசுபதி

பிள்ளைப் பிராயத்திலே --என்மனப்
. . பீடத்தி லேறிவிட்டான்.
பள்ளிப் படிப்பினிலே -- கோணல்
. . பாதையைக் காட்டிவிட்டான். 

அண்டை மனைகளிலே -- அவனால்
. . அவச்சொல் பெற்றுவிட்டேன்
நண்பனவன் அல்லவே -- எனக்கு 
. . நச்சுப் பகைவனவன்.

தீய குணம்மனத்தில் --தேங்கத் 
. . தித்திப்புக் காட்டிவிட்டான்
ஆயுள் முழுதுமவன் -- எனக்(கு)
. . ஆண்டானாய் ஆகிவிட்டான்.

வாழ்வினில் தோல்விகளை-- எனக்கு
. . வாரி வழங்கிவிட்டான்
தாழ்வில் மனமயர்ந்தேன் -- அவனைச்
. . சந்திக்க ஆசைகொண்டேன்.

காலம் சுழன்றதடா -- அவனோ
. . கண்ணில் தெரியவில்லை 
மூலப் பகைவனவன் --ஒருநாள்
. . முகத்தைக் காட்டிவிட்டான்.

கண்ணாடி முன்னிலையில் -- அன்று
. . கண்டேன் விரோதிமுகம் 
விண்டேன்; விழிதிறந்தேன் -- எனக்கு 
. . வெம்பகை நானேதான். 

**********
( அமுதசுரபி 2002 தீபாவளி மலரில் வந்த ஒரு கவிதை )

தொடர்புள்ள பதிவுகள் :

1 கருத்து:

Melasevel group சொன்னது…

அருமையான கவிதை கடைசி வரியில் நானே எனக்கு பகைவன் என்று கூறியதில் மிகவும் ரசித்தேன் -வாழ்க வளமுடன்