புதன், 11 ஜூலை, 2012

ஏ.எஸ்.ராகவன்: எங்கள் தேவன்

 எங்கள் தேவன்

ஏ.எஸ். ராகவன்

 ஜூலை 8, 2012 -இல் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் ஏ.எஸ்.  ராகவன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாக இக்கட்டுரையை இங்கிடுகிறேன்.

[ நன்றி: தென்றல் ] 



தான் பெரிதும் மதித்த ஒரு பெரும் எழுத்தாளரான ‘தேவன்’  மறைந்தபோது ராகவன் அவர்கள் எழுதிய ஓர் அஞ்சலிக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இவை. அவருடைய எழுத்துத் திறனுக்கும், நடை அழகிற்கும், சிந்தனைச் சிறப்பிற்கும்  இது ஒரு சிறந்த காட்டு.  நான் ‘தேவனைப் பற்றித் தொடர்ந்து  இட்டுவரும் பல பதிவுகளுக்கிடையே  இது மிக அரிய ஒன்றே.

திரு ஏ.எஸ். ராகவனின் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஒரு பெரிய இழப்பு.
அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
=======
எங்கள் தேவன்

ஏ.எஸ். ராகவன்

( கதை சொல்ல ஒரு மல்லாரி ராவ், துப்புத் துலக்க ஒரு சந்துரு, துப்பு தானாகத் துலங்க ஒரு சாம்பு, நீதி வழங்க ஜகந்நாதன், இல்லறம் பேண ராஜம், காதலுக்குச் செல்லம், வாழ்வை ரசிக்க ஸ்வாமி; எழுத்துக்கு ஒரு வேதாந்தம், நடுத்தர வாழ்வுக்கு ஒரு சுதர்சனம், இன்னும் எத்தனை எத்தனை சித்திரங்கள்!)





இவர்களெல்லாம் கற்பனைப் பேர்வழிகளா? ஊஹும், வாரத்தின் ஏழு நாட்களில், ஆறை உணர்வாலும், ஏழாவதை உணர்ச்சியாலும் பங்கு போட்டுக் கொண்டு நம்மைத் துடிப்புறச் செய்த அழியாத பாத்திரங்கள் இவர்கள்.

அவர் எழுத்தில்  தெய்வதம் தோய்ந்து நிற்கும். ஹாஸ்யம் விரவிப் பாயும். நம்மைப் பார்க்கலாம். நம் நிழலைப் பார்க்கலாம். உலகைக் காணலாம். அணுவில் அணுவைக் காணலாம். ஆழத்தையும் அகலத்தையும் ஒருங்கே காணலாம்.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் வரை ஓடும் (?) ரயிலோடு போட்டி போட்டுக் கொண்டு காரில் ஓடிவரும் நாகநாதய்யரைப் போன்றவர்களைத் தினசரி சந்திக்காமலா இருக்கிறோம்? “ ஏறுமையா காரிலே, நான்ஸென்ஸ் ஸ்டுபிட்!” என்று சீற்றத்தோடு தெளித்த அன்பை வாரி இறைக்கும் ஸ்வாமியை மறக்க முடியுமா?

சென்ற ஆண்டு ‘தேவன்’ எங்களோடு இருந்தார். விழாவிற்குத் தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை (1) இன்னமும் செவியில் ஒலிக்கிறது. நாங்கள் செய்தது சொல்பம்; பெற்றது மாணப் பெரிது. எங்களைப் பற்றி, எங்கள் சங்கத்தைப் (2) பற்றி, அதன் தொண்டைப் பற்றி நிறைய எழுதி ‘விகடனில்’ வெளியிட்டு ஆக்கம் அளித்தார். அடக்கத்தின் எல்லையில் வாமனராக ஆனால் விஸ்வ ரூபியாகத் தம்மை நிறுத்திக் கொண்ட பெருந்தகை அவர்.


உழைப்பால் உயர்ந்தவர் அவர். எழுத்தால் வளர்ந்தவர் அவர். ‘சூடாமணி’ ஆசிரியராக அவரே பேசினார். நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட இளங் கற்பனைச் சிற்பியாக வேதாந்தத்தை அமைத்தார். நம்மொழியின் நிலை, பத்திரிகைகளின் நிலை, எழுத்தின் தன்மை, இவற்றைத் துணிந்து எழுதினார். ‘மிஸ்டர் வேதாந்தம் ஒரு ஒப்பற்ற சிருஷ்டி.
..//...

’அஞ்சுமுகம் தோன்றில், ஆறுமுகம் தோன்றும்’ என்று கனியக் கனிய எழுதுவாரே, அந்த ஆறுமுகம் தோன்றாமலே போய்விட்டதா? தமிழ் கூறும் நல்லுலகெங்குமுள்ள லட்சக்கணக்கான உள்ளங்கள் பொருமுகின்றன. ஐந்தை அறுபதில் அடக்கி விரிவுரையாக ஓராண்டு எழுதிய கலையுள்ளம் கருகிப் போய்விட்டது. கடலையும், அதன் ஓலத்தையும், நாழிக் கிணற்றையும் பார்த்துச் சலித்த செந்திலாண்டவன், தனக்கு இட்டமுடன் கதை சொல்ல அவரைக் கொண்டு போய்விட்டானா? தமிழ் தந்த கடவுள் தமிழை எடுத்துக் கொண்டானா? மல்லாரி ராவுக்குச் சுயநலமா? இனி நமக்குச் சொல்லாமல் அவருக்கே பொடி போட்டுச் சொல்ல விழைந்தாரா?

ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்து நிற்கிறோம்.

தமிழுக்கு யோகம் பிறந்து விட்டது என்று சென்ற ஆண்டு(3) அவர் குறிப்பிட்டார். பெருவேள்வியில் ஈடுபட்டுள்ள நாம் அதற்குப் பெரும் ஆகுதி செலுத்திவிட்டோம். இனிப் பெற வேண்டியதைப் பெற முயல்வோம்.

[ நன்றி: தேவன் அறக்கட்டளை ]

பின் குறிப்பு:

(2) குறிப்பிடுவது திருச்சி எழுத்தாளர் சங்கம் என்று நினைக்கிறேன்.  ஏனென்றால் திருச்சி ரயில்வேயில் பணி புரிந்த ஏ.எஸ். ராகவன் திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.  ‘தேவன்’ 19-2-56 -இல் அச்சங்கத்தின் முதல் ஆண்டு விழாவில் ஆற்றிய தலைமையுரை மிக அருமை. அதைத்தான் (1) -இலும், கட்டுரையின் இறுதியிலும் (3) ராகவன் குறி்ப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். இன்னொரு சமயம்,  ’தேவன்’ பற்றிய இன்னொரு மடலில் அந்தத் தலைமையுரையின்  சில பகுதிகளைப்  பார்ப்போம்.

திருச்சியில் ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் பணிபுரிந்த இவர், திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளார்

திருச்சியில் ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் பணிபுரிந்த இவர், திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளார்

அவருடைய ‘மனிதன்’ நாவலும், அதற்கு ‘கோபுலு’ வரைந்த ஓவியங்களும் மறக்கமுடியாதவை.  அதில் ஒரு துளியைப் பின்னர்ப் பார்ப்போம். 
=================

தொடர்புள்ள சில பதிவுகள் :

ஏ.எஸ்.ராகவன்

ஏ. எஸ். ராகவன் : விக்கி கட்டுரை

தேவன் தினம், 2010

தேவன் நினைவுகள் - 1

தேவன் நினைவுகள் -2 

தேவன் படைப்புகள்

9 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

மறக்கவியலாத எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவன் அவர்கள். அவரின் எழுத்தையும் வெளியிட்டு நினைவுகூர்ந்தது அருமை. அன்னாரின் பிரிவு அவரது குடும்பத்தைப் போலவே தமிழுக்கும் இழப்புதான். என்ன சொல்ல... மனம் கனக்கிறது.

Pas S. Pasupathy சொன்னது…

உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி,பாலகணேஷ் அவர்களே.

Siva Suryanarayanan சொன்னது…

செந்திலுறை சேயோன்போல் செங்கண் மாலும்
செந்தமிழர் இராகவனின் தமிழைக் கேட்க
வந்திவரை உடன்கொண்டு சென்றான் போலும்,
வைகுந்தம் தமிழ்மணக்கச் செய்தான் போலும்!
சிந்தையெலாம் தேவனவர் சீரை ஏந்தி
இராகவன்செய் அஞ்சலியைக் கண்டேன் கண்டேன்
சந்ததிகள் இதையெல்லாம் அறியத் தானே
தண்டமிழர் பசுபதிவில் தந்துள் ளாரே!

சிவ சூரியநாராயணன்.

Pas S. Pasupathy சொன்னது…

உங்கள் வருகைக்கும், உங்கள் அருமையான எண்சீர் விருத்தத்திற்கும் மிக்க நன்றி, சிவசூரியநாராயணன் அவர்களே.
என்னுடைய கவிதை-தொடர்புள்ள சில பதிவுகளும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

ஷைலஜா சொன்னது…

மதிப்பிற்குரிய திரு பசுபதி அவர்களுக்கு
வணக்கம்.
அப்பா தேவன் அவர்களைப்பற்றி இப்படி எழுதியதை அப்பாவே எனக்கு சொல்லி இருக்கிறார், இங்கே மறுபடிவாசித்தபோது நிற்காத கண்ணீர் மேலும் வெள்ளமாய்ப்பெருகுகிறது.திரு சிவசூர்யநாராயணன் கவிதை வேறு நெகிழ வைக்கிறது. நினைக்கவே இல்லை காலையில் நல்ல நினைவோடு பேசிக்கொண்டிருந்த அப்பா மதியம் போய்விடுவர் என்று. ஒருவாரகாலமும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிகிச்சைக்காக ஓய்விலிருந்தவரின் அருகில் இருந்தபோது எனக்குத்தன் விஸ்வரூபத்தைக்காட்டிவிட்டுப்போய்விட்டார். போனவர் எங்கள் நினைவில் இருக்கிறார் அவர்தம் குழந்தைகளான நாங்கள் தான் பெயருக்கு இருக்கிறோம்.
கண்ணீருடன்
ஷைலஜா

Pas S. Pasupathy சொன்னது…

அன்புள்ள ஷைலஜா,

சொற்களால் தணிக்க முடியாத இழப்புத்தான். என்னத்தைச் சொல்ல?

உங்கள் தந்தையாரின் சில படைப்புகள் என்னிடம் உள்ளன..ஆனால், அவை சென்னையில் உள்ளன. அவர் எழுத்துகளில் அவர் என்றும் வாழ்வார் என்ற நம்பிக்கையால், என்னிடம் தற்போது இருந்த ஓர் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கிட்டேன்.

இந்த பேரிழப்பைத் தாங்கும் மனத்திடத்தை ஆண்டவன் உங்களுக்கு அருள்வானாக!

இந்நேரத்திலும் இங்கு வந்து, உங்கள் மனத்தைத் திறந்தது சிறிது அமைதியைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

Siva Suryanarayanan சொன்னது…

மனிதனெனும் புதினத்தை வடித்தெ டுத்து
மலர்முகத்தைக் காட்டிநின்றார் மணத்தை வீசி
இனிமையுடன் பேசுகின்ற இயல்பு டையார்
இதயத்தில் நல்லதையே நினைத்தி ருந்தார்
தனிமனித வாழ்க்கையிலும் எடுத்துக் காட்டாய்த்
தானென்றும் நடந்துகொண்டு பாதை செய்தார்
இனிபுவியில் எழுதுகின்ற எழுத்தி லெல்லாம்
ஏ.எஸ்.ஆர் எனுமனிதர் நிறைந்தி ருப்பார்!

சீர்மிகுந்த எழுத்துக்குச் சொந்தக் காரர்
சித்திரம்போல் கதையெழுதும் திறமை மிக்கார்
பார்வையிலே மனங்களெலாம் படம்பி டிப்பார்
பைந்தமிழில் கதையிலவை இடம்பி டிக்கும்
யார்சொலினும் எதுசொலினும் அவற்றில் எல்லாம்
இருக்கின்ற நல்லவையே கண்டி ருப்பார்
நேர்வழியே தன்வழியாய்க் கொண்டி ருப்பார்
நின்றிருப்பார் ஏ.எஸ். ஆர் நெஞ்சில் எல்லாம்!

பணிவுடையார் பண்புடையார் பாசத் தோடு
பழகுகின்ற படைப்பாளர் நோக்கி லெல்லாம்
துணிவுடையார் துணிந்துண்மை சொல்ல வல்லார்
தொலைநோக்குக் கொண்டெதையும் துலக்க வல்லார்
பணிதனையே இறைவர்க்குப் படைத்தார் தம்மைப்
பரமபதம் பார்த்தெழுதக் கொண்ட தாலே
மணிமணியாய்க் கதையெழுதும் மனிதர் பெற்ற
மக்கள்மனம் வருந்துவது வேண்டாம் வேண்டாம்!

சிவ சூரியநாராயணன்.

Pas S. Pasupathy சொன்னது…

அருமை, சிவசூரி! அவருடைய குடும்பத்திற்கு இதுவும் ஓர் ஆறுதல் அளிக்கும் என்று நம்புகிறேன்.

Siva Suryanarayanan சொன்னது…

பசுபதியாரின் தேவன் விழாக் கவிதைக்குப் பின்னூட்டம்

ஓவியர்கோ கோபுலுவின் கைவண் ணத்தில்
ஒப்பில்லா உருவத்தில் உலவும் ஹாஸ்யக்
காவியத்து நாயகனாம் சாம்பு வைநாம்
களித்ததெலாம் கவிதையிலே வடித்துத் தந்து
பூவிரியும் மணங்காட்டிப் பொழிந்த வண்ணம்
புவியோரின் உள்ளத்துக் கோயில் கொண்ட
தேவன்புகழ் செப்பியநல் வேகம் கண்டேன்
தேன்போலே மரபங்கே இனிக்கக் கண்டேன்.


எப்படியும் வெற்றிபெறும் சாம்பு வைப்போல்
இதயத்தில் என்றென்றும் ஆட்சி செய்யும்
துப்பறியும் சந்துருவின் தோற்றம் கண்டேன்
சொல்லிநின்ற கதைகளிலே உள்ள தெல்லாம்
அப்படியே எடுத்துரைததுக் கவியால் செய்த
ஆலயத்தில் பொருத்தமுற அன்பாய் நீங்கள்
செப்பரிய விதமாகத் தேவன் தம்மைச்
செகமகிழ நிறுவியதைக் கண்டேன் கண்டேன்!

சிவ சூரியநாராயணன்.