செவ்வாய், 25 ஜூன், 2013

திருப்புகழ் - 7

அமெரிக்காவில் திருப்புகழ் !



நவம்பர் 2, 1997
. அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில், அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாட்டில், குருஜி ராகவன் தலைமையில் திருப்புகழ் இசை வழிபாடு நடந்தது. டொராண்டோவிலிருந்து என்னைப் போன்ற பல திருப்புகழ் அன்பர்கள் அங்குச் சென்று பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த  ‘ஸரிகமபதநி’ என்ற பத்திரிகையின் பிப்ரவரி -98 இதழில் நான் ஒரு சிறு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்!




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:





திங்கள், 17 ஜூன், 2013

கம்ப ராமாயண அகராதி

அகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர்! 


[அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)]
ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த ‘இயல் விருதை’ப்  பெற்றபின் திரு நாஞ்சில் நாடன் தன் ஏற்புரையில் கம்பனைப் பற்றிப் பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கம்பன் எவ்வளவு தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பான் என்று தோராயமாகக் கணக்குப் போடும் போது, இப்போது அச்சில் இல்லாத கம்பன் அகராதி ஒன்றைக் குறிப்பிட்டார். மேலும், தான் ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற தலைப்பில் ஒரு நூலை அண்மையில் எழுதி முடித்திருப்பதாகவும் சொன்னார். இது என்னை  அச்சில் இல்லாத ‘அந்த அகராதி’ பற்றியும், அதன் ஆசிரியரைப் பற்றியும் எனக்குத் தெரிந்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. 

‘கம்ப ராமாயண அகராதி ‘ என்ற பெயரில்  5 பாகங்கள் வெளியிட்டவர் பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன். என்னிடம் மூன்றாம் பாகம் மட்டும் உள்ளது. (ஆகஸ்ட் 1978 பதிப்பு)  ( இதை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய -- சுந்தரராஜன் அவர்களிடம் யாழ்ப்பாணத்தில் தமிழ் கற்ற -- அகராதியை வெளியிட பணஉதவி செய்த -- டாக்டர் நல்லம்மா சேனாதிராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ) இதோ அதன் அட்டை, பின்பக்கப் படங்கள்.



ஆசிரியரைப் பற்றிச் சில தகவல்கள். (இவருடைய இன்னொரு நூலில் பேராசிரியர் வே.குருசாமி எழுதிய குறிப்புகளிலிருந்து தொகுத்தது.) 

இவருடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில். பிறந்த ஆண்டு 1899. திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இலங்கையில் -யாழ்ப்பாணத்தில் 1922 முதல் 42 ஆண்டுகள் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார். 

இவர் எழுதிய சில நூல்கள்: கம்பன் கவிதைக் கோவை 1-3, இராம காதை (சுருக்கம்), நளன் சரிதம் (சுருக்கம்), தமிழ் அமுதம், வில்லி பாரதம் (சுருக்கம்), கம்பராமாயண அகராதி 1-5, கம்பரும் உலகியலும் . இவற்றில் பல நூல்கள் சென்னை, அண்ணாமலை, இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப் பட்டிருந்தன. இலங்கை வானொலியில் பல இலக்கியப் பொழிவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.

 இந்த அகராதியைப் பற்றித் திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் கலைமாமணி பேராசிரியர் திரு க.வெள்ளைவாரணர் அவர்கள் ஒரு நூலில் சொல்கிறார்:

”பல்கலைக் கழகம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரும் பொருட் செலவில் அறிஞர் பலர் உதவியைக் கொண்டு செய்து நிறைவேற்ற வேண்டிய இப்பெரும் பணியினை இவர் தாம் ஒருவராகவே அரிதின் முயன்று செய்து முடித்துள்ளமை, இவரது தமிழார்வத்துக்கும் ஆழமான புலமைத் திறத்துக்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த சான்றாகும்.” 

இந்த அகராதி எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இரு பக்கங்களின் படங்களைத் தருகிறேன்.

நாஞ்சில் நாடன் குறிப்பிட்ட  ’தூணி’ ‘புட்டில்’ ( தூணி = அம்பு வைக்கும் கூடு)  என்ற இரு சொற்களைக் குறிக்கும் இரு பக்கங்கள் இதோ!



தூணிக்கு ஆசிரியர் எடுத்துக் காட்டாகக் கொடுத்த பாடல் பாலகாண்டத்தில் உள்ள ஓர் அருமையான பாடல்:

வென்றி வாள் புடை விசித்து. மெய்ம்மைபோல
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து. இரு
குன்றம் போன்று உயர் தோளில். கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான்

   
( அகராதியில் அச்சுப் பிழைகள் உள்ளன. மேலும் பாடல் எண்களும் கம்பராமாயணப் பதிப்புக்குப் பதிப்பு வேறுபடும், இருப்பினும் இவ்வகராதி மிக அருமையான நூல் என்பதில் ஐயமில்லை) 

மெய்ம்மை போல என்றும் தேய்வுறாத் தூணி”! 

எத்தகைய அற்புதமான சொற்றொடர்! இங்கே “ ’மெய்ம்மை’ என்றால் , 
கடவுளின் மூல தத்துவப் பொருள்: அதிலிருந்தே எல்லாச் சிருஷ்டிப் பொருள்களும் வந்தன” என்பார் ரசிகமணி டி.கே.சி அவருடைய “கம்பர் தரும் ராமாயணம்” நூலில்.

இப்போது வலையில் உள்ள கம்ப ராமாயணத்தில் சொற்களைத் தேடுதல் போன்றவற்றைச் செய்ய முடிந்தாலும், இந்தப் பெரியவர் தொகுத்த அற்புதமான அகராதி ( பிழைகள் களையப் பட்டு ) மீண்டும் ஒரு செம்பதிப்பாக வந்தால் கம்பன் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. 

ஒரு கம்பன் கழகமாவது இதுவரை ஏன் இவ்வகராதியை மீண்டும் வெளியிடவில்லை என்பது ஒரு புதிராக இருக்கிறது.

பி.கு.

இந்தப் பதிவு ஜெயமோகன்  தளத்திலும் மீள்பதிவு ஆகியுள்ளது.
https://www.jeyamohan.in/37214/#.Xul2ikVKhPY


ஞாயிறு, 16 ஜூன், 2013

லா.ச.ராமாமிருதம் -4: சிந்தா நதி - 4

15. தன்மானம்
லா.ச.ரா 


கர்நாடக இசையாசிரியர் தியாகராஜரின்  பாடல்களை ஆதாரமாக வைத்துச் சிலர் “தியாகோபனிஷத்” என்ற ஓர் இசைச் சொற்பொழிவு நடத்துவது உண்டு. அதைபோலவே, லா.ச.ரா வின் சில கட்டுரைகளைப் படிக்கும்போது, எனக்குத் தோன்றும்: யாராவது “லாசரோபனிஷத்” என்ற சொற்பொழிவு செய்யலாமே என்று.

இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதோ வயிற்றைப் பிசையும். ஏதோ கீதையைப் படித்த மாதிரியும் இருக்கும். ”அப்போ நாம் ?” என்ற லா.ச.ரா வின் கேள்வியும் நம்மைக் குடையும்.

உமாபதியின் ஆக்ரோஷமான ஓவியத்தை உள்வாங்கிப் பிறகு படியுங்கள்!
====
    நன்கு இருட்டிவிட்டது. ஆனால் இரவு ஆகவில்லை. விளக்கு வைத்தாகிவிட்டது. நான் ஒரு சந்தைக் கடந்து கொண்டிருந்தேன். அடுத்த தெருவுக்குப் போக அதுதான் குறுக்குவழி. கொஞ்சம் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போகணும். வேளை சமயத்துக்குக் காய்ந்த மீன் வாடை பார்த்தால் முடிகிறதா? அவசரங்கள் அப்படி அமைந்து விடுகின்றன.

    திடீரென்று ஒரு பெரிய கூக்குரல் என் பின்னால் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பினேன்.

    ஒரு நாயும், ஒரு பூனையும் சண்டைக்கு ஆயத்தமாக நின்றன. நான் கேட்டது பூனையின் கத்தல்.

    என் கண்ணெதிரிலேயே, மயிரைச் சிலிரித்துக் கொண்டு பூனை மிகப் பெரிதாகி விட்டது. இரண்டு பங்கு, இரண்டரைப் பங்கு. போர்க் கொடியாக விரைத்த வால். பூனையின் ஆற்றல் இந்த அளவுக்கு நான் பார்த்ததில்லை.

    என் காரியத்தை மறந்து நின்றுவிட்டேன்.

    சிந்தப் போகும் இரத்தத்திற்குத் தனி வசியம் இருக்கத்தான் செய்கிறது.

    மனிதனாவது, மிருகமாவது, மரமாவது! உயிரின் அடிப்படை வனவாடை, எத்தனை லட்சக் கணக்கில் வருடங்கள் ஆனாலும், எங்கே போகும்? நான் சொல்கிறேன், எங்கும் போகவில்லை. உள்ளேதான் உறங்குகிறது. அது விழிக்கும் நேரம் சொல்லிக்கொண்டு வராது.

    எல்லா ஜீவராசிகளுக்கும் பொது டினாமிநேட்டர்; குரூரம்.

    இப்போது, இந்தச் சேரிச் சந்தில், நிமிஷமாக உருவாகியிருக்கும் இந்தக் கோதாவின் சரித்திரப் பரம்பரை, பின்னோக்கில் ரோமன் காலத்தை எட்டுகிறது. அவ்வளவு துரம் போக வேண்டாம். ஸ்பெயின் புல் ஃபைட். இன்னும் கிட்ட இப்பவே. நம் தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு.

    மூன்றும் நான் பார்த்ததில்லை. எனக்குக் கிடைத்தது இந்த நாயும் பூனையும் சண்டைதான்.

    ஆனால், இந்த அலசல் எல்லாம், பின்னால், சாய்வு நாற்காலியில் அவகாசச் சிந்தனையில்.

    பூனைமுகம் நேர் பார்வைக்கு, மனிதமுகத்தை நிறைய ஒத்து இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மனிதனுக்குப் போலவே, முகத்தின் அவயவங்கள்- நெற்றி, கண்கள், மூக்கு, அடியில் வாய், மோவாய்கூட உள் அடங்கியிருக்கின்றது. அதுவும் இப்போ முகத்தில் காணும் கோபத்துக்கு எச்சில் துப்புவதுபோல் அது அவ்வப்போது சீறித் தும்மும் குரோதத்துக்கு..... நாய்க்கும் பூனைக்கும் பகை. இன்றையதா நேற்றையதா, சிருஷ்டியிலிருந்தே அல்லவா?

    இவ்வளவு உன்னிப்பாய் இவைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எப்போ, என்ன- கண்ணெதிரில் பூச்சி பறந்த மாதிரி இருந்தது, அவ்வளவுதான். இரண்டும் ஓருருவாய் உருள்வதுதான் கண்டேன்; காண முடிந்தது.

    பாய்ச்சலைப் பார்க்க முடியவில்லை. இந்த மோதலும் ஒரு கணம்தான். இல்லை, அதிலும் பாதி, இரண்டும் அவைகளின் தனித்தனி இடத்துக்கு மீண்டு விட்டன.

    உர்.... உர்ர்..... உர்ர்ர்.....

    பூனையின் ஊளைக்கு ஈடு சத்தம் என்னால் எழுத்தில் எழுப்ப முடியவில்லை. அதன் கத்தல் அடி வயிற்றைக் குழப்பிச் சுண்ட அடித்தது.

    பூனை நிச்சயமாக ஒரு உத்தியைக் கண்டுபிடித்து விட்டது. தன்னைப் பந்தாகச் சுருட்டிக்கொண்டு எகிறி எகிறி நாய்மேல் விழுந்தது. நாய், பூனையைப் பூனையாகப் பார்க்கவில்லை. (நானும் அவ்விதமே) ஒரு பெரிய பந்து கால் பந்தைக் காட்டிலும் பெரிய, உயிருள்ள, காட்டுக் கத்தல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் முள் பந்து. இதென்ன மந்திர வாதம், சூன்யம்?

    எனக்கு அப்படித் தோன்றிற்று. நாய்க்கு எப்படித் தோன்றிற்றோ? *பத்து எகிறி எகிறித் தன் மேல் விழும் இரண்டு மூன்று தடவைக்கு. அது சமாளித்துப் பார்த்தது. ஆனால், பந்து, அடுத்தடுத்து, அலுக்காமல், தன் உயிரையும், உருவத்தையும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு அதன்மேல் விழுகையில், அதன் முகத்தில் குழப்பத்தை என்னாலேயே காண முடிந்தது.

    குழப்பம்- கலக்கம்- பீதி- பிறகு அப்பட்ட பயம்.

    புறமுதுகிட்டு ஓடிற்று, ஓடியே விட்டது.

    பந்து, விண்டு, சுய ரூபத்துக்கு விரிந்தது. ஆனால் அதன் வால், அதன் வெற்றிவிரைப்பினின்று இறங்கவில்லை. அடிவயிற்றை, நின்றபடியே, அவகாசமாக நக்கிக் கொண்டது. பிறகு மெல்ல நடந்து, மெல்ல மெல்ல எதிர்ச் சுவரோரமாக, தெரு விளக்குக் கம்பத்தின் நிழல் மறைவில் ஒதுங்கி, விழுந்து, மரணாவஸ்தையில் கால்களை உதைத்துக் கொள்ள ஆரம்பித்தது.

    அதன் இழுப்பு, கடைசி அமைதியில் அடங்குவரை பார்த்துக்கொண்டு நின்றேன்.

    "ஸோ, அதற்கு விழுந்துவிட்ட மரணக் கடியைக் கடைசிவரை எதிரிக்குக் காட்டிக் கொடுக்காது, கொடுக்கக் கூடாத, முடியாத ஒரு கெளரவம், தன்மானம், ஜயம் கண்ட பின்தான் மரணம் எனும் தீர்மானம் அதற்கு.

    அதற்கே, அப்படி.

    அப்போ நாம்?....

    சிந்தா நதியில் அலைந்து செல்லும் ஒரு சருகு.
    * * * 

[நன்றி : தினமணி கதிர், மதுரைத் திட்டம்]

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் படைப்புகள்

சனி, 8 ஜூன், 2013

திருப்புகழ் -6

புள்ளூர் குருபரன்
குருஜி ஏ.எஸ்.ராகவன் 




வைதீஸ்வரன் கோயில் என்று சொன்ன மாத்திரத்தில் அங்கே உறைகின்ற வைத்தியநாதசுவாமியும் அவனது தேவியான தையல்நாயகியும்தான் ஞாபகம் வருவார்கள். இந்த ‘வைத்யபதி’யும் அவனது ‘ஹ்ருதய விஹாரிணி’யான பாலாம்பிகையும், ஏராளமான தமிழர்களின் குலதெய்வம். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் திருமந்திரத்தில் சொன்னதை மறந்து நாம் இரண்டையுமே போட்டு படாதபாடு படுத்திக் கொள்ளும் நேரத்தில், உடல் ரோகத்தையும் பவரோகத்தையும் (வினைப் பயன்) நீக்கி ஆட்கொள்வோர் இந்த தெய்வ தம்பதி!

அதனால்தான் அப்பர் சுவாமிகள்,
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை... என்று வைதீஸ்வரனைப் பாடுகிறார்.

உண்மையில் சிவனும் உமையும் இத்திருத்தலத்தில் வைத்தியர்களாக அமர்வதற்குக் காரணமாயிருந்தவன் அவர்களுடைய செல்லப் பிள்ளையான பால முத்துக்குமாரன்தான்!

தாரகாசுரனோடு போர் புரிந்த நேரத்தில் முருகனுடைய பூதப்படை வீரர்கள் பலர் காயமுற்றுச் செயலிழந்தனர். அவர்களைக் குணப்படுத்திக் காப்பாற்றியாகவேண்டும். அந்த ஆற்றல் முருகனுக்கே இருந்தபோதிலும் அதனை அம்மையப்பர்களின் பொறுப்பாக்கி, அவர்களே உலகம் உய்யச் செய்பவர்கள் என்று உணர்த்த விரும்பினான் முருகன். இருவரையும் வேண்டி அழைக்க, அவர்கள் வைத்தியநாதராகவும் தையல் நாயகியாகவும் வந்தமர்ந்த இடம்தான் வைதீஸ்வரன் கோயில்.

ஜடாயு என்கிற புள், ரிக் வேதம், முருகப் பெருமான் (வேள்), சூரியன் (ஊர்) ஆகிய நால்வரும் வழிபட்ட ஸ்தலம் என்பதால் இதற்குப் புள்ளிருக்குவேளூர் என்று பெயர். ‘வைதீஸ்வரன் கோயில்’ என்று ஆலயத்தின் பெயரால் ஊர் அழைக்கப்படுகிற தனிச் சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.

மிகப்பெரிய கோயில். தருமை ஆதினத்தின் மேற்பார்வையில் நாளொரு விழாவும் பொழுதொரு சிறப்பும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ராஜகோபுரங்களைத் தரிசித்து, உயர்ந்த மதில்சுவர்களைத் தாண்டி உள்ளே போனால், சிறிய கோபுரங்களுடன் உள் பிராகாரங்கள்.
ஸ்தல விருக்ஷமாக வேம்பு நிற்கிறது. வேம்படிமால் என்றழைக்கப்படுகிறது. ஆதிவைத்யநாத ஸ்வாமி இதனடியில் ஒரு மிகச் சிறு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார். சுற்றிலும் ஆதிபுராணேஸ்வரர், வீரபத்ரர், அன்னபூரணி தேவி சந்நிதிகள். தெற்குப் பாகத்தில் தையல்நாயகி சன்னிதி எதிரில் சித்தாமிர்த தீர்த்தம் இருக்கிறது. கிருதயுகத்தில் காமதேனு வைத்தியநாத பெருமாளுக்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்ய, பெருகியோடிய அந்தப் பாலே தீர்த்தமாயிற்று என்பது புராணம். கலியுகத்து சித்தர்கள் தேவாமிர்தத்தால் செய்த அபிஷேகம் இங்கு கலந்ததாகவும் நம்பிக்கை. சித்தாமிர்த தீர்த்தம் என்ற பெயர் அதனால்தான் ஏற்பட்டது!

ஈசன் முதல் பிராகாரத்தில் மேற்கு நோக்கி இருக்க, அவனை இத்தலத்துக்கு வருவித்த முருகன், ‘குமரகுருபரன்’ என்ற மிக அழகான திருப்பெயருடன் இரண்டாம் பிராகாரத்தில் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை சமேதனாக ஆறுமுகங்களிலும் அழகு துலங்க, பன்னிரு விழிகளிலும் கருணை பெருக காட்சி தருகிறான். இந்த ஆறுமுகப் பெருமானின் உத்ஸவ மூர்த்திக்குத்தான் செல்வ முத்துக்குமாரசாமி என்று பெயர்!

பூமி மெச்சிடும் பெற்றோரின் செல்வத் திருக்குமரன் என்பதால் மட்டுமா அப்பெயர்? உடலாரோக்கியமாகிற செல்வத்தையும் மன ஆரோக்கியமாகிற செல்வத்தையும் அருளவல்ல தெய்வ தம்பதியை வந்தமரச் செய்த செல்வன்.


தமிழால் அவனைத் துதித்து இந்நாட்டின் இலக்கிய ஆன்மிகச் செல்வத்தைப் பெருக்கிய அருணகிரிநாதரையும் குமர குருபரரையும் ஆட்கொண்ட அருட்செல்வன்.

இசையுலகுக்கு, இணையற்ற மாணிக்கமாக ஒரு வாக்கேயக்காரரை வழங்கி ஞானக் கடவுளாக அவர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற செல்வன். அவன் பெயரையே தாங்கிய அந்த வாக்கேயக்காரர், முத்துஸ்வாமி தீக்ஷிதர். வடமொழி கீர்த்தனைகளில் திருத்தலச் சிறப்புகளையும் மூர்த்தி சிறப்பையும் தெய்வீக ஆற்றலுடன் பதிவு செய்து, ‘குருகுஹ’ என்று தமது இஷ்டதெய்வத்தின் நாமத்தையே முத்திரையாக்கிய பக்தர்.
முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பெற்றோரான ராமஸ்வாமி தீக்ஷிதர் - சுப்புலட்சுமி அம்மாள் தம்பதி, நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாதிருந்தனர். வைதீஸ்வரன்கோயில் பாலமுத்துக்குமார ஸ்வாமி சன்னதியில் மனமுருக வேண்டி, விரதமிருந்து புத்ர பாக்கியம் அடைந்தனர். அந்த முருகன் நினைவாகவே மூத்த மகனுக்கு முத்துஸ்வாமி என்று பெயரும் வைத்தனர். பிற்காலத்தில் இந்த முத்துஸ்வாமி திருத்தணி முருகன் அருளால் கீர்த்தனைகள் இயற்ற ஆரம்பித்து, முருகனை மட்டுமின்றி அனைத்து தெய்வங்களையும் பாடினார். இதே வைதீஸ்வரன் கோயில் ஈசுவரனான வைத்தியநாதன் பெயரிலும் பாலாம்பிகையின் பெயரிலும் கிருதிகள் அமைத்துள்ளார். அவற்றில் முத்துக்குமாரனையும் மறவாமல் குறிப்பிட்டிருக்கிறார். ‘ரூப முத்துக்குமார ஜனனி’ என்று ‘பஜரே ரேர்சித பாலாம்பிகா...’ கீர்த்தனையில் அந்த முருகனின் ரூப லாவண்யத்தை அழகாக ஞாபகப்படுத்துகிறார். குமரகுருபரனும் சரி, முத்துக்குமார சாமியும் சரி, சொல்லொணா அழகுடன் பொலிகிறார்கள்!

குமரகுருபர ஸ்வாமிகள் இந்த பால முத்துக்குமாரனுக்குப் பிள்ளைத்தமிழ் இயற்றி, கொண்டாடியிருக்கிறார். தருமை ஆதீன குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள் இயற்றிய ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருவருட்பாகூட பிள்ளைத் தமிழைப் போலத்தான் அவனைக் கொண்டாடி அழைக்கிறது:

மதிவதன மாடவிரு காதில்நவ ரத்னமணி 
  மகரகுண் டலமாடநாள் 
  மலர்ப்புண்ட ரீகவிழி யாட அருளாட 
  மனமகிழ்மந்த காசமாடக் 
கதிருதயம் ஆயிரம் கோடியென வேயிலகு 
  காருண்ய மேனியாடக் 
  கனவஜ்ர புயவலயம் ஆடவண் டாடக் 
  கடப்பமலர் மாலையாட 
விதமணி இழைத்தபரி புரமாட சரணார 
  விந்தங்க ளாட நீள்கை 
  வெற்றிவே லாடமயி லாடவென் கண்முன்நீ 
  விளையாட ஓடிவருவாய் 
முதுமறைக ளாகம முழங்கு புள்ளூரனே 
  முக்கட் குருக்கள் குருவே 
  முத்தர்குரு வேயோக சித்தர்குரு வேபால 
  முத்துக் குமாரகுருவே 

என்று குழந்தை முருகனை விளையாட அழைக்கும் ஆடல் பருவச் செய்யுள் போலவே அமைந்திருக்கிறது.

கதிருதயமாயிரம் கோடி ஒத்த அவன் அழகு எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், அவன் உள்ளத்தின் காருண்யத்திலிருந்து அல்லவா அது பெருகுகிறது! அதனால்தான் அவன் மேனியையே ‘காருண்ய மேனி’ என்று வர்ணித்துப் பாடுகிறார் சுவாமிகள்.


கிருத்திகை, சஷ்டி தினங்கள் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேக நாட்கள். அர்த்தஜாம வழிபாடு முதலில் இந்த முருகனுக்குத்தான். அதன் பிறகுதான் வைத்தியநாதருக்கு வழிபாடு நடைபெறுகிறது! பங்குனி மாத உத்ஸவத்தின்போது ஐந்தாம் நாள், செல்வ முத்துக்குமாரர் அம்மாவையும் அப்பாவையும் சென்று வழிபட்டு, ‘செண்டு’ பெறும் காட்சி மிக அழகான வைபவம்.

‘திருச்சாந்துருண்டை’ என்று இத்தலத்தில் வழங்கப்படும் பிரசாதம் 4448 வித நோய்களைக் குணப்படுத்த வல்லது என்பர். இந்தப் பிரசாதம் தயாரிக்கும் பந்ததியே விசேஷமானது. சுக்ல பக்ஷத்தில், நல்ல நாழிகை பார்த்து அங்கசந்தான தீர்த்தம் என்ற இத்தல தீர்த்தத்தில் நீராட வேண்டும். அதிலுள்ள மண்ணை எடுத்து, புதுப் பாத்திரத்தில் வைத்து, இங்கே உள்ள ஜடாயு குண்டத்திலிருந்து விபூதியையும் சித்தாமிர்த தீர்த்தத்திலிருந்து நீரையும் கலந்து பஞ்சாக்ஷர தியானம் செய்து கொண்டே பிசைய வேண்டும். அதை முத்துக்குமாரசுவாமி சந்நிதியிலுள்ள குழியம்மியிலிட்டு அரைத்து, சிறு கடுகளவு உருண்டைகளாக்கி தையல் நாயகி அம்மன் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து, பின்னர் இம்மருந்தை சித்தாமிர்த தீர்த்தத்துடன் உண்ண வேண்டும். ஈசனும் அம்மையும் இங்கே மருத்துவர்கள் எனில், மருந்தாளர் முத்துக்குமார சுவாமிதான்! அதனால்தான் அருணகிரிநாதர் அவரை வைத்திய நாதப் பெருமாளே! என்றே பாடுகிறார்:

உரத்துறை போதத் தனியான 
  உனைச் சிறிதோதத் தெரியாது 
மரத்துறை போலுற் றடியேனும் 
  மலத்திருள் மூடிக் கெடலாமோ 
பரத்துறை சீலர் தவர்வாழ்வே 
  பணித்தடி வாழ்வுற் றருள்வோனே 
வரத்துறை நீதர்க் கொருசேயே 
  வயித்திய நாதப் பெருமாளே. 

ஞாயிறு, 2 ஜூன், 2013

சசி - 6 : பயங்கர மனிதன்!

பயங்கர மனிதன்!
சசி 
===


கதைகளை வெளியிடும் நூல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பொருத்தமான படங்கள் எவ்வளவு முக்கியம் என்று நான் அடிக்கடி சொல்வதற்கு ஒரு நல்ல உதாரணம் இதோ! ’சசி’யின் இந்தக் கதையைப் படித்து முடித்தவுடன் சொல்லுங்கள் : இந்தக் கதையைக் ‘கோபுலு’வின் படம் இல்லாமல் படித்தால் உங்களுக்குத் திருப்தி இருக்குமா?  
===


''ந்தாருங்கோ, உங்களைத் தானே! இந்த க்ஷணமே பக்கத்து வீட்டுக்காரர் கிட்டே போய், அவர் சம்சாரம் பண்ற அக்கிரமத்தைப் பற்றிச் சொல்லிச் சண்டை போட்டுட்டு வாங்கோ! இல்லாத போனா இந்த வீட்டிலே என்னாலே அரை நிமிஷம்கூடக் குடித்தனம் பண்ண முடியாது!'' என்று மங்களம் என்னிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

''என்னடி நடந்தது? விவரமாத்தான் சொல்லேன்!'' என்றேன்.


''தினம் எச்சக்கலையைக் கொண்டு வந்து இங்கே நம்மாத்திலே எறிகிறாள், அந்த மனுஷி! கேட்டாக்க, அப்படித்தான் எறிவாளாம்!''

''அப்படியா சொல்கிறாள்! உம்..! இதோ, இப்பவே போய் சண்டை போட்டுட்டு வரேன்! புதுசாகக் குடிவந்த பேர்வழிகளோல்லியோ, நான் எப்பேர்ப்பட்டவன்னு இன்னும் தெரிந்து கொள்ளலை!'' என்று கூறிவிட்டு, விடு விடென்று பக்கத்து வீட்டுக்கு விரைந்து சென்றேன். அங்கு வாசலில் உட்கார்ந்திருந்த வேலைக்காரன் என்னைத் தடுத்து, ''ஐயாவை இப்போ பார்க்க முடியாதுங்க, சார்!'' என்றான்.

''பார்க்க முடியாதா? அவசரமாகப் பார்க்கணும்னு போய்ச் சொல்லுடா! சண்டை கூடப் போடணும்னு சொல்லு! ஹும்! என்னை யாருன்னு நினைச்சிண்டிருக்கார்!'' என்று அதட்டிப் பேசினேன்.

அதைக் கேட்டதும், அந்த வேலைக்காரன் உள்ளே செல்ல எழுந்திருந்தான். அதே சமயம், அங்கே வராந்தாவில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் என் கண்ணில் தென்பட்டது.

''டேய்! சித்தே இரு! அதோ மாட்டியிருக்கே, அது யாருடைய படம்?'' என்று பீதியடைந்து கேட் டேன்.

ஆமாம், பெரிய மீசையுடன் இருந்த அந்தப் பயங்கர மனிதரின் படத்தைப் பார்த்ததும், எனக்கு நடுக்கமெடுத்துவிட்டது.

''எங்க எசமானர் படம்தான் அது!'' என்று வேலைக்காரன் சொன்னதும், என் நடுக்கம் இன்னும் அதிகமாகிவிட்டது.

''இன்னொரு சமயம் வருகிறேன்'' என்று கூறிவிட்டு, நிற்காமல் என் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.

வீட்டுக்கு வந்ததும், ''சண்டை போட்டேளா?'' என்று மங்களம் கேட்டாள்.

''ஐயையோ! ஆளைப் பார்த்தா ராக்ஷஸன் மாதிரி பயங்கரமாக இருக்கேடி! அவனோடு நான் எப்படியடி சண்டை போடறது? வாசலிலே மாட்டியிருக்கிற அவன் போட்டோவைப் பார்த்தேன். அப்படியே திரும்பிவிட்டேன்!'' என்றேன்.

''நாசமாப் போச்சு! அவர் பரம சாதுவான்னா இருப்பார்! நாடகத்திலே அவர் கம்ஸன் வேஷம் போட்டுண்டபோது எடுத்த போட்டோவைப் பார்த்துட்டு ஓடி வந்திருக்கேள்! அவர் வீட்டு வேலைக்காரி அன்னிக்குச் சொன்னாளே... பிச்சைக்காரர்களை பயமுறுத்தறதுக்காகன்னா வெளியிலே மாட்டிவைத்திருக்காராம்! நன்னாயிருக்கு!''

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சசியின் சிறுகதைகள்