சனி, 8 ஜூலை, 2017

763. ஏ.எஸ்.ராகவன் - 2

எழுத்துத் தவம் இயற்றிய ஏ.எஸ்.ராகவன்
திருப்பூர் கிருஷ்ணன்


[ நன்றி: தென்றல் ] 

ஜூலை 8. எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவனின் நினைவு தினம்.

அவர் மறைந்தவுடன் ‘தினமணி’யில் வந்த கட்டுரை இதோ:
========

அண்மையில் காலமான (08.7.12) முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவன் 1928-ஆம் ஆண்டு பிறந்தவர். தம் எழுத்துலக வாழ்வை 1950-களில் தொடங்கிய இவரது முதல் சிறுகதையான "சலீமா பேகம்' "ஆனந்த விகடனில்' பிரசுரமானது. அதன்பின் நாவல், சிறுகதை, நாடகம் என எழுதிக் குவித்து பெரும்புகழ் பெற்றார். கல்கி, கலைமகள், தினமணிகதிர் எனப் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார். தினமணி நிறுவனத்தின் மாத வெளியீடாக வெளிவந்து கொண்டிருந்த "கதைக்கதிர்' இதழில் நா.பா. ஆசிரியராக இருந்தபோது மாத நாவல்களும் எழுதினார்.
திருச்சி அருகில் அமராவதி நதி ஓடும் கரூர்தான் இவர் பிறந்த ஊர். அன்றைய அமராவதியின் தெளிந்த நீரோட்டம் போல் குழப்பமில்லாத தமிழ் நடை இவருடையது.

இவர் தம்முடைய கதைகளுக்கான பல கருக்களைத் தம் பிறந்த ஊரான கரூரிலிருந்தே எடுத்துக் கொண்டார். இவரின் படைப்புகளில் கரூர் "தான்தோன்றி மலை' வெங்கடேசப் பெருமாள், அருள் கடாட்சத்துடன் பற்பல இடங்களில் தானே தோன்றுவதுண்டு. அமராவதி ஆறு பல அத்தியாயங்களின் இடையிடையே புகுந்து படிக்கும் நம் நெஞ்சை ஈரப்படுத்தி ஓடுவதும் உண்டு.


இவருடைய அப்பாவின் சொந்த ஊர் கரூர் அருகில் உள்ள புதுப்பாளையம். அந்தப் புதுப்பாளையமும் இவருக்குப் பல புதுப்புதுக் கற்பனைகளை அள்ளி வழங்கியது. புகழ்பெற்ற இவரது "மனிதன்' என்ற நாவல் முழுக்க முழுக்க இவரது சொந்த ஊர் பற்றிய நாவல்தான். அன்பே அனைவருக்குமான உயர்ந்த மதம் என்பதையும் இவர் தொடர்ந்து தம் படைப்புகளின் வழியே வலியுறுத்தி வந்தார்.

"எழுத்து ஒரு தவம்' என்ற கொள்கை உடையவர் ஏ.எஸ்.ஆர். இலக்கில்லாமல் எதையேனும் எழுதுவது என்ற போக்கில் இவர் இயங்கியதே இல்லை. தம்மைப் பற்றியோ தம் எழுத்தைப் பற்றியோ தற்பெருமையாக அவர் எங்கும் எப்போதும் எழுதியதுமில்லை; பேசியதுமில்லை. கு.அழகிரிசாமி, தி.ஜா. போன்றோர் மரபில் வந்த உன்னதமான அடக்கம் என்ற பண்பாட்டை, வாழ்வின் இறுதிநாள் வரை விடாமல் காப்பாற்ற அவரால் முடிந்தது.

15 நாவல்கள், சுமார் 250 சிறுகதைகள், நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்கள், மூன்று மேடை நாடகங்கள் எனத் தற்கால இலக்கியத்திற்கான இவருடைய பங்களிப்பு அதிகம். "மலர்ந்த மனம்', "உயிர் நோன்பு' போன்ற நாவல்களும், "அன்பின் வழி', "உணர்வின் விழிப்பு' போன்ற சிறுகதைத் தொகுதிகளும் வாசகர்களால் மறக்க முடியாதவை.

விகடன், கல்கி, கலைமகள் போன்ற இதழ்கள் நடத்திய இலக்கியப் போட்டிகள் பலவற்றில் பரிசுபெற்றவர். விகடனில் நாவல், சிறுகதை, நாடகம் என அடுத்தடுத்து மூன்று பிரிவுகளில் பரிசு பெற்று அவ்வகையில் "ஜாக்பாட்' அடித்தவர்.


இவரது "பின்னணி' என்கிற சிறுகதை, இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டுப் பரிசைப் பெற்றது. தேர்வு செய்தவர் நாணல் சீனிவாசராகவன். (பல்லாண்டுகளுக்குப் பிறகு ஏ.எஸ்.ராகவனே இலக்கியச் சிந்தனை அமைப்பின் நீதிபதியாக இயங்கும் பெருமை பெற்றார். அப்போது அவர் தேர்வு செய்த ஆண்டுச் சிறுகதை "அமுதசுரபி' மாத இதழில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய "அற்றது பற்றெனில்' என்ற கதை.)

இளம் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இயங்கினார். "விநாயகா கலைக் கழகம்' என்ற அமைப்பின் மூலம் வெளிவந்த அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் பெயரும் "விநாயகா'தான். விநாயகா இதழில் தம் எழுத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்டவர், பின்னர் மற்ற இதழ்களுக்கும் தயக்கத்துடன் சிறுகதைகள் அனுப்பலானார். இவர் அனுப்பிய எல்லாக் கதைகளையும் தயக்கமே இல்லாமல் பல பத்திரிகைகள் அடுத்தடுத்துப் பிரசுரிக்கவே, மகிழ்ச்சியுடன் எழுத்தாளராகிவிட்டார்.

பாரதியிடம் மட்டற்ற ஈடுபாடு கொண்டவர். பாரதி இலக்கியத்தை இவருக்கு அறிமுகப்படுத்தி இவரை நெறிப்படுத்தியவர், கவிஞர் திருலோக சீதாராம். ஏ.எஸ். ராகவனின் கதைகளில் பாரதியார் கையை வீசிக் கொண்டு கம்பீரமாக நடந்துசெல்வதைப் பல இடங்களில் பார்க்கலாம்.
எழுத்தாளர் சங்கங்களில் மிகவும் புகழ்பெற்றது திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம். ஆண்டுதோறும் சிறந்த மாநாடுகளை நடத்திய வகையில் பெருமைபெற்ற சங்கம் அது. சுகி.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி ரெட்டியார், திருலோக சீதாராம், துறைவன், மீ.ப.சோமு ஆகியோரோடு இந்தச் சங்கத்தைத் தொடங்கியவர் ஏ.எஸ். ராகவன்தான். திருச்சி தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர், இணைச் செயலாளர், துணைத் தலைவர் எனப் பற்பல பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

குடும்பக் கதைகள் எழுதிப் புகழ்பெற்ற ஏ.எஸ். ராகவனின் குடும்பமே இப்போது எழுதுகிறது என்றால் மிகையல்ல. விகடன் வைரவிழாப் போட்டியில் சித்திரக் கதை எழுதி ரூ.30,000 பரிசுபெற்ற ஷைலஜா என்கிற மைதிலி நாராயணன் இவரது மூன்று புதல்விகளில் மூத்தவர். நிறையச் சிறுகதைகளும் நாடகங்களும் எழுதிப் பெயர் பெற்றிருக்கும் ராஜரிஷி என்கிற வெங்கடேசன் இவரது மூத்த குமாரர். எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் இவரது தம்பி மகன்.

பல முன்னோடி எழுத்தாளர்களின் இனிய நண்பராய் விளங்கிய ஏ.எஸ்.ராகவன், பண்பாடு குலையாமல் எழுதிவந்த ஒரு காலகட்ட எழுத்தாளர்களில் மிக முக்கியமான ஒரு விழுது. வேர்கள் மண்ணுக்குள் மறைவது இயல்பு. ஆனால், பாரம்பரியமான தற்கால இலக்கிய ஆலமரத்தின் ஒரு விழுதும் இப்போது மண்ணில் மறைந்துவிட்டது

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள சில பதிவுகள் :

ஏ.எஸ்.ராகவன்

ஏ. எஸ். ராகவன் தமிழ் விக்கிப்பீடியா

3 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிக நன்றி. ஏ.எஸ் ஆர். அவர்களின் புத்தகங்கள்
வாங்க ஆசை. சென்னையில் கிடைக்கும் இடம் தெரிந்தால்
மிக நன்றியுடன் இருப்பேன்.

Pas S. Pasupathy சொன்னது…

திருமகள் நிலையத்தாரை கேளுங்கள்.
http://www.nlb.gov.sg/biblio/14582812

Geetha Sambasivam சொன்னது…

மிக்க நன்றி. இரண்டையும் படித்தேன்.