ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பாரதி நினைவுகள்

" பாரதி அறியாத கலை” : செல்லம்மாள் பாரதி
[ கலாரசிகன்; தினமணி: 12 டிசம்பர் 2011]

அகில இந்திய வானொலி நிலையம் 1938 முதல் ஒலிப்பதிவு செய்த இசை நிகழ்ச்சிகளைக் குறுந்தகடுகளாக வெளியிட்டு வருகிறது. இதேபோல, வானொலியில் நிகழ்த்திய உரைகளையும் குறுந்தகடுகளாக வெளிக்கொணர்ந்தால் நன்றாக இருக்கும். சமீபத்தில், திருமதி. செல்லம்மாள் பாரதி, "பாரதி அறியாத கலை' என்கிற தலைப்பில் வானொலியில் பேசிய உரையை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையிலிருந்து சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

" மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயதுவரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டுக்கு உபதேசித்ததோடு, நாட்டில் பரப்பியதோடு நிறுத்திக் கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம்! தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார், என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை.

மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. ""இனி மிஞ்ச விடலாமோ?'' என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க மனம் துடிதுடித்தது. ஆனால், பயமும் ஒருபுறம் ஏற்பட்டது. "ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது, என்ன விஷயமோ?' என்று திகில் கொண்டேன்.

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். "செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். "நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.

"கரும்புத் தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். பாரதியார் அறியாத கலை, "பணம் பண்ணும் கலை". என் கணவர் மறந்தும் காசுக்காகத் தமிழ்த்தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாக்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ, பகலோ, வீட்டிலோ, வெளியிலோ, கடற்கரையிலோ அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்''.

செல்லம்மா பாரதியின் இந்த உரையைப்போல, பல அறிஞர்களின் உரைகள் வானொலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவை புத்தகங்களாகவும், குறுந்தகடுகளாகவும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.”
--

பி.கு.
முழு உரையையும் 

இங்கே  படிக்கலாம். 

3 கருத்துகள்:

கவிஞர் சவகர்லால் சொன்னது…

அருமையான, பயனுள்ள பதிவு.

Ezhil சொன்னது…

Thanks for sharing this Sir.

இமயவரம்பன் சொன்னது…

உறவென எளியோர் தம்மைப்
புரந்திடும் உணர்வைப் பார்த்தேன்!
பிறரிடர் கண்ட போது
பதைத்திடும் பரிவைப் பார்த்தேன்!
துறவியர் போலத் தன்னை
மறந்திடும் துணிவைப் பார்த்தேன்!
அறம்வளர் அன்பைப் பார்த்தேன்!
பாரதி கண்ணில் அம்மா!