புதன், 20 நவம்பர், 2019

1395. பாடலும் படமும் - 77

சொல்ல மாட்டாயா  என் நோயை ?




இது 1950 -இல் வந்த கல்கி இதழின் அட்டைப் படம். ஓவியர் சரவணன் ‘மணியம்’ பாணியில் வரைபவர்.  ஒரு முத்தொள்ளாயிரம் பாடலுக்கு அவர் வரைந்த ஓவியம் இது .

செங்கால் மடநாராய்! 
  தென்உறந்தை சேறியேல்,
நின்கால்மேல் வைப்பன்;என் 
  கையிரண்டும் – வன்பால்க்
கரைஉரிஞ்சி மீன்பிறழும் 
  காவிரி நீர் நாடற்(கு),
உரையாயோ யான்உற்ற 
   நோய்.

சிவந்த கால்களைக் கொண்ட அழகிய நாரையே, நீ தெற்கேயுள்ள உறையூருக்குச் சென்றால் உன் காலை என் கை இரண்டால் தொட்டு வணங்குவேன் . தேக வலிமையால் காவிரியில்  கரை உரசித் துள்ளி விளையாடும் மீன்களை உடைய காவிரி நதியின் வளம் பொருந்திய  நாட்டின் சோழ மன்னனுக்கு  நான் அவன் மேல் கொண்டிருக்கும் காதலால் அடைந்துள்ள பசலை நோயைச் சொல்வாயாக!




இந்தப் பாடலைப் பற்றி டி.கே.சி. சொல்வார் : 

“ காதலுற்ற பெண் தோழியைப் பார்த்துப் பேசினாள் என்றால் சாமான்ய உண்மை. நாரையைப் பார்த்துப் பேசினாள் என்னும்போது, பிரமாதமான வேகம் உண்டாகிறது, காதலுக்கு. காதல் வெறியை நன்றாய் எடுத்துக் காட்டுகிறது செய்யுள். காதலும் சோகமும் கலந்த சாயல் கவியில் அபூர்வமாய் அமைந்திருக்கிறது. கடைசி அடியை இரண்டு மூன்று தரம் பாடிப் பார்த்தால் பாவம் தெரிந்துவிடும். ”

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: