வியாழன், 4 பிப்ரவரி, 2016

முகநூல் : கவிதை

முகநூல்
பசுபதி

பிப்ரவரி 4. முகநூலின் 12-ஆம் பிறந்தநாள்.



காலை முகநூல் பார்ப்பேன்
. . கண்வி ழித்த வுடனே !
வேலைப் பளுவின் இடையே
. . விரைந்து முகநூல் நுழைவேன்
மாலை இரவென் றாலோ
. . மணிக்க ணக்கில் மேய்வேன்!
கால அருமை இன்றிக்
. . கணினி உலகில் அலைவேன்.!  (1)

ஞானம் எனக்கு முகநூல்;
. . ஞாலம் எனக்கு முகநூல்;
பானம் பருகும் போதும்
. . பார்வை முகநூல் மேலே!
கானம் கேட்கும் சபையில்
. . கைகள் கணினி மீது!
மானம் விட்டுச் சொல்வேன்,
. . நானோர் முகநூல் அடிமை!     (2)

வையப் போர்கள் தொடங்கி
. . வையும் மடல்கள் படிப்பேன் !
செய்தி என்ற பேரில்
. . சேட்டை வம்பு ரசிப்பேன் !
பொய்யர் புகழ்ச்சிச் சொல்லில்
. . புளகாங் கிதமே அடைவேன்!
ஐய மின்றிச் சொல்வேன்
. . அடியேன் முகநூல் அடிமை!    (3)

துரத்து கின்ற வேலை
. . தொல்லை ஆகிப் போச்சே!
சுரக்கும் படைப்புத் திறனும்
. . தொலைவில் ஓடிப் போச்சே!
விரயம் ஆகும் வாழ்க்கை
. . விசனம் கொடுக்க லாச்சே!
எரியும் முகநூல் மோகம்
. . என்று மறைந்து போமோ?    (4) 



தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்


5 கருத்துகள்:

செல்வா சொன்னது…

ஐயே இது மிகவுண்மை!! :)

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

என்னிலை இன்று இதுதான்
என்னுள்ளக் கவலையும் இதுதான்
இப்படிப் பேசி விட்டு
இரவு முழுவதும் பாரப்பேன்
..............

வைர வரிகள் அய்யா


துரத்து கின்ற வேலை

. . தொல்லை ஆகிப் போச்சே!

சுரக்கும் படைப்புத் திறனும்

. . தொலைவில் ஓடிப் போச்சே!

விரயம் ஆகும் வாழ்க்கை
. . விசனம் கொடுக்க லாச்சே!
எரியும் முகநூல் மோகம்
. . என்று மறைந்து போமோ? 

குருநாதன் ரமணி சொன்னது…

உண்மையை உரைத்துப் பார்த்து உரக்கச் சொன்னது அழகு! அங்கே சிதம்பரம் முகநூலென்றால் இங்கே சிதம்பரம், மதுரை இருவருமே முகநூல், கணினி சஞ்சாரிகள்!

சேஷன் சொன்னது…

உண்மை