வியாழன், 7 டிசம்பர், 2017

928. சோ ராமசாமி -2

மச்சவீர மாமன்னன்!
‘சோ’


சோ
முட்டைக் கண்ணால் முறுவலித்து
. மூழ்க வைத்தார் நகைச்சுவையில்
தட்டிக் கேட்க இதழ்தொடக்கம்; 
. சமயப் பணியும் அதிலடக்கம்;
சட்டம் கண்டோம் விடைகளிலே;
. தைர்யம் கண்டோம் தடைகளிலே;
கட்கம் என்றே அங்கதத்தைக்
. கண்ட ‘சோ’வை மறவோமே.


[ கட்கம் = வாள்; கத்தி ] 
           ---- பசுபதி ------
6-12-16
====
’சோ’ விகடனில் 1970-இல் எழுதிய இரண்டாம் நவரசக் கதை ( சரித்திரக் கதை).
===


சோழ நாட்டுக்கும், பாண் டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் நடுவே இருந்த ஒரு தீவு அது. சுற்றிலும் கடல் இல்லாமலிருந்தும் தீவு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் திறனும் தீரமும், வரனும் வீரமும், அரணும் அறிவும், நரனும் நெறியும் படைத்த நற்றமிழ்த் தீவு.

இந்தத் தீவினால் சேர, சோழ, பாண்டியர்கள் நடுநடுங்கிக் கொண்டிருந்தார்கள். காரணம் - அந்தத் தீவிலிருந்து எப்போதும் குளிர் காற்று வீசும்! "திண்ட மண்டலத் தொண்டைத் தீவு' என கவிஞர்கள் பண்ணிசைத்து பாடிய தீவு! கி.பி. மு.பி. 10,878 ஆண்டின் கல்வெட்டுகளிலே இத்தீவின் வரலாறு செதுக்கப்பட்டிருப்பது சரித்திரப் பேராசிரியர்கள் அறியாத உண்மை.

98 போர்க் களங்கள் கண்ட தொண்டைக் கட்டு விலாமுட்டு வீரசிங்க பலரேயத்தானாதி சூரத் தேவன் என்ற தமிழ் அரசனின் கீழ் இந்த திண்ட மண்டலத் தொண்டைத் தீவு உலகமெங்கும் புகழெய்தி, கவிஞர்கள் வாயிலெல்லாம் புகுந்து புறப்பட்டு, வந்தாரை வாழ வைத்து, வராதவரை வழியனுப்பி, இருந்தாரை இருக்க வைத்து சரித்திரம்காணா புகழ் பெற்று, தமிழ்நாட்டு வரலாற்றிலே அழியாத இடம் பெற்று விளங்கியது. பொன்னேடுகளில் மாணிக்க எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய சரித்திரம் அது. மரகத அட்டையினால் பைண்டும் செய்ய வேண்டும்!

அந்த மன்னாதி மன்னன் சூரத்தேவனின் ஒரே மகன் வில்லாதி விங்கட சங்கட கோழைச் சூரன் காலத்தில் திண்ட மண்டல தொண்டைத் தீவின் மக்கள் விடுதலைக்காகப் போராட ஆரம் பித்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொதித்து எழுந்தான் குண வீர குண்டுகுட்டி காடு வெட்டி புறமுதுகுராயனின் மகன் குணவீர குண்டுகுட்டி மேடுமுட்டி பின்வாங்குராயன்!

இந்த நிலையில்தான் அவன் ஒரு நாள் ஒரு கன்னியைச் சந்தித்தான்.! கன்னியா அவள்? பேரழகி! எழிலரசி! அமாவாசை நிலா! பௌர்ணமிச் சூரியன்! வசந்த கால சூறாவளி! கோடையிடி! கொடி இடையாள்! பருவத்தின் பரிசு! உருவத்தில் ஒடிசு! புருவத் தில் புதிசு! வானத்து வெண்ணி லவு! கானத்து கர்த்தபம்! கண்ணோடு கண்ணோக்கின் வாய் சொற்கிடமேது? அவன் உடனே பேசினான்... "கண்ணே!"
அவள் பவள வாய் திறந்து, "அத்தான்" என்றாள்.

"கனிரசமே!" என்றான்.

"இன்று நான் சாப்பிட்டது மிளகு ரசம்" என்றாள்.

ஊரடங்கும் நேரத்திலே ஆரணங்கு "அத்தான்' என்று அழைத்தால், காளையவன் ஓலையா எழுதுவான்? சோலை இருக்கையில் ஓலை எதற்கு? இரவு இருக்கையில் துறவு எதற்கு?

அவன் கையிலே ஒரு தவளை முத்திரை பொறித்த மோதிரத்தைக் கொடுத்தாள் அவள். "இந்த இலச்சினையைக் காட்டினால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் அத்தான்" என்றாள்.

அதைப் பெற்று, சுரங்க வாயிலின் வழியே புகுந்து, அரண்மனை உள்ளே சென்று, நாட்டுக்கு விடுதலை அளித்தான் பின்வாங்கு ராயன்.
மனம் திருந்திய மன்னன் தொண்டைக்கட்டு விலாமுட்டு வில்லாதி விங்கட சங்கட கோழை சூரத்தேவன், குணவீர குண்டு குட்டி மேடுமுட்டி பின்வாங்குராயனைக் கட்டித் தழுவினான். அணைத்த மன்னனின் கையிலே பின்வாங்குராயன் முதுகில் இருந்த ஏதோ ஒன்று தட்டுப் பட்டது. பார்த்தான் மன்னன்! "ஹா, மச்சம்! அதே மச்சம்!" என்று கூவிய மன்னனைப் பார்த்து மக்களும் மற்றவரும் திகைத்து நிற்க, மன்னன் பேச லுற்றான்.. "மக்களே! இந்த வீரன் முதுகில் இருக்கும் இந்த மச்சம் அவன்தான் இந்த அரசுக்கு உரி யவன் என்பதைக் காட்டி விட்டது!"

"அது எப்படி?" என்றொரு குரல் எழுந்தது.

"அது அப்படித்தான்! மச்சத்தின் மகிமை அது! இவனுக்கே மகுடம்! என் மச்சானுக்குக் கொடுக்க வேண்டும் என்றிருந்த இந்த மகுடத்தை இந்த மச்சனுக்குக் கொடுக்கிறேன்" என்று பிரகடனம் செய்தான் மன்னன்.

"மச்ச வீர மாமன்னன் வாழ்க!" என்று மக்கள் குரல் வானைப் பிளந்தது.

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சோ ராமசாமி


2 கருத்துகள்:

Babu சொன்னது…

தங்கள் கவிதை அழகாய் உள்ளது

சத்தியப் பிரியன் சொன்னது…

வணக்கம் ஐயா. தங்களைக் குறித்து சங்கப் பலகை என்ற முகநூல் குழு ஒன்றில் திருமதி சுபாஷிணி ரமணன் மிக வியந்து பாராட்டியமை கண்டு வியப்படைந்து நின்றேன். தாங்கள் இப்போது டொரொண்டோவில்தான் வசிக்கிறீர்களா? நான் என் மகளின் பிரசவத்திற்காக டவுன்டவுண் வந்துள்ளேன். சத்தியப்பிரியன் என்ற புனைபெயரில் பத்திரிகைகளில் எழுதி வருகிறேன் . நேரில் சந்திக்க இயலுமா?