ஞாயிறு, 28 ஜூலை, 2019

1328. பாடலும் படமும் - 73

கல்கி அவதாரம் 

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

திருமங்கை ஆழ்வார் தசாவதாரப் பாசுரங்களில்,  கடைசிப் பாசுரத்தில்  முதல் ஒன்பது அவதாரங்களைக் கூறிப் பின் கல்கி அவதாரத்தைப் பற்றிச் சொல்கிறார்.

மீனோ டாமை கேழலரி 
  குறளாய் முன்னு மிராமனாய்த்
தானாய் பின்னு மிராமனாய்த் 
  தாமோ தரனாய்க் கற்கியும்
ஆனான் றன்னை கண்ணபுரத்(து) 
  அடியேன் கலிய னொலிசெய்த
தேனா ரின்சொல் தமிழ்மாலை 
  செப்பப் பாவம் நில்லாவே.


பதவுரை

மீனோடு - மத்ஸ்ய ரூபியாயும்
ஆமை - கூர்ம ரூபியாயும்
கேழல் - வராஹரூபியாயும்
அரி - நரஸிம்ஹ ரூபியாயும்
குறள் ஆய் - வாமநமூர்த்தியாயும்
முன்னும் இராமன் ஆய் - பரசுராம மூர்த்தியாயும்
தான் ஆய் - ஸாக்ஷாதவதாரமான ஸ்ரீராமபிரானாயும்
பின்னும் இராமன் ஆய் - பலராமனாயும்
தாமோதரன் ஆய் - கண்ணபிரானாயும்
கற்கியும் ஆனான் தன்னை - கல்கியாயும் திருவவதாரஞ் செய்யுமியல் பினனான எம்பெருமானை
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்திலே (ஸேவித்து)
அடியன் - சேஷபூதரான
கலியன் - திருமங்கையாழ்வார்
ஒலி செய் - அருளிச் செய்த
தேன் ஆர் இன் சொல் - தேன் போன்று மதுரமான சொற்களையுடைய
தமிழ் மாலை - இத்தமிழ்ப்பாசுரங்களை
செப்ப - அப்யஸிக்குமளவில்
பாவம் - பாவங்கள்
நில்லா - நிற்கமாட்டாமல் அகன்றொழியும்,


பி.கு. "இந்தக் கல்கி" யை மனத்தில் வைத்துத்தான்  ரா.கிருஷ்ணமூர்த்தி 'கல்கி' என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார்; 'கல்கி' என்ற இதழையும் 1941-இல் தொடங்கினார்.   "பொன்னியின் புதல்வர்" தொடரின் முதல் பக்கத்தில் இடது பக்கம் இருக்கும் ( மணியம் வரைந்த ) 'கல்கி' அவதார ஓவியத்தைக் கவனியுங்கள்!  இந்தப் படம் 'கல்கி' இதழின் தொடக்க காலத்தில் பல மாதங்களில் 'பொருளடக்க'ப் பக்கத்தில் வந்து கொண்டிருந்தது !



1 கருத்து:

அவனிவன் சொன்னது…

அருமையான பாசுரம்...! சங்கச் சுரங்கப் பதிவுகளெல்லாமே அருமை.. தங்கச் சுரங்கம்!