ஞாயிறு, 19 மார்ச், 2017

காந்தி - 7

13. ஆத்ம தரிசனம் 
’கல்கி’

[ ஓவியம்: மணியம் ]

மார்ச் 18.   ஒத்துழையாமை இயக்கத்தில்   ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.ரௌலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார் [ தகவல்: விக்கிப்பீடியா ] 

இதன் தொடர்பில், ‘கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ (பகுதி 2) நூலில் வந்த 13-ஆம் கட்டுரையைப் படியுங்கள். [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]



13. ஆத்ம தரிசனம்

ரவுலட் கமிட்டியின் அறிக்கையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டு வந்தது. அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்துவற்காகக் காந்திமகான் தான் மேற்கொண்டிருந்த பாலருந்தா விரதத்தை ஓரளவு தளர்த்தி உடம்பைக் குணப்படுத்திக்கொண்டு வந்தார். அதே சமயத்தில் ரவுலட் கமிட்டி சிபார்சுகளை யொட்டிச் சட்டம் செய்வதில் சர்க்காரின் உறுதி வலுவடைந்து வந்தது. ரவுலட் கமிட்டியின் சிபார்சுகளை யொட்டிச் சர்க்கார் ஒரு மசோதா தயார் செய்து வெளியிட்டார்கள். பிறகு அந்த மசோதா இந்திய சட்டசபையில் விவாதத்துக்கு வந்தது. 

அப்போதெல்லாம் இந்திய சட்ட சபையில் உத்தியோகஸ்தர்களும் சர்க்கார் நியமித்த அங்கத்தினர்களுமே அதிகமாயிருந்தார்கள். பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் ஒரு சிலர் தான். அவர்களிலும் மக்களின் கட்சியை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் மிகச் சிலராயிருந்தனர். 

இந்திய சட்ட சபை விவாதத்தின்போது ரவுலட் மசோதாவை எதிர்த்து அதிதீவிரமான பிரசங்கம் செய்தவர் மகாகனம் சீனிவாச சாஸ்திரியார். அம் மசோதாவுக்கு விரோதமான வாதங்களையும் கண்டனங்களையும் மகா கனம் சாஸ்திரியார் சரமாரியாகப் பொழிந்தார். அந்த மசோதாவைச் சட்டமாக்குவதனால் விளையக்கூடிய விபரீதங்களைப் பற்றி சர்க்காருக்கு எச்சரிக்கை செய்தார். 

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவர்களில் இருவர் முக்கியமானவர். ஒருவர் இராஜப் பிரதிநிதி சேம்ஸ் போர்டு பிரபு; இன்னொருவர் காந்தி மகான். இந்திய சட்ட சபையின் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காகக் காந்தி மகான் அங்கே போயிருந்தது அதுதான் முதல் தடவை. சாஸ்திரியாரின் ஆவேசமான உணர்ச்சி நிறைந்த பேச்சு சேம்ஸ் போர்டு பிரபுவின் மனத்தைக்கூட மாற்றியிருக்கலாம் என்று மகாத்மா எண்ணினார். ஆனால் அவ்விதம் நடைபெறவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனைத் தட்டி எழுப்பலாம்; தூங்குவதாகப் பாசாங்கு செய்கிறவனை என்ன செய்தாலும் எழுப்பமுடியாது அல்லவா? 

ஆகையால் தேசத்தில் நடந்த கிளர்ச்சியோ, சட்டசபையில் சாஸ்திரியார் நிகழ்த்திய பிரசங்கமோ, சர்க்காரின் தீர்மானத்தை மாற்ற முடியவில்லை. உத்தியோக அங்கத்தினர்கள்-நியமன அங்கத்தினர்களின் வோட்டுகளால் இந்திய சட்ட சபையில் ரவுலட் மசோதா நிறைவேறிவிட்டது. காந்தி மகாத்மா இராஜப்பிரதிநிதிக்கு அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் எழுதிய கடிதங்களினாலும் யாதொரு பயனும் விளையவில்லை. 

இத்தகைய நிலைமையில் சென்னையிலிருந்து மகாத்மா காந்திக்கு அழைப்புக் கடிதம் வந்தது. மகாத்மா காந்திஜியின் உடல்நிலை இன்னமும் திருப்திகரமாக வில்லை. பொதுக் கூட்டங்களில் உரத்துப் பேசச் சக்தி கிடையாது. சிறிது நேரம் நின்றுகொண்டு பேசினால் உடம்பு நடுங்கத் தொடங்கியது. இவ்வளவு பலவீனமான நிலைமையிலும் மகாத்மா காந்தி தென்னாட்டிலிருந்து அன்பர்கள் அனுப்பியிருந்த அழைப்பை ஒப்புக்கொண்டு சென்னைக்குப் பிரயாணமானார். 

மகாத்மாவின் சென்னை விஜயம் மிக முக்கியமான விளைவுகளுக்குக் காரணமாயிருந்தது. சென்னையில் இருந்தபோது தான் காந்திமகான் ரவுலட் சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக் கிரஹம் செய்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அதன் காரணமாக இந்தியா தேசம் நெடுங்காலமாகத் தான் இழந்திருந்த ஆத்மாவைத் திரும்பவும் பெற்றது. பாரத சமுதாயம் புனர்ஜன்மம் எடுத்தது. 

சென்னைக்குச் சென்றது பற்றிக் காந்தி மகான் தம் சுயசரிதத்தில் எழுதியிருப்பதைக் கேளுங்கள்:_ 

"தென்னாட்டுக்கு எப்போது சென்றாலும் என் சொந்த இடத்தில் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். தென்னாப் பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாக, தமிழர்கள் மீதும் தெலுங்கர்கள்மீதும் எனக்கு ஏதோ தனி உரிமை உண்டென்று நான் எண்ணுவதுண்டு. தென்னாட்டார் என் நம்பிக்கையை ஒருபோதும் பொய்ப்படுத்தியதில்லை. ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால் அந்த அழைப்புக்குப் பின்னால் நின்றவர் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி என்பதாகச் சென்னைக்குப் போகும் வழியில் அறிந்து கொண்டேன். 

ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி சமீபத்தில் தான் சேலத்திலிருந்து சென்னைக்கு வக்கீல் தொழில் நடத்த வந்திருந்தார். காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார் முதலியோர் அவரை வற்புறுத்தி அழைத்திருந்தார்கள். பொது வாழ்வில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்பது அவரது நோக்கம். சென்னையில் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியின் விருந்தினராகவே நாங்கள் தங்கினோம். ஆனால் இரண்டு மூன்று நாள் ஆனபிறகே இதை நான் கண்டுபிடித்தேன். ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காருக் குச் சொந்தமான வீட்டில் நாங்கள் தங்கியிருந்தபடியால் நாங்கள் அவருடைய விருந்தினர் என்று எண்ணியிருந்தேன். மகாதேவ தேஸாய் எனக்கு உண்மை தெரிவித்தார். அவர் விரைவில் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டார். ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி தமக்கு இயற்கையாக உள்ள சங்கோச குணத்தினால் எப்போதும் பின்னாலேயே இருந்தார். ஆனால் மகாதேவ் தேஸாய் எனக்கு அவரைப்பற்றித் தெரியப்படுத்தினார். 'இந்த மனிதரிடம் நீங்கள் பழக்கம் செய்து கொள்ள வேண்டும்' என்று அவர் ஒரு நாள் கூறினார். 

