வ.சுப. மாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.சுப. மாணிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 அக்டோபர், 2020

1662. வ.சுப. மாணிக்கம் - 2

தனிப்பாடல்கள்
வ.சுப.மாணிக்கம்
===
( 1958-இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) 

இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக்கு என்றும் வரவேற்பு உண்டு. மின் விளக்கு வந்ததற்காக அகல் விளக்கு இல்லாமல் போயிற்றா? வானூர்தி வந்ததற்காக வண்டிக்கு இடம் இல்லையா? தொடர்கதைகள் ஒருபுறம் தோன்றச் சிறுகதைகளும் ஒருபுறம் தோன்றவே செய்யும். பலவுறுப்பு நாடகங்கள் இருப்ப, ஒருறுப்பு நாடகங்களும் இருக்க்வே செய்யும். தொடர்நிலைக் காப்பியங்கள் ஒப்பத் தனிப்பாடல்களுக்கும் ஒருமொழியில் இடம் உண்டு. மேலும் இலக்கியம் வளர்ந்த நெறியை நோக்கின், தனிப்பாடல்களே ஒருமொழியில் முன் தோன்றின என்பதும், இவற்றின் அடிப்படையில் தொடர்நிலைச் செய்யுள் என்னும் பெருங்காப்பியங்கள் பின் தோன்றின என்பதும் விளங்கும். எப்பெரும் புலவனும் முதலில் தனிப்பாடல் எழுதிப் பழகித்தானே பேரிலக்கியம் செய்யப் புறப்பட்டான் என்ற படிமுறையையும் எண்ணுங்கள். மொழி என்னும் கட்டிடத்துக்கு இலக்கணம் அடித்தளம் என்றால், காப்பியங்கள் துண்கள் என்றால், நாடக நூல்கள் மேன்மாடங்கள் என்றால், நாடோடிப் பாடல்கள் காற்று வரும் காலதர்கள் என்றால், தனிப் பாடல்கள் படிக்கட்டுகள் என்று சொல்லலாம். -
தனிப்பாடல் என்பது யாது? நடந்த ஒரு தனி நிகழ்ச்சியை அல்லது மனத்துத் தோன்றிய ஒரு தனிக் கருத்தைப் பற்றிப் பாடுதல்.தனிப்பாடல்கள் கற்பனை குறைந்தன;ஆனால் கவர்ச்சி மிகுந்தன. மறைவு இல்லாதவை; ஆனால் உண்மை தழுவியவை. உறுதி தளர்ந்தவை; ஆனால் உணர்ச்சி செறிந்தவை. ஆதலின் இப்பாடல்கள் மக்கள் மனத்துப் பதிந்து பேச்சோடு பேச்சாகக் கலந்து விடுகின்றன. செந்தமிழும் நாப்பழக்கம். கொடையும் பிறவிக்குணம், கற்றது கைம்மண்ணளவு, பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி, மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும் என்பன போலும் பல தனிப்பாடற் பகுதிகள் மக்கள் பேச்சுக்கிடையில் வழங்குவதக் கேட்கின்றோம்.
இடைக்காலத் தமிழ்ப்புலவர்கள் நிகண்டுகளை வரப்பண்ணிச் சொல்வளம் மிக்க செல்வர்களாக விளங்கினர். பல செல்வர்கள் செல்வத்தையே பொருளெனக் கருதி எண்ணி இருப்புப் பார்த்து மகிழ்வதுபோல, இந்தச் சொற்செல்வர்களும் சொற்களையே புலமையெனக் கொண்டு யாப்பு நயம் பாடி மகிழ்ந்தனர். எவ்வெழுத்திலும் பாட்டுத் தொடங்குவோம்; எவ்வெழுத்திலும் பாட்டை முடிப்போம்; எதிரி வியக்கும்படி பாட்டுக் கட்டமுடியும் என்று செய்யுட் பந்தயத்தில் ஈடுபட்டார்கள். உடலைப் பரத நடிகை பொருளுக்குத் தக வளைப்பது போலத் தமிழ் மகளை இப்புலவர்கள் தாம் விரும்பிய யாப்புக்குத்தக வளைத்தனர்.
சிவப்பிரகாசர்
துறைமங்கலம் சிவப்பிரகாசர் முந்நூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். கற்பனைக் கருவூலம் என்று பெயர் பெற்றவர். திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், நால்வர் நாண்மணிமாலை முதலாய பல நூல்களின் ஆசிரியர். தந்தையை இளம்பருவத்திலேயே இழந்த இவர் தம்முயற்சியால் கல்விப் புலமை எய்தினார்; இயற்றமிழை நன்கு கற்க விரும்பித் தருமபுர ஆதீனத்தை அடைந்தார்; வெள்ளியம்பலவாணர் என்னும் ஆசிரியரை அணுகினார். அம்பலவாணர் சிவப்பிரகாசரின் சொற்பயிற்சியையும் பாடல் இயற்றும் யாப்பும் பயிற்சியையும் அறிய விரும்பினார். மேடைமீது ஏறியவுடன் சொற்பொழிவாற்றும் உடனடிப் பேச்சுப் போட்டியை நாம் இன்று நடத்துவதுபோல்,உடனடிப் பாட்டுத்தேர்வொன்றைச் சிவப்பிரகாசருக்கு ஆசிரியர் அன்று நடத்தினார். “ஒரு பாட்டை ‘கு’ என்று தொடங்கி 'கு' என்று முடி மேலும், 'ஊருடையான்’ என்ற தொடரைப் பாட்டுக்கிடையில் வை” என்று ஒரு கேள்வி விடுத்தார். கேள்விக்குச் சிவப்பிரகாசர் உடனே இயற்றிய பாட்டானது,
குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழல்
முடக்கோடு முன்னம் அணிவார்க்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்.
ஊருடையான் என்னும் உலகு.

என்பதாம். குடக்கு எனத் தொடங்கி உலகு என முடிதலால் முடிதலும் இறுதியும் ‘கு’க்கள் வருதல் காண்க. ஊருடையான் என்று ஆசான் கொடுத்த ஒரு தொடரை ஊர் உடைஆன் எனப் பிரிவு செய்துகொண்டு சிவனுக்கு ஊராவது தில்லை, உடையாவது புலித்தோல், ஏறும் ஊர்தியாவதுகாளை என்று பொருளமைத்து இளமையிலேயே தம் மதி நுட்பத்தை வெளிப்படுத்தினார் சிவப்பிரகாசர்,
யாப்புவிளையாட்டு
காய் என்று எடுத்து இலை என முடித்தல், கொட்டைப் பாக்கு என்று எடுத்துக் களிப்பாக்கு என முடித்தல், கரி என்று எடுத்து உமி என முடித்தல், ஐந்து 'டு’க்கள் வரத் தொடுத்தல் என்றவாறு புலவர்கள் பாடல்கட்டி விளையாடுகிறார்கள். இன்னவிளையாட்டில் ஒட்டக்கூத்தர்கூட ஒரு சமயம் தோற்றுப்போனார்."மதி அல்லது பிறை என்றசொல் ஒரடிக்குள் மூன்றிடத்து வரப் பாடுக என்று ஒளவை கொடுத்த வினாவுக்கு, 'பிள்ளை மதிகண்டு எம்பேதை பெரிய மதியும் இழந்தாளே” எனப்பிள்ளைமதி பெரியமதி என்று இரண்டு மதிகள் வரவே ஒட்டக்கூத்தரால் பாடமுடிந்தது. “ஒட்டா ஒரு மதி கெட்டாய்” என்று ஒளவை இகழ்ந்து, புகழேந்திப் புலவரை நோக்கினாள். வெங்கட்பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே எனப் பிறைச் சொல் மூன்று ஒரடிக்குள் வருமாறு பாடிப் புகழேந்தியார் வெற்றி பெற்றார் என அறிகிறோம்.
அஞ்சற்றலைகள் தொகுப்பது, நிழற்படம் எடுப்பது, ஒவியம் வரைவது இன்று பலர்க்குப் பொழுது போக்காக இருத்தல் போல, செய்யுள் இயற்றல் என்பது பண்டப் புலவர்க்கு ஒரு பொழுது போக்காகும்.
இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும்
அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ
என்று அளக்கின்றார் காளமேகம்.
மூச்சு விடுமுன்னே முந்நூறும் நானூறும்
ஆச்சென்றால் ஆயிரம்பாட் டாகாதோ
என்று விரிக்கின்றார் அதிமதுரக் கவிராயர்.
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் எந்தன் உளம்
என எதனைப் பெறவும் ஒரு பாட்டு என்று எளிய பண்ட மாற்றாக மதிக்கிறார் ஒளவை. ஒருவர் முன்னிரண்டடிகளைப் பாடுவது; இன்னொருவர் பின்னிரண்டடிகளை முடிப்பது என்பது புலவர் கண்ட ஒரு யாப்பு விளையாட்டு. இரட்டையருள் குருடர் இரண்டடி பாடிநிறுத்திக் கொள்வார்; பிற்பகுதியை முடவர் பாடி முடித்து விடுவார். இஃது ஒருநிலை. வேறு சில பாடல்கள் உள. ஒருவர் முற்பகுதியைப் பாட அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொருவர் அவர் கருத்தை மாற்றுவதற்காக மிக விரைந்து பிற்பகுதியைப் பாடிவிடுவார். எவ்வளவு யாப்புப் பயிற்சியிருந்தால் இங்ஙனம் முந்திக் கொண்டு பாடவரும் என்று எண்ணிப்பாருங்கள்!
சோழன்புலமை
ஒட்டக்கூத்தர் குலாத்துங்கசோழன் அவைப்புலவர் ஆவர். இவர்சோழன் அகவாழ்க்கையிலும் அரசியல்வாழ்க்கையிலும் நெருங்கிய தொடர்புகொண்டவர். சோழன் ஆட்சிச் சிறப்பை நேரில் அறிந்தவர். இவன் ஆட்சியில் ஆராய்ச்சிமணி அசையவில்லை:இவன்குடையோவ்பரந்து விரிந்தது என்று பலர் சூழ்ந்த அவை முன் பாராட்ட விரும்பிய ஒட்டக்கூத்தர்,
- ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெலாம்
நீடுங் குடையைத் தரித்த பிரான்இந்த நீணிலத்தில்
என்று பாடி வருவதைக் கேட்டான் குலோத்துங்கன். தன் செவ்விய ஆட்சிக்கு ஒட்டக்கூத்தரே துணை என்பதை உட்கொண்டான். மேலும் தன் ஆசான் என்பதையும் நினைந்தான். ஒட்டக்கூத்தர்பால் தான் கொண்டுள்ள நன்மதிப்பையும் பெரும் பணிவையும் காட்ட இதுவே காலம் என்று துணிந்தான். தான் அரசன் என்பதைச் சிறிதும் எண்ணாது புலவருள் தலையாய ஒட்டக்கூத்தரின் அடியவன், மாணாக்கன் என்று சொல்லிக் கொள்ளத் துடித்தான் குலோத்துங்கன். புலவர் மேலிரண்டடிகளை முடிப்பதற்கு முந்தி,
பாடும் புலவர் புகழொட்டக் கூத்தர் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழனென் றேஎன்னைச் சொல்லுவரே
என்று செய்யுளை முடித்துவிட்டான். இதனால்இடைக் காலத்துத் தமிழ்ப் புலவன் பெற்றிருந்த அரசியற் செல்வாக்கு ஒருபுறம் விளங்க, இடைக் காலத் தமிழ் வேந்தன் பெற்றிருந்த தமிழ் வன்மையும் விளங்கக் காண்கின்றோம்.
சொற்சிலம்பம்
தனிப்பாடற் புலவர்கள், நமக்கு உரைநடை போல எண்ணிப்பாராதே செய்யுள் செய்வதை ஒருபொழுது போக்காகக் கொண்டனர் என்று கண்டோம். வைக்கோலுக்கும் யானைக்கும் பொருத்தம், மீனுக்கும் பேனுக்கும் பொருத்தம், திருமாலுக்கும் கடிகாரத்துக்கும் பொருத்தம் என்ற முறையில் பொருத்தப் பாடல்கள் செய்வதையும் ஒர் இன்தொழிலாகக் கருதினார்கள்.
சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை
ஐங்கரர்க்கு மாறுதலைய யானதே!
என்ற வகையில் புணர்ச்சி விதியுள் புகுந்து ஒசைநயம் காட்டுவதையும் ஒருவிளையாட்டு வினையாகப் பயின்றார்கள். வழக்கில் மக்கள் அடிக்கடி பேசும் சிறப்பில்லாத சொற்களுக்குக்கூட, சுவைததும்பும் பாட்டு வடிவம் கொடுக்குமுடியும் என்று நிகரற்ற தம்மொழித்திறத்தை மிகத்தெளிவாகக் காண்பித்தார்கள். தனிப்பாடல்கள் இலக்கியவுலகில் உரைநடையை ஒக்கும். ஆதலால் காப்பியங்களில் தள்ளுபடியாகும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தனிப்பாடலில் நல்வரவு உண்டு. ஆத்தாள், அக்காள், கண்ணாலவோலை, சும்மா, வண்ணான், அம்பட்டன், தேங்குழல், அப்பம்,தோசை முதலான சொற்களைக் கொண்டு எத்துணையோ தனிப்பாடல்கள் இனிமை தருகின்றன.
தனிப்பாடல் செய்தாருள் சொக்கநாதப் புலவரும் ஒருவர் இவர் முருகனை நோக்கி, கொடிய இம்மானிடவுடம்பு தவஞ்செய்து இளைத்துக்காய்ந்த சுக்குப்போல் ஆகவேண்டும்; அதன்பின் சுடுகாட்டில் வெந்தால் என்ன கேடு? இவ்வுடலை மீண்டும் கொள்ள யாரும். விரும்பமாட்டார்கள்; சிறந்த வீட்டின்பத்தை நீர் அருளுக நான் இக்காயத்தை என்றும் தேடமாட்டேன்’ என்று வேண்டுகின்றார். திருவேரகத்து எழுந்தருளியிருக்கும் முருகனுக்குச் செட்டி என்பது பெயர். செட்டி என்றால் வணிகனையும் குறிக்குமன்றோ! இவ்வணிகச் சொல்லை.அடிப்படியாக வைத்துச் சொக்க நாதப்புலவர் ஒர். உருவகம் புனைகின்றார். அவர் உருவக வெண்பாவில் வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற மளிகைச் சொற்கள் நயமான கவியாக ஆவதைக் கேளுங்கள்:
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் கமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே.
ஒரு மொழியின் இலக்கியம் இடையறாது வளர்கின்றது என்பதற்கும், ஒரு மொழிமக்கள் நீண்ட கலையுணர்ச்சி யுடையவர்கள் என்பதற்கும் காலந்தோறும் எழுகின்ற தனிப்பாடல்களே கண்ணாடியாகும். கற்றார் எல்லாரும் காப்பியங்கள் செய்துவிட முடியாது. ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்பொழுது தனிப்பாடல்கள் பாடி வாழ்க்கையில் அறிவின்பம் நுகரலாம். இவ்வின்பமும் சிறந்த இலக்கிய இன்பமேயாகும்

தொடர்புள்ள பதிவுகள்:


சனி, 16 ஏப்ரல், 2016

வ.சுப.மாணிக்கம்

தமிழ் இமயம் வ.சுப.மாணிக்கம்

இடைமருதூர் கி.மஞ்சுளா


ஏப்ரல் 17. தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் பிறந்த நாள். அவருடைய நூற்றாண்டும் இன்று தொடங்குகிறது.

2009-இல் தினமணியில்  இ.கி.மஞ்சுளா அவர்கள் எழுதிய கட்டுரை இதோ!
=====


""எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங்கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல் இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள். தமிழுக்குத் "தொல்காப்பியமும்', வாழ்வின் உயர்வுக்குத் "திருக்குறளும்', உயிர்த் தூய்மைக்குத் "திருவாசகமும்' எனக்கு வழிகாட்டிய தமிழ் மறைகள்'' என்று கூறி, வாழ்ந்த மூதறிஞர், தமிழ் இமயம் எனப் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார்.

  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரியில் 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி நாட்டுக்கோட்டை நகரத்தார் வகுப்பில் வ.சுப்பிரமணியன் செட்டியாருக்கும் -  தெய்வானை ஆச்சிக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் அண்ணாமலை. பிற்காலத்தில் மாணிக்கம் என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.

  வ.சுப.மாணிக்கத்திற்கு ஆறு வயது ஆனபோது அவரது தாய் இறந்தார். அடுத்த பத்தாவது மாதம் தந்தையும் இறந்ததால், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து துன்புற்றார். இச்சூழ்நிலையில், தாய்வழிப் பாட்டி மீனாட்சியும் தாத்தா அண்ணாமலை செட்டியாருமே அவரை மகனாகப் பாவித்து வளர்த்தனர்.

  ஏழு வயதுவரை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாண்டுகள் ஆரம்பக்கல்வி பயின்றார். பதினொன்றாம் வயதில் தொழில் கற்றுக்கொள்வதற்காக பர்மாவுக்கு அனுப்பப்பட்டார். பர்மாவின் தலைநகரான ரங்கூனில், ஒரு வட்டிக் கடையில் வேலைபார்த்து வந்தார்.

  கடை முதலாளி அவரிடம், ""குறிப்பிட்ட நபர் வந்து கேட்டால் முதலாளி இல்லை என்று சொல்லி விடு!'' என்று கட்டளை இட, ""முதலாளி வெளியில் சென்றிருந்தால் இல்லை என்பேன்; இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்'' என்று முதலாளியிடம் பதில் கூறியதால், அன்றே பணியிலிருந்து நீக்கப்பட்டார் வ.சுப.மா. இந்நிகழ்ச்சியினாலேயே "பொய் சொல்லா மாணிக்கம்' என்று பின்னாளில் அவர் அழைக்கப்பட்டார் என்றுகூட சொல்வர் அறிஞர் பெருமக்கள்.

  பர்மாவில் இருந்து திரும்பிய வ.சுப.மா.வை, தமிழ் மொழியின் மீது மிகுந்த நாட்டம் கொள்ளச் செய்தவர் பண்டிதமணி மு.கதிரேசச்செட்டியார். அவரது பெரும் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் வ.சுப.மா.

  பின்னர் 1945-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல், எம்.ஏ.,(1951) ஆகிய பட்டங்களைப் பெற்றார். பின்னர் "தமிழில் வினைச்சொற்கள்' என்ற பொருளில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டமும், "தமிழில் அகத்திணைக் கொள்கை' என்னும் பொருளில் ஆராய்ந்து பிஎச்.டி. (முனைவர்) பட்டமும் பெற்றார்.

  1945-இல் நெற்குப்பையைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சியைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

   1941 - 1948 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் அங்கிருந்து விடைபெற்று, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். ஆறு ஆண்டுகள் அக்கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1970 முதல் 1977 வரை ஏழாண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல முதல்வராகவும் பணிபுரிந்தார் வ.சுப.மா.

  வள்ளுவம், தமிழ்க்காதல், கம்பர் போன்ற அவரது ஆய்வு நூல்கள் தமிழக அரசின் பரிசு பெற்றவை. தொல்காப்பியப் புதுமை, எந்தச் சிலம்பு, இலக்கிய விளக்கம், சிந்தனைக் களங்கள், ஒப்பியல் நோக்கு, தொல்காப்பியத் திறன் போன்றவை பல்பொருள் குறித்த ஆய்வு நூல்கள். மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில், ஆகிய நான்கும் நாடக நூல்கள். கொடை விளக்கு, மாமலர்கள், மாணிக்கக் குறள் என்பன அவரது கவிதை நூல்கள். இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப் பட்டயங்கள் இரண்டும் வ.சுப.மா. பதிப்பித்த நூல்கள். "தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை', திருக்குறள் தெளிவுரை, நீதிநூல்கள் உரை என்பன அவர் வெளியிட்டுள்ள உரை நூல்கள்.

The Tamil Concept of Love,A Study of Tamil Verbs, Collected Papers,
Tamilology    என்பன வ.சுப.மா. எழுதியுள்ள ஆங்கில நூல்கள். இவைதவிர "தலைவர்களுக்கு' என்பது வ.சுப.மா. கடித வடிவைக் கையாண்டு எழுதியுள்ள குறிப்பிடத்தக்க நூல்.

  ""பெண்ணுக்குக் கற்பினைப் போன்றது கவிஞருக்குக் கற்பனை. கற்பனை இல்லாமல் கவிஞர் இருக்க முடியாது; கவிதை பிறக்க முடியாது. கவிதை என்றால் அதில் கற்பனை கட்டாயம் கலந்திருக்கும்; புலவர்கள் குறிக்கோள் உடையவர்கள். அக்குறிக்கோளைப் பதியவைப்பதற்கு அன்னவர்கள் கையாளும் இலக்கியக் கருவியே கற்பனை யென்பது'' என தமிழ்க்காதல் என்ற நூலில் கற்பனைக்கு விளக்கம் தந்துள்ளார் வ.சுப.மா.

  உரையாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், உரைநடை ஆசிரியர் போன்ற பன்முகங்கொண்ட வ.சுப.மா. மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். அவரது சிந்தனைச் செழுமையை அவரது நூல்கள் அனைத்திலும் காணமுடிகிறது. வ.சுப.மா. பழமையைப் போற்றியது மட்டுமல்லாமல் புதுமையை இருகரம் கொண்டு மனமார வரவேற்கும் சிறந்த பண்பாளராகவும் விளங்கினார்.

  உயர்ந்த குறிக்கோள் உடைய வாழ்வே வாழ்வு; குறிக்கோள் இல்லையென்றால் அதற்குப் பெயர் வீழ்வு! என்று கூறும் வ.சுப.மா., குறிக்கோள் இல்லாத வாழ்வு எத்தகையது என்பதை ஒரு கவிதை மூலம் அழகாக; தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

  "குறிக்கோள் இலாத வாழ்வு

      கோடுகள் இலாத ஆட்டம்;

  நெறிக்கோள் இலாத நெஞ்சு

     நிறைநீர் இலாத யாறு;

  மறிக்கோள் இலாத கல்வி

      வரப்புகள் இலாத நன்செய்;

  செறிக்கோள் இலாத மேனி

      திறவுகோல் இலாத பூட்டாம்''

(மாமலர்கள்-ப.60)

  தமிழின் வளர்ச்சிக்குப் புதிய சொல்லாக்கங்களை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது என்பது வ.சுப.மா.வின் அசைக்கமுடியாத கருத்து. இத்தகைய சொல்லாக்கங்களைப் படைப்பது அவருக்குக் கைவந்த கலை.

  "தமிழ் வழி கல்வி இயக்கம்' என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் தமிழ் பரப்ப, தமிழ் யாத்திரை மேற்கொண்டார்.

  தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அற நிலையத்திற்கு வழங்கவேண்டும்; தாம் பிறந்த ஊரான மேலைச்சிவபுரியில் கல்வி, மருத்துவம், நலவாழ்வு, குழந்தைநலம், சாதி சமய வேறுபாடின்றி இலவசமாகச் செலவு செய்ய வேண்டும் என்றும், தம் நூலகத்தில் தாம் தொகுத்து வைத்துள்ள நூல்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்றும் இவ்வாறு தமது விருப்பத்தை உயிலில் குறித்துவைத்திருந்தார்.

  எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று முழங்கிய அந்தத் தமிழ் மாமலை, 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி புதுச்சேரியில் சரிந்தது. என்றாலும் இன்று வரை அவரது ஆன்மா, தமிழ் உள்ள இடங்களில் எல்லாம் நூல் வடிவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது!

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்: