புதன், 27 ஜூலை, 2016

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
வெங்கடேசன் 

ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள்.

‘தினமணி’ யில் 2014 -இல்  வந்த ஒரு கட்டுரை இதோ:
=============

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும். இவர் தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார்.

பிறப்பு: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27 ஆம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி: ஐந்தாவது வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

ஆசிரியர் பணி: கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரியராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணிபுரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக்கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று. தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன.

ஓர் அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாள ராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

இலக்கியப் படைப்புகள்: இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின்படியும் புதிய முறைகளின்படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தபோதும்கூட இவருடைய கவிதைகளில் அமைதியும், இனிமையும் இழையோடிக் கொண்டிருந்தது. வெண்பாக்களின் வழியாகச் சொல்ல வந்ததை எளிமையாகவும், தெளிவாகவும் கையாண்டவர்.

   - பக்திப் பாடல்கள்,

   - இலக்கியம் பற்றிய பாடல்கள்,

   - வரலாற்று நோக்குடைய கவிதைகள்,

   - குழந்தைப் பாடல்கள்,

   - இயற்கைப் பாட்டுகள்,

   - வாழ்வியல் போராட்டக் கவிதைகள்,

   - சமூகப் பாடல்கள்,

   - தேசியப் பாடல்கள்,

   - வாழ்த்துப்பாக்கள்,

   - கையறுநிலைக் கவிதைகள்,

   - பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.



கவிமணியின் படைப்புகள்: மலரும் மாலையும்(1938), ஆசிய ஜோதி(1941), நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1942), உமார்கய்யாம் பாடல்கள்(1945), கதர் பிறந்த கதை(1947), தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், கவிமணியின் உரைமணிகள் போன்றவற்றை படைத்துள்ளார். இவை மிக இலக்கியத்தரம் வாய்ந்தவை.

மலரும் மாலையும்: பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே "மலரும் மாலையும்" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று ஆகியவற்றை அறியலாம்.

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
  பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்  
  கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
  துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்
  கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

மருமக்கள்வழி மான்மியம்:

   கவிமணியின் ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. இது சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற ஒரு புரட்சிக்காவியம். மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஒரு ஏற்பாடு. சட்டம்போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன்(சகோதரியின் மகன்)களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அரசர்களுக்கும் அப்படித்தான். இவ்வாறுதான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள். இத்தகு புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார். அதன் விளைவே 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்'!

   'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலவற்றை இன்னிசை வித்தகர்கள் பலர் மேடைகளில் விரும்பிப் பாடுவது அந்தத் தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம். கவிமணியின் சொற்பொழிவுகளும் உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூலுருவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கவிமணியின் சிந்தனைப் பரப்பு எத்தகைய ஆழம் மற்றும் நவீனம் கொண்டது என்பது தெளிவாகிறது.

இனிமைக் கவிஞர்: தேசம், மொழி, மக்கள், உலகம் எனப் பெரும் வட்டத்தைத் தன் பாடல்களுக்குள் அடக்கி சத்தமில்லாமல் தமிழ் உலகில் சஞ்சாரம் செய்தவர். சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்.

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
  உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
  தெரிந்து ரைப்பது கவிதை.

என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.

   கவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். "அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்," என வள்ளுவரையும், "நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க்கிழவி," என ஔவையாரையும், "இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக்காட்டிடுவான்," எனக் கம்பரையும், "பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா, அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா," எனப் பாரதியையும் போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.

குழந்தைக் கவிஞர்: கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார். இதுவரையிலான தமிழ் ஆளுமைகளில் குழந்தைகளின் பிரபஞ்சத்தில் சுதந்திரமாய் நுழைந்து உலவியர் கவிமணி ஒருவரே. குழந்தைகளுக்கான பாடல்களை கவிமணி அளவிற்கு இனி யாராலும் எழுதிவிட முடியாது என்பதை நிறுவியவர். "ஆங்கிலத்தில் உள்ளதைப் போல் தமிழில் குழந்தைப் பாடல்களில்லையே என்று நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் சில பாடல்களை எழுதினேன்," என்று தன்னுடைய குழந்தைப் பாடல்கள் குறித்துக் கவிமணி சொல்கிறார். அவர் சொன்னதுபடியே தன் வாழ்வில் பெரும்பகுதியைக் குழந்தைப் பாடல்கள் எழுதுவதற்காகவே செலவிட்டவர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் பாடல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார்.

காக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.
காக்காய்! காக்காய்! பறந்து வா
கண்ணுக்கு மை கொண்டு வா
கோழி! கோழி! கூவி வா
குழந்தைக்குப் பூக்கொண்டு வா

கோழி! கோழி! வா வா
கொக்கொக்கோ என்று வா
கோழி! ஓடி வாவா
கொண்டைப்பூவைக் காட்டு வா

"தோட்டத்தில் மேயுது  வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது  கன்றுக்குட்டி 
அம்மா என்றது  வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி."

போன்ற எளிமையான வருணனைகள் அடங்கிய வரிகளின்வழி குழந்தைகளின் உலகில் சிநேகிதமாய்ச் சஞ்சரித்தவர். எளிமையான பாடல்களின் மூலம் குழந்தைகளுக்கு அறிவு புகட்டவும் செய்தார்.


'தம்பியே பார், தங்கையே பார், 
சைக்கிள் வண்டி இதுவே பார்',

போன்ற குழந்தைப்பாடல்கள், அக்காலங்களில் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களில் தவறாது இடம் பெறுவது வழக்கம்.

தான்கண்ட மெய்ம்மையான காந்தியத்தை;

 "கூனக்கிழவி நிலவினிலே - இராட்டில்
   கொட்டை நூற்கும் பணி செய்வதை - இம்
 மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
   மாமதி யோங்கி வளருதம்மா."

என்கிற இயற்கை வர்ணனையோடு ஒட்டிக் குழந்தைகளுக்குப் புரிய வைத்தவர். பல்வேறு உத்தி முறைகளில் பாடி குழந்தைப் பாடல்களைப் பல்வேறு தளத்திற்கும் பரவச் செய்தவர் கவிமணி.

சமுதாயக் கவிஞர்: பாரதியாரைப் போலவே இவரும் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் சில நாட்டுப் பாடல்களின் இசை வடிவங்களைப் பயன்படுத்தித் "தீண்டாதோர் விண்ணப்பம்" என்ற பாடலையும் பாடியிருக்கிறார். அக்காலக் கட்டத்தின் சமூகக் கொடுமைகளுக்கும், அன்னியரின் அடிமைத்தனத்திற்கும் எதிரான கவிமணியின் பாடல்களில் தீர்க்கமான முற்போக்குப் பார்வையாளராக அவரை இனங்காண முடிகிறது.

"கண்ணப்பன் பூசை கொளும்
   கடவுளர் திருக்கோவிலிலே நண்ணக் கூடாதோ நாங்கள்
   நடையில் வரல் ஆகாதோ."

என்று தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைவதைப் பற்றி, சைவப்பிள்ளை ஆச்சார மரபிலிருந்து கொண்டு சிந்தித்தவர்.

"அல்லும் பகலும் உழைப்பவர்ஆர் - உள்ளத்து
   அன்பு ததும்பி யெழுபவர்ஆர்? க
ல்லும் கனியும் கசிந்துருகித் - தெய்வக்
   கற்பனை வேண்டித் தொழுபவர்ஆர்?"

எனப் பாடியதன் மூலம் அவர் காலத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.


மனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:

"கண்ணுக் கினியன கண்டு - மனதைக்
   காட்டில் அலைய விட்டு 
பண்ணிடும் பூசையாலே - தோழி
   பயனொன்றில்லையடி

உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
   உணர வேண்டும் அடி 
உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
   உள்ளேயும் காண்பாயடி."

கவிமணி தம் கவிதைகளில் சாதிபேதங்களைச் சாடுகிறார். "சாதியிரண்டொழிய வேறில்லை," என்றார் ஔவையார். சாதி இறைவனால் வகுக்கப்படவில்லை. மக்களின் கற்பனையே. பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர். தன்னலம் பேணுவோர் தாழ்ந்தவர். இதனை,

"மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த
 மாநிலத் தோங்கும் குலத்தினராம்
 தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
 தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா." 

எனப் பாடுகிறார்.

விடுதலைக் கவிஞர்: சுதந்திர வேட்கை தீயாய்க் கொழுந்துவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் காந்தியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துச் சமாதானத்தை வலியுறுத்தியவர். காந்தியின் கொள்கையான மதுவிலக்கு குறித்து,

 "கள்ள ரக்கா! குலத்தோடு நீ
   கப்ப லேறத் தாமதம் ஏன்?
 வள்ளல் எங்கள் காந்தி மகான்
   வாக்கு முற்றும் பலித்ததினி."

என்று உற்சாகமாய்ப் பாடுகிறார்.

   ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்குச் சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். "பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது," என்றும் வலியுறுத்தினார். நம்நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும். "உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது." "பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்." "அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்," என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.

"ஆக்கம் வேண்டுமெனில்- நன்மை
 அடைய வேண்டுமெனில்
 ஊக்கம் வேண்டுமப்பா - ஓயாது
 உழைக்க வேண்டுமப்பா



 உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்
 உடுக்கும் ஆடைக்கும்
 மண்ணில் அந்நியரை நம்பி
 வாழ்தல் வாழ்வாமோ?



 உண்ணும் உணவுக் கேங்காமல்
 உடுக்கும் ஆடைக் கலையாமல்
 பண்ணும் தொழில்கள் பலகாண்போம்
 பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்
 அண்ணல் காந்திவழி பற்றி
 அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்."

இந்தியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்பியவர். இரண்டாம் உலகப் போரினால் மக்கள் அடைந்த துயரை,

"போரில் எழுந்த பஞ்சம் - பாரத
   பூமியைத் தாக்குதைய்யா 
நேருங் கொடுமை யெல்லாம் - நினைக்க
   நெஞ்சு துடிக்குதைய்யா."

என்ற பாடலின் மூலம் விளக்குகிறார்.

உணர்ச்சிக் கவிஞர்: அக்காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளை மிகவும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு நீதிமன்றக் காட்சி, சாட்சியிடம் வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டு விசாரணை செய்கிறார்.

வக்கீல் : ஓடுற குதிரைக்கு கொம்பு ஒண்ணா? ரெண்டா?

சாட்சி  : குதிரைக்கு ஏதுங்க கொம்பு.

வக்கீல் : கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. கேட்ட கேள்விக்கு பதில். கொம்பு ஒண்ணா? ரெண்டா? அதைத்தான் சொல்லணும்.

இவ்வாறுதான் நீதிமன்ற நடவடிக்கை அக்காலத்தில் திருவிதாங்கூரில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

மொழிபெயர்ப்புகள்: பிறமொழிக் கவிஞர்தம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதி, தமிழிலக்கியச் சாளரத்தின் வழியாக பிற நாட்டுக் காற்று உள்ளே வர அனுமதியளித்தவர் கவிமணி. பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை ‘எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு’ ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார்.

ஆசிய ஜோதி: சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது. சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கனவாகக் காண்கிறாள். "Dreamed a strange dream" என்பதை "எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வளமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

ஆராய்ச்சிகள்: கவிமணி பல்துறைகளிலும் கால் பதித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டவர். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

வையாபுரிப்பிள்ளை, இராஜாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே. சண்முகம் போன்றோருடன் நட்பு அடிப்படையிலும், புலமைத்துவ அடிப்படையிலும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். மேற்கண்டவர்களின் வழியாகவும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைச் சாகும்வரை சேகரித்துக் கொண்டிருந்தவர். அவருடைய படைப்புலகத்தையும், ஆய்வுலகத்தையும் நோக்கின் பாரதிக்கு இணையாக அவரும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

திரைத்துறையில் கவிமணி: முதன்முதலில் என்.எஸ்.கே பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான 'மணமகள்' படத்தில் ஒரு பாடல், பின்பு 'தாயுள்ளம்' என்கிற படத்தில்

கோயில் முழுதும் கண்டேன் - உயர்   
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை நான்
தேடினும் கண்டிலனே

என்கிற ஒரு அற்புதமான பாடலை எம்.எல் வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைதவிர 1952ல் வேலைக்காரன், 1955ல் கள்வனின் காதலி, 1956ல் கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.

'கள்வனின் காதலி' படத்தில் இவரது

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வளமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

பாடல் பி. பானுமதி, கண்டசாலா குரலில் மிகவும் வெற்றியடைந்தது.  இவரது பல பாடல்களைத் திரையுலகம் அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறது. மேற்கண்ட பாடல்கள் கூட திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. இவரது பாடல்களை திரைத்துறை பயன்படுத்தியதே தவிரே, இவராகத் திரைப்படத் துறையின் பக்கம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டுகளும் விருதுகளும்: "அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும். கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் எனப் புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.

“தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை” என சக காலத்தில் வாழ்ந்த நாமக்கல் கவிஞரால் பாராட்டப்பட்டவர்.

 "இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துகளைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

25 டிசம்பர் 1940 இல் தமிழ்ச்சங்கம் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவர்தம் கவிபாடும் புலமையைப் பாராட்டி,  தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தனர்.

1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.

1954 இல் கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.

அக்டோபர் 2005 இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

மறைவு: 78 ஆண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்த கவிமணி மனைவியின் ஊராகிய புத்தேரி' என்கிற ஊரில் 26.09.1954 இல் வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவு :

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

நாடோடி -2

உள்ளூர் மாமனார் 
நாடோடி 











[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்: 
நாடோடி படைப்புகள்

திங்கள், 25 ஜூலை, 2016

சங்கீத சங்கதிகள் -80

பாடலும், ஸ்வரங்களும் - 1 
செம்மங்குடி சீனிவாச ஐயர் 

ஜூலை 25. செம்மங்குடி சீனிவாச ஐயரின் பிறந்த தினம்.


‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40 -களில் வெளியிட்ட இரு பாடல்களும் , அவற்றின் பொருளும், ஸ்வரங்களும்  இதோ.

பின்பு இவை தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்தன என்று நினைக்கிறேன்.









[ நன்றி: சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர்
சங்கீத சங்கதிகள்

சனி, 23 ஜூலை, 2016

சுப்பிரமணிய சிவா -1

அந்த நாளில் 

”அருண்”
                                               



ஜூலை 23. ’ வீர முரசு’ சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம்.


50-களில் “அருண்” விகடனில் எழுதிய “அந்த நாளில் . . . “ என்ற தொடரிலிருந்து ஒரு கட்டுரை இதோ!


 “அருணின் இயற்பெயர் கே. அருணாசலம். பாரததேவி, சுதந்திரம், ஆனந்தவிகடன் முதலிய பத்திரிகைகளில் இருந்து பெயர் பெற்றவர் “ என்கிறார் ரா.அ. பத்மநாபன் ஒரு கட்டுரையில்.



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவு:

சுப்பிரமணிய சிவா

சிவா பற்றிய ‘விக்கிப்பீடியா’க் கட்டுரை

செவ்வாய், 19 ஜூலை, 2016

சங்கச் சுரங்கம் : நூல் வெளியீட்டு விழா

சங்கச் சுரங்கம்  நூல் வெளியீட்டு விழா 


இலக்கிய வேல் , ஜூலை 2016 இதழில் வெளிவந்துள்ள  கட்டுரை இதோ!







இந்நூலில் உள்ள இருபது கட்டுரைக் கதைகளில் பத்து சங்க நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டைப் பற்றிய அறிமுகங்கள்; மற்ற பத்தில் பெரும்பாலானவை எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைப் பாடல்களை மையமாய்க் கொண்டவை.

                பொருளடக்கம்

1. ஓரிற்பிச்சை
2. குறிஞ்சிப் பாட்டு
3. குப்பைக் கோழி
4. திருமுருகாற்றுப்படை
5. மடலும் ஊர்ப
6. பொருநர் ஆற்றுப்படை
7. மையணல் காளை
8. சிறுபாணாற்றுப் படை
9. சங்க நிலா
10. பெரும்பாணாற்றுப் படை
11. எழு கலத்து ஏந்தி
12. முல்லைப் பாட்டு
13. கொங்கு தேர் வாழ்க்கை
14. மதுரைக் காஞ்சி
15. ஆறடி ஆறுமுகன்
16. நெடுநல்வாடை
17. குருதிப்பூ
18. பட்டினப்பாலை
19. ஆடுகள மகள்
20. மலைபடு கடாம்.

முனைவர் வ.வே.சு வின் அணிந்துரையிலிருந்து ஒரு பகுதி:

"சங்கம் போன்ற தொன்மையான இலக்கியத்தை நகைச்சுவையோடும் எளிமையோடும் வாசகர்களுக்கு அளிப்பது அவ்வளவு எளிதான பணியல்ல. எடுத்துக் கொண்ட இலக்கியத்தில் பல்லாண்டுகளாக ஊறித் திளைத்திருந்தால்தான் இது வசமாகும். சங்க நூல் தேன்; பசுபதியோ பலாச்சுளை. . . . // . . . பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் இணைந்த பதினெண் மேல் கணக்கு நூல்களின் மிகப் பரந்த காட்சிகளையும் உவமைகளையும் சேதிகளையும் இலக்கிய நயம் பாராட்டி ஒற்றை நூலில் எழுதுவதென்பது அரிதினும் அரிதான இயலாப்பணி. எனினும் இன்றைய தலைமுறையும் எடுத்துப் படிக்க ஓர் அறிமுகமாக விளங்கும் இந்நூல் தமிழர் இல்லங்கள் தோறும் இருக்க வேண்டிய நூலாகும்."

கவியோகி வேதத்தின் வாழ்த்துரையிலிருந்து ஒரு பகுதி :


" சங்கப் பாடல்களிலிருந்து சில அருமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்து, தம் விளக்க உரையில்   எளிமையான வாழ்க்கை நடைமுறைச் சம்பவங்கள் கலந்து புன்னகையால்  நம் முகம் மலருமாறு மிக ருசியாக உவமை விஞ்சச் ‘சங்கச்சுரங்கம்-1’ என்ற இந்த நூலைத் தந்துள்ளார். . . . // . . . பொருநர் ஆற்றுப்படை விளக்கத்தில் இவர் காட்டும் திறமை அபாரம். அதில் வரும் பாடல்களில் இவர் தாம் அறிந்த சங்கீத நுணுக்கங்களைக் கண்டு  மிக அழகாக விவரிக்கிறார். புதிய புதிய உவமைகளைத் தாமும் ரசித்து நமக்கும் பரிமாறுகிறார் நகைச்சுவையோடு!"


நூல் விவரங்கள்

LKM Publication
10, Ramachandra Street,
T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241
கைபேசி : 99406 82929.

[  நன்றி : இலக்கிய வேல் ] 

தொடர்புள்ள பதிவு :

சங்கச் சுரங்கம்

திங்கள், 18 ஜூலை, 2016

வாலி -1

நினைவு நாடாக்கள் -1 
வாலி 
ஜூலை 18. கவிஞர் வாலியின்  நினைவு தினம்.

விகடனில் வந்த அவருடைய  “நினைவு நாடாக்கள்” தொடரிலிருந்து இரு பகுதிகள்:
============

எழுதுகோலை ஏந்துவதற்கு முன்னால், என் கை - தூரிகையைத் தூக்கிய கை!
பிள்ளைப் பிராயத்தில் - கலர் கலராய்ப் படம் வரைந்துவிட்டு, கலர்ச் சாயம் போகக் கை கழுவுவேன்; பின்னாளில், அந்தக் கலையையே கை கழுவுவேன் என்று - நான் கனாக்கூடக் கண்டதில்லை!
பாட்டுதான் பிழைப்பு என்று ஆன பிற்பாடும்கூட -
பல்வேறு சித்திரக்காரர்களின் படங்களின் மாட்டு - என்னை இழந்து நின்ற தருணங்கள் ஏராளம்!
அடியேனுக்குக் கொஞ்சம் அரசியல் பித்தும் உண்டு; ஆதலால், கார்ட்டூன்கள் பால் கவனத்தை அதிகம் செலுத்துவேன்.
அத்துணை பக்கங்களையும் கார்ட்டூன் களே அடைத்துக்கொண்டு - ஓர் ஆங்கில வார ஏடு, அற்றை நாளில் வெளியாகி...
அனேகப் பிரமுகர்களின் அடிவயிற்று அமிலத்தை அதிகப்படுத்தியது.
பத்திரிகையின் பெயர் 'SHANKER'S WEEKLY!’
அதன் ஆசிரியரும் அதிபரும் ஒருவரே. அவர்தான் மிஸ்டர் ஷங்கர். சிறந்த கார்ட்டூனிஸ்ட்.
கேரளாக்காரர். அவரது கேலிச் சித்திரங் கள், நேந்திரம் பழம் முழுக்க - நீள நெடுக நோகாமல் ஊசியேற்ற வல்லவை!
நேருவின் மந்திரி சபையில் - ஒருவர் உணவு மந்திரியாக இருந்தார். பெயர் நினைவில்லை. ஆனால், அவர் PERSONALITY   ஆவி படர்ந்த ஆடிபோல் - மங்கலாக என் மனத்துள் நிற்கிறது; தொந்தி பருத்தும், தலை சிறுத்தும் இருப்பார் அவர்!
கேள்வி கேட்பதில் மிகச் சமர்த்தராக விளங்கிய திரு.காமத், இன்றளவும் எல்லோராலும் கொண்டாடப்படுகிற ஒரு PARLIAMENTARIAN!
உணவு மந்திரியைப் பார்த்துப் பாராளுமன்றத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார்  -
'தற்போது நம் தேசத்தில் - உணவு தானியங்களின், DEFICIT AREA எது? SURPLUS AREA எது?’ என்று.
உடனடியாக பதிலிறுக்க உணவு மந்திரியால் ஏலவில்லை.

இதுபற்றி -
மறுநாள் கார்ட்டூனிஸ்ட் ஷங்கர் ஒரு கார்ட்டூன் வரைந்தார்.
உணவு அமைச்சரின் உடலமைப்பில் - தலை சற்று சிறியதாகவும் - தொந்தி சற்றுப் பெரியதாகவும் இருக்குமென்பதை ஓர்ந்து-
அவரது படத்தைப் போட்டு -
தலைப் பகுதியில், DEFICIT AREA  - என்றும்; தொந்திப் பகுதியில் SURPLUS AREA என்றும் எழுதினார் ஓவியர் ஷங்கர்!
உலகு சிரித்தது ஒருபுறம் இருக்கட்டும். உணவு அமைச்சரே விலா நோகச் சிரித்து, திரு.ஷங்கரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியதாகச் சொல்வார்கள்!
பின்னாளில் - என் மனதைப் பெரிதும் கவர்ந்த கார்ட்டூனிஸ்ட்  மிஸ்டர். மதன்!
அப்போதெல்லாம் - புதன் கிழமையில் 'விகடன்’ வந்துகொண்டிருந்தது.
'புதன் வந்தால், மதன் வருவார்!’ என்று நான் வேடிக்கையாகச் சொல்லி, விகடனைப் புரட்டுவேன்.
நக்கலும் நையாண்டியுமாய்ப் படங் கள் வரைந்து - சமூக அவலங்களைச் சாடியதில் -
மதன், மற்றவரிடமிருந்து தனித்து நின்றார் என்பேன்.
சுருங்கச் சொன்னால் -
'செவ்வாய்க்குப் பின் புதன்;
ஷங்கருக்குப் பின் மதன்!’ எனலாம்.
மதன் அவர்கள் -
நல்ல CARTOONIST மட்டுமல்ல;
நல்ல COLUMNIST கூட!
கேள்வி பதில் பகுதியே - அதற்குக் கண்கூடு.
அவ்வளவு ஏன்? என்னுடைய 'விகட’னில் வெளியான ராமாயணத் தொடருக்கு -
அவர்தான் வைத்தார் 'அவதார புருஷன்’ என்னும் தலைப்பை!
புடவைகளுக்கு மட்டுமல்ல; புதினங்களுக்கும் -
தலைப்பு என்பது தலையாய விஷயம். புடவைத் தலைப்பு, வாங்க வைக்கும்; புதினத் தலைப்பு, வாசிக்கவைக்கும்!
 *   *    *    *    *
கண்ணதாசனுடைய எழுத்துப் பணி புதுக்கோட்டையில்தான் கன்னி முயற்சி யாக ஆரம்பம் ஆனது.
என்னுடைய எழுத்துப் பணியும் புதுக் கோட்டையில்தான் ஆரம்பம் ஆனது.
புதுக்கோட்டை இராமச்சந்திரபுரத்தில் இருந்து பூத்துக் கிளம்பித் தமிழ் வளர்த்த பதிப்பகங்கள் அற்றை நாளில் அனேகம் உண்டு.
பல சிற்றேடுகள் தோன்றி, பின்னாளில் பிரபலமான பல எழுத்தாளர்களுக்கு நாற்றங்காலாக விளங்கிய ஊர் புதுக்கோட்டை!
நான் என் இளமைக் காலத்தில் கவிதைப்பித்து தலைக்கேறித் திரிந்தேன். நிறைய நிறைய - சின்னச் சின்னக் கவிதைகள் எழுதி, சிற்றேடுகள் அதிகம் வெளியாகிக்கொண்டிருந்த புதுக்கோட்டைக்கு அனுப்புவதுண்டு.
அச்சில் என் கவிதை வராதா என நாவில் எச்சில் ஊற நின்ற காலம் அது!
புறப்பட்ட வேகத்திலேயே, புதுக்கோட்டையிலிருந்து என் கவிதைகள் திரும்பி வந்தன. அச்சு வாகனம் ஏற அருகதையற்றவையாக என் படைப்பு கள் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் -
நான் சோரவில்லை. 'என் கவிதையைவிட மட்டமான கவிதையெல்லாம் ஏற்கப் படுகின்றனவே’ என்று - பெட்டைப் புலம்பல்களில் ஈடுபட்டு, பிறரது எழுத்துகளைப் பரிகசிக்கும் பாவத்தைப் பண்ணவில்லை.
'என் குஞ்சு பொன் குஞ்சு’ எனக் காக்கைபோல் எண்ணாமல் - நான், செப்பு கவிதை செப்பு என ஓர்ந்தேன்; அது, செம்பொன் அல்ல எனத் தேர்ந்தேன்!
வேதாளம் முருங்கை மரம் ஏற ஏற - நான் விக்கிரமாதித்தன்போல் விடாக்கண்டனாயிருந்தேன்.
ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது - 'உங்கள் கவிதை பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டது’ என்று!
கடிதத்தை அனுப்பிய பத்திரிகையின் பெயர் 'கலைவாணி’; புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மாதம் இருமுறை ஏடு.
திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் உண்டு.'கலைவாணி’ பத்திரிகை ஆசிரியரை நேரில் சந்தித்து, நன்றி சொல்வதோடு அல்லாமல் அவர்பால் என் நட்பை நீட்டித்துக்கொள்ள வும் நினைந்து -
நான் புறப்பட்டேன் புதுக்கோட்டைக்கு. 'கலைவாணி’ ஆசிரியரைக் கண்டு கும்பிடு போட்டேன்.
உட்காரச் சொன்னார். கவிதையைப் பாராட்டினார். தன் வாயால் என் கவிதையைப் படித்து அதன் நயங்களை வெகுவாக சிலாகித்து, அடிக்கடி எழுதச் சொன்னார்.
கவிதை இதுதான்:
'நிலவுக்கு முன்னே
நீ வர வேண்டும்;
நீ வந்த பின்னே
நிலவெதற்கு வேண்டும்?’
- இப்படிப் போகும் அந்தக் கவிதை; ஒரு கப் காபி வரவழைத்துக் கொடுத்து என்னை கவுரவப்படுத்தினார் 'கலைவாணி’ ஆசிரியர்.
கதர்ச் சட்டை; கதர் வேட்டி; நெற்றியில் திருநீறு; நேர்கொண்ட பார்வை; காந்தியடிகளின்பால் மாளாக் காதல்!
நெடுநாளைய நண்பனோடு அளவளாவுதல்போல் என்னோடு அளவளாவினார்.
திருச்சி தேவர் ஹாலில், தான் எழுதிய நாடகம் அடுத்த வாரம் நடக்க இருப்பதையும், அதற்கு நான் வர வேண்டும் என்பதையும் உறுதிபடச் சொன்னார்.
நான் அந்த நாடகத்திற்குப் போயிருந்தேன். அற்புதமான நாடகம். உரையாடல்கள் எல்லாம், சமூகத்தைச் சாட்டையெடுத்து விளாசுதல்போல் வெறியும் நெறியும் சார்ந்ததாயிருந்தன.
அந்த நாடகத்தை அரங்கேற்றியது - முத்தமிழ்க் கலா வித்வ ரத்ன டி.கே.எஸ். சகோதரர்கள்!
நாடகம் முடிந்ததும், நாடக ஆசிரியரைச் சந்தித்து, என் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். மெல்லப் புன்னகைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.
என் முதல் கவிதையைத் தன் பத்திரிகையில் வெளியிட்ட அவர்தான் -
பின்னாளில், எம்.ஜி.ஆர். படத்தில் - நான் முதல் பாட்டு எழுதும் வாய்ப்புப் பெறக் காரணமாவார் என்று, நான் கனவிலும் கருதினேனில்லை!
'கலைவாணி’ ஏட்டில் கவிதை எழுதிவிட்டால்கூட -
'பொன்னி’யில் என் எழுத்து இடம் பெறவில்லையே என்று நான் ஏங்கிக்கிடந்தேன்.
திரு.முருகு.சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராய்க்கொண்டு - புதுக்கோட்டையிலிருந்து அந்நாளில் வெளியான மாத இதழ்தான், 'பொன்னி’!
திராவிட இயக்கத்தினர் கரங்களில் அது தவழும் அளவு - தமிழ் ஆர்வலர் நெஞ்சங்களில் அதற்கொரு நிலைபேறு இருந்தது!
'பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்’ என்னும் வரிசையன்று -
'பொன்னி’ ஏட்டில் இடம் பெற்று, இறவாப் புகழ் பெறும் கவிதைகளை யாத்தருளும் புலவர் பெருமக்களை - இருந்தமிழ்நாட்டோர்க்கு இனம் காட்டியது.
இன்று நம்மிடையே மூத்த கவிஞராய் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியவர் -
திரு. சாமி.பழனியப்பன் அவர்கள், 'பொன்னி’ ஏடு சுட்டிய, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் தலையாயவர்.
கவிஞர் பெருமான் திரு.பழனியப்பன் அவர்களின் தந்தையார் பெயரும் - தமிழ்த் தாத்தாவின் பெயரும் ஒன்றாயிருப்பதே - இவர், தமிழ் வளர்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர், என்பதை உறுதிப்படுத்துகிறது!
ஆம்; கவிஞர் சாமி.பழனியப்பன் தந்தையார் பெயர் -
திரு. உ.வே.சாமிநாதன்!
திருச்சி வானொலி நிலையத்தில் நான் தற்காலிகக் கலைஞராகப் பணியாற்றிய நாளில் -
எனக்கு நெருங்கிய நண்பராயிருந்த திரு.என்.ராகவன் அவர்களின் உறவினர் திரு.சாமி.பழனியப்பன்.
வானொலி நிலையக் கவியரங்கத்தில் திரு.பழனியப்பன் பாடியபொழுது - நானும் கூட்டத்தில் ஒருவனாய் நின்று கேட்டவன்!
அவருடைய கவிதைகளை நான் - என் ஆரம்ப நாள்களில் நிறையப் படித்துப் பிரமித்துப்போயிருக்கிறேன் -
''பாரதிதாசனின் இன்னொரு புனை பெயரோ பழனியப்பன் என்பது’ என்று!
பழனியப்பனால் தமிழ் பெற்ற தகவு பேசத் தரமன்று; அவ்வளவு என்றால் அவ்வளவு!
என்னுள் இருக்கும், எள் முனையளவு தமிழும் பழனியப்பனார் பாக்களை என் இளமைக் காலத்தில் படித்ததனாலான பயனே!
சாமி.பழனியப்பன் பல கவிதைகளை இப்பசுந்தமிழ்நாட்டுக்கு வழங்கியிருப்பினும் -
அவர் யாத்த கவிதைகளிலெல்லாம் மேலான பெருங்கவிதை ஒன்று உண்டு!
அந்தக் கவிதையின் பேர்:
'பழநிபாரதி’!
என் முதல் கவிதையைப் பிரசுரித்த  -
புதுக்கோட்டை 'கலைவாணி’ ஏட்டின் ஆசிரியரும் -
என் முதல் பாட்டு - எம்.ஜி.ஆருக்கு நான் எழுத வாய்ப்பு வழங்கிய பெருமகனாரும், ஒருவரே என்றேனல்லவா?
அவர்தான் -
அதிக எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய திரு. ப.நீலகண்டன் அவர்கள்!
திரு. ப.நீலகண்டன் எழுதியதுதான் - திருச்சி தேவர் ஹாலில் டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றிய நாடகம்; நாடகத்தின் பெயர்:
   'முள்ளில் ரோஜா!’
====

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவு :

வாலி

சனி, 16 ஜூலை, 2016

டி.கே.பட்டம்மாள் - 7

பட்டம்மாள் என்கிற பாட்டம்மாள்!
நெல்லை பாரதி
ஜூலை 16. டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். 



தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் கிராமத்தில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய அப்பா கிருஷ்ணசுவாமிக்கு மகளை சங்கீதத்துறையில் பெரிய இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அதற்கேற்றபடி பட்டம்மாளுக்கும் சின்ன வயதிலேயே திறமை பளிச்சிட்டது. உறவினர் இல்ல விழாக்களில் பலகுரலில் பேசி, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். அப்பாவிடம் பெற்ற சங்கீதப் பயிற்சியால் நான்கு வயதிலேயே சுலோகங்களைப் பாடி, பாராட்டுகளை அள்ளினார். பள்ளிக்கூடத்தில் நடந்த இசை நாடகத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது. ஹெச்.எம்.வி கிராமபோனில் முதல்முறையாகப் பாடியபோது அவருக்கு பன்னிரண்டு வயது. மேடைக்கச்சேரி ஆரம்பிக்கும்போது பதினான்கு வயது.
 



காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்துக்கு மகாத்மா காந்தி வந்திருந்தபோது, வீர சுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ…’ என்ற பாரதி பாடலைப்பாடி, பார்வையாளர்களின் கைதட்டல்களைக் குவித்தார். கே.சுப்ரமணியம் இயக்கத்தில் தியாக பூமிபடம் உருவானபோது பாபநாசம் சிவனும் அவரது சகோதரர் ராஜகோபால ஐயரும் பாடல்களை எழுதினார்கள். பாபநாசம் சிவன் மற்றும் மோதிபாபு இசையில் தேச சேவை செய்ய வாரீர்…’, ‘பந்தம் அகன்று நம் திருநாடு உய்த்திட…’ என இரண்டு பாடல்களைப் பாடி பாட்டுச்சாலைப் பயணத்தைத் துவக்கினார் பட்டம்மாள்.


திருநெல்வேலியில் ஒரு கச்சேரி. அதில் பாரதியார் பாடலைப் பாடிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்மணி அழுதபடி இருக்க, கச்சேரி முடிந்ததும், அவர் யார் என்று விசாரித்ததும், பாரதியாரின் மனைவி செல்லம்மா என்று தெரிய வந்திருக்கிறது. பாட்டைப் புரிந்துகொண்டு உணர்ச்சியோடு பாடினீர்கள். இதை கேட்க அவர் இல்லையேஎன்று நெகிழ்ந்திருக்கிறார் செல்லம்மா. 1947 ஆம் ஆண்டில் பொங்கல் திருநாளில் வெளிவந்தது ஏவி.எம்மின் நாம் இருவர்’. அந்தப்படத்துக்கு சுதர்சனம் இசையமைத்திருந்தார். ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே…’ என்ற பாரதியார் பாடலுக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். பட்டம்மாள் குரலில் ஒலித்த அந்தப்பாடல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. அதே படத்தில் வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே…’ என்ற பாடலைப் பாடி வாழ்த்துகளையும் புகழையும் வாரினார்.

1947
ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு. நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க இருப்பதை எண்ணி மக்களெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த நேரம். வானொலியில் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே…’ பாடலை நேரலையில் பாடினார் பட்டம்மாள். கேட்டவரெல்லாம் உணர்ச்சிப்பெருக்கால் ஆனந்தக்கண்ணீர் விட்டார்கள். வானொலி நிர்வாகம் அவருக்கு ஒரு காசோலையை நீட்டியது. நாட்டுக்காகப் பாடினேன், பணம் தேவையில்லைஎன்று மறுத்திருக்கிறார். கொத்தமங்கலம் சீனு- விஜயகுமாரி நடித்த மகாத்மா உதங்கர்படத்தில் காண ஆவல் கொண்டேங்கும் என் இருவிழிகள்…’ என்ற பாடலைப் பாடினார். காதல் டூயட் பாடமாட்டேன்என்று விரதமிருந்த பட்டம்மாளின் பாட்டுப்பட்டியலில் அந்தப்பாடலில் மட்டும் காதல்ரசம் பொங்கியது. அதே படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் - வீணை ராமநாதன் இசையில் குஞ்சிதபாதம் நினைந்துருகும்…’ என்கிற பக்தி ரசத்தையும் பொங்கவைத்தார் பட்டம்மாள்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த தியாகய்யாவில் ராதிகா கிருஷ்ணா…’ மற்றும் நினைந்துருகும் என்னை…’ என இரண்டு பாடல்கலைப் பாடினார். இந்தியிலிருந்து ராம ராஜ்யாவை தமிழுக்குக் கொண்டு வந்தார் ஏவி.மெய்யப்பச் செட்டியார். அதில் அருணாசலக் கவிராயரின் எனக்குன் இருபதம்…’ என்கிற டைட்டில் பாடலைப் பட்டம்மாள் பாடினார். அந்த ஆறுநிமிடப் பாட்டில் ராமாயணத்தின் முன்கதை சொல்லப்பட்டதை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.  வேதாள உலகம்படத்தில் சுதர்சனம் இசையில் அவர் பாடிய தீராத விளையாட்டுப் பிள்ளை…’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  அதே படத்தில் தூண்டிற் புழுவினைப்போல்…’ பாடலும் ரசிக்கப்பட்டது.

ஜி.அஸ்வத்தாமா இசையில் பிழைக்கும் வழிபடத்தில் சுந்தர வாத்தியார் எழுதிய எங்கள் நாட்டுக்கெந்த நாடு பெரியது…’ பாடலின் நிறைவில் நேரு எங்கள் நாடு…’ என்று பட்டம்மாள் குரலில் ஒலித்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் கைதட்டி வரவேற்றார்கள். அந்தப்படத்தில் முதலை வாயில்…’, ‘கோட்டை கட்டாதேடா…’ என இரண்டு பாடல்களையும் பாடினார்.

வாழ்க்கைபடத்தில் பாடிய பாரத சமுதாயம் வாழ்கவே…’ பாடல் அவரது புகழுக்கு மேலும் மெருகூட்டியது. லாவண்யாபடத்தில் இடம்பெற்ற பழம் பாரத நன்நாடு…’ பாடலில் ஏழைகளின் குரலை ஏற்ற இறக்கத்தோடு ஒலித்து, பாராட்டுப்பெற்றார் பட்டம்மாள்.


ஜெமினியின் நாட்டிய ராணிபட விளம்பரத்தில் பாடல்கள்: டி.கே.பட்டம்மாள்என்று பெரிய எழுத்துக்களில் அவரது பெயர் அறிவிக்கப்பட்டு, பெருமை சேர்த்தது. லலிதா-பத்மினி நடனமாடிய நாடு செழித்திடவும் உள்ளமே நாடு…’ பாடல், பட்டம்மாள் குரலில் வனசுந்தரிபடத்தில் ஒலித்து, வசீகரித்தது. 1948ஆம் ஆண்டு, ஜனவரி 30ஆம் தேதி காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று, ‘சாந்தி நிலவ வேண்டும்…’ பாடலை மெட்டமைத்து, வானொலியில் பாடினார். கேட்டவர் கண்களெல்லாம் ஈரமாகின. அந்தப்பாட்டுக்காக வனொலி நிலையம் வழங்கிய காசோலையை வாங்க மறுத்துவிட்டார் பட்டம்மாள்.

எல்.சுப்ரமண்யம் மெட்டமைத்த வைஷ்ணவ ஜனதோ…’ பாடலை கமல்ஹாசனின் வேண்டுகோளை ஏற்று ஹேராம்படத்தில், நீண்ட இடைவெளிக்குப்பின் பாடினார். அவரது வீட்டுக்கே இசைக் கருவிகளை எடுத்துச்சென்று, பாடல்பதிவுசெய்து, அந்த இசை மேதைக்கு மரியாதை செய்தார் இளையராஜா. கான சரஸ்வதிஎன்று கலா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பட்டம்மாள் பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷண்விருதுகளைப்பெற்ற பெருமையாளர். 2009ஆம் ஆண்டில் முதுமையின் காரணமாக மரணமடைந்தார் பட்டம்மாள்.


[ நன்றி : http://kungumam.co.in/ ] 

தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 15 ஜூலை, 2016

மறைமலை அடிகள்.

மறைமலை அடிகள். 
வெங்கடேசன்

ஜூலை 15. மறைமலை அடிகளின் பிறந்த நாள்.  


