வியாழன், 14 ஆகஸ்ட், 2014

சுதந்திர ’ விகடன்’

15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம்.



“ ஆனந்த விகடன்” 17 ஆகஸ்ட், 47 இதழ் முழுதும் அந்தச் சுதந்திர தினத்தைப் பற்றிய செய்திகள் தாம்.

17.8.1947 இதழ் விகடனில் அட்டைப்படத்தில் தொடங்கி தலையங்கம்
கட்டுரைகள், பாரதியார் பாடல், கொத்தமங்கலம் சுப்பு பாடல், ராஜுவின் முழுப்பக்க ஜோக், உபயகுசலோபரி, திண்ணைப் பேச்சு, நிருபர் டயரி என எல்லாவற்றிலும் சுதந்திர மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது “ 

என்கிறது விகடனின் “ காலப் பெட்டகம்” நூல். 

இதழில் வந்த சில படங்கள்.







மேலும் ரேடியோவில் அன்று நடந்த விசேஷ நிகழ்ச்சிகளை விவரிக்கிறது அந்த “விகட”னில் வந்த ”ரேடியோ எப்படி?” கட்டுரை.


 அதிலிருந்து சில பகுதிகள்:

“ என்ன அமர்க்களம்! என்ன அமர்க்களம்! அடேயப்பா! ரேடியோ சரித்திரத்திலேயே இது வரையில் இம்மாதிரி கொண் டாட்டம் நடைபெற்றதில்லை" என்று சொல்லும்படி அவ்வளவு பிரமாதமாக இருந்தது, ரேடியோவில் சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்!

எந்த ரேடியோவில் மகாத்மா காந்தி அவர்களை, 'மகாத்மா காந்தி' என்று அழைக்க பயந்து 'மிஸ்டர் காந்தி' என்று அழைத்து வந்தார்களோ அதே ரேடியோவில் 'மகாத்மா... மகாத்மா...' என்று அநேக தடவைகள் வாயாரச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார்கள். எந்த ரேடியோவில் 'வந்தே மாதரம்' என்று வாக்கியத்தைச் சொல்ல இதுவரையில் அஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அதே ரேடியோவில் 'வந்தே மாதரம்' என்று கணக்கற்ற தடவைகள் கோஷமிட்டார்கள். எந்த ரேடி யோக்காரர்கள் பாரதியாரின் தேசிய கீதங்களைப் பாடக் கூடாது என்று தடை செய்து வந்தார்களோ, அதே ரேடியோக்காரர்கள் பாரதியாரின் தேசிய கீதங்களை நிமிஷத்துக்கு ஒரு தடவை பாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்! நிகழ்ச்சிகளைக் கேட்டவர்களுக்கு, 'இதெல்லாம் கனவா? அல்லது நனவேதானா?' என்றே சந்தேகம் தோன்றியிருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பேச்சிலும், ஒவ்வொரு பாட்டிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அப்படி தேசிய மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.


சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் நடைபெற்ற இரண்டொரு நிகழ்ச்சிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

ஆகஸ்டு 14-ம் தேதி இரவு 12 மணி சுமாருக்கு, அதாவது தேசம் சுதந்திரம் அடையவிருந்த அத்தறுவாயில், "விடுதலை!" என்று பாரதியாரின் கீதத்தை ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள் பாடினார். உணர்ச்சி மிகுந்த அந்தப் பாட்டைக் கேட்டவர்களுக்கு நிச்சயமாக மயிர்க் கூச்சல் உண்டாகியிருக்கும்! அந்த இரவையும், அந்த சுதந்திர கீதத்தையும் ஒரு நாளும் நம்மால் மறக்க முடி யாது! ஸ்ரீமதிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி, என்.ஸி.வசந்தகோகிலம் இவர்கள் பாடிய தேசிய கீதங்களும் கேட்போரைப் பரவசப்படுத்துவதாக இருந்தன. ஸ்ரீ என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீமதி டி.ஏ.மதுரம் ஆகியவர்கள் நடத்திய 'அறுபது வருஷப் பயிர்' என்ற நிகழ்ச்சியில் தேசம் சுதந்திரம் அடைந்த விதமும் அதற்குப் பொறுப்பாளிகளாக இருந்த தியாகிகளின் விவரங்களும் எடுத்துச் சொல்லப்பட்டன. 
[ நன்றி; விகடன் ] 

சிறுவர்களுக்கென்று தயாரிக்கப் பட்ட ஒரு விசேஷ நிகழ்ச்சியில், பண்டித ஜவஹர்லால் நேருவின் சரித்திரத்தை ஸ்ரீ கொத்தமங்கலம் சுப்பு உருக்கமாகச் சொன்னார். “

சென்னையில் அன்று நடந்த சுதந்திர தின விழாக்களைப் பற்றி விகடன் உதவி ஆசிரியர் “கோபு” ( எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன் ) 24 ஆகஸ்ட் இதழில் எழுதிய கட்டுரையையும் இங்குப் படிக்கலாம்.

சுதந்திர விஜயம்
“கோபு” 

அந்த வேளையில் தேனாம்பேட்டை ஆலயங்கள் எல்லாவற்றிலும் இருந்து நாகஸ்வரம் கம்பீரமாய் எழுந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ரேடியோ முழக்கம் செய்துகொண்டு இருந்தது. விடுதலை கீதம் வானைக் கிழித்துக் கொண்டு சென்றது. இந்திய சுதந்திர விழாவைப் பார்ப்பதற்காக சூரியனும் அந்த நிசி வேளையில் கண் விழித்துக் கொண்டு சென்னைக்கு விஜயம் செய்துவிட்டானோ என்று அதிசயிக்கும்படி சென்னை மாநகரம் அப்போது ஜெகஜ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருந்தது.

சிற்சில இடங்களில் ஜனங்கள் தங்கள் வீட்டு அலங்காரத்தையும் தெரு அலங்காரத்தையும் மேலும் மேலும் மெருகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டே ஜார்ஜ் டவுனுக்குச் சென்றேன். அங்கு ஜனங்கள் கூட்டம் கூட்டமாக சமுத்திரக் கரையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் ஆசாமியை நிறுத்தி, “ எங்கே எல்லாரும் போகிறீர்கள்” என்று கேட்டேன். ‘ கோட்டையைப் பிடிக்க “ என்று சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே அந்த ஆசாமி போனார். “நாமுந்தான் அந்தக் கோட்டையைப் பிடிக்கலாமே!” என்று அவரைப் பின்தொடர்ந்தேன்.


கோட்டையில் இருந்து புறப்பட்டதும் நேராக வீடு திரும்ப எனக்கு மனம் வரவில்லை. சென்னையை இன்று அலசிப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று தீர்மானித்துக் கொண்டு பீச் ரோடில் நடந்தேன். “இரவோடு இரவாக எத்தனை கொடிகள் முளைத்திருக்கின்றன !’ என்று ஆச்சரியப்படும்படி சர்க்கார் மாளிகைகள், கட்டடங்கள் எல்லாவற்றிலும் கணக்கு வழக்கின்றி மூவர்ணக் கொடிகள் பறந்துகொண்டு இருந்தன.

சென்னையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் பிரதான சின்னமாக விளங்கிய செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்தபோதுதான் எனக்குக் கோட்டையைப் பிடிக்கும். மர்மம் புரிந்தது. ஜனங்கள் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற கோட்டையில் கொடியேற்ற விழாவைக் கண்டு களிக்கத்தான் அப்படிக் கூட்டம் கூட்டமாகப் போய் இருக்கிறார்கள். கோட்டை எல்லையில் காலை வைக்கக்கூட அஞ்சிய சென்னை வாசிகள், இன்று கோட்டையைப் பிடித்துவிட்டார்கள். கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் ஜனத் திரள் சூழ்ந்திருந்தது. இரவு முழுவதும் காத்துக்கிடந்த கூட்டத்தினர் சூரியோதயத்தின்போது கோட்டை கொடி மரத்தில் மூவர்ணக் கொடி ஜிலுஜிலு என்று பறப்பதைப் பார்த்து மனம் மகிழ்ந்தார்கள் அவர்களிடையே ஒரு நீண்ட பெருமூச்சும் ஏற்பட்டது. "அப்பா இப்போதுதான் மனம் நிம்மதியாயிற்று. வெள்ளைக்காரர்கள் உண்மையிலேயேதான் நமக்குச் சுதந்திரம் வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தில் சூது வாது ஒன்றும் இல்லை" என்று திருப்தியோடு கோட்டையை விட்டுத் திரும்பினார்கள். "இனி மேல் கோட்டையைக் கோட்டை விட மாட்டோம்" என்ற உறுதியும் அவர்களுக்கு அப்போது ஏற்பட்டு இருக்க வேண்டும் 

"கட்டடங்களையே பார்த்துக்கொண்டு போகிறீர்களே! நானும் இன்று மாறுதலோடு நிற்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று போட்டியிடுவதுபோல் பீச் ரோடில் தன்னந் தனியே நின்றுகொண்டு இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவச் சிலை என் கவனத்தைக் கவர்ந்தது. கிட்டத்தில் போய்ப் பார்த்தபோது, அந்த மன்னரின் கரங்களில் ஒன்று இந்திய தேசிய மூவர்ணக் கொடியை அழகாகத் தாங்கிக் கொண்டு இருந்தது. இதைச் செய்தவரின் ரசிகத் தன்மையைப் பாராட்டிவிட்டு, கலா சாலை கட்டடங்களைப் பார்க்கச் சென்றேன்.

இந்தியக் கலாசாரப் பண்புகளை இது வரை பிரிட்டிஷ் ஆதிக்க போர்வை கொண்டு போர்த்தி மறைத்துவைத்திருந்த அந்தக் கட்டடங்கள் இதோ சுதந்திர இந்தியாவுக்கு சேவை புரியத் தயாராகிவிட்டோம்: என்று பறைசாற்றுபவைபோல் காலைக் கதிரவனின் செங்கிரணங் களை, மூவர்ணக் கொடியைத் தாங்கியவண்ணம், வரவேற்றுக்கொண்டு இருந்தன.

சென்னையில், திருவல்லிக்கேணியும் ஆயிரம் விளக்கும் தனி முக்கியத்துவம் பெற்றிருக்கும் இடங்கள். ஏனெனில், முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அதிகமாகக் கலந்து வாழும் இடங்கள் அவை, அங்கே சென்று முஸ்லிம் சிறுவர்கள், பெரியவர்கள் எல்லாரும் இந்திய மூவர்ணக் கொடியைச் சட்டைகளில் குத்திக்கொண்டு வெகு உற்சாகமாகத் தெருவில் நடமாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் எந்த விதமான இடையூறும் இன்றி சுதந்திர விழா சென்னையில் நடந்தேறிவிடும் என்ற தைரியம் எனக்கு ஏற்பட்டது.

அடுத்தபடியாக மயிலாப்பூரை அடைந்தேன். வியாழக்கிழமை இரவிலேயே சுதந்திரம் பெரிய அதிர்ச்சியோடு மயிலாப்பூருக்கு விஜயம் செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். திடும் திடும் என்று அதிர்வேட்டுகள் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டு ஊரறிய அடிமை அரக்கனை விரட்டியதாகச் சொல்லிக்கொண்டார்கள். மயிலாப்பூர்_பெரிய மனிதர்களின் பெரிய பங்களாக்களில் மூவர்ணக் கொடிகள் பெருந் தன்மையோடும் கம்பீரத்தோடும் பறந்து காட்சி அளித்தன.

கார்ப்பரேஷன் கட்டடத்தை நெருங்கிப் பார்த்தபோது, “ பலே! அழகுக்கு அழகு செய்து இருக்கிறார்கள்!" என்று வியந்துகொண்டு குழுமி இருந்த ஜனத்திரளோடு கலந்துகொண்டேன். அப்போது திடீர் என்று எழுந்த கரகோஷம் காரணமாக அண்ணாந்து பார்த்தேன். பிரதமர் ஓமந்துர் ரெட்டியார் பக்தி சிரத்தையோடு கொடியேற்றி வைத்தார். மேயர் குதூகலத்தோடு குதித்துப் பேசினார்.

இப்படி சர்க்கார் மாளிகைகளிலும் காரியாலயங்களிலும், தேசியக் கொடி பறந்ததுதான் மக்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கியிருந்தது. வெற்றி வீரர்களைப்போல ஜனங்கள் சர்க்கார் கட்டடங்களை நிமிர்ந்து பார்த்தவண்ணம் சென்றார்கள். சில இடங்களில் அவர்கள் மகிழ்ச்சி அசுர உற்சாகமாகவும் மாறிவிட்டிருந்தது. கோட்டையைப் பிடித்த ஜனங்கள் அங்கே தங்கள் மனம் போனபடி எல்லாம் நடந்துகொண்டு இருந்தார்கள். மந்திரிகளின் அந்தரங்க ஆபீஸ் அறைகளில் புகுந்து தஸ்தாவேஜ்களைக் கிழித்து விளையாடிவிட்டார்கள் ஜனப் பிரதிநிதிகள். சர்க்கார் ஆட்சி நாட்டில் நிலைத்து விட்டது, இனிமேலும் பொதுமக்கள் கட்டுப்பாடு இல்லாமல் இப்படி எல்லாம் பழகிக்கொண்டார்களானால் சுதந்திரத்தின் பலனை அவர்கள் அடைவதில் கட்டாயம் தாமதம் ஏற்படத்தான் செய்யும்.

மாலை இரண்டு மணியில் இருந்தே கோட்டை மைதானம் திமிலோகப்பட்டது. நகரின் எல்லா பாகங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து குழுமியவண்ணம் இருந்தார்கள். சென்னை சர்க்காரின் பிரதிநிதியாக கவர்னர் ஸர் ஆர்ச்சிபால்ட் துரை, மன்றோ உருவச் சிலையின் முன்பு தேசியக் கொடியை ஏற்றிவைத்து வணங்கும் வைபவம் அது என்று அறிந்தேன். அப்புறம், கோட்டை மைதானம் பொங்கி வழிந்ததிலும், உற்சாகிகள் பலர் மரக் கிளைகளில் தொத்திக்கொண்டும் மின்சார விளக்குக் கம்பங்களில் வெளவால்போல் தொங்கிக்கொண்டு இருந்ததிலும் எனக்கு ஆச்சர்யமே இல்லை. இந்த உயர்ந்த நிலையை அடைந்ததாலோ என்னவோ இவர்களில் சிலருடைய சேஷ்டைகள் அன்று விரும்பத் தகாதவையாகக் கூட இருந்தனவாம்.

குறிப்பிட்ட நேரத்துக்கு கவர்னர் விஜயம் செய்துவிட்டார். ஆனால், பிரதம மந்திரி ஓமந்தூர் ரெட்டியார் அவர்கள் வந்து சேரவில்லை. கூட்டத்தினரும் கவர்னரும் சிறிது நேரம் சுற்று முற்றும் கவலையோடு பார்த்துக்கொண்டு இருந்தபோது, "போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விட்டதால் கூட்டத்தை நெருக்கிக்கொண்டு உள்ளே வரத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. மன்னிக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே பிரதம மந்திரி பாய்ந்து வந்து கவர்னர் துரையின் கை குலுக்கினார்.

குறிப்பிட்ட நேரத்தில் விழாவை நடத்தத் தவறிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதுபோல் கவர்னர் ஏற்றிவைத்த அந்தக் கொடி சற்று மக்கர் செய்துகொண்டுதான் மேலே சென்றது. ஜனங்களும் கிட்டத்தில் கூடியிருந்த பிரமுகர்களும், இதை முன்கூட்டியே சரி பார்த்து வைத்துக்கொள்ளக் கூடாதா? என்று எண்ணி பதைபதைத்துப் போனார்கள். பரபரப்பு அடங்குவதற்கு முன் அந்தக் கொடி கம்பத்தின் மேலே சென்று கம்பீரமாகப் பறந்து காட்சிஅளித்தது. சர்க்கார் மேற்படி வைபவத்துக்குச் செய்திருந்த ஏற்பாடுகளும் சபாஷ் என்று சொல்லக்கூடியவையாக அமையவில்லை. பத்திரிகைப் பிரதிநிதிகளுக்குச் சரியான இடம் கொடுத்திருந்தார்களானால் அவர்களாவது சரியாகப் பார்க்க முடியாத ஜனங்களுக்கு மேற்படி வைபவத்தைப் பற்றி சாங்கோபாங்கமாக எழுதி, பளிச் பளிச் என்று போட்டோக்களையும் பிரசுரித்திருப்பார்கள்.

கோட்டை மைதானத்தில் இருந்து புறப்பட்டபோது நன்றாக இருட்டிவிட்டது. நகரின் தீபாலங்காரத்தைப் பார்க்கச் செளகரியமாஇருந்தது. ஜெனரல் ஆஸ்பத்திரியில் கண்ணைப் பறிக்கும் விளக்குகளைப் போட்டு, அதைப் பிரமாண்டமானதொரு பொம்மைபோல் தோற்றம் அளிக்கும்படி செய்திருந்தார்கள். எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் ஒளிர்ந்தது. பக்கத்தில் ரிப்பன் கட்டடம், பஞ்சவர்ணங்களை வாரி விசிக்கொண்டு இருந்தது. நான் மட்டும் சளைத்துவிட்டேனா என்று கேட்பதுபோல் தூரத்தில் எழும்பூர் ஸ்டேஷன் பிரகாசித்தது.

நன்றாக இருட்டிய பிறகுதான் கொண்டாட்டம் பிரமாதப்படத் தொடங்கியது. வாண வேடிக்கைகள், ஊர்வலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு ஜனங்கள் சற்று களைப்புத் தீர காற்று வாங்க பீச்சுக்குப் போனபோது அங்கே அவர் களை வரவேற்கப் பலவித களியாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பல்லாயிரக் கணக்கான மக்கள் இரவைப் பரந்த மணற் பரப்பில் கழித்துவிட்டு மறுநாள் காலையில்தான் விடு திரும்பினார்கள்.

சுதந்திர விழாவில் மிக உற்சாகம் காட்டியவர்கள், ஸ்திரீகளும் குழந்தைகளும்தான் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். ஸ்திரீகள் தங்கள் ஜடையை மூவர்ண புஷ்பக் கொத்துகளினால் அலங்கரித்துக்கொண்டு இருந்த அழகையும் இடையில் மூவர்ண சேலை உடுத்தியிருந்த விமர்சையையும் பார்க்கக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் குதுகலத்துக்கு எல்லையே இல்லை. அவர்கள் சட்டை களில் கணக்குவழக்கின்றி தேசியக் கொடிகளைக் குத்திக்கொண்டும் வாய் நிறைய மிட்டாய்களைத் திணித்துக்கொண்டும் தலை கால் தெரியாமல் ஓடும் மோட்டார் கார்களோடும் சைக்கிள்களோடும் போட்டியிட்டுக்கொண்டு போன காட்சி இன்னும் என் கண் முன் தாண்டவம் ஆடுகிறது.

சென்னையில் சுதந்திர விஜய வைபவக் கொண்டாட்டத்தைப் பார்த்து அனுபவித்தவர்கள் ஒவ்வொருவரும் "எதிர்காலத்தில் வருஷா வருஷம் நடக்கப்போகும் இந்த சுதந்திர தின விழாவைப் பார்க்க எனக்கு இந்த இரு கண்கள் போதாது. இதைப் போல் ஆயிரம் கோடி கண்கள் வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள் என்று முடிவோடு விட்டுக்குத் திரும்பினேன்.


வாழ்க சுதந்திரம், வாழ்க பாரத நாடு !

[ நன்றி : விகடன், சுப்பு சீநிவாசன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுதந்திர தினம்

6 கருத்துகள்:

Ramki சொன்னது…

விடுதலை அடைந்த சமையத்தில் மக்கள் எவ்வாறு கொண்டாடினர் என்று அறிய உதவிய தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

phantom363 சொன்னது…

மிக்க நன்றி ஐய்யா - ராஜாமணி

kirukkal சொன்னது…

மிக அருமை .
மிக்க நன்றி.

K R A Narasiah சொன்னது…

மிக்க பயனுள்ள ஒரு இடுகை. பலருக்குத் தெரியாத விஷயங்கள்; அன்றைய சமுக்கத்தின் நிலைப்பாட்டை நன்றாகவே சித்தரிக்கின்றது. அப்போது நான் லால்குடியின் போர்ட் ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். பத்தாம் வகுப்பு. நன்றிகள் பல.
நரசய்யா

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, நரசய்யா அவர்களே. ( நான் அப்போது 3-ஆம் வகுப்பு! )

Unknown சொன்னது…

நான் பிறக்காத, சுதந்திரம் பிறந்த ஆண்டை கண் முன்னே காட்டியதற்கு கோடான கோடி நன்றி!
மெய் சிலிர்த்தது.