சனி, 11 ஏப்ரல், 2020

1515. கதம்பம் -14

ராகுல் சாங்கிருத்யாயன்


ஏப்ரல் 9. ராகுல் சாங்கிருத்யாயனின் பிறந்த நாள்.
======

ராகுல் சாங்கிருத்யாயன் என்பது தான் ராகுல்ஜியின் முழுப் பெயர். இந்திய நாட்டின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் மிக உயர்ந்த இடத்தை வகிப்பவர்.

பலமொழிகள் தெரிந்தவர். சிறுகதை, நாவல், வரலாற்று ஆய்வுகள் எழுது வது எனப் பலதுறைகளில் சிறந்து விளங்கினார். இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் அழியா இடம்பெற்றவர், அறிவுக்கடல், தத்துவஞானி.

இவர் உத்தரப் பிரதேசத்தில் 1893ம் ஆண்டு ஏப்ரல் 9ம் திகதி பிறந்தார். தந்தையார் பெயர் கோவர்தன் பாண்டே.

பன்னிரண்டாவது வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. குடும்பத்தில் வசதி இல்லை. எனவே வேலை தேடி கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கே வங்க மொழி, சமஸ்கிருத மொழி போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். பிறகு தமிழகத்திற்கு வந்து, திரு மழிசை, மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற ஊர்களில் வாழ்ந்த வைணவப் பெரியார்களைச் சந்தித்து வைணவ மதச் சித்தாந்தத்தைப் பற்றித் தெரிந்து கொண்டார்.

அதன் பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் சோசலிஸ்டுப் புரட்சி பற்றிய தகவல்களையும் தெரி ந்து கொண்டார். இந்திய நாடு ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்று எண்ணம் கொண்டார். எனவே காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து போராடியதால் 1922ம் ஆண்டு ஆங்கில அரசு இவரைக் கைது செய்து 6 மாதம் சிறையில் அடைத்தது. விடுதலை அடைந்து வெளியே வந்ததும் சுப்ரா மாவட்ட காங்கிரஸ் தலைவரானார். அதன் பிறகு பல போராட்டங்களில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.

2 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்த தும் பெளத்த மதம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண் டும் என்ற ஆவலில் இலங்கைக்கு வந்தார். இதற்கிடையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து தயாரித்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இந்தியில் மொழி பெயர்த்தார். இலங்கையில் இருந்த பெளத்த சமயத்தைச் சேர்ந்த சான்றோர்கள் அவரது பேரறிவைப் பார்த்து சாங்கிருத்தியன் என்னும் விருதை வழங்கினார்கள். இந்தப் பெயரே இன்றும் நிலைத்து நிற்கிறது.

இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய பின் பெளத்தம் சம்பந்தமான நூல்களைச் சேகரிக்க நேபாளம், திபெத் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பெளத்தம் இந்தியாவில் தான் பிறந்தது. ஆனால் அங்கு காணக் கிடைக்காத அரிய பெளத்த சமய இலக்கியங்கள் பல திபெத் மொழியிலும், சமஸ் கிருதத்திலும் இருப்பதைக் கண்டார்.

1930ம் ஆண்டு அந்த மூலச் சுவடிகளை எல்லாம் பல மூட்டைகளாகக் கட்டி அவற்றை 22 மட்டக் குதிரைகளின் மீது ஏற்றி இந்தியாவிற்கு கொண்டு வந்தார். இவ்வாறு ராகுல்ஜி கொண்டு வந்த சுவடிகளில் பல சுவடிகள் மிகவும் புகழ்பெற்றவை.

இதனால் பெளத்தம், பற்றியும் புத்தரைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்கு அந்த மூலச் சுவடிகள் பயன்பட்டன. இந்திய நாகரிகத்துக்கு பெளத்தம், ஆற்றிய பெரிய தொண்டு பற்றிய ஆராய்ச்சிகள் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.

பெளத்த சமயப் பேரரசர்களின் தர்க்க விவாதங்களைப் புத்தக வடிவில் கொண்டு வந்தார். புத்தர் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். பாரசீகம், திபெத்தியம், உருது ஆகிய மொழிகளில் வல்லவரானார்.

இலக்கியங்களைத் தேடி மஞ்சூரியா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். கண்ட உண்மைகளை அறிஞர்களுக்கு எடுத்துச் சொல்ல மேலை நாடுகளுக்குச் சென்று ஆங்கிலத்திலும், பிரஞ்சு மொழியிலும் சொற்பொழிவுகளை ஆற்றினார். லண்டனில் தங்கியிருந்தபோது கார்ல் மார்க்ஸ் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினார். 1935ம் ஆண்டு ராகுல்ஜி சோவியத் நாடு சென்றார். அவருக்கு தத்துவஞானப் பயிற்சியும் விடுதலை வேட்கையும் இருந்ததால் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார்.



பல ஆண்டுகள் சிறையில் இருந்ததால் பல நூல்களை எழுதினார். அதில் முக்கியமான நூல் நமக்கெல்லாம் அதிகமாகத் தெரிந்த ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல். இந்த நூல் 14 மொழிகளில் வெளிவந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்நூல் மனித சமூக வரலாற்றை விஞ்ஞான வழியில் தொகுத்துக் கூறுகிறது.



லெனின் கிராடு பல்கலைக் கழகம் இவர் புலமையைத் தெரிந்துகொண்டு 1945ம் ஆண்டில் சமஸ்கிருத பேராசிரியராக நியமித்தது. அங்கு இரண்டரை ஆண்டுகாலம் அந்தப் பதவியில் இருந்தார். ராகுல்ஜிக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தும் தாய்மொழியான இந்தியிலேயே பெரும்பாலான நூல்களை எழுதினார்.

ராகுல் முதல் திருமணம் இளம் பருவத்தில் நடைபெற்றது. அது அவருக்கு ஒத்துவரவில்லை. எனவே அது தோல்வியில் முடிந்தது. சோவியத் நாட்டில் அவர் இருந்தபோது, லோலா என்னும் ரஷ்யப் பெண்ணைத் திருமணம் முடித்தார். அதன் பிறகு தமது செயலாளராக அதிக காலம் வேலை செய்த கமலா பரியார் என்னும் பெண்ணை மனைவியாக ஏற்றார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்தனர்.

சாகித்ய அக்கடமி பரிசும், பத்மபூஷன் விருதும் பெற்றவர். காசி பண்டிதசபை மகா பண்டிதர் என்னும் பட்டமும் அவருக்கு வழங்கியது. ராகுல்ஜி 1962ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி நோய்வாய்ப்பட்டார். 05 மாதங்கள் சோவியத் நாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு 1963 இல் ஏப்ரல் 9ம் திகதி நாடு திரும்பினார். நாட்கள் கழிந்து 14ம் திகதி அன்று மரணமடைந்தார்.

உலகமெலாம் சுற்றித் திரிந்தவர் தன் சொந்த நாட்டுக்கு வந்தபின்பே உயிரிழந்தார். வொல்காவிலிருந்து கங்கைக்கு வந்த பின்பே அவருடைய உயிர் பிரிந்தது என்பதே அவருடைய நூலுக்கும் வாழ்வுக்கும் சிறப்பு சேர்க்கும் சுவை முரண்.


[நன்றி: http://archives.thinakaran.lk/2010/07/22/_art.asp?fn=f1007221]


தொடர்புள்ள பதிவுகள்:

ராகுல சாங்கிருத்யாயன்: விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: