செவ்வாய், 15 ஜனவரி, 2019

1216. நன்றி ; கவிதை

நன்றி 
பசுபதி


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி 
. . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி
வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி
. . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி
பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி
. . படுக்கையறைக் கிசுகிசுப்புக் காதலுக்கோர் நன்றி
மண்ணிலெழு வாசனையோ பெய்மழைக்கோர் நன்றி
. . மன்பதையில் அன்புவழி சான்றோர்க்கு நன்றி (1)

வசந்தத்தில் விரிதோகை மயில்காட்டும் நன்றி
. . வானோக்கி நீளலைகள் வாரிதிசொல் நன்றி
புசித்தார்பின் விடுமேப்பம் பசித்தவனின் நன்றி
. . பூங்காற்றில் பொழிகானம் குயில்நவிலும் நன்றி
விசையோங்கும் சீழ்க்கையொலி ரசிகர்சொல் நன்றி
. . வேர்ப்புநிறை நெற்றிநல்ல விருந்துக்கோர் நன்றி
எசமான்முன் வாலாட்டல் நாய்காட்டும் நன்றி
. . இனியதமிழ்க் கவிபுனைதல் தாய்மொழிக்கோர் நன்றி (2)
=====

பொங்கலோ பொங்கல்!

[ நன்றி : படம் : https://www.facebook.com/FrescoRajam/  ] 


தொடர்புள்ள பதிவுகள் :
தினமணிக் கவிதைகள் 

1 கருத்து:

ELANDHAI சொன்னது…

அருமையான கவிதைக்கு நன்றியோ நன்றி