புதன், 8 ஆகஸ்ட், 2018

1134. சி.சு.செல்லப்பா - 4

"எழுத்து” சி.சு.செல்லப்பா - 3
வல்லிக்கண்ணன்

( தொடர்ச்சி )
7
பண விஷயத்தில் செல்லப்பா விசித்திரமான ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தார். அவருக்கு பணத்தேவை அதிகம் இருந்தது. வாழ்க்கை நடத்துவதற்கும், எழுத்துக்களை புத்தகங்களாக்கி வெளியிடவும் எப்பவும் அவருக்குப் பணம் தேவைப்பட்டது. இருப்பினும், நிறுவனங்களும் நல்மனம் கொண்டோரும் விரும்பி அளித்த பரிசுகளையும் பணத்தையும் அவர் பிடிவாதமாக மறுத்து வந்தார்.
அவருடைய வாழ்நாளில் வெவ்வேறு சமயங்களில் இப்படி பரிசுகள், அன்பளிப்புகள் அவரைத் தேடி வந்தன. எவர் தரினும் சரியே, அவற்றை நான்பெற்றுக்கொள்ள மாட்டேன்; இது என் கொள்கை என அவர் உறுதியாகத் தெரிவிப்பதை வழக்கமாக்கினார். கோவை ஈ.எஸ். தேவசிகாமணிதந்த முதுபெரும் எழுத்தாளருக்கான பாராட்டுப் பணம், சென்னை அக்னி அட்சரவிருது, சிந்து அறக்கட்டளை தமிழ்ப்பணி விருது, இலக்கியச் சிந்தனை தர முன்வந்த ஆதிலெட்சுமணன் நினைவுப் பரிசு... இப்படி பல.
ஒருசமயம், செல்லப்பாஉடல்நலம் இல்லாது சிரமப்படுவதை அறிந்த கோவை ஞானி அன்புடன் அவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினார். நான் எவரிடமும் அன்பளிப்புப் பெறுவதில்லை என்று எழுதி அதை நண்பருக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இதையும் செல்லப்பா என்னிடம் சொன்னார். ஞானி ரொம்பகால நண்பர்தான்; ஆனாலும் என் கொள்கையை நான் விடுவதற்கில்லை என்றார்.
1999 மே மாதம் கோவையில் ஞானியைக் கண்டுபேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எங்கள் நண்பரான செல்லப்பாவின் மரணம் குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். அதை அவர் திருப்பி அனுப்பிவிட்டார்.
‘என்னிடம் செல்லப்பா சொன்னார். நீங்கள் பணம் அனுப்பியதையும் சொன்னார். அதை அவர் திருப்பி அனுப்பி விட்டதையும் சொன்னார். என்ன பண்ணுவது! நான் என் கொள்கைப்படி நடந்து கொண்டேன் என்றும் சொன்னார்.”
‘என் விஷயத்திலும் அவர் அப்படி நடந்து கொள்வார் என்று நான் எண்ணியதில்லை. என்மனசுக்கு கஷ்டமாக இருந்தது என்றார் ஞானி.
அன்பளிப்புகள் விஷயத்தில் மற்றவர்கள் மனஉணர்வுகள் பற்றி செல்லப்பா கவலைப்பட்டதில்லை. அவர் தனது உள்மனசின் குரலுக்கே செவிசாய்த்தார். அதன்படி செயல் புரிந்தார்.
அமெரிக்காவின் குத்து விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு முதல்முறையாக அறிவிக்கப்பட்டு செல்லப்பாவுக்கு வழங்கப் பெற்ற போதும், அவர் அதை ஏற்க மறுத்தார். ஆனால் நண்பர்கள் பணத்தைப்பெற்று அவருடைய எழுத்துக்களை புத்கமாக வெளியிட உபயோகிக்கலாமே என்று வலியுறுத்தினார்கள். நீங்களே அதைச் செய்யுங்கள் என்று செல்லப்பாகூறிவிட்டார். நாடக வெளி’ ரெங்கராஜன் பொறுப்பேற்று, செயல்புரிந்து செல்லப்பாவின் என் சிறுகதைப் பாணி என்ற நூலை வெளிக் கொணர்ந்தார்.
8
அவரது 75-85 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் சி.சு. செல்லப்பா புரிந்துள்ள சாதனைகள் பெரிது- பெரிது என வியக்கச் செய்வனவாகும்.
‘என் சிறுகதைப் பாணி’, ‘பிச்சமூர்த்தியின் கவித்துவம் ‘ஊதுவத்திப் புல் (ந.பி. கவிதைகள் பற்றியது), எழுத்து களம்: ‘எழுத்து பத்திரிகை அனுபவங்கள்), பி.எஸ். ராமையாவின் கதைக் களம் இப்படி அநேகம் எழுத்துப் பிரதிகளை உருவாக்கினார். ஒவ்வொன்றும் 800 பக்கங்கள், ஆயிரம் பக்கங்கள் என்று வரும். ஒவ்வொன்றும் தனித்தனி சாதனை தான்.
இவற்றில் முதல் மூன்றும் புத்தகங்களாக வந்து விட்டன. ராமையாவின் சிறுகதைக்களம்’ நூலை செல்லப்பா தனது இறுதி நாட்களில் சிரமப்பட்டு புத்தகமாக கொண்டு வந்தார். அவர் கடைகியாகப் பிரசுரித்த நூல் அதுதான்.
இவற்றை எல்லாம் விட முக்கியமானது - மகத்தான சாதனை என்று குறிப்பிட வேண்டியது - தனது விடுதலைப் போராட்ட கால அனுபவங்களை அடிப்படையாக்கி செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம்’ எனும் இரண்டாயிரம் பக்க நாவல் ஆகும்.
அதைத் தனது தள்ளாத வயதிலும் எழுதி முடித்தது ஒரு பெரும் சாதனை. பெரும் சிரமங்களுக்கிடையிலும் அதை மூன்று பாக நூலாக அச்சிட்டு வெளியிட்டது உண்மையிலேயே மாபெரும் சாதனைதான்.
செல்லப்பா இலக்கியத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார் என்று சொல்லலாம். எப்போதும், எவரிடமும் அவர் இலக்கிய விஷயங்கள் பற்றியே பேசினார். தமிழில் இதுவரை செய்யபட்டிருப்பவை போதாது; இன்னும் அதிகம் செய்யப்படவேண்டும்; என்னஎன்ன செய்யலாம், அவற்றை எப்படிச் செய்யவேண்டும் என்று அவர்கதா சிந்தித்து வந்தார். அவற்றை நண்பர்களிடம் ஆர்வத்தோடு எடுததுச்சொல்வதில் உற்சாகம் கண்டார். -
தமிழில் விமர்சனம் வளரவேண்டும் என்பதற்காகவே செல்லப்பா எழுத்து பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அது நின்றுவிட்ட பிறகு, சில வருடங்கள் கழித்து, இலக்கிய விஷயங்களை விளக்குவதற்காகவே பார்வை (Perspective) என்ற இதழைத் தொடங்கினார். இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டிருந்த அதுஅவர் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மூன்று இதழ்களுடன் நின்று விட்டது.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், ‘கவை’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். அதுவும் மூன்று இதழ்களுக்கு மேல் வளரவில்லை.
செல்லப்பா ஆய்வுமுறை விமர்சனத்தை (Analytical Criticism) கைக் கொண்டிருந்தார். ஆயினும் சிலரது படைப்புகளை அவர் அப்படி ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்த வில்லை என்றே சொல்லவேண்டும்.
அவர் பிடிவாதமாகச் சில கருத்துக்ளைக் கொண்டிருந்தார். அவற்றை அவர் மாற்றிக்கொண்டதே யில்லை. மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்குப் பிறகு சிறந்த சிறுகதைப் படைப்பாளிகள் தமிழில் தோன்றவேயில்லை என்பது அவற்றில் ஒன்று. ‘எழுத்துக்குப் பிறகு விமர்சனம் கவனிக்கப்படவில்லை என்றும் அவர் கருதினார்.
அனைத்தினும்மேலாக, பி.எஸ். ராமையா சிறுகதைகள் பற்றி அவர்மிக உயர்ந்த கருத்துகொண்டிருந்தார். ‘படைப்புக் களத்தில் ராமையாஸ்தானம் தான் முதல். வேர்ல்ட் ஃபிகர் அவர். அவ்வளவு வைரைட்டி. தீம்ஸ். யாராலும் கன்சீவ் பண்ணமுடியாது. ஐரணிக்கு அவர் தான் ராஜா. உலகத்திலேயே’ என்று ஓங்கி அடித்துச் சொல்லி வந்தார்.
பி.எஸ். ராமையா கதைகளைப் பற்றி வேறு விதமான கருத்து தெரிவித்தவர்களை விரோதிகளாக மதித்தார் அவர்,
‘ராமையாகதைகள் பற்றி நீங்கள் இப்படி உயர்வாகப் பேசுவது உங்களுடைய வத்தலக்குண்டு ஊர் அபிமானத்தினால் தான்’ என்று சி. கனகசபாபதி ஒரு சமயம் செல்லப்பாவிடம் சொல்லிவிட்டார்.
செல்லப்பாவுக்கு கோபம்வந்தது. கனகசபாபதியுடன் மேலும் பேச விரும்பாமல் அவரைவிட்டு வேகமாக நடந்து போய்விட்டார்.
இப்படிஅவர்கள் பேசிக்கொண்டது ஒரு ஒட்டல் வாசலில் சி.க. ஒட்டலைவிட்டு வெளியே வரக்காத்து நிற்க வில்லை செல்லப்பா.
கனகசபாபதி பின்னர்வந்து பேசமுயன்றபோதும், செல்லப்பா அவருடன் பேச மறுத்துவிட்டார். ராமையா சிறுகதைகள் பற்றி தரக்குறைவாகப் பேசுகிற ஒருவரோடு எனக்கு நட்பு தேவையில்லை’ என்று உறுதியாகத் தெரிவித்தார் அவர்.
சி. கனகசபாபதி எழுத்துவில் புதுக்கவிதைகளில் தேர்ந்து எடுத்து புதுக்குரல் தொகுப்பாக உருவாவதற்கும், அது மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகத் தேர்வாகி இடம்பெறுவதற்கும் காரணமாக இருந்தவர். எழுத்துவில் அரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர். செல்லப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். ஆயினும், ராமையாவின் எழுத்து பற்றி அவர் மாறுபட்ட கருத்து கொண்டிருந்ததை செல்லப்பாவால் மன்னிக்கமுடியவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சி. கனகசபாபதியுடன் செல்லப்பா நட்புறவு கொள்ளவேயில்லை.
இதைப்போலவே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை திருப்பூர் கிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார். அவருடைய அனுபவம் இது -
‘அன்று பி.எஸ். ராமையாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ராமையாவைப் பற்றிச் சொல்லும்போது அவர் முகமெல்லாம் பளபளவென ஜொலிக்கும். ராமையாவிடம் அவர்கொண்டிருந்த அன்பு மட்டுமல்ல, ராமையாவின் இலக்கியத்தின் மேல் அவர் வைத்திருந்த மதிப்பும் கூட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
ராமையா படைப்புகள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் புத்தகமாக வெளியிட வேண்டும் என்றார் என்னிடம். ராமையா உன்னதமான எழுத்தாளர் என்பதையும், ஆகச் சிறந்த படைப்புகள் பலவற்றையும் எழுதியிருக்கிறார் என்பதையும் நான்மறுக்கவில்லை. ஆனால் குங்குமப் பொட்டுக்குமாரசாமி என்றெல்லாம் அவர் எழுதிய படைப்புகள் சாதாரணமானவை. அவரின் பொருளாதாரத் தேவைக்காக அவர் எழுதிக் குவித்தவை. அவற்றை நீக்கிவிட்டு, காலத்தை வென்று நிற்கும் மற்ற ராமையா படைப்புகளை செல்லப்பாவே தேர்வு செய்துதொகுக்க வேண்டும் என்பது என் வாதம்.
 திடீரென்று செல்லப்பா சுவரைப்பார்க்கத் திரும்பி உட்கார்ந்து கொண்டுவிட்டார். அறையில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தோம். இப்போது மூன்று பேர் ஆகிவிட்டோம். நான், அவர், சுவர் :
  ‘ஏன் சுவரைப் பார்த்து உட்கார்ந்து விட்டீர்கள்?”
‘ஏ சுவரே வந்திருக்கும் இந்த ஆளுடன் பேசுவதை விட, எனக்கு உன்னுடன் பேசுவது திருப்தியாக இருக்கிறது.
ஆமாம். ஏனென்றால் சுவருக்கு அபிப்பிராயங்கள் கிடையதால்லவா!’
‘ராமையாவை விமர்சிக்கும் நபருடன் எனக்கு பேச்சு வார்த்தை கிடையாது.”
‘நாம் ஒர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். பி.எஸ். ராமையாவை விட்டு விட்டு மற்றவற்றைப்பற்றி மட்டும் இனிமேல் பேசுவோம்.”
சரி என்று சொல்லிவிட்டு மறுபடி என்பக்கமாகக் திரும்பி உட்கார்ந்து கொண்டார். என் உதட்டோரத்தில் சிரிப்பு ஒளிந்து கொண்டிருந்ததை அவர் கவனித்திருக்க வேண்டும். என்னடா பண்ணுவேன். உன்னோட பேசாம என்னால் இருக்கமுடியாதேடா என்றார்.
என் மனம் நெகிழ்ந்தது.”
('பாரதமணி செப்டம்பர் 2001) 
அவர் ராஜமய்யரது நூற்றாண்டு விழாவை அவ்வூரில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தார். நடத்திக்காட்டினார். அய்யர் எழுதிய ரேம்பிள்ஸ் இன் வேதாந்தா என்ற ஆங்கில நூலை உயர்ந்த பதிப்பாக வெளியிட்டு மகிழ்ந்தார்.
அதே போல ராமையாவின் பெருமையையும் வத்தலக்குண்டுக்காரர்கள் அறியவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். சென்னையிலேயே வசித்த செல்லப்பா ஒரு கால கட்டத்தில், இனி வத்தலக்குண்டில் வசிப்பது என்று தீர்மானித்து, மனைவியுடன் அவ்வூர் போய்ச்சேர்ந்தார். சில வருடங்கள் அங்கு அமைதியாகவாழ்ந்தார். பிறகு மீண்டும் சென்னையிலேயே வசிப்பது என்று வந்து சேர்ந்தார்.
 அந்த ஊரில் இலக்கியச் சூழ்நிலையே இல்லை. அங்கே இருப்பவர்களுக்கு இலக்கிய உணர்வும் ரசனையும் கொஞ்சம் கூட இல்லை. என்னால் இயன்ற அளவு முயன்றேன். அவர்கள் விழிப்படைவதாகத் தெரியவில்லை. ராமையாவின் மதிப்பைத் தெரிந்துகொள்ளவே மறுக்கிறார்கள். சின்ன வயசில் ராமையா அவர்களிடையே வளர்ந்து, வறுமையில் கஷ்டப்பட்டது இதுகளையே பெரிதாகச்சொல்லி, ராமையாவை இளப்பமாகக் கருதிப் பேசுகிறார்கள். அவர்களோடு இருக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. சென்னைக்கே வந்துவிட்டேன் என்று அவர் சொன்னார்.
சில வருட சென்னை வாசத்துக்குப் பின்னர் அவர் மனைவியுடன் மதுரை சேர்ந்து மகனுடன் வசிக்கலானார். அவருடைய முதுமை, அவரைப் படுத்திய நோய்கள், இவற்றால் அம்மாவும் அப்பாவும் படுகிற சிரமங்களை கவனித்து அவர்களின் ஒரேமகன் சி. மணி இருவரையும் தன்னுடன்வந்து தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டேதே காரணம். மணி பேங்கில் பணிபுரிகிறார்.
அவருக்கு உத்தியோக நிமித்தமாக பெங்களூருக்கு இடமாறுதல் ஏற்பட்டது. அவர் குடும்பத்தோடு செல்லப்பாவும் பெங்களுர் சென்றார். தமிழ்நாட்டை விட்டுப்போய் வேற்றுமாநிலத்தில் வாழ வேண்டியிருக்கிறதே என்ற மனக்குறை செல்லப்பாவுக்கு இருந்தது.
எனினும், வாய்த்த தனிமையை செல்லப்பா நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவர் எழுத எண்ணியிருந்த பலவற்றையும் எழுதி முடித்தார். முக்கியமாக, அரைவாசி எழுதிக் கிடப்பில் போட்டிருந்த சுதந்திரதாகம்’ நாவலை எழுதி நிறைவு செய்ய முடிந்தது அவரால்.
இருப்பினும், அந்த சூழ்நிலை அவருக்கு ஒத்துப்போகவில்லை. குடும்பத்தில் சகஜமாக எழக்கூடிய சிறு சிறு பிணக்குகள் அவர் உள்ளத்தை பாதித்தன. அதனால் மகனோடு சண்டை பிடித்துக்கொண்டு அவர் மீண்டும் தனி வாழ்க்கை நடத்த சென்னைக்கே வந்து சேர்ந்தார்.
சென்னையில், அதுவும் திருவல்லிகேணிப்பகுதியில் வசிக்கையில் கிடைக்கிற சூழலும் மனநிம்மதியும் மற்றஇடங்களில் எனக்குக்கிடைக்கவில்லை. இனி சாகிற வரை இங்கேதான் என்று சொன்னார் செல்லப்பா.
அவ்வாறே நிகழ்ந்தது. 1998 டிசம்பர் 18ஆம் நாளன்று, திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் முதல் தெருவில் அவர்வசித்த வீடடில் செல்லப்பாவை மரணம் தழுவியது.
9
மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு கிராமத்தில், 1912 செப்டம்பர் 29ஆம் நாள் பிறந்தார் செல்லப்பா. -
அவரது தந்தை பெயர்கப்பிரமணிய அய்யர். ஊர்சின்னமனூர். ஆகவே சி.சு. என்பதைத் தனது பெயரின் முதல் எழுத்துகளாகக் கொண்டார்.
வெகுகாலம் வரைஅவர் சி.எஸ். செல்லப்பாஎன்றே பெயரை எழுதி வந்தார். பாரததேவி மாத இதழில், கு.ப. ராஜகோபாலுடன் அவர்பணியாற்றியபோது, பத்திரிகை ஆசிரியர் வ.ரா. பெயரை தமிழில் எழுதவேண்டும் என்று குறிப்பிடவும், சி.சு. செல்லப்பா என்று எழுதலானார்.
மதுரைகல்லூரியில் செல்லப்பா பி.ஏ. படித்தார். அப்போதே, மகாத்மா காந்தியின் வழிகாட்டலினால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டார். சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுசிறை சென்றார். விடுதலை பெற்று வெளியே வந்தபிறகு, காந்திய வாழ்க்கைமுறைகளைக் கடைப்பிடித்து எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். கைராட்டையில் நூல்நூற்றல், கையால் செய்யும் காகிதம் தயாரித்தல், போன்றவற்றில் அவர்உற்சாகம் கொண்டு ஊக்கத்துடன் செயல்பட்டார். அப்போதே எழுத்து முயற்சியிலும் முனைத்திருந்தார்.
1930களில் புகழ் பெற்று விளங்கிய “சுதந்திரச்சங்கு” வாரப்பத்திரிகையில் சி.சு.செல்லப்பாவின் முதல் கதை வெளிவந்தது. 1934ம் ஆண்டில். அது முதல் அவர் ஆர்வத்தோடு சிறுகதைகள் எழுதலானார். ‘மணிக்கொடி இதழில் அவருடைய கதைகள் தொடர்ந்து இடம் பெற்றன. கலைமகள், பாரததேவி, தினமணி, சத்திரோதயம் முதலிய பத்திரிகைகளில், தனித்தன்மை உடைய சிறுகதைகளை அவர் எழுதினார். அதன்மூலம் இலக்கிய ரசிகர்களின் கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றார்.
‘மணிக்கொடி நடந்துகொண்டிருந்த காலத்தில் (1930 களில்) சி.சு. செல்லப்பா சென்னைக்கு வந்து பத்திரிகைத் துறையில் பணிபுரியலானார். ‘மணிக்கொடி"க்குப்பிறகு, ‘பாரததேவி மாத இதழில் வேலை பார்த்தார். 1947 முதல் 1953வரை ‘தினமணி’ நாளிதழில் சஞ்சிகைப்பகுதியின் பொறுப்பேற்று செயல்புரிந்தார். ‘தினமணி சுடர் தினமணி கதிர் என்று பெயர் மாறுவதற்கும் அவரே காரணமாக இருந்தார். கருத்து வேற்றுமையால் அவர் தினமணியிலிருந்து வெளியேறினார்.
1959ல் இலக்கிய விமர்சனத்துக்காகவும், புதிய சோதனை முயற்சிகளைப் பரப்பவும் அவர் எழுத்து என்ற மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். புதுக்கவிதை வளர்ச்சி பெறுவதற்கு எழுத்து’ வெகுவாக உதவியது.
சி.சு. செல்லப்பா நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவற்றை,பிற்காலத்தில் அவரே தொகுத்து எழுத்து பிரசுரம் வெளியீடுகளாகப் பதிப்பித்தார். செல்லப்பா சிறுகதைகள் என்று ஏழு தொகுதிகள் வந்தன. அவை தவிர, சிறு சிறு புத்தகங்களாக கைதியின் கர்வம், செய்த கணக்கு, பந்தயம், ஒரு பழம், நீர்க்குமிழி, பழக்கவாசனை ஆகியனவும் வெளியிடப்பட்டன.
தனது சிறுகதைகள் பற்றி, என்சிறுகதைப் பாணி என்ற பெரிய நூலை சி.சு. செல்லப்பா எழுதி வெளியிட்டிருக்கிறார்.
ஆங்கிலத்திலிருந்து சிறந்த சிறுகதைகள் பலவற்றையும் அவர்தமிழாக்கி பத்திரிகைகளில் பிரசுரம் செய்தார். எழுத்து’ காலத்தில் செல்லப்பா கவிதைகள் எழுதுவதில் ஈடுபட்டார். ‘மாற்று இதயம் என்ற நீண்ட கவிதையும், மகாத்மா காந்தி பற்றிய நீ இன்று இருந்தால் குறுங்காவியமும் நூல்களாக வந்துள்ளன.
காற்று உள்ளபோதே, ஏரிக்கரை, குறித்த நேரத்தில், எல்லாம் தெரியும் ஆகியவை அவருடைய கட்டுரைத் தொகுப்புகள், இவற்றுடன், தமிழில் சிறுகதை பிறக்கிறது. தமிழ் சிறுகதை முன்னோடிகள், இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம், ந.பிச்சமூர்த்தியின்கவிதைகள் பற்றி ஊதுவத்திப்புல் மாயத்தச்சன், எனது சிறுகதைப் பாணி, பி.எஸ். ராமையாவின் கதைக்களம் ஆகிய விமர்சன நூல்களும் வெளிவந்திருக்கின்றன.
செல்லப்பா நாடகத்திலும்ஆர்வம் காட்டினார். எழுத்து நாடக அரங்கம்’ என்ற பெயரில் ஒன்றிரு நாடகங்கள் அரங்கேற்றம் செய்தார். அப்போது, மதுரைமாவட்ட மறவர்வாழ்க்கையை அடிப்படையாக்கி முறைப்பெண் என்ற நாடகத்தை எழுதி, நூலாக வெளியிட்டார்.
 ஜல்லிக்கட்டுவை ஆதாரமாகக்கொண்ட வாடிவாசல் எனும் குறுநாவல் தனிப்புத்தகமாக வந்துள்ளது. எழுத்து'வில் சோதனை ரீதியில் அவர்எழுதிய ஜீவனாம்சம் நாவலும் பிரசுரமாயிற்று. அவருடைய இறுதி நாட்களில் சுதந்திர தாகம்’ என்கிற மாபெரும் நாவல் மூன்று பாகங்களாக வெளிவந்தது.
இவை எல்லாம் தமிழ் வாசகர்களிடையே உரிய கவனத்தைப் பெறவில்லை. அது செல்லப்பாவின் குறை அன்று.
சி.சு. செல்லப்பா சதா பேச்சிலும் செயலிலும் இலக்கிய உணர்வுடனேயே வாழ்ந்தார். வாழ்க்கையில் முன்னேற விரும்பிச் செயலாற்றுகிற பலரைப் போல, எழுத்து வேறு, வாழ்க்கை வேறு என்று அவர் நடந்து கொண்டதில்லை. அதனால் வறுமை நிலையை விரும்பி ஏற்றுக்கொண்டார். எச்சமயத்திலும் அவர் மனஉறுதி யோடும் பிடிவாதத்துடனும் நேர்மையுடனும் வாழ்ந்து காட்டினார். ஒரு போதும் அவர் நம்பிக்கை இழந்ததில்லை. கடுமையாக உழைப்பதில் அவர் உற்சாகம் கொண்டிருந்தார். உயர்ந்த எண்ணங்களும் எளிய வாழ்க்கை முறைகளும்கொண்டு வாழந்து, மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும், தனிமாண்பும் சேர்க்கும் உயர்ந்த மனிதர்களில் சி.சு. செல்லப்பாவும் ஒருவர்.
‘நான் தேர்ந்து கொண்ட கொள்கைகளிலிருந்து வழுவாமல், கடைசிவரை, நேர்மையாக வாழ்ந்து விட்டேன். இந்த திருப்தி எனக்கு இருக்கிறது என்று செல்லப்பா தனது இறுதிக்கட்டத்தில் என்னிடம் சொன்னார்.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் அவர் எழுதி வைத்துள்ள ‘எழுத்துக்களம் விமர்சனத் தோட்டம்'ஆகிய நூல்கள் அச்சுவடிவம் பெறவில்லையே என்ற மனக்குறை செல்லப்பாவுக்கு இருந்தது.
ஆயினும், அவர் செய்து முடித்துள்ள இலக்கிய சாதனைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சி.க. செல்லப்பாவுக்கு சிறப்பானதனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பதில்சந்தேகம் இல்லை.
( நிறைவுற்றது )
தொடர்புள்ள பதிவுகள்:

1 கருத்து:

Angarai Vadyar சொன்னது…

Thank you for your great service to Tamil-literature lovers. God bless you, Dr. Pasupathy.