அவ்வாறே செய்தேன். போராட்டத்துக்குரிய திட்டங்களைப் பற்றி நாங்கள் தினந்தோறும் விவாதித்தோம். ஆனால் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை யல்லாமல் வேறெந்த வேலைத் திட்டமும் எனக்குத் தோன்றவில்லை. ரவுலட் மசோதா முடிவில் சட்டமாகி விட்டாலும் அதை எதிர்த்து எப்படி சாத்வீக மறுப்புச் செய்வதென்பது எனக்கு விளங்க வில்லை. அரசாங்கம் அதற்குரிய சந்தர்ப்பம் அளித்தால் தானே சட்டத்துக்கு கீழ்ப்படிய மறுக்கலாம்? அதில்லாவிடில் மற்றச் சட்டங்களையும் சாத்வீக முறையில் மறுத்தல் கூடுமோ? இதுபோன்ற பல விஷயங்களையும் குறித்து நாங்கள் விவாதித்தோம். 

இது சம்பந்தமாக நன்கு ஆராய்ச்சி செய்யும் பொருட்டு ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்களின் சிறு மகாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் சிறப்பாகக் கலந்து கொண்டவர்களில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர். சத்தியாக்கிரஹ சாஸ்திரத்தின் நுட்பமான அம்சங்களையுங்கூட விளக்குமாறு ஒரு விரிவான நூல் நான் எழுத வேண்டுமென்று அவர் யோசனை சொன்னார். 

இந்த யோசனைகளெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் ரவுலட் மசோதா சட்டமாகி விட்டது என்னும் செய்தி கிடைத்தது. அன்றிரவு அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தேன். மறுநாள் அதிகாலையில் சிறிது வழக்கத்தைவிட முன்னதாகவே விழித்துக் கொண்டேன். தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலுள்ள நிலையில் இருக்கும் போது சட்டென்று எனக்கு வழி புலனாயிற்று. கனவு கண்டது போலவே இருந்தது. காலையில் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியிடம் அதைப்பற்றிய விவரம் முழுவதும் கூறினேன். 

'ஒரு நாள் பூரண ஹர்த்தால் (வேலை நிறுத்தம்) நடத்தும்படி தேச மக்களைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று நேற்றிரவு கனவில் யோசனை உதித்தது. தம்முடைய போராட்டம் புனிதமான போராட்டம் ஆதலின், ஆத்ம தூய்மைக்குரிய ஒரு காரியத்துடன் அதைத் தொடங்குவதே தகுதியென்று நினைக்கிறேன். அன்றைய தினம் இந்திய மக்களனைவரும் தங்கள் வேலைகளை நிறுத்தி உபவாசமிருந்து பிரார்த்தனை நடத்த வேண்டும். எல்லா மாகாணங்களும் தமது வேண்டுகோளுக்கு இணங்குமா என்று சொல்லுதல் கஷ்டம். ஆனால் பம்பாய், சென்னை, பீஹார், சிந்து இம்மாகாணங்களைப் பற்றி எனக்கு நிச்சயமுண்டு. இவ்விடங்களிலெல்லாம் ஹர்த்தால் சரிவர நடந்தாலும் நாம் திருப்தியடையலாம்' என்றேன். 

ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி உடனே இந்த யோசனையை அங்கீகரித்தார். பின்னால் மற்ற நண்பர்களுக்கு அது தெரிவிக்கப்பட்டபோது அவர்களும் அதை வரவேற்றார்கள். சுருக்கமான விண்ணப்பமொன்றை நான் தயாரித்தேன். முதலில் 1919 வருஷம் மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி ஹர்த்தால் தினமாகக் குறிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதிக்கு மாற்றப் பட்டது. ஜனங்களுக்குச் சொற்பகால அறிக்கையே தந்தோம். வேலை உடனே தொடங்கவேண்டியிருந்த படியால் நீண்ட கால அறிக்கை தருவதற்கு அவகாசம் இல்லை. 

ஆனால் அவ்வற்புதம் எப்படி நடந்ததென்று யாரால் சொல்ல முடியும்? பாரத நாடு முழுவதிலும் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலை வரையில் நகரங்களும், கிராமங்களும் அன்றைய தினம் பரிபூரணமான ஹர்த்தால் அனுஷ்டித்தன. அது யாரும் எதிர்பாராத அற்புதமான காட்சியாயிருந்தது. 


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்
[  நன்றி: : http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0385_01.html  ]

கருத்துகள் இல்லை: