வெள்ளி, 14 ஜூன், 2019

1306. பாடலும் படமும் - 66

நரசிம்மாவதாரம் 

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]



அருணகிரிநாதர் இந்த அவதாரத்தைப் போற்றும் பல பாடல்களிலிருந்து இதோ ஒரு காட்டு, “ கரிய குழல்” என்று தொடங்கும் திருப்புகழிலிருந்து.


உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
     ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
          னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு ...... னுறுதூணில்

உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
     உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
          உவணபதி நெடியவனும்

உரிய தவ நெறியில் நம நாராயணாய என ... சரியான தவ
நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று

ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் ... ஒப்பற்ற
குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், எண்ணமுடியாத
கோபத்துடன்,

உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் ...
உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு
முடியும் முன்னே,

உறு தூணில் உரமுடைய அரி வடிவதாய் ... அங்கிருந்த தூணில்
வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து,

மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார்பீறி ...
இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து
மார்பைக் கிழித்துப் பிளந்து,

வாகை புனை உவண பதி நெடியவனும் ... வெற்றிக் கொடி
ஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும்,


இருகுழை மீதோடி” என்று தொடங்கும் ஒரு திருப்புகழிலிருந்து இன்னொரு
காட்டு;

அருமறை நூலோதும் வேதியன்
     இரணிய ரூபாந மோவென
          அரிகரி நாராய ணாவென ...... ஒருபாலன்

அவனெவ னாதார மேதென
     இதனுள னோவோது நீயென
          அகிலமும் வாழ்வான நாயக ...... னெனவேகி

ஒருகணை தூணோடு மோதிட
     விசைகொடு தோள்போறு வாளரி
          யுகிர்கொடு வாராநி சாசர ...... னுடல்பீறும்

உலகொரு தாளான மாமனும்


அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என ...
அருமை வாய்ந்த வேத நூல்களில் வல்ல வேதியன் இரணிய ரூபா
நமோ என்று பாடம் சொல்லிக்கொடுத்த போது,

அரி கரி நாராயணா என ஒரு பாலன் ... ஹரி ஹரி நாராயணா
நமோ என்று சொன்ன ஒப்பற்ற குழந்தையாகிய பிரகலாதனை

அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ
என ... (நோக்கி இரணியன்) அவன் எவன், என்ன ஆதாரம், (இந்தத்
தூணில் இருக்கிறானா) நீ சொல்லுக என்று கேட்க,

அகிலமும் வாழ்வான நாயகன் என ஏகி ஒரு கணை
தூணோடு மோதிட ... (பிரகலாதன்) எங்கள் நாயகன் உலகில்
எல்லாப் பொருள்களிலும் வாழ்கின்ற நாயகன் என்று சொல்லவும்,
இரணியன் சென்று எதிரிலிருந்த பெரிய தூணை மோதி அறைய,

விசை கொடு தோள் போறு வாள் அரி உகிர் கொடு வாரா ...
வேகத்துடன், பெரும் தோள்களுடனும், ஒளி பொருந்திய நரசிங்க
வடிவத்துடனும் கையில் நகங்களுடன் வந்து

நிசாசரன் உடல் பீறும் உலகு ஒரு தாள் ஆன மாமனும் ...
அரக்கன் இரணியனுடைய உடலைக் கிழித்தவனும், உலகம்
எல்லாம் ஒரு அடியால் அளந்த மாமனுமாகிய திருமாலும்,


திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:

உளைந்த அரியும் மானிடமும் 
  உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து,
விளைந்த சீற்றம் விண்வெதும்ப 
  வேற்றோன் அகலம் வெஞ்சமத்து,
பிளந்து வளைந்த வுகிரானைப் 
  பெருந்தண் செந்நெற் குலைதடிந்து,
களஞ்செய் புறவில் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே.



( பொருள்உளைந்த கண்டபோதே அஞ்சி நடுங்க வேண்டும்படியான 
சிங்கவுருவத்தையும் மனிதவுருவத்தையும் ஒருசேரப் பொருந்தச் செய்து
(நரஸிம்ஹரூபியாய்த்)தோன்ற (அப்போது) உண்டான கோபத்தைக் கண்டு விண்ணுலகத்தவர்களும் அஞ்சி நடுங்க பகைவனான இரணியனுடைய மார்பை வெவ்விய போர்க்களத்திலே இருபிளவாக்கி வளைந்த நகங்களையுடைய பெருமானை, பெருத்த அழகிய செந்நெற்கதிர்கள் வயிரம்பற்றி இருள் மூடியிருக்கப்பெற்ற சுற்றுப்பிரதேசங்களை யுடைத்தான திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டுகொண்டேன்-.)

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

தசாவதாரம்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

கருத்துகள் இல்லை: