செவ்வாய், 27 நவம்பர், 2018

1188. பாடலும் படமும் - 50

சிங்கமும் சிறுவனும் 

[ நன்றி: வள்ளியப்பன் ராமநாதன் ]

இது ஏ.கே.சேகர் வரைந்த ஓர் அற்புத ஓவியம். 1938-இல் விகடன் தீபாவளி மலரில் வந்த முகப்பு ஓவியம்.  ஜெமினியில் ஆர்ட் டைரக்டராய்த் திகழ்ந்த சேகர் விகடனின் தொடக்க வருடங்களில் நிறைய ஓவியங்களை விகடனில் வரைந்துள்ளார். பிரபலமாய் இருந்த ‘சித்திர ராமாய’ணத்தில் முதலில்  ஓவியங்கள் வரைந்தவர் இவர்தாம். 

இதற்கு விகடனில் வந்த சித்திர விளக்கம் என்ன தெரியுமா? கீழே படியுங்கள்! இது இந்திய விடுதலைக்கு முன் வந்தது என்பதையும் நினைவில் கொண்டு!
======

சிங்கமும் சிறுவனும் 

“ சகுந்தலை பெற்ற பிள்ளை - சிங்கத்தினைத் 
       தட்டி விளையாடி - நன் (று)
உகந்ததோர் பிள்ளை முன்பாரத ராணி
       ஒளியுறப் பெற்ற பிள்ளை”  
                                                                 - பாரதி -

சிங்கத்தோடு விளையாடும் இந்தச் சிறுவனைப்  பாருங்கள், “ பயமென்றால், அது என்ன? வேறு எப்படி யிருக்கும்? அப்படியொன்று இருக்கிறதா? இருக்க முடியுமா? “ என்றெல்லாம் கேட்கக் கூடிய பிள்ளையென்று தோன்றுகிறதல்லவா?

இவந்தான் சகுந்தலை பெற்ற பிள்ளை, பரதன், - பரத நாட்டுச் சிறுவர்களின் லட்சியம். இப்படிப்பட்ட பிள்ளைகளே பாரத ராணியை ராணியாக்கினார்கள். மகுட பங்கம் செய்யப்பட்டிருக்கும் தாய்க்கு மறுபடி முடி சூட்டக் கூடியவர்களும் இத்தகைய பரதர்களே!

‘ பாரதராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை’ என்று கருதத்தக்க காங்கிரஸ், இன்று பிரிட்டிஷ் சிங்கத்துடன் ‘தட்டி விளையாடி’க் கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாமல்லவா? 
====
‘ கல்கி’ விகடன் ஆசிரியராய் இருந்த காலம் அது. ஒருவேளை அவரோ, பி.ஸ்ரீ. யோ இதை எழுதியிருக்கலாம்.


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

1 கருத்து:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான படம். பாரதியார் கவிதை சிறப்பு.