செவ்வாய், 16 ஜனவரி, 2018

970. சாவி -19

'தொழிலாளி' துளசிங்கம்
சாவி

[ ஓவியம்: கோபுலு ]

தலை முழுகினாற்போல் எண்ணெய்ப் பசையற்ற கிராப்பு; சந்தனப்பொட்டு; பனியன்; பனிய னுக்கு மேலே ஓபன் கோட்; அதற்கு மேல் வெள்ளைக்கோடு போட்ட சிவப்புக் காசிப்பட்டு; முரட்டு முக பாவம்; கையிலே ஒரு டிபன்பாக்ஸ்; கக்கத்தில் ஒரு குடை!

துளசிங்கம் வந்து ரயில் ஏற வேண்டியதுதான்... 'ஆடு-புலி' ஆட்டம் ஆரம்பமாகிவிடும்.

''இன்னா தொள்சிங்கம்... ஏன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி 'ஜவ ஜவா'ன்னு இருக்குது?''

''தெரியாதா உனுக்கு... இந்த ஏழுமல இல்ல ஏழுமல... அட, அதாம்பா அந்த ஐனாவரத்து ஆளு... சைக்கிள் சாப்ல இருந்தானே...''

''இப்ப டாணாக்காரனாயிட் டானே, அவன்தானே?''

''அவனேதான்! ராத்திரி செகண்ட் ஸோ பாத்துட்டு சைக்கிள்ள வரேன். மூலகோத்ரம் வழியா புளியாந்தோப் புல உழுந்து, பாராவதி மேலே மெதிக்கிறேன்... இவன் குறுக்கே வந்து மறிச்சிக்கினாம்பா! வா, டேசனுக்குங்கறான்.''

''எதுக்காம்..?''

''சைக்கிள்ளே லைட் இல்லியாம். இவன் எப்டி இருந்த ஆளு... என்னியப் பார்த்து டேசனுக்கு வான்னு கூப்படறாம்பா! கேட்டுக்கினியா கதைய? போன வெசாயக்கிழமை ரெண்டு ரூபா கைமாத்துக் கேட்டான். இல்லேப்பான்ட்டேன். அந்த ஆத்திரம் போல இருக்குது... கேசு புடிக்கிறாரு. எம் மேலே! 'காத்துல லைட் அணைஞ்சு போச்சு. இன்னம் கூட சூடு ஆறல்லே, பாரு'ன்னு அவன் கையைப் புடிச்சி 'சுடச் சுட' லைட் மேலே வெச்சு அழுத்தினேன். கையைச் சுட்டுக்கினு லபோ திபோன்னு கூவுறான். சரி, நீ தாயத்தை உருட்டு...''

உருட்டிய தாயக்கட்டை ஓடுகிற ரயிலிருந்து கீழே விழுந்து விட்டது. அவ்வளவுதான்! துளசிங்கம் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திவிட்டான். இது அந்த ரயிலில் அடிக்கடி நடைபெறும் சாதாரண நிகழ்ச்சி!

ஆனால், அன்று புதிதாக வந்த கார்டுக்கு இந்த விஷயம் தெரியாது. ரயில் நிறுத்தப்படவே, அவர் பரபரப்புடன் கீழே இறங்கி வந்தார். துளசிங்கம் இருந்த கம்பார்ட்மென்ட்டில் வெளியே தகடு துருத்திக்கொண் டிருப்பதைக் கண்டு, ''யார் இழுத்தது?'' என்று கேட்டார்.

[ ஓவியம்: நடனம் ]

துளசிங்கம் தலையை வெளியே நீட்டி, ''இன்னாய்யா! இப்ப இன்னான்றே? நான்தான் இழுத்தேன்'' என்றான் கார்டைப் பார்த்து.

''காரணமில்லாமல் சங்கிலியை இழுத்தால், அபராதம் அம்பது ரூபாய்னு தெரியாதா உனக்கு?''

''குட்றா இவருக்கு அம்பது ரூபா, வாங்கிக்கினு போவாரு! யோவ்... தாயக்கட்டை உளுந்துடுச்சு. வண்டிய நிறுத்தி எடுத்துக்கினேன். இப்ப இன்னான்றே? பித்தள தாயக் கட்டைய்யா, போயிடுச்சுன்னா நீயா குடுப்பே? கொடியைக் காட்டி நீட்டா போயிக்கினே இருப்பியா... பேச வன்ட்டாரு!''

அன்று பகல் சாப்பாட்டுக்குப் பிறகு, வழக்கமாக நடைபெறும் தொழிலாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

''...சைனாவைப் பாருங்கள்; அங்குள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்...'' என்று தோழர் ஒருவர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

''யோவ், நிறுத்துய்யா! அவங்க காருலே போனா நமக்கு இன்னா ஆச்சு? நம் ஊர் விசயம் பேசுவியா. அரிசி என்னா வெலை விக்குது... முதல்ல அதுக்கு ஒரு வழி பண்ணு! அத்த வுட்டு சைனாவாம், ரஸ்யா வாம்...'' என்று குறுக்கே எழுந்து குரல் விட்டான் துளசிங்கம்.

கூட்டம் துளசிங்கத்தைக் கை தட்டி உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்ய, பிரசங்கி அசந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.

''அரிசிலே மடக்கினாம் பாரு! அடுத்த வருஷம் நம்ப சங்கத்துக்கு தொள்சிதாம்பா தலைவரு. கன்னி யப்பன் சொகம் இல்லே...''

''தொள்சிங்கம் வாழ்க!'' என்ற கோஷத்துடன் கூட்டம் முடிந்தது.


===============
[ நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சாவி படைப்புகள்

2 கருத்துகள்:

Babu சொன்னது…

இயல்பான சென்னை தமிழ்தான் . ஆனால் ஆடு புலி ஆட்டத்தில் தாயக் கட்டை எங்கிருந்து வந்தது? மற்றபடி அருமையான எழுத்தோட்டம் . - பாபு

RV சொன்னது…

என் கண்ணில் வ.ரா.வின் நடைச்சித்திரம் சாவியின் காரக்டர் புத்தகத்தை விட ஒரு மாற்று அதிகம்...