அவரைப் பற்றித் தினமணியில் 2014-இல் வந்த ஒரு கட்டுரை இதோ! 
==============
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச வேண்டும் என்று 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியவரும், குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவரும். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்தவர். அவரை தமிழ் உலகம் 'தமிழ்க்கடல்' என்றும், 'தனித்தமிழின் தந்தை' என்று தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ற அந்த வரலாற்று மனிதர்தான் மறைமலை அடிகள். 
பிறப்பு: 1876 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி திருக்கழுக்குன்றத்தில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும், அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற விரும்பி 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் - மறை, அசலம் - மலை, சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள் என்று மாற்றிக் கொண்டார்.
கல்வி: வெஸ்லியன் மிஷன் என்ற கிறிஸ்துவப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார் மறைமலை அடிகள். அங்கு ஆங்கிலம் முதல் மொழியாக இருந்ததால் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். வே. நாரயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். அதோடு நின்று விடாமல் சமஸ்கிருத மொழியையும் நன்கு கற்றறிந்தார். எனவே அவருக்கு மூன்று மொழிகளில் புலமை இருந்தது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தணியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினொன் கீழ்கணக்கு போன்ற சிரமமான நூல்களையும் தெளிவாக கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையானார் மறைமலை அடிகள்.
ஆசிரியர் பணி: நாகை மீனலோசனி என்ற செய்தித்தாளுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டார். சைவ சித்தாந்தத்தில் பெயர் பெற்ற சோம சுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்த பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார். அவற்றைப் படித்து ரசித்த நாயக்கருக்கு அவருடைய எழுத்தின் மீது ஈடுபாடு ஏற்படவே சித்தாந்த தீபிகை என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பணியில் மறைமலை அடிகளை அமர்த்தினார். அந்தப் பணியை விருப்பமுடன் செய்த அதே வேளையில் தமிழாசிரியராக வர வேண்டும் என்ற தமது விருப்பத்துக்காகவும் உழைத்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணித் தேர்வுக்கு தம்மை தயார் செய்து கொண்டார். அந்தப் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மறைமலை அடிகளின் புலமையை சோதித்தவர் அப்போது புகழ் பெற்றிருந்த பரிதிமாற் கலைஞர் என்ற தமிழறிஞர். மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். வீ. கோ. சூரியநாராயண சாஸ்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். காலப்போக்கில் தனக்கு சோறு போட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்து தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.
1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றிய பின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912-ல் "சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் பொதுநிலைக்கழகம் என பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.
முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையான தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூய தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தலம் எனும் காதல் காவியத்தை தமிழில் மொழி பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆனால் தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார். 
தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது.
மறைவு: தம் வாழ்நாளில் அவரது உள்ளம் இரு விசயங்களை காதலித்தது. அதில் ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமது 75-வது வயதில் காலமானார்.
இவர் காலத்தில் பல புகழ்பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணியம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரை வேலர், திரு.வி.கல்யாணசுந்தரனார், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி.கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச.வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியருமான நாராயணசாமி, "சைவ சித்தாந்த சண்டமாருதம்" என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர் என்று பலர் வாழ்ந்த காலம்.
'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக வினாக்களை வீசலாம். ஆனால் ஒரு மொழியின் மீது காதல் கொண்டவர்களால்தான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால்தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தார் மறைமலை அடிகள். அவரைப்போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு தமிழ் உலகம் நன்றி கூறும் அதே வேளையில் அவரிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதை பற்றியும் சிந்தித்து சிறக்க வேண்டும்.
தான் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து காட்டியதால் தமிழ் வரலாற்றில் தனி இடம் பெற்றும், 'தனித்தமிழ்' என்ற வானமும் வசப்பட்டது. அவரிடமிருந்த துணிவும், வைராக்கியமும், சிந்தனைத் தெளிவும், கொள்கைகளுடன் வாழ்ந்து காட்டும் திடமும் நமக்கும் ஏற்பட்டால் நிச்சயம் நாம் விரும்பும் வானமும் வசப்படும்.
நூல்கள்:
* முதற்குறள் வாத நிராகரணம் (1898)
* முனிமொழிப்ரகாசிகை (1899)
* ஞானசாகரம் மாதிகை (1902)
* முல்லைப்பாட்டு - ஆராய்ச்சியுரை (1903)
* பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் (1906)
* பட்டினப்பாலை - ஆராய்ச்சியுரை (1906)
* சாகுந்தல நாடகம் (சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
* மரணத்தின் பின் மனிதர் நிலை (1911)
* சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
* யோக நித்திரை, அறிதுயில் (1922)
* வேளாளர் நாகரிகம் (1923)
* மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
* சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
* தொலைவில் உணர்தல் (1935)
* தமிழ் நாட்டவரும், மேல் நாட்டவரும் (1936)
* முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
* இந்தி பொது மொழியா? (1937)
* தமிழர் மதம் (1941)
* திருக்குறள் ஆராய்ச்சி (1951)
* பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
* சிவஞான போத ஆராய்ச்சி (1958)
* Oriental Mystic Myna Bimonthly (1908 - 1909)
* Ocean of wisdom, Bimonthly (1935)
* Tamilian and Aryan form of Marriage (1936)
* Ancient and Modern Tamil Poets (1937)
* Can Hindi be a lingua Franca of India? (1969)
[ நன்றி : தினமணி ] 

தொடர்புள்ள பதிவு:

வியாழன், 14 ஜூலை, 2016

லா.ச.ராமாமிருதம் -11: சிந்தா நதி - 11

7. அங்குல்ய ப்ரதானம் 
லா.ச.ரா

இந்த சமயம் உலகமே என் உள்ளங்கையில் லேகிய உருண்டை.
அம்மாவின் ரக்ஷைக்கு சாக்ஷி வேற வேணுமா?
உன் ஆவாஹணத்துக்கு ஏற்றபடி உன் அபிமானம்.
அபிமானத்திற்கேற்றபடி அருள். “  - லா.ச.ரா. 




மோதிரத்தைக் காணோம். எப்படி? இரவு, படுக்கு முன், சில சமயங்களில் கழற்றி, தலையணை உறையுள் போட்டுவிடுவேன். மறுநாள், எழுந்து, தலையணையை உதறினதும், மோதிரம் தரையில் க்ளிங்' என்று விழுகையில், நினைவில் ஏதேதோ எனக்கே சொந்தம் எதிரொலிகள் எழும்.

சங்கராந்தியுமதுவுமாய் மோதிரத்தைக் காணோம். ஆனால் தாமதமாகத்தான் ஞாபகம் வந்தது. ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கையில், விரலின் வெறிச்சைப் பார்த்ததும், தன் அறைக்குப் போய் சுருட்டின படுக்கையை விரித்து, தலையணையை உதறினால்-'ப்ளாங்கி.'

உடல் வெலவெலத்து அங்கேயே உட்கார்ந்துவிட்டது. எப்படி, என்ன, ஏது ஆகியிருக்கும்?

வெகு நாளாகவே என் அறை, படுக்கை, சாப்பாடு முறை, வேளை கூடத் தனி. இளவட்டத்தின் இரைச்சல்- பேச்சுத் தளம் ஒவ்வவில்லை. ஈடு கொடுக்க முடியவில்லை. என் அறைதான் எனக்கு அடைக்கலம். பிறர் நடமாட்டத்துக்கு அதிகம் ஏதுவில்லை. என் புத்தகங்களை யார் எடுத்துப் படிக்கப் போகிறார்கள்?

" 'The power of Silence'- தலைப்பைப் பார்த்தாலே தொடணும் போல இருக்கா பார்! ஓஹோ, அதனால் தான் ஐயா கொஞ்ச நாளா 'உம்' மா?"

ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு வேலைக்காரி பெருக்க வருவாள். அந்தச் சமயத்துக்கு என் புத்தகங்களை என்னைச் சுற்றிப் பரப்பிக் கொண்டிருந்தேனானால், கையை ஆட்டிவிடுவேன். அவளுக்கு வலிக்கிறதா?

ஆனால் எப்பவுமே, எங்கேயுமே, இப்படித்தான் என்று நினைக்கிறேன். ஒரு பண்டம் காணாமற் போனால், சந்தேகத்துக்கு முதல் காஷுவல்டி வேலைக்காரிதான்.

இவள் வந்து இன்னும் வாரம் ஆகவில்லை. கல்யாணமாகி ஒரு வருடம் ஆகவில்லை. மாமியார் வீட்டோடு சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டார்களாம். புருசன் குடிக்கிறானாம், அடிக்கிறானாம்.

பார்க்க நல்ல மாதிரியாகத்தான் தோன்றுகிறாள். ஆனால் புதுக்கை, கை சுத்தம் பற்றி என்ன கண்டோம் ?

சரிதான், என் தலையணையிலிருந்து அவள் எப்படி எடுத்திருக்க முடியும் ? சாத்தியத்துக்கும் பகுத்தறிவு நியாயத்துக்கும் சமயத்தில் புத்தி அவிந்துவிடுகிறதே! அவள் இன்னும் பெருக்க வரவில்லை.

வென்னீர் அடுப்படியில் உட்கார்ந்து, கட்டையை உள்ளே தள்ளும் பாவனையில் என்னிடமிருந்தே ஒளிந்து கொள்கிறேன்.




"அப்பா ஏன்டா ஒரு மாதிரியா இருக்கா?"

"யார் கண்டது: The Power of Silence."

"என்ன சொல்றே?"

"சொன்னால் உனக்கும் புரியாது. எனக்கும் புரியாது."

அத்தனையும் கிசுகிசு. ஆனால் என் செவி படணும். நான் சூளையில் வெந்து கொண்டிருக்கிறேன்.

கனுவன்று கன்னியம்மா நோட்டீஸ் கொடுத்து விட்டாள். மாமியாரும் புருசனும் கூட்டிப் போக நேரே வந்திருக்காங்களாம். "குடிகாரனோ, கொலைகாரனோ, என் இடம் அங்கேதானேம்மா! தை பிறந்திருக்குது. எனக்கு வழி விடுது-"

ஓஹோ, அப்படியா? பலே கைக்காரிதான். காரியம் முடிந்ததும், Knack-ஆ கழன்றுகொள்கிறாளா? ஆனால் ஜாடையாகக்கூடக் கேட்க முடியுமோ? புருஷனை அவள் அழைத்து வந்து விட்டால், அவ்வளவுதான், என்னை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி விடுவானே! கேட்க வேண்டிய சமயத்தைக் கோட்டை விட்டாச்சு. இனி அவ்வளவுதான். இனி என்ன ?

* * *

வீட்டுக்குத் தென்புற முன்வேலியை ஒட்டிப் புல்தரையில் உட்கார்ந்திருக்கிறேன்.


-ஒரு thesis டைப் அடித்துக் கொடுத்ததற்குக் கிடைத்த ஊதியத்தை, அம்மா சொற்படி, (உருப்படியா பண்ணிக்கோ, குடும்பம்தான் எப்பவுமே இருக்கு, எத்தனை வந்தாலும் போறாது!) அப்படியே பண்ணி, அம்மா கையில் கொடுத்து, வாங்கி, விரலிலேறி ஆச்சு இன்று இருபத்து ஏழு வருஷங்களுக்கு மேல். அம்மா காலமும் ஆயாச்சு. மோதிரமும் போயாச்சு.

இனி என்ன !

கரணையா ஒரு பவுன். ஆனால் அதன் மதிப்பு அதன் தங்கத்தில் அல்ல.

வானத்தில் அங்குமிங்குமா, ஒண்ணும் இரண்டுமாகத் தெளித்தாற்போல் சுடர்கள் ஏற்றிக் கொள்கின்றன. மோதிரத்தைத் தேடவா? அல்ல, என் நட்சத்திரத்தின் கண்ணீர்த் துளிகளா?

* * *

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாய்- 'உங்கள் மோதிரம் எங்கே?"

காத்திருந்த கேள்விதான். ஆனாலும் குப்பென்று வியர்வை.

"இதோ பார்……." ஏதோ ஆரம்பித்தேன்.

என் கையைப் பிடித்து இழுத்து, மோதிர விரலில் அவள் செருகியதுதான் தாமதம்-

என்னுள் ஒரு பெரும் சக்தி அலை எழும்பியதை

அனுபவத்துக்குத்தான் அறிய முடியும். கிணறு பொங்கின மாதிரி.

இந்த சமயம் உலகமே என் உள்ளங்கையில் ஒரு லேகிய உருண்டை.

அம்மாவின் ரக்ஷைக்கு சாஷி வேற வேணுமா?

உன் ஆவாஹனத்துக்கு ஏற்றபடி உன் அபிமானம். அபிமானத்துக்கேற்றபடி அருள்.

"என்ன வேலைக்காரியோ, என்ன பெருக்கறாளோ? பத்து நாள் முத்து மழை பேஞ்சு, ஒரு பழம் புடவையும் புது ரவிக்கையும் பிடுங்கிண்டு போனதோடு சரி. இன்னிக்கு உங்கள் புஸ்தக ஷெல்படியில் வாருகலைக் கொடுத்துப் பெருக்கறேன். கலம் குப்பையோடு இதுவும்-எல்லாம் நான் பார்த்தால்தான் உண்டு. நான் செஞ்சால் தான் உண்டு."

அரற்றுவதோடு சரி. எலியுடன் பூனை விளையாட்டின் நுண்ணிய கொடூரம் அறியாள். வெகுளி.

படுக்கையைச் சுருட்டி வைக்கையில், கண்ணுக்குத் தெரியாமல், காதுக்கும் கேட்காமல் எப்படியோ நழுவி விழுந்து உருண்டோடி, ஒளிந்துகொண்டு, எனக்கு 'ஜூட்' காட்டி, என்னை அம்பேல் ஆக்கிவிட்டது.

கன்னியம்மா, உன் ஊழல் காரியத்துக்கு நன்றி.

என் ஸகியே, உன் புலம்பலுக்கு நன்றி.

பொங்கலோ பொங்கல்!

சிந்தா நதியில் ஒரு சுழி.


* * *


[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம்,  ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்: