சனி, 30 ஏப்ரல், 2016

பாரதிதாசன் - 4

பாலாமணி பாட்டுக்கள்

பாரதிதாசன்.

ஏப்ரல் 29. பாரதிதாசன் பிறந்த தினம்.



பாலாமணி அல்லது பக்காத் திருடன்’ என்பது வடுவூர் துரைசாமி ஐயங்காரின்  நாவல். அது 1937-இல் திரைப்படமாய் வந்தது.

டி.கே.சண்முகம் தான் கதாநாயகன். டி.எஸ்.ஜெயா கதாநாயகி. எஸ்.வி.ஸஹஸ்ரநாமம் தான் துப்பறியும் ரஞ்சித் சிங்.  ( உண்மைப் பாத்திரமான) நார்டன் ( Eardley Norton  ) என்ற வழக்கறிஞர் கதாநாயகியின் வழக்கில் வாதாடி அவளை விடுவிப்பதாய் இருப்பது கதையில்  ஒரு சுவையான பகுதி.

அந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதினதைப் பற்றி நகைச்சுவையுடன் பாரதிதாசன் எழுதியதைப் படியுங்கள்!
=============


‘ஜனநாயகம்’ ஆசிரியர் தோழர் திருமலை சாமியும், தோழர் எஸ்.வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப் படுத்த உரிமையுடையவர்கள். மேலும், அவர்கள் ஈரோடு ஷண்முகானந்தா டாக்கி கம்பெனியாருக்கும் நண்பர்கள், நான் ‘பாலாமணிக்குப்’ பாட்டு எழுத வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். டாக்கிகாரர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

ஈரோடு சென்றேன். பாலாமணிக்குடையவர் கதா சந்தர்ப்பங்களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன்.

நான் வீடு திரும்பும் போது ‘பாலாமணி’ யுடைய வரை நோக்கி, பிரதானமாகக் கேட்டவரம் ஒன்றே ஒன்று.

அண்ணா சம்ப்ரதாயப்படி ‘பாலாமணி’ ப் பாடல்களைப் புத்தகமாக நீங்கள் அச்சடிக்கும் போது அதில் பிழையில்லாதிருக்க - என்னையும் கலந்து கொள்ளுங்கள்.அவ்வாறே வரம் கிடைத்தது. பிறகு பாலாமணி வெளிவந்தது. எனக்குக் கொடுத்த வரத்தை உடனே உறிஞ்சிக் கொண்டார்களாதலால் லக்ஷணத்தின் எதிர்முனையில் பாட்டுப் புத்தகம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அது மாத்திரமல்ல, நான் எழுதிய பாடல்கள் சில நீக்கப்பட்டும், வேறு பாடல்கள் சில சேர்க்கப்பட்டும் இருப்பதைப் பார்த்தேன். அதுபற்றி ஒன்றுமில்லை. இன்னின்ன பாடல்கள் இன்னின்னாரால் ஆகியவை என்பதைக் குறிக்க வேண்டியது அவசியமல்லவா? அப்படிச் செய்யாமல் வேறொருவர் எழுதிய பாடல்களுக்கு, இடப் பக்கமாக ஃஇக்குறி வைத்ததோடு நின்றார்கள். மேலும் அப்புத்தகத்தில் அச்சுப்பிழை யில்லாத இடம் அருமையாகிவிட்டது. முதலாளிகட்கு இதில் கவலை யிருக்க வேண்டியது அநாவசியமாகத் தோன்றலாம். இருந்தாலும் அவர்களின் இச்சட்டம் அக்கிரமமானதும் நாணயமற்றதுமாகும்.

நான் விழுப்புரத்தில் “பாலாமணி” பார்க்கப் போனேன். அங்குத் தோழர் மிக்சேட் அவர்களைக் கண்டேன். இப்படிச் செய்ததற்கு என்ன காரணம் என்று கேட்டேன். அவர் கம்பெனியின் சார்பாகச் சொல்லிய பதில்கள் ரசமானவை.

‘பாலாமணிக் குடையவர்கள் விரும்பியபடி நான் கோரஸாக எழுதிய பாடல் இது:-

ஸ்ரீபாரத தேவி! புரா தனியே!
எழில் அன்னைநல் வீராவேசம் தீராக் காதல்
மேவச் செய்தாய் என்னை! உதாரி ஜெயசீலி!

காவேரி கங்கா தீர நாரீ ப்ரபல ஹிமய கிரிதேஹி 
கோடானு கோடிப் போர் வீரர் தங்கள் முதல்வி! 
புனித வளமுடைய நிலத் தலைவி! 
அமுதுபோல் கவிதைகள் ஆர்ந்த சாந்தமுகி வாழி!


இதை நீக்கி - ‘கார்குகா ஷண்முகா’ என்று தொடங்கும் ஓர் பாட்டைச் சேர்த்தற்கு என்ன காரணம் என்றேன்.‘ஷண்முகான ந்தா டாக்கி’ என்று கம்பெனிக்குப் பேர் வைத்திருப்பதால் கோரஸிலும் ஷண்முகம் என்று வரவேண்டுமாம். மேலும், முதலில் மங்களகரமாக இருக்க வேண்டுமாம். காப்பாற்று குகா என்ற பொருளில், காகுகா என்று எழுதாமல் கார்குகா என்று எழுதுவதும், பாடச் செய்வதும் பிழையல்லவா? காரால், பிழைமொழியால் துவக்குவதுதானா மங்களகரம்? சரி, போகட்டும்.

வேதவல்லியை நோக்கி, சச்சிதானந்தன் பாடும் ‘மதுரித மொழியுடையாய் ஒரு வார்த்தை சொல்வாய்’ என்று தொடங்கும் என் பாட்டை நீக்கியதற்குக் காரணம் கேட்டேன்.

சச்சிதாநந்தனாக நடிக்கும் ஸ்ரீ கருணாலய பாகவதர் அந்தப் பாட்டை வெகு இனிமையாகப் பாடிவிடுவாராம். அதனால் வேதவல்லி நடிகைக்குக் குறைவு ஏற்பட்டு விடுமாம்.

முதலாளிக்கு வேண்டிய பேர்வழியைவிட வேறு பேர்வழி அழகாய் இருந்துவிட்டால், அந்த அழகனின் மூக்கை முதலாளி வெட்டி விடலாம் என்று ஓர் சட்டம் உண்டாகாமல் இருப்பது பற்றி வருத்தப்படாதிருக்க முடியுமா?

நகரதூதன், 19.9.1937

[ நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாரதிதாசன்

கருத்துகள் இல்லை: