புதன், 7 மார்ச், 2018

1003. காந்தி - 16

9. தொழிலாளர் தோழன்
கல்கி




கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி-2)என்ற நூலில் வந்த  9-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
இந்தியாவில் இப்போதெல்லாம் தொழிலாளர் இயக்கம் பிரமாதப் படுகிறது. பல தொழிலாளர் சங்கங்களும் தொழிலாளர் காங்கிரஸ்களும் போட்டியிட்டுக் கொண்டு தொழிலாளருக்குத் தொண்டு செய்து வருகின்றன. தேச நலனைக் கவனியாது சிலர் தொழிலாளரைத் தூண்டிவிட்டு வேலை நிறுத்தம் செய்யப் பண்ணுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர். அரசியல் செல்வாக்குப் பெறுவதற்காகவே பலர் தொழிலாளர் இயக்கங்களில் சேருகிறார்கள்.

முதன் முதலாக இந்தியாவில் தொழிலாளர் இயக்கத்துக்கு உயிர் கொடுத்துப் பலப்படுத்தியவர் காந்தி மகாத்மாவேயாவர். இந்தியாவில் முதலாவது பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தம் மகாத்மாவின் தலைமையிலேயே நடந்தது. அந்த இயக்கம் பூரண அஹிம்சா தர்ம முறையில் நடந்து மகத்தான வெற்றியும் அடைந்தது. அதன் காரணமாக இந்தியா தேசம் முழுவதிலும் தொழிலாளரின் நிலை ஓரளவு உயர்ந்தது என்று சொல்லுவது மிகையாகாது. அந்த வேலை நிறுத்தத்தின் விவரம் பின்வருமாறு'

சம்பரானில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கும்போதே ஆமதாபாத்திலிருந்து மகாத்மாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் ஸ்ரீமதி அனசூயா பென். ஆமதாபாத்தில் ஆலைகள் அதிகம். அவற்றில் வேலை செய்த தொழிலாளரும் அதிகம். அவர்கள் பெற்று வந்த சம்பளமோ மிகமிகக் குறைவு. சில காலமாக ஆலைத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக் கிளர்ச்சி செய்து வந்தார்கள். ஸ்ரீமதி அனசூயாபென் என்னும் பெண்மணி அத்தொழிலாளர்களூக்கு உதவி செய்து வந்தார். பல நாள் கிளர்ச்சி நடந்தும் பலன் ஒன்றும் கிட்டவில்லை. அதன் பேரில் ஸ்ரீமதி அனசூயா பென் மகாத்மாவுக்குக் கடிதம் எழுதினார். அதில் ஆமதாபாத் தொழிலாளருக்கு வழிகாட்டி உதவ வேண்டும் என்று கேட்டிருந்தார். மகாத்மா சம்பரான் வேலை முடிந்ததும் ஆமதாபாத்துக்கு வருவதாகப் பதில் எழுதினார்.

அவ்வாறே சம்பரானில் திருப்திகரமான முடிவு ஏற்பட்டதும் மகாத்மா ஆமதாபாத் சென்றார். தொழிலாளரின் நிலைமையை விசாரித்து அறிந்த பிறகு அவர்களுடைய கட்சியில் நியாயம் இருப்பதாகக் கண்டார். எனினும் தொழிலாளரின் போராட்டத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்துவதில் ஒரு தர்ம சங்கடம் இருந்தது. அதுவரை ஆமதாபாத் ஆலை முதலாளிகள் பலர் மகாத்மா சத்தியாக்கிரஹ ஆசிரமம் ஸ்தாபிப்பதற்கு உதவி புரிந்து வந்தார்கள். ஆலை முதலாளிகளுக்குத் தலைவர் ஸ்ரீ அம்பாலால் சாராபாய். தொழிலாளர் கட்சிக்குத் தலைமை வகித்த ஸ்ரீமதி அனசூயாபென் ஸ்ரீ அம்பாலாலின் சகோதரி. ஆகவே போராட்டம் ஏற்பட்டால் எல்லாருக்குமே மனச் சங்கடம் உண்டாகும். இதையெல்லாம் உத்தேசித்து மகாத்மா ஆலை முதலாளிகளிடம் சென்று, விவாதத்தை மத்தியஸ்தர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டார். முதலாளிகள் இந்த யோசனையை வன்மையாக மறுத்து விட்டார்கள். "எங்களுக்கும் எங்கள் தொழிலாளர்களுக்கும் இடையே மூன்றாவது மனிதர் வந்து மத்தியஸ்தம் செய்வதா? அதற்கு நாங்கள் இணங்கவே முடியாது!" என்று சொல்லி விட்டார்கள்.


