வெள்ளி, 1 ஜூலை, 2016

கனவு நாடு : கவிதை

கனவு நாடு
பசுபதி 



ஜூலை 1. கனடா நாள். கனடாவின் தேசிய நாள்; பொது விடுமுறை நாள்.


என்றன் இனிய கானடா!
. . இன்பக் கனவு நாடடா!
தந்தை தேசப் புகழினைத்
. . தாயின் மொழியில் சொல்லடா! (1)

கழுகு நாட்டு நேசனாம்;
. . கனடா என்ற தேசமாம்;
அழகு, அமைதிப் பறவைகள்
. . யாவும் இங்கு வாசமாம். (2)

கார்வ ழுக்கும் சாலைகள்;
. . கணினி ஓட்டும் ஆலைகள்;
நீர்சி லிர்க்கும் காலைகள்;
. . நிலவு கொஞ்சும் சோலைகள். (3)

நளின, பருவ அழகுகள்
. . நான்கும் காட்டும் வானிலை;
எளிதில் உறையும் நீர்நிலை;
. . என்றும் ஈர மனநிலை. (4)

வேரில் பிரெஞ்சின் ஊட்டமாம்;
. . மேற்குக் கிழக்குக் கூட்டமாம்;
பாரில் அமைதி நாட்டவே
. . படைகள் அனுப்பிக் காட்டுமாம். (5)

எண்ணெய் என்ற பொக்கிடம்
. . எங்கும் நிலத்தின் அடியிலே;
மண்ணின் மைந்தன் மேபிளின்
. . வண்ணக் கையும் கொடியிலே. (6)

அகதி யான மாந்தரை
. . அழைத்து, இதயம் திறக்குமாம்;
மகுட ராணி பெயரிலே
. . மக்க ளாட்சி சிறக்குமாம். (7)

இனங்கள் மொழிகள் வண்ணமாய்
. . இணைந்த வான வில்லிது;
மனித பண்பு வேர்களை 
. . மதித்துப் போற்றும் நாடிது. (8)

கருணைக் கனடா நாடெனக்
. . கைகள் கொட்டி ஆடுவோம்;
அருமைத் தந்தை நாடென
. . அன்னை மொழியில் பாடுவோம். (9)

கலைமகள் 2005 தீபாவளி மலரில் வந்த கவிதை.] 



தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

5 கருத்துகள்:

ஸ்ரீமலையப்பன் சொன்னது…

கனடா பாடல் அருமை

Nagendra Bharathi சொன்னது…

அருமை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

அழகோ அழகு
சிலிர்க்கச் செய்யும் வரிகள்.
ஆற்றொழுக்கு நடை.

- தில்லைவேந்தன்(Natarajan Ramaseshan)

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, தில்லை வேந்தன்.