வெள்ளி, 28 டிசம்பர், 2018

1202. குரல்வளம் : கவிதை

குரல்வளம்
பசுபதி




திருவருள் தேடிநின் றேன்சிம்மம்
. .  போல்குரல் சேர்ந்திடவே
வருடங்கள் ஓடி மறைந்தன;
. . வல்லோசை வாய்க்கவில்லை.
மருந்தொன்(று) அறிந்தேன்; மறைக்கா(து)
. . உரைப்பேனம் மர்மமதை !
குரல்வளம் கோடை இடியாய்க்
. . குமுறும் குளிக்கையிலே ! (1)

மறுவற்ற சங்கீத மன்னன்
. . மதுரை மணிநினைவில்
சரமாரி போல்வரும் சர்வ
. . லகுவான சங்கதிகள்
சிரமமே யின்றிச் திரிகாலப்
. . போக்கில் சிறந்திடும்;என்
குரல்வளம் கோலக் குயிலெனக்
. . கொஞ்சும் குளிக்கையிலே ! (2)

சுருதிபோல் வெந்நீர் சுகமாய்த்
. . தலைமேல் சொரியுமொலி ;
தெறிக்கும் பிடிகளும் ஜீ.என்.பி
. . சார்போல் செவிக்குணவாய்
பிருகாக்கள் கூடிப் பிசிறின்றி
. . அங்கே பிறக்கு(ம்);என்றன்
குரல்வளம் கேட்டால் குலாம்அலி
. . என்பீர் குளிக்கையிலே ! (3)

இன்னிசை மன்னவன் எம்.கே.டி
. . போல எழுச்சியுடன்
பண்ணிசை பொங்கிடப் பைந்தமிழ்ப்
. . பாடலைப் பாடிடுவேன் !
அன்றாடக் கச்சேரி என்றன்
. . அகமதில் ஆவதனால்
சென்னைக்கு மார்கழி சென்றிடும்
. . வெட்டிச் செலவிலையே ! (4)

தொடர்புள்ள பதிவுகள் :


4 கருத்துகள்:

ELANDHAI சொன்னது…

மிக மிக அருமை

குளிக்கையில் எத்தனை குரல்வளம், அடடா!

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, இலந்தை!

கவிஞர் சவகர்லால் சொன்னது…

மிகவும் அருமை.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, சவகர்!