காந்திஜிக்கு வேறு வழி யில்லாமற் போயிற்று. ஆலைத் தொழிலாளருக்கு வேலை நிறுத்தம் செய்யும்படி யோசனை சொல்ல நேர்ந்தது. ஆனால் அவ்விதம் அவர்களுக்கு யோசனை கூறும்போது மகாத்மா நாலு நிபந்தனைகளையும் குறிப்பிட்டார். "இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதாயிருந்தால் நான் உங்களுக்குத் தலைமை வகிக்கிறேன். இல்லாவிட்டால் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார். நாலு நிபந்தனைகளும் வருமாறு.

(1) எந்த நிலைமையிலும் தொழிலாளர் பலாத்காரத்தைக் கைக்கொள்ளக்கூடாது.

(2) கட்டுப்பாட்டை மீறி எந்தத் தொழிலாளராவது வேலைக்குப் போனால் அவர்களை மற்றவர்கள் நிர்ப்பந்திக்கக் கூடாது.

(3) வேலை நிறுத்தத்தின்போது வாழ்க்கை நடத்துவதற்குப் பிச்சை எடுக்கக்கூடாது.

(4) வேலைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடித்தாலும் உறுதியாக நிற்கவேண்டும். வேறு தொழில் செய்து பிழைக்க வேண்டும்.

மேற்படி நாலு நிபந்தனைகளையும் தொழிலாளர் தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் கூட்டி அதில் மகாத்மாவின் நிபந்தனைகளை அவர்களுக்குத் தெளிவாகத் தெரியப் படுத்தினார்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கேட்டுக்கொண்ட பின்னர் தொழிலாளர்கள் ஒருமுகமாக வேலை நிறுத்தம் செய்யத் தீர்மானித்தார்கள். முதலாளிகள், ஒன்று தங்கள் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது மத்தியஸ்தத்துக்கு விடச் சம்மதிக்க வேண்டும் என்றும் அதுவரையில் வேலைக்கு யாரும் திரும்பிப் போவதில்லை யென்றும் சபதம் செய்தார்கள்.

இந்த வேலை நிறுத்தம் நடந்தபோதுதான் மகாத்மாவுக்கு முதன் முதலாக ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ வி.ஜே.படேல், ஸ்ரீ வல்லபாய் படேல் முதலிய குஜராத்தித் தலைவர்கள் அறிமுகமானார்கள்.

வேலைநிறுத்தம் ஆரம்பமான பிறகு தினந்தோறும் சபர்மதி நதிக்கரையில் தொழிலாளர் கூட்டம் நடந்து வந்தது. ஆயிரக்கணக்கில் தொழிலாளிகள் கூட்டத்துக்கு வந்தார்கள். மகாத்மா ஒவ்வொரு நாளும் பேசினார். அவர்களுடைய சபதத்தையும் தம்முடைய நாலு நிபந்தனைகளையும் ஞாபகப்படுத்தினார்.

தொழிலாளிகள் தினந்தோறும் ஆமதாபாத் நகரத்தின் வீதிகளில் அமைதியாக ஊர்வலம் நடத்தினார்கள். "தோழர்களே! சபதத்தைக் காப்பாற்றுங்கள்!" என்று எழுதிய துணிக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.

மகாத்மா அடிக்கடி ஆலை முதலாளிகளைப் போய்ப் பார்த்து வந்தார். தொழிலாளிகளுக்கு நீதி வழங்குமாறு வேண்டிக் கொண்டார். அதில் பயன் விளையவில்லை. "நாங்களும் சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் சபதத்தை நாங்கள் மீற முடியாது. தொழிலாளிகள் எங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் மூன்றாம் மனிதர்கள் வந்து குறுக்கிடுவதை எப்படி நாங்கள் பொறுக்க முடியும்?" என்றார்கள் முதலாளிகள்.

வேலை நிறுத்தம் மொத்தம் மூன்று வார காலம் நடந்தது. முதல் இரண்டு வாரம் வரையில் ஆலைத்தொழிலாளிகள் தைரியமாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். அதற்குப் பிறகு சிலர் தளர்ச்சி அடைய ஆரம்பித்தார்கள். சபதத்தை மீறி வேலைக்குச் செல்வோரைப் பார்த்து மற்ற பெரும்பான்மையோர் கோபம் கொள்ள ஆரம்பித்தார்கள். ஒன்று அவர்கள் பலாத்காரத்தில் இறங்கிவிடலாம் அல்லது தாங்களும் சோர்வு அடைந்து வேலைக்குத் திரும்பி விடலாம் என்று காணப்பட்டது. பொதுக் கூட்டத்துக்கு வந்த தொழிலாளிகளின் முகத்தில் சோர்வும் கிலேசமும் குடிகொண்டிருந்தன. இதை யெல்லாம் பார்த்த மகாத்மாவின் மனதில் கவலை உண்டாயிற்று. தொழிலாளர் வேலை நிறுத்தம் தோல்வியடைந்து விடுமே என்பதைப் பற்றிய கவலையைக் காட்டிலும் அவர்கள் தினந்தோறும் செய்து வந்த பிரதிக்ஞையைக் கைவிட்டு விடலாம் என்ற எண்ணம் காந்திஜிக்கு அதிக மன வேதனையை அளித்தது. இந்த நிலைமையில் என்ன செய்வது என்ற சிந்தனை அவர் உள்ளத்தில் ஓயாமல் இருந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பொதுக் கூட்டத்தில் மகாத்மா பேசிக் கொண்டிருக்கையில் பளிச்சென்று ஓர் ஒளி உதயமாயிற்று. தாம் செய்ய வேண்டியது இன்ன தென்று தெரிந்தது. உடனே அந்த க்ஷணத்திலேயே மகாத்மா அதைத் தொழிலாளரிடம் வெளியிட்டார்: "நீங்கள் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் வேலைக்குத் திரும்புவதில்லை யென்று திரும்பத் திரும்பப் பிரதிக்ஞை செய்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களில் சிலர் உறுதி குலைந்து வேலைக்குத் திரும்புவதைப் பார்க்கிறேன். இந்த மாதிரி சத்தியப் பிரதிக்ஞை செய்துவிட்டு அதை மீறுவதைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. ஆகையால் இந்த வேலை நிறுத்தம் முடியும் வரையில் நான் உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்து விட்டேன்!" என்றார்.

தொழிலாளர் அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். தங்களுக்காக மகாத்மா பட்டினி விரதம் இருக்கப் போகிறார் என்பதைக் கேட்டு அவர்களுடைய உள்ளம் உருகியது. 'வேண்டாம்; வேண்டாம்; நீங்கள் உபவாசம் இருக்கக் கூடாது. எங்களுடைய தவறுக்காக நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்களுடைய பிரதிக்ஞையை நாங்கள் ஒரு நாளும் மீற மாட்டோம். உயிர் போனாலும் சபதத்தைக் காப்பாற்றுவோம். நீங்கள் பட்டினி கிடக்கக் கூடாது" என்று தொழிலாளர்கள் கதறினார்கள்.

"என்னுடைய உபவாசத்தைப் பற்றி நீங்கள் கவலைப் பட்டுப் பயனில்லை. வேலை நிறுத்தம் முடிந்த பிறகு தான் நான் இனி உணவு அருந்தப் போகிறேன். ஆனால் நீங்கள் உங்கள் பிரதிக்ஞையைக் காப்பாற்றுவதானால் வெறுமனே சோம்பியிருப்பதில் பயனில்லை. பொது ஜனங்களிடம் சென்று பிச்சை எடுத்தலும் கூடாது. அவரவர்களுக்கு ஏதாவது வேலை தேடிக் கொள்ள வேண்டும். உயிர் வாழ்வதற்கு வேண்டிய ஊதியம் கிடைத்தாலும் போதும் என்று கிடைத்த வேலையைச் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் சபதத்தை நிறைவேற்ற முடியும்!" என்றார் மகாத்மா.

மகாத்மாவின் இந்த மகத்தான முடிவு தெரிந்து பிறகு தொழிலாளிகள் யாரும் வேலைக்குத் திரும்பவில்லை. அவரவர்களும் வேறு வேலை பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள். ஸ்ரீ வல்லபாய் படேல் வேலை நிறுத்தம் செய்தவர்களில் சிலருக்கு ஆமதாபாத் நகர சபையின் கீழ் வேலை தேடிக் கொடுத்தார். சபர்மதி ஆசிரமத்தில் கைத்தறி நெசவுப் பள்ளிக் கூடம் ஒன்று அப்போதுதான் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கூடத்தின் அடித்தளத்தை நிரப்ப ஏராளமான மணல் வேண்டியிருந்தது. இந்த வேலைக்குத் தொழிலாளரில் பலரை உபயோகிக்கலாம் என்று ஸ்ரீ மகன்லால் காந்தி சொன்னார். ஸ்ரீமதி அனசூயா பென் முதலில் வழி காட்டினார். கூடையில் மணலை வாரித் தம் தலைமேல் வைத்துக் கொண்டு போய்க் கொட்டினார். அவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் மணல் கூடை தூக்கிச் சென்றார்கள்.

இப்படி யெல்லாம் எத்தனை நாளைக்கு நடக்கமுடியும்? நிலைமை நெருக்கடியாகத்தான் தோன்றியது. ஆனால் காநதி மகாத்மாவின் உண்ணா விரதம் ஆமதாபாத் ஆலை முதலாளி களின் மனதை இதற்குள் கலங்கப்பண்ணி யிருந்தது. அவர்கள் கூடி ஆலோசித்தார்கள். அவர்களுடைய பிரதிநிதிகள் மகாத்மாவிடம் வந்து தங்கள் புகாரைத் தெரிவித்தார்கள். "தாங்கள் உண்ணாவிரதம் இருப்பது நியாயமல்ல. தங்களிடம் நாங்கள் மதிப்பும் அபிமானமும் உள்ளவர்கள். இப்படித் தாங்கள் பட்டினி கிடப்பதால் எங்களைத் தர்ம சங்கடமான நிலையில் கொண்டு வைத்து விட்டீர்கள். இது தங்களுக்கு அழகல்ல" என்று முதலாளிகளின் பிரதிநிதிகள் கடிந்து கொண்டார்கள்.

இதற்கு மகாத்மா,"என்னுடைய உண்ணா விரதத்துக்காக நீங்கள் உங்கள் உறுதியை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. உங்களை உத்தேசித்து நான் உபவாசம் இருக்கவில்லை. தொழிலாளிகள் பிரதிக்ஞை தவறுவதைத் தடுக்கவே உண்ணா விரதம் இருக்கிறேன்." என்று சொன்னார். இந்தச் சமாதானத்தை அவர்கள் ஒப்புக்கொள்ள வில்லை.

ஆலை முதலாளிகளின் தலைவர் ஸ்ரீ அம்பாலால் சாராபாய் என்று பார்த்தோம் அல்லவா? அவரும் அவருடைய மனைவி ஸாரளா தேவியும் மகாத்மாவிடம் மிக்க அன்பு வைத்திருந்தார்கள். மகாத்மா காந்தி பட்டினி யிருப்பது அவர்களுக்கு மிக்க மன வேதனையை அளித்தது.

மூன்று தினங்கள் மகாத்மாவின் உண்ணா விரதம் நீடித்திருந்தது. இதற்குள் ஆலை முதலாளிகளின் மனம் இளகி விட்டது. ஏதாவது சமரச முடிவு காண்பதில் எல்லாரும் சிரத்தை கொண்டார்கள். ஸ்ரீமதி அனசூயாபென் வீட்டில் சமரசப் பேச்சுகள் நடந்தன. முதலாளி-தொழிலாளி தகராறைப் பற்றி விசாரித்து முடிவு கூறுவதற்கு ஸ்ரீ ஆனந்த சங்கர துருவா என்பவர் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இருபத்தோரு நாள் நடந்த ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவு பெற்றது. காந்திஜியின் உண்ணா விரதமும் முடிவடைந்தது.

இந்த மாதிரி சந்தோஷமான சமரச முடிவு ஏற்பட்டதைக் கொண்டாடுவதற்காகத் தொழிலாளரின் கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு ஆலை முதலாளிகளும் ஐரோப்பியக் கமிஷனரும் வந்திருந்தார்கள். கமிஷனர் துரை அக்கூட்டத்தில் பேசினார். இவ்வளவு பெரிய வேலை நிறுத்தம் கொஞ்சங்கூடக் கலவரம் இன்றி இருபத்தோரு நாள் நடந்து முடிந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இதற்குக் காந்திஜிதான் காரணம் என்பதை அந்த உத்தியோகஸ்தர் உணர்ந்திருந்தார். ஆகையால் அவர் தொழிலாளரைப் பார்த்து, "நீங்கள் எப்போதும் காந்திஜி சொல்லும் புத்திமதியைக் கேட்டு அதன்படியே நடக்க வேண்டும்" என்று கூறினார்.

ஆனால் இதே ஐரோப்பியக் கமிஷனர் கெயிரா ஜில்லா விவசாயிகளைப் பார்த்து, "காந்திஜி சொல்லும் வார்த்தைகளை நீங்கள் கேட்கக் கூடாது. கேட்டால் உருப்படாமற் போவீர்கள்!" என்று எச்சரிக்கை செய்யும்படியான சந்தர்ப்பம் வெகு சீக்கிரத்திலேயே வருவதற்கிருந்தது.

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சில செய்திகள் படித்தவை. இருப்பினும் பல புதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.