புதன், 29 ஆகஸ்ட், 2018

1147. சங்கீத சங்கதிகள் - 159

பாடலும், ஸ்வரங்களும் - 8
செம்மங்குடி சீனிவாச ஐயர்



‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40-களில் வெளியிட்ட இரு பாடல்களும் , அவற்றின் பொருளும், ஸ்வரங்களும்  இதோ.









[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

1146, பாடலும் படமும் - 44

இராமாயணம் - 16
யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]


'சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம்  மேவி,

நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி  நீரால்,

எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, 

உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?'

[ சினத்தொடும் கொற்றம் முற்றி-  சினத்தோடு நின்று
வெற்றியை முழுமையாக எய்தி; 
இந்திரன் செல்வம் மேவி இந்திரனுடைய செல்வத்தை அடைந்து; 
நினைத்தது முடித்து நின்றேன் - நினைத்ததைச்  செய்து  முடித்து  நின்ற யான்;
நேரிழை   ஒருத்தி   நீரால் -  (இப்போது)  பொருந்திய அணிகலன்களை  அணிந்த  (சீதை  என்கின்ற)  ஒருத்தியின் காரணமாக,  
( அந்நிலையிழந்து); 
எனக்கு  நீ  செய்யத்தக்க கடன் எலாம் - எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக் கடன்களை எல்லாம்;  
ஏங்கி  ஏங்கி  உனக்கு நான் செய்வதானேன்  -  வருந்தி  வருந்தி  உனக்கு யான்  செய்யும் நிலைமையை அடைந்தேன்;  
என்னின்  யார்  உலகத்து   உள்ளார்?- என்னைவிட இழிந்தவர்கள் இவ்வுலகத்து யாருளர்?]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

சனி, 25 ஆகஸ்ட், 2018

1145. காந்தி - 41

35. பம்பாய் நாடகம்
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த 35-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

காந்தி மகாத்மாவைக் காங்கிரஸின் சர்வாதிகாரியாக நியமித்துவிட்டு ஆமதாபாத் காங்கிரஸ் கலைந்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பிரசித்திபெற்ற 1921 – ஆம் ஆண்டு முடிவுற்றது.

1927 - ஆம் வருஷம் ஜனவரி மாதத்தில் மகாத்மாவின் உள்ளம் மூன்றுவித காரணங்களால் அலைப்புற்றுத் தத்தளிக்கும்படி நேர்ந்தது. ஒரு பக்கம் சர்க்காரின் தீவிர அடக்குமுறை; இன்னொரு பக்கத்தில் மிதவாதிகளின் சரணாகதி முயற்சி. மூன்றாவது பக்கத்தில் பொதுமக்களின் வரம்பு மீறிய செயல்கள் -இந்த மூன்றுவித எதிர்ச் சக்திகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு காற்று மழைகளுக்குச் சலியாத மலையைப் போல் மகாத்மா நின்றார்.

ஆமதாபாத் காங்கிரஸுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அடக்கு முறையைக் கையாளத் தொடங்கி விட்டனர். ஏறக்குறைய இருபத்தையாயிரம் தேசபக்தர்கள் 1921 - ஆம் வருஷ முடிவுக்குள் சிறைபுகுந்து விட்டார்கள். ஆனால் 1922- ஆம் வருஷம் பிறந்த பிறகு அதிகார வர்க்கத்தார் கையாண்ட அடக்கு முறை விபரீதங்கள் அதற்கு முன் நடந்ததையெல்லாம் தூக்கியடித்து விட்டன. தேசத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் போலீஸாரின் அட்டூழியங்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் படிக்கப் படிக்கமகாத்மாவின் எல்லையற்ற பொறுமைகூட எல்லை கடந்துவிடும் போலாகிவிட்டது. "அடுத்தது துப்பாக்கிதான்!" என்ற தலைப்பில் மகாத்மா ஒரு கட்டுரை எழுதினார். இதன் கருத்து,"அடுத்தபடியாக சர்க்கார் செய்யக்கூடியது துப்பாக்கிப் பிரயோகந்தான்! ஆகையால் அதற்கு நாம் தயாராயிருக்க வேண்டும்" என்பது தான். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் தீயைக் கக்கியது. தபோபலம் கொண்ட முனிவருடைய வார்த்தைகள் அக்கினி மயமாக வருவதுபோல் காந்தி மகாத்மாவின் பேனாவிலிருந்தும் வார்த்தைகள் வந்தன.

காசியில் சில தொண்டர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. தொண்டர்கள் அபராதம் கொடுக்க மறுத்தார்கள். அபராதத்தைப் பலாத்காரமாக வசூலிப்பதற்ககப் போலீஸார் வீடுகளில் புகுந்து சாமான்களைக் கைப்பற்றினார்கள். ஸ்திரீகள் அணிந்திருந்த ஆபரணங்களைப் பலவந்தமாகக் கவர்ந்து சென்றார்கள். இன்னும் சில இடங்களில் போலீஸார் வீடுகளில் ஜப்தி செய்யப் புகுந்தபோது தடுத்தவர்களை அடித்தார்கள். மேற்படி செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு மகாத்மா எழுதியதாவது: --

"அடுத்தபடியாக அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகத்தைக் கைக்கொள்வார்கள். திக்கற்ற பாமர ஜனங்கள்மீது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் வரையில் நாம் காத்திருக்கக் கூடாது. கவர்ன்மெண்ட அதிகாரிகள் ஜனங்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு போவதை நம் மக்கள் பார்த்துக் கொண்டு வெகு காலம் பொறுமையாயிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் கூடாது. ஆகையால் அதிகாரிகளுடைய கோபத்தை யெல்லாம் நம்முடைய தலைமேல் நாமே இழுத்து வருவித்துக் கொள்ள வேண்டும். இதற்காக, அஹிம்சையை உறுதியாகக் கடைப்பிடித்துக் கொண்டு எவ்வளவு தீவிரமான சட்டமறுப்புச் செய்யலாமோ, அதை உடனே செய்தாக வேண்டும்.

"கவர்ன்மெண்டின் நோக்கம் என்ன? நாம் இயக்கத்தைக் கைவிட்டுச் சரணாகதி அடையவேண்டும் அல்லது பலாத்காரத்தைக் கொள்ளவேண்டும் என்பதுதான் சர்க்காருடைய நோக்கம். அவர்களுடைய வலையில் நாம் விழக்கூடாது. அதாவது, பணிந்துவிடவும் கூடாது; பலாத்காரத்தைக் கைக்கொள்ளவும் கூடாது. சாத்வீக சட்ட மறுப்பினால் நம்முடைய தலையில் துப்பாக்கிப் பிரயோகத்தை வருவித்துக் கொள்ளவேண்டும்.

"தொண்டர்களுடைய உறுதிமொழிப் பத்திரத்தில் 'சாவுக்கும் தயாராயிருப்போம்' என்ற ஒரு நிபந்தனை இருக்கிறது. இந்த நிபந்தனையைக் கடைப்பிடிக்கச் சமீபத்தில் அவசியம் எதுவும் நேராது என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் கடவுளுடைய விருப்பம் வேறுவிதமா யிருப்பதாகத் தெரிகிறது. நம்மை இப்போதே பூரணமாகப் பரிசோதித்துவிட இறைவன் விரும்புகிறார் போலும். கடவுளுடைய பெயரால் அந்த இறுதிப் போராட்டத்தை ஆரம்பிப்போம்."

மேலே கண்டவாறு மகாத்மா காந்தி எழுதினார்.இதிலிருந்து அச்சமயம் காந்திஜியின் மனப்போக்கை நாம் அறியலாம். அதாவது அதிகார வர்க்கத்தாரின் கொடூரமான அடக்குமுறைகளினால் ஜனங்கள் அத்துமீறிச் சாத்வீக வரம்பைக் கடந்து விடுவார்களோ என்ற பயம் காந்திஜிக்கு இருந்தது. அந்த பயத்தை உண்டாக்கும்படியான சில சம்பவங்களும் நாட்டில் அங்குமிங்கும் நிகழ்ந்து வந்தன. உதாரணமாக, வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு ஜனவரி மாதம் 13 உ விஜயம் செய்த போது பொது ஜனங்களில் ஒரு சாரார் வரம்புமீறிய காரியங்களைச் செய்து விட்டார்கள். அன்றைய தினம் மற்ற நகரங்களில் நடந்தது போலவே சென்னையிலும் ஹர்த்தால் நடந்தது. ஆனால் ஒரு சிலர் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவில்லை. வில்லிங்டன் சினிமாவின் சொந்தக்காரர் ஒரு பார்ஸி கனவான். அவர் சினிமாவை அன்று மூட மறுத்து விட்டார். தவிர, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வேல்ஸ் இளவரசரின் வரவேற்பில் கலந்து கொள்ளத் தீர்மானித்திருந்தனர். வில்லிங்டன் சினிமாவைப் பொது ஜனங்கள் தாக்க முயன்றபோது அந்தச் சினிமாவின் சொந்தக்காரர் ஜனங்கள்மீது துப்பாக்கியால் சுட்டார். ஜஸ்டிஸ் கட்சியின் அப்போதைய தலைவரான ஸர் பி.டி. தியாகராஜ செட்டியாரின் வீட்டை ஜனங்கள் முற்றுகையிட்டுத் தொல்லை விளைவித்தார்கள். இதையெல்லாம் அறிந்ததும் மகாத்மா மிகவும் மனம் வருந்தினார். அன்றைய தினம் சென்னையில் நடந்த அசம்பாவிதங்களைப்பலமாகக்கண்டித்து "எங் இந்தியா" வில் எழுதினார்.

இவ்விதம் ஒரு பக்கத்தில் சர்க்கார் அடக்கு முறைகளையும் மற்றொரு பக்கத்தில் பொது ஜனங்களின் பலாத்காரத்தையும் எதிர்த்து நின்ற காந்திமகான் மூன்றாவது பக்கத்தில் மிதவாதிகளின் சரணாகதி முயற்சிக்கும் பதில் சொல்ல வேண்டி நேர்ந்தது.

கல்கத்தாவிலும் ஆமதாபாத்திலும் தோல்வியுற்ற பண்டித மாளவியா அத்துடன் தம் முயற்சியை நிறுத்தவில்லை. பம்பாய்க்கு வந்து அங்கே தம் முயற்சியை மீண்டும் ஆரம்பித்தார். பம்பாயில் பண்டித மாளவியாவுக்கு அப்போது முக்கிய துணைவராயிருந்தவர் ஜனாப் ஜின்னா. பம்பாய் நகரத்தின் பொது வாழ்வில் அப்போது ஜனாப் ஜின்னா மிகவும் முக்கியமான ஸ்தானத்தை வகித்து வந்தார். காங்கிரஸ் ஸ்தாபனத்திலும் ஜனாப் ஜின்னாவுக்கு அதுவரையில் நல்ல மரியாதை இருந்தது. ஆனால் மகாத்மாவின் சட்ட மறுப்பு முறையை ஜனாப் ஜின்னா ஒத்துக் கொள்ளவில்லை. கிலாபத் இயக்கத்தில் அவருக்குச் சிறிதும் உற்சாகம் கிடையாது. அலி சகோதரர்களை அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காது.

மகாத்மா காங்கிரஸில் சேர்ந்த பிறகு காங்கிரஸின் போக்கே வேறு விதமாகப் போய்க் கொண்டிருந்ததைப் பலமிதவாதிகள் விரும்பாததுபோல் ஜனாப் ஜின்னாவும் விரும்பவில்லை. ஆகவே பண்டித மாளவியாவும் ஜனாப் ஜின்னாவும் சேர்ந்து ஜனவரி மாதம் 14 - ஆம் தேதி 15 - ஆம் தேதிகளில் பம்பாயில் சர்வ கட்சி அரசியல் மகாநாடு ஒன்று கூட்டினார்கள். இந்தியாவில் அரசியல் துறையில் பிரபலமாயிருந்தவர்களை யெல்லாம் இந்த மகாநாட்டுக்கு அழைத்தார்கள். மகாத்மாவையும் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களையும்கூட அழைத்தார்கள். ஆனால் அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பழுத்த மிதவாதிகள்; அல்லது பட்டம் பதவிகளில் ஆசை கொண்ட அரசியல் பிரமுகர்கள். தேசபக்தி, தேசீயக் கிளர்ச்சி,- இவையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பெரிய பதவிகளைப் பெறுவதற்காகவே என்று எண்ணங் கொண்டவர்கள்.

மகாத்மாவின் சகாக்களான காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும் அப்போது சிறையில் இருந்தார்கள். தேசபந்துதாஸ், பண்டிதநேரு, லாலா லஜபதிராய், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் சிறைப்பட்டிருந்தார்கள். இந்த நிலைமையில் பம்பாயில் சர்வ கட்சி மகாநாடு கூடிற்று. மகாத்மாவும் மகாநாட்டுக்கு வந்தார்.

மேற்படி மகாநாட்டில் ஒத்துழையாமை வாதிகள் நேர்முகமாகக் கலந்து கொள்வதில் பயனில்லையென்று தீர்மானித்தார்கள். ஆனால் மகாநாட்டைப் பகிஷ்காரம் செய்யவேண்டியதுமில்லை. அழைக்கப்பட்டவர்கள் போகலாம். அப்படிப் போகிறவர்களில் மகாத்மாகாந்தி ஒருவர் மட்டும் காங்கிரஸின் சார்பாகப் பேசினால் போதுமானது. வேறு யாரும் பேச வேண்டியதில்லை.

லோகமானிய திலகருக்குப் பிறகு மகாராஷ்டிரத்தின் தலைவராக விளங்கிய ஸ்ரீ என்.சி.கேல்கர் இந்த யோசனையைச் சொன்னார். அதை மற்றவர்களும் ஆதரித்தார்கள். மகாத்மாவும் அதுவே சரி என்று ஒப்புக் கொண்டார்.

சர்வகட்சி மகாநாட்டுக்கு ஸர் சங்கரன் நாயர் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். ஸர் சங்கரன் நாயர் பழைய காலத்துக் காங்கிரஸ் வாதிகளில் ஒருவர். ஒரு வருஷம் காங்கிரஸுக்கு அக்கிராசனமும் வகித்திருக்கிறார். சர்க்கார் உத்தியோகத்துக்கு அப்போதெல்லாம் காங்கிரஸ் ஒரு ஏணியாக உபயோகப்பட்டு வந்தது. அந்த ஏணியில் ஏறி உச்சியை அடைந்தவர் ஸர் சங்கரன் நாயர். இந்திய சர்க்காரின் நிர்வாக சபையில் அங்கத்தினராக உத்தியோகம் பார்த்து 'ஸர்' பட்டமும் அடைந்தவர். இப்போது அவர் 'மாஜி தேச பக்தர்' என்ற நிலைமையில் இருந்தார். அதிகார வர்க்கத்தின் பரம பக்தராயிருந்தார். மகாத்மாவையும் அவருடைய ஒத்துழையாமை சட்ட மறுப்பு இயக்கங்களையும் தீவிரமாக விரோதித்தார். அத்தகைய மனிதரைச் சர்வ கட்சி மகாநாட்டுக்குச் சபாநாயகர் ஆக்குவதாகச் சொன்னார்கள். ஆயினும் அதை மகாத்மா காந்தி ஆட்சேபிக்கவில்லை.


முதல் நாள் மகாநாடு கூடியதும் பண்டித மாளவியா தமது முகவுரைப் பிரசங்கத்தைச் செய்தார். சுருக்கமாகப் பேசுவதற்கு மகாத்மா எப்படிப் பேர் போனவரோ அப்படியே பண்டித மாளவியா நீளமான பிரசங்கம் செய்வதில் பெயர் போனவர். அவர் அன்று ஆதிகாலத்திலிருந்து, அதாவது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஆரம்பித்த நாளிலிருந்து தொடங்கினார். பிறகு காங்கிரஸ் ஆரம்பித்த வரலாற்றுக்கு வந்தார். பிறகு ஹோம்ரூல் இயக்கம், ரவுலட் சட்டம், பஞ்சாப் படுகொலை, கிலாபத் அநீதி, ஒத்துழையாமை இயக்கம் எல்லாவற்றையும் பற்றிச் சாங்கோபாங்கமாகப் பேசினார். மகாத்மாவின் பெருமையையும் தேசத்தில் அவருடைய செல்வாக்கையும் பாராட்டித் தற்போது தேசத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் ஒத்துழையாமை இயக்கத் தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் ராஜி ஏற்பட வேண்டிய அவசியத்தைப் பற்றி வற்புறுத்தினார். இதற்காகப் பிரிட்டிஷ் சர்க்கார் ஒரு வட்ட மேஜை மகாநாடு கூட்டவேண்டும் என்றும் அதை வற்புறுத்தவே இந்த சர்வகட்சி மகாநாடு கூட்டியதாகவும் தெரியப் படுத்தினார்.

பிறகு மாளவியாவின் பிரேரணையின் பேரில் ஸர் சங்கரன் நாயர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தலைமைப் பீடத்தில் அமர்ந்தார். அவர் சில வார்த்தைகள் கூறிய பிறகு, ஜனாப் ஜின்னா அந்த மகாநாட்டைக் கூட்டியவர்கள் தயாரித்திருந்த நகல் தீர்மானங்களைப் பிரேரணை செய்தார். அத்தீர்மானங்களைச் சில மிதவாதிகள் ஆமோதித்தார்கள்.

மகாத்மாவின் அபிப்பிராயத்தைச் சொல்லும்படி கேட்டதின் பேரில் அவர் பேச எழுந்தார். தாம் காங்கிரஸின் சார்பாகவோ தனிப்பட்ட முறையிலோ அந்த மகாநாட்டுக்குப் பிரதிநிதியாக வரவில்லையென்பதை முதலில் தெளிவு படுத்தினார். மகாநாடு கூட்டிய தலைவர்களின் நல்ல நோக்கத்தை ஒப்புக்கொண்டு பாராட்டினார். ஆனால் ஜனாப் ஜின்னா பிரேரேபித்த தீர்மானங்களினால் உத்தேசித்த பலன் விளையாது என்று தெரிவித்தார்.

பஞ்சாப், கிலாபத், சுயராஜ்யம் ஆகிய இந்த மூன்று விஷயங்களையும் ப்ற்றிக் காங்கிரஸின் கோரிக்கைகள் என்னவென்பதை விளக்கி மேற்படி கோரிக்கைகள் குறைக்க முடியாத அடிப்படைக் கோரிக்கைகள் என்பதை வற்புறுத்தினார். ஆயினும் சர்க்கார் வட்டமேஜை கூட்டுவதில் ஆட்சேபம் எதுவும் இல்லையென்றும் அதில் காங்கிரஸ் கலந்து கொள்ளுவதற்குக் காங்கிரஸின் நிபந்தனைகள் என்னவென்றும் விளக்கினார்.

ஜனாப் ஜின்னாவின் நகல் தீர்மானங்கள் பண்டித மாளவியா குன்ஸ்ரூ முதலியவர்கள் கல்கத்தாவிலிருந்து மகாத்மாவுக்கு அனுப்பிய தந்திகளை யொட்டியிருந்தன. மகாத்மாவே தமது பழைய பல்லவியையே மறுபடியும் வற்புறுத்திப் பாடினார். அதாவது வட்டமேஜை மகாநாட்டுக்குப் பூர்வாங்கமாகப் புதிய அடக்கு முறைச் சட்டங்களின் கீழ் (அதாவது கிரிமினல்லா அமெண்ட்மெண்ட் சட்டம், இராஜத் துவே ஷக் கூட்டச் சட்டம் இவற்றின் கீழ்க்) கைது செய்தவர்களை மட்டும் விடுதலை செய்தால் போதாது. அலி சகோதரர்கள் உள்ளிட்ட பத்வா கைதிகளையும் மற்றும் 124ஏ, 144 முதலிய சாதாரணச் சட்டப் பிரிவுகளின் கீழ்க் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் சமீபத்தில் கையாண்டு வரும் அடக்கு முறைக் கொடுமைகளை எடுத்துச் சொல்லி, அந்தக் கொடுமைகளைச் செய்ததற்காக அதிகார வர்க்கத்தார் உண்மையான பச்சாதாபம் காட்ட வேண்டும் என்றும், எல்லாக் கைதிகளையும் விடுவித்தால் உண்மையான பச்சாதாபம் கொண்டதற்கு அறிகுறியாயிருக்கும் என்றும் தெரிவித்தார்.

மகாத்மாவின் பேச்சைச் சபைத் தலைமை வகித்த ஸர் சங்கரன் நாயர் கொஞ்சங்கூட விரும்பவில்லை. அதிலும் அதிகார வர்க்கம் பச்சாதாபம் காட்ட வேண்டும் என்றும், சைன்யத்தின் ராஜ பக்தியைக் கலைக்கப் பார்த்த அலி சகோதரர்களை விடுதலை செய்யவேண்டும் என்று காந்திஜி சொன்னது சங்கரன் நாயருக்குப் பொறுக்கவில்லை. அதிகார வர்க்கத்தின் தாஸானு தாஸனாகும் மனோ நிலையை அச்சமயம் ஸர் சங்கரன் நாயர் அடைந்திருந்தார். "ஆகையால், அதிகார வர்க்கம் பச்சாதாபம் காட்டவாவது? மகாத்மாவல்லவா மன்னிப்புக் கேட்கவேண்டும்?" என்று கர்ஜித்தார். பிறகு இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட மகாத்மாவுடன் எந்தவிதமான சம்பந்தமும் பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள தமக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு மகாநாட்டின் தலைமை ஸ்தானத்தைக் காலி செய்து மகாநாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

பிறகும் அவர் சும்மா இருக்கவில்லை. மகாத்மாவைத் தாக்கி ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதினார். "மகாத்மாவும் அராஜகமும்" என்ற புத்தகமும்; எழுதினார்.

மகாநாட்டிலிருந்து ஸர் சங்கரன் நாயர் எழுந்து போனதைப் பின்பற்றி வேறு யாரும் போகவில்லை. அந்த நாடக நிகழ்ச்சியை மற்ற மிதவாதிகள் விரும்பவும் இல்லை. உண்மையில் அவர்களில் பெரும்பாலோர் மகாத்மா கூறியதின் நியாயத்தை ஒப்புக் கொண்டார்கள். எனவே, ஸர் சங்கரன் நாயருக்குப் பதிலாக ஸர். விசுவேசவரய்யாவைச் சபைத் தலைமை வகிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு தடைபட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.

மகாத்மாவின் கருத்தையொட்டித் தீர்மானங்கள் திருத்தி எழுதப்பட்டன. முக்கியமாக, அலி சகோதரர்களையும் பத்வாக் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்று சேர்க்கப் பட்டது. ஆனால், மகாத்மாவின் பஞ்சாப், கிலாபத், சுயராஜ்யக் கோரிக்கைகளை, சர்வ கட்சி மகாநாடு அப்படியே ஒப்புக்கொள்ள வில்லை.

"மகாத்மா கோரிக்கைகளின் நியாயங்களைப் பற்றி இந்த மகாநாடு யோசனை செய்யவில்லை. அவை சர்க்கார் கூட்டும் வட்ட மேஜையில் தீர்மானிக்கப்பட வேண்டியவை. அந்த வட்டமேஜை மகாநாட்டுக்குப் பூர்வாங்கமாக அலி சகோதரர்கள் உள்ளிட்ட அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. ஜனாப் ஜின்னாகூட அதை ஒப்புக் கொண்டார். மகாநாட்டின் இரண்டாம் நாள் இரவு ஜனாப் ஜின்னா மகாத்மாவை அவருடைய ஜாகையில் வந்து பார்த்து "உங்களுடைய தீர்க்க திருஷ்டியையும் உறுதியையும் ரொம்பவும் பாராட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். சர்வ கட்சி மகாநாட்டுத் தீர்மானங்கள் லார்ட் ரெடிங் சர்க்காருக்கு அனுப்பப்பட்டன. ஜனாப் ஜின்னா பதில் கோரி தந்தி மேல் தந்தி அடித்தார். பண்டித மாளவியா மறுபடியும் லார்ட் ரெடிங்கை நேரிலேயே பேட்டி கண்டு பேசினார்.

ஒன்றும் பயன்படவில்லை. ஏனெனில் காந்திஜியுடன் ஒரு ராஜி செய்து கொள்ள வேண்டிய அவசியம் லார்டு ரெடிங்குக்கு இல்லாமற் போய்விட்டது. வேல்ஸ் இளவரசர் சுற்றுப் பிரயாணம் அதற்குள் முடிந்துவிட்டது. காங்கிரஸ் ஆணையினால் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம் நாடெங்கும் வெற்றிகரமாக நடந்துவிட்டது. இதனால் கோபங்கொண்டிருந்த லார்ட்ரெடிங் எப்படியும் மகாத்மாவைத் தொலைத்து அவருடைய இயக்கத்தை நசுக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். ஆகவே பம்பாயில் கூடிய சர்வகட்சி மகாநாடு என்னும் நாடகத்தினால் பயன் எதுவும் விளையவில்லை.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

1144. நா. ரகுநாதன் - 1

விருந்து வேண்டாம் 
“ரஸிகன் “ 
[ நா.ரகுநாதன்: படம் : சில்பி ]

’பாரதமணி’ யில் 1938-இல் வந்த ஒரு கட்டுரை.

நா. ரகுநாதய்யர். இவர் தான் “ரசிகன்”. 'ஹிந்து’வில் 31 ஆண்டுகள் உதவி ஆசிரியர். ஆங்கிலத்தில் ‘விக்னேஸ்வரா’ என்ற புனைபெயரில் ‘ Sotto Voce' கட்டுரைகளையும் எழுதினவர் . பாகவதம், பத்துப்பாட்டு, ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.








[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
நா.ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்

நா. ரகுநாதன்

ஆனந்த குமாரசுவாமி: “ரசிகன்”

புதன், 22 ஆகஸ்ட், 2018

1143. பெ.நா.அப்புஸ்வாமி -1

நட்சத்திர விஞ்ஞானி
பெ.நா.அப்புஸ்வாமி 

ஆகஸ்ட் 21. நோபல் பரிசு பெற்ற வானியல்-இயற்பியல் விஞ்ஞானி சி.எஸ்.சந்திரசேகரின் நினைவு தினம். ( இவர் சி.வி.ராமனின் மருமான்.)

இதோ , அவரைப் பற்றிக் ‘ கலைக்கதி’ரில் 1972-இல் வந்த ஒரு கட்டுரை. எழுதியவர் அறிவியல் தமிழ் முன்னோடி பெ.நா.அப்புஸ்வாமி.





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:
சுப்பிரமணியன் சந்திரசேகர் : விக்கிப்பீடியா

பெ. நா. அப்புசாமி : விக்கிப்பீடியா 

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

1142. ரா.அ.பத்மநாபன் - 1

சினிமாச் சுருள் 
ரா.அ.பத்மநாபன்


1939 ‘சக்தி’ இதழில் வந்த ஒரு கட்டுரை இதோ.



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
ரா.அ.பத்மநாபன்

இரா. அ. பத்மநாபன்: விக்கிப்பீடியா

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

1141. பாடலும் படமும் - 43

இராமாயணம் - 15
யுத்த காண்டம், நிகும்பலை யாகப்படலம்


[ ஓவியம் : கோபுலு ]

வென்றிச் சிலை வீரனை, வீடணன், ‘நீ
நின்று இக் கடை தாழுதல் நீதியதோ?
சென்று, இக்கடி வேள்வி சிதைத்திலையேல்,
என்று, இக் கடல் வெல்குதும் யாம்?’ எனலும்,

[ வீடணன் வென்றிச் சிலை வீரனை - வீடணன், வெற்றி மிக்க
வில்வீரனாகிய  இலக்குவனை  (நோக்கி); 
நீ இக்கடை நின்று தாழுதல் நீதியதோ? - நீ இவ்விடத்து (இ்ந்திரசித்தன் வேள்வியைச்  சிதைக்காது) நின்று  காலந்தாழ்த்துதல்  முறையாகுமா? 
இக்கடி  வேள்வி  சென்று சிதைத்திலையேல்  -  இந்தக்  காவல் மிக்க வேள்வியை  மேற்சென்று சிதைத்து   அழிக்காமல்   விடுவாயாயின்;   
இக்கடல்   யாம்  என்று வெல்லதும்?  எனலும்  -  (அரக்கர்  சேனையாகிய)  இக்கடலை நாம் எக்காலத்தில் வெல்ல வல்லோம்? எனக் கூறிய அளவில்.]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

சனி, 18 ஆகஸ்ட், 2018

1140. காந்தி - 40

34. சர்வாதிகாரி காந்தி
கல்கி 


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த 34-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே இந்நூலில் வந்தன ]
===
பண்டித மாளவியாவும் மற்றும் சில மிதவாதப் பிரமுகர்களும் ஒரு கோஷ்டியாகச் சென்று டிசம்பர் 21 லார்டுரெடிங்கைப் பேட்டி கண்டார்கள். லார்டு ரெடிங் அவர்களுடைய ராஜி மனப்பான்மையை மிகவும் பாராட்டினார். இந்த மாதிரியே மற்ற இந்தியத் தலைவர்களும் நடந்துகொண்டால் ஒரு தொல்லையும் இல்லை யென்றும், தம்முடைய சர்க்காரும் ராஜிக்குத் தயாராயிருப்பார்கள் என்றும் கூறினார். ஆனால் அந்த மிஸ்டர் காந்தி இவ்வளவு வெறும் பிடிவாதமாக இருக்கும்போது தாம் என்ன செய்யமுடியும் என்று சொல்லி அகலக்கையை விரித்தார்.

டிசம்பர் 24- வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவுக்கு விஜயம் செய்தபோது அந்த மாபெரும் நகரில் பரிபூரண ஹர்த்தால் நடைபெற்றது. அன்று கசாப்புக் கடைக்காரர்கள் கூடக் கடையை மூடி வேலை நிறுத்தம் செய்தார்கள். மிதவாதிகளின் ராஜிப் சே்சுக்கு லார்ட் ரெடிங் செவி சாய்ப்பது போல் நடித்ததின் நோக்கம் டிசம்பர் 24- கல்கத்தாவில் வேலை நிறுத்தம் நடைபெறக்கூடாது என்பது தான். அந்தச் சூழ்ச்சி பலிக்காமற் போயிற்று. எனவே அதற்குப் பிறகு லார்ட் ரெடிங்கும் ராஜிப் பேச்சுகளில் எவ்விதமான சிரத்தையும் காட்டவில்லை.

ஆனால், பாவம், பண்டித மாளவியாஜியின் சபலம் இன்னும் அவரை விட்டபாடில்லை. ஆமதாபாத் காங்கிரஸுக்குச் சென்று அங்கேயும் ராஜி யோசனை மூட்டையை அவிழ்த்தார். பிற்பாடு 1922-ஆம் வருஷம் ஜனவரி மாதத்தின் மத்தியில் பம்பாயில் மித வாதிகள் ராஜிப்பேச்சு மகாநாட்டைக் கூட்டினார்கள். இவற்றைக் குறித்துப் பின்னால் பார்க்கலாம்.

ராஜி முயற்சிகள் என்னும் லார்ட் ரெடிங்கின் இராஜ தந்திர சூழ்ச்சிப் படலம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், ஆமதாபாத் காங்கிரஸுக்கு மகத்தான ஏற்பாடுகள் மற்றொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன. மேற்கூறிய ராஜி முயற்சிகளைப் பற்றித் தேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலோருக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுடைய கவனமெல்லாம் ஆமதாபாத்தில் கூடும் காங்கிரஸ் மகாசபையில் என்ன முடிவுகள் ஆகப் போகின்றனவோ என்பதிலேயே சென்றிருந்தது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆமதாபாத்தை நோக்கிப் பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரயிலேறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் ராஜி முயற்சிகளைப் பற்றிச் சில செய்திகள் அரைகுறையாகக் கிடைத்தன. ஆனால் பிரதிநிதிகள் யாருமே ராஜிப் பேச்சை அச்சமயத்தில் விரும்பவில்லை. வங்காளத்திலிருந்து சென்ற பிரதிநிதிகள் கூட விரும்பவில்லை.

இதை, வங்காளத்தின் பெயரால் மகாத்மாவுக்குத் தந்தி அனுப்பிய ஸ்ரீ சியாம்சுந்தர் சக்கரவர்த்தியே பின்னால் ஒப்புக் கொண்டார். 1923-ஆம் வருஷத்தில் மேற்படி கல்கத்தா ராஜி முயற்சி பற்றி ஒரு விவாதம் பத்திரிகைகளில் எழுந்தது. மகாத்மா காட்டிய பிடிவாதத்தினாலேயே காரியம் கெட்டுப் போய்விட்டது என்றும், இல்லாவிடில் அப்போதே வெற்றி கிட்டியிருக்கும் என்றும் சிலர் சொன்னார்கள். பத்திரிகைகளில் இதைப்பற்றிக் காரசாரமாக விவாதம் நடந்தபோது ஸ்ரீ சியாம் சுந்தர சக்கரவர்த்தி 1923 ஜூன் 19-ஆம் தேதி வெளியான தமது "ஸர்வெண்ட்" பத்திரிகையில் "என்னுடைய பலவீனத்தை ஒப்புக்கொள்கிறேன்" என்ற தலைப்புக் கொடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் 1921-ஆம் வருஷக் கடைசியில் நடந்த சதுரங்கப் போராட்டத்தைப் பற்றி விவரமாக எழுதி, அதில் தம்முடைய பங்கு என்ன என்பதையும் சொல்லியிருந்தார். இந்தச் சதுரங்கத்தின் முக்கிய ஆட்டக்காரர்கள் லார்டு ரெடிங், காந்திஜி, பண்டித மாளவியா, தேசபந்து தாஸ் ஆகியவர்கள் அல்லவா?

ஸ்ரீ சியாம் சுந்தர் சக்கரவர்த்தி இது சம்பந்தமாக எழுதியதாவது:-

"நான் பண்டித மாளவியாவுடன் ராஜதானி சிறைச் சாலையின் வாசல் வரையில் சென்றேன். மாளவியா உள்ளே போனார். அங்கே தேச பந்து தாஸுடன் மாளவியாவும் தாஸின் குடும்பத்தார் சிலரும் இருந்தார்கள். மகாத்மாவின் தந்தியைக் குறித்துத் தாஸ் மிகவும் கலக்கமடைந்திருந்தார். எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தாலன்றி ராஜி செய்து கொள்வது உசிதமல்ல வென்று என் அபிப்பிராயத்தைத் தெரிவித்தேன். மாளவியா மறுபடியும் போய் லார்ட் ரெடிங்கைப் பார்த்துவிட்டு வந்தார். மகாத்மாவின் தந்தி லார்ட் ரெடிங்குக்குக் கோபமூட்டி யிருப்பதாகவும் 'பத்வா' கைதிகள் விஷயமான பேச்சை எடுக்கவே லார்ட் ரெடிங் விடவில்லை யென்றும் மாளவியா தெரிவித்தார். மாளவியாவும் தாஸும் எவ்வளவு மனவருத்தம் அடைந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்த நான் என்னுடைய பொறுப்பில் மகாத்மா காந்திக்கு ஒரு தந்திச் செய்தி அனுப்புவதாகச் சொன்னேன்! தேசபந்து தாஸ் இச்சமயம் ஒரு ராஜி செய்து கொள்வதை முக்கியமாய்க் கருதுவதால் மகாத்மா புனராலோசனை செய்ய வேண்டும் என்று தந்தி அடிப்பதாய்ச் சொன்னேன். அதற்கு ஸ்ரீ தாஸ் 'என் பெயரைச் சொல்ல வேண்டாம். வங்காளத்தின் அபிப்பிராயம் இது என்பதாகத் தந்தி அடியுங்கள்' என்றார். இது வங்காளத்தின் அபிப்பிராயம் அல்ல வென்றும் உண்மை எனக்குத் தெரிந்துதானிருந்தது. ஏனெனில் ஆமதாபாத் காங்கிரஸுக்குப் போகும் வழியில் கல்கத்தாவுக்கு வந்திருந்த வங்க மாகாண காங்கிரஸ் பிரதிநிதிகள் என்னைப் பார்த்துப் பேசினார்கள். இந்த நிலைமையில் ராஜிப் பேச்சை அவர்கள் விரும்பவில்லை. அரசியல் கைதிகளில் சிலரைச் சிறையில் விட்டு விட்டு மற்றவர்களின் விடுதலைக் கோருவதையும் அவர்கள் விரும்ப வில்லை. இது நன்றாகத் தெரிந்திருந்தும் தேச பந்து தாஸின் வார்த்தையைத் தட்ட முடியாமல் நான் காந்திஜிக்குத் தந்தியடித்தேன். நான் என்ன தந்தி கொடுத்தாலும் காந்திஜி எது சரியோ அதைத்தான் செய்வார் என்ற நம்பிக்கை என் மனதிற்குள் இருந்தது. ......"

இவ்விதம் ஸ்ரீ சியாம்சுந்தர் சக்கரவர்த்தி 1923-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுதினார். மகாத்மாவிடம் ஸ்ரீ சக்கரவர்த்தியின் நம்பிக்கை வீணாகவில்லை. அவருடைய தந்திக்குப் பிறகும் மகாத்மா தம் கொள்கையிலிருந்து நகரவில்லை.

வங்காளப் பிரதிநிதிகளைப் பற்றி ஸ்ரீ சியாம் சுந்தர சக்கரவர்த்தி கூறியிருப்பது மற்ற மாகாணங்களின் பிரதிநிதிகளின் விஷயத்திலும் உண்மையாக இருந்தது. யாரும் அவசரப்பட்டு ராஜி செய்து கொள்ள விரும்பவில்லை. அதோடு காங்கிரஸ் பிரதிநிதிகள் மிகப் பெரும்பாலோர் மகாத்மாவின் தலைமையில் பரிபூரண நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர் காட்டும் வழியைப் பின்பற்றவும் அவர் சொல்லும் திட்டத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் ஒப்புக் கொள்ளவும் நாடெங்குமுள்ள காங்கிரஸ் வாதிகளுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தது என்று ஆமதாபாத் காங்கிரஸில் நன்கு வெளி யாயிற்று.
ஃ ஃ ஃ

ஆமதாபாத் காங்கிரஸ் பல அம்சங்களில் மிகச் சிறப்புக் கொண்டதாகும். புதிய காங்கிரஸ் அமைப்பின்படி நடந்த முதலாவது காங்கிரஸ் அதுதான். முன்னேயெல்லாம் யார் வேணுமானாலும் வரையறையின்றிக் காங்கிரஸ் பிரதிநிதிகளாக வந்துவிடலாம். ஆனால் புது அமைப்பின்படி தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளே ஆமதாபாத் காங்கிரஸுக்கு வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் ஒத்துழையாமை இயக்கத்துக்காக மகத்தான தியாகங்களைச் செய்த தேச பக்தர்கள். பிரதிநிதிகள் ஆறாயிரம் என்று வரையறுக்கப்பட்ட படியால் காரியங்களை நடத்துவது இலகுவா யிருந்தது. அதே சமயத்தில் லட்சக் கணக்கான பார்வையாளர்கள் வந்து நடவடிக்கைகளைக் கவனிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது.

ஆமதாபாத் மகாத்மாவின் சொந்த ஊர். சத்தியாக்கிரஹ ஆசிரமம் இருந்த சபர்மதி நதிக்கரையிலேதான் காங்கிரஸும் நடந்தது. மகாத்மாவின் செல்வாக்கு இணையற்றிருந்த காலம் ஆகையால் கங்குகரை யில்லாத உற்சாகத்துடனே காங்கிரஸ் ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் மகாத்மா காந்தியின் விருப்பத்தின்படி நடைபெற்று வந்தன.

நாகபுரி காங்கிரஸில் நாற்காலிகளுக்காக மட்டும் 70000 ரூபாய் செலவாயிற்று. ஆமதாபாத்தில் பிரதிநிதிகளும் பார்வையாளரும் தரையிலேயே உட்கார வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. காங்கிரஸ் பந்தல், பிரதிநிதிகளின் ஜாகைகள் எல்லாவற்றுக்கும் மேற்கூரைக்குக் கதர்த்துணி உபயோகிக்கப் பட்டது.

காங்கிரஸ் பிரதிநிதிகள் தங்கும் விடுதிக்குக் “காதிநகர்” என்று பெயர் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் தனித் தனிப் பகுதிகள் விடப்பட்டன. காதி நகரின் மத்தியில் காந்திஜியின் ஜாகை அமைக்கப்பட்டது.

ராஜிப் பேச்சு சம்பந்தம்மான தந்திப்போக்குவரவுக்கிடையே டிசம்பர் 22-ஆம் தேதி மகாத்மாகாந்தி சபர்மதி ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டுக் காதி நகரில் தம் ஜாகைக்கு வந்து சேர்ந்தார். காங்கிரஸ் ஏற்பாடுகளை நேர்முகமாய்க் கவனிப்பதற்கும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கலந்து பேசுவதற்கும் சௌகரியமா யிருக்கும் என்று தான் காதி நகருக்கு மகாத்மா காந்தி தம்முடைய ஜாகையை மாற்றிக் கொண்டார்.

22-ஆம் தேதியிலிருந்தே காதி நகரில் ஜனக்கூட்டம் நிறைய ஆரம்பித்தது. இரண்டு மூன்று நாட்களுக்குள் பிரதிநிதிகளும் பார்வையாளரும் தொண்டர்களுமாகக் காதி நகரில் ஒரு லட்சம் பேர் சேர்ந்து விட்டார்கள்.

கிலாபாத் மகாநாடும் அதே இடத்தில் நடந்தபடியால் அதற்கு வேண்டிய ஜாகை வசதிகளும் செய்யப்பட்டன. காதி நகரைக் காட்ட்டிலும் அதிக அலங்காரமாகவே கிலாபத் நகர் அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் மகாசபைக்கு அந்த வருஷம் தலைவராகத் தேர்ந் தெடுத்திருந்த தேசபந்துதாஸ் சிறை புகுந்து விட்டார். அவருக்குப் பதிலாக, கிலாபாத் மகாநாட்டின் தலைவர் ஹக்கிம் அஜ்மல்கானே காங்கிரஸுக்கும் தலைமை வகித்தார். அந்த நாளில் ஏற்பட்டிருந்த ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக் காட்ட இதைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

ஆமதாபாத் காங்கிரஸ் நடந்த வாரத்தில் காதி நகரிலும் கிலாபத் நகரிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. தேசத்தில் சுதந்திரம் இன்னும் ஒரு லட்சியமாகவே இருந்தது. ஆனால் சீக்கிரத்தில் அடையப் போகும் இலட்சியமாகக் காட்சி தந்தது. ஆகையினால் அதன் மகிமை பிரமாதமாயிருந்தது. ஒவ்வொரு மாகாணப் பிரதிநிதிகளும் இறங்கி யிருந்த பகுதியிலிருந்து காலையில் 'பிரபாத் பேரி' என்னும் காலை பஜனை கோஷ்டி கிளம்பியது. ஒவ்வொரு கோஷ்டியாரும் தத்தம் தாய் மொழியில் தேசீய கீதங்களைப் பாடிக்கொண்டு காதி நகர் முழுவதிலும் வலம் வந்தார்கள். பஞ்சாப், சிந்து, அஸ்ஸாம், ஐக்கிய மாகாணம், குஜராத், மகாராஷ்டிரம், பீஹார், ஒரிஸ்ஸா, ஆந்திரா, தமிழ், மலையாளம், கொங்கணம் ஆகிய மாகாணப் பிரதிநிதிகளின் பஜனை கோஷ்டிகள் பாடிக் கொண்டு சென்ற போது, "இது குஜராத் கோஷ்டி" "இது ஆந்திரா கோஷ்டி" என்று மற்ற மாகாணத்தவர் பேசிக் கொண்டார்கள். செந் தமிழ் நாட்டில் பாரதியார் என்னும் கவி தெய்வீகமான தீர்க்க தரிசனம் வாய்ந்த தேசீய கவிதைகளைப் பாடியிருக்கிறார் என்பது அப்போதுதான் சில வட இந்தியர்களுக்குத் தெரிய வந்தது. மற்ற மாகாணத்தார் இசையோடு அமைதியான தேசீய கீதங்களை பாட, தமிழ் நாட்டான் மட்டும் ஆவேச வெறியோடு பாரதி கீதங்களைப் பாடிப் போவதைப் பார்த்து மற்ற மாகாணத்தார் நின்று கவனித்தனர்.

இப்படிக் காங்கிரஸ் பிரதிநிதிகள், சிதம்பரத்தின் கோபுரத்தைக் கண்டு களிப்படைந்த நந்தனைப்போல் ஆனந்த வெறி கொண்டிருக்கையில், மகாத்மாவின் விடுதியில் முக்கிய ஆலோசனைகளும் விவாதங்களும் நடந்து வந்தன. ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் வந்த முக்கியப் பிரதிநிதிகளிடமிருந்து அந்தந்த மாகாணத்தில் நடந்த அடக்குமுறைகளைப் பற்றியும் காங்கிரஸ் வேலைத் திட்டங்களைப் பற்றியும் காந்திஜி விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

இதைத் தவிர இன்னும் இரண்டு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
1. பண்டித மதன்மோகன் மாளவியாவின் ராஜிப் பிரேரணைகள்.
2. மௌலானா ஹசரத் மோகினி காங்கிரஸ் இலட்சியத்தைப் 'பரிபூரண சுதந்திரம்' என்று மாற்றுவதற்குக் கொண்டு வர விரும்பிய பிரேரணை.

பண்டித மாளவியாவுக்கு இன்னும் சபலம் விடாமல், ராஜிப் பிரேரணைகளை ஆமதாபாத்திலும் கிளப்புவதற்கு வந்திருந்தார். லார்ட் ரெடிங்கின் போக்கு எப்படியிருந்தாலும் காங்கிரஸ் ராஜிக்குத் தயார் என்பதைத் தெரிவித்துவிட வேண்டும் என்று அவர் சொன்னார்.

விஷயாலோசனைக் கமிட்டியில் பண்டித மாளவியாவுக்குப் பேச இடம் கொடுக்கப்பட்டது. பண்டித மாளவியா எப்போதும் வெகு நீளமாகப் பேசுகிறவர். அதிலும் இந்தச் சந்தர்ப்பத்தில் தம்முடைய கட்சியை மிகவும் சாங்கோபாங்கமாக அவர் எடுத்துச்சொன்னார். அவரை ஸ்ரீ ஜெயகரும் ஜனாப் ஜின்னாவும் மட்டும் ஆதரித்தார்கள். மகாத்மாவோ பண்டித மாளவியாவிடம் தமது மரியாதையைத் தெரிவித்துவிட்டு, அவருடைய வாதங்களுக்குப் பதிலாக, ராஜிப் பேச்சு சம்பந்தமான தந்திப் போக்குவரவுகளை மட்டும் படித்தார். விஷயாலோசனைக் கமிட்டியார் ஏறக்குறைய ஒருமுகமாக மகாத்மா அனுசரித்த முறையே சரியானது என்று ஒப்பம் வைத்தார்கள்.

இதற்கிடையி்ல் பண்டித மோதிலால் நேரு, லாலா லஜபதிராய் ஆகியவர்களிடமிருந்து சிறைக்குள்ளேயிருந்து கடிதம் வந்தது. "நாங்கள் சிறையில் இருப்பதை முன்னிட்டு நீங்கள் ராஜிப் பேச்சுக்கு இணங்கவேண்டாம். போராட்டத்தை இறுதிவரை நடத்தியே தீரவேண்டும்" என்று அவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆகக்கூடி மகாத்மா அனுசரித்த முறைக்குக் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் பரிபூரண ஆதரவு கிடைத்தது.

இன்னொரு பக்கத்தில் மௌலானா ஹஸரத் மோகினி என்னும் முஸ்லிம் மதத் தலைவர் காங்கிரஸ் திட்டத்தை இன்னும் தீவிரமாக்க விரும்பினார். "பிரிட்டிஷ் சம்பந்தமே அற்ற சுதந்திரமே காங்கிரஸ் இலட்சியம்" என்று மாற்ற மௌலானா ஹஸரத் மோகினி பிரேரணை கொண்டுவந்தார்.

இதைப்பற்றி மகாத்மா கடுமையாகவே பேசினார். இதைக்கொண்டு வந்தவரும் இதை ஆதரிப்பவர்களும் பொறுப்பற்றவர்கள் என்றார். "பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இந்தியா சமஉரிமையும் சுயராஜ்யமும் பெற்றால் அதன் விளைவு என்ன? இந்தியாவின் ஜனத்தொகைதானே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் அதிகம்? பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே நாம் ஆட்டி வைக்கலாமே?" என்று சொன்னார். எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதைவிட்டு, இலட்சியத்தை மேலும் தீவிரமாக்கிக்கொண்டு போவதில் பயனில்லை, என்பது மகாத்மாவின் கருத்து.

தேசபந்து தாஸ் சிறைப்பட்டிருந்தபடியால் அவரது தலைமைப் பிரசங்கத்தை ஸ்ரீமதி சரோஜினி தேவி வாசித்தார். ராஜிப் பேச்சு ஆரம்பிக்கும் முன்னாலேயே தேசபந்து எழுதிய பிரசங்கமாதலால் அதில் ஆவேசம் நிறைந்திருந்தது. ஸ்ரீமதி சரோஜினிதேவி வாசித்த முறையினால் அது மேலும் மகிமை அடைந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேசபந்துதாஸ்; அவருக்குப் பதிலாக அக்கிராசனம் வகித்தவர் ஹக்கிம் அஜ்மல்கான். ஆனால் உண்மையாக ஆமதாபாத் காங்கிரசின் தலைவராக விளங்கியவர் காந்திஜிதான். அவரைச் சுற்றியே எல்லாம் சுழன்று கொண்டிருந்தன. அவருடைய ஜாகையிலேதான் முக்கியமான யோசனைகள் எல்லாம் நடந்தன. அவர் வாக்கை வேதவாக்காகக் கருதி மற்றப் பிரதிநிதிகள் பக்தியுடன் ஒப்புக் கொண்டார்கள்.

இதற்கு முன்னெல்லாம் காங்கிரஸ் மகாசபைகளில் முப்பத்திரண்டு, நாற்பத்தெட்டு என்று தீர்மானங்கள் நிறைவேறுவதுண்டு. ஆனால் ஆமதாபாத் காங்கிரஸில் ஒன்பது தீர்மானங்கள்தான் நிறைவேறின. அவற்றிலும் இரண்டுதான் மிக முக்கியமானவை.

ஒரு முக்கிய தீர்மானத்தில் இந்தியாவுக்குச் செய்யப்பட்ட அநீதிகளையும் அவற்றை நிவர்த்திக்க ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த அவசியத்தையும் சொல்லியிருந்தது. தொண்டர்களின் அமைதியான நடவடிக்கைகளைப் பிரிட்டிஷ சர்க்கார் அடக்குவதற்காகக் கையாண்ட அடக்குமுறைப் பாணங்களைக் கண்டித்தது. குடிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காகப் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் தொடுத்துள்ள அடக்குமுறைச் சட்டங்களை மீறுவது தர்மம் என்றும், இதற்காகத் தொண்டர் படை அமைப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டது. தொண்டர்கள் கையெழுத்திட வேண்டிய வாக்குறுதிகளையும் வகுத்தது. மனோ வாக்கு காயங்களினால் அஹிம்சையை அனுசரிக்கவேண்டும் என்னும் நிபந்தனையில் மனதை எடுத்து விடவேண்டும் என்று சில கிலாபத் தலைவர்கள் முயன்றார்கள். இதை மகாத்மா ஒப்புக்கொள்ளவில்லை; மற்றப் பிரதிநிதிகளும் ஒப்புக்கொள்ளவில்லை.

அடுத்த முக்கிய தீர்மானம் ஒத்துழையாமை. சட்டமறுப்பு இயக்கங்களை நடத்துவதற்கு மகாத்மாவைச் சர்வாதிகாரியாக நியமித்ததாகும். சர்க்கார் அடக்குமுறைக் காரணமாகக் காரியக் கமிட்டியையோ அகில இந்திய கமிட்டியையோ கூட்டுவது அசாத்தியமாகலாம். எனவே அந்த ஸ்தாபனங்களின் அதி காரங்கள் எல்லாம் மகாத்மா விடமே ஒப்படைக்கப்பட்டது. மகாத்மாவையும் சர்க்கார் கைது செய்தால் தம்முடைய ஸ்தானத்தில் இன்னொருவரைச் சர்வாதிகாரியாக நியமிக்கும் அதிகாரத்தையும் மகாத்மாவுக்குக் காங்கிரஸ் கொடுத்தது.

முதலாவது முக்கிய தீர்மானத்தைப் பிரேரித்தபோது மகாத்மா பேசிய பேச்சு, பிரதிநிதிகள் – பார்வையாளரிடையே ஆவேசத்தை உண்டு பண்ணியது. மொத்தத்தில், ஆமதாபாத் காங்கிரஸின்போது தேசீய இயக்கத்தின் உற்சாகம் இமயமலையின் சிகரத்தையொத்து உயர்ந்திருந்தது. அடுத்த 1922 - ஆம் வருஷம் பிப்ரவரியில் அந்த உற்சாகம் பாதாளத்துக்கே போய்விட்டது!
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

1139. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 9

என் வாழ்க்கையின் அம்சங்கள் -5
வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி 

’சுதேசமித்திர’னில்  1941-இல் வந்த மேலும் இரு கட்டுரைகள். கனடா நாடும் இக்கட்டுரைகளில் தலை காட்டுகிறது! 










[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி: சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

1138. பாக்கியம் ராமசாமி - 2

அலங்காநல்லூர் அப்புசாமி
பாக்கியம் ராமசாமி





"கொம்பைச் சீவறானா? எதுக்குடா, ரசம்?" பதறினார் அப்புசாமி.
ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந்தேகம் கேட்டான்.

"ஏன் தாத்தா, 'வீர'வுக்கு 'ற' வா? 'ர' வா?"

இலக்கணப் பிழை பற்றிக் கவலைப்படும் நிலையில் அப்போது அப்புசாமி இல்லை. இலக்கணம் பிழைக்கிறதோ இல்லையோ, தாம் உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்.

"கொம்பை ஏண்டா சீவறான்? அதைச் சொல் முதலில்."

ரசகுண்டு கையிலிருந்த பெயிண்ட்டிங் பிரஷ்ஷைத் தூக்கி எறிந்துவிட்டுக் கோபத்துடன் அவரருகே வந்தான். "வேலை செய்ய விடமாட்டீங்களே. உயிரோடிருக்கிற மாட்டுக் கொம்பை ஒருத்தன் எதற்குச் சீவுவான்? சீப்பு செய்யறதுக்காகவா சீவுவான்? மாட்டைப் பிடிக்கிற உங்கள் குடலைக் குத்தி உருவறதுக்குத்தான் சீவறான்."

அப்புசாமிக்கு அப்போதே உருவு மயக்கமாகி விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "ஏண்டா ரசம். போட்டியிலிருந்து வாபஸ் வாங்க ஏதாவது வழியில்லையாடா? கொஞ்சம் யோசனை பண்ணுடா." என்று கெஞ்சினார்.

"வாபஸா?" அதிர்ச்சியடைந்தான் ரசகுண்டு. "விடிந்தால் வீரப் போட்டி. இனிமேல் 'செய் அல்லது செத்து மடி'தான் தாத்தா. நீங்க மாட்டைப் பிடித்துத்தான் ஆகணும். நான் தட்டியெல்லாம் எழுதியாச்சு. நீங்கதான் கரிமாட்டுக் கருவாயன்!"

அப்புசாமி அவசரமாகவும் ரோஷமாகவும் வாயைத் துடைத்துக் கொண்டார். "நான் ஏண்டா கரிமேட்டுக் கருவாயன்?"

"கரிமேட்டு இல்லே தாத்தா. கரிமாட்டுக் கருவாயன். கறுப்பான மாட்டைப் பிடிக்கப் போறீங்களில்லையா? அதுக்காக வீரப் பட்டம்!"

தான் எழுதிய விளம்பரத் தட்டியை அப்புசாமியின் முன் காட்டினான்.
'சென்னையில் ஓர் அலங்காநல்லூர்!'


'வீர விளையாட்டு!'
'கரிமாட்டுக் கருவாயன்!'
'வீரர் அப்புசாமி விடும் சவால்!!'
'நமது பேட்டையின் திமிர் பிடித்த காளையின் கொட்டத்தை அடக்கப் போகிறார்!'
'இன்றே கண்டுகளியுங்கள்!'
அப்புசாமிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. "ஆமாண்டா, ரசம். இன்றே கண்டு களிக்கட்டும்! நாளைக்குன்னா செத்துப் போயிடுவேனில்லையா?"

தெருவில் பயங்கரமானதொரு செருமல் சத்தம் கேட்டது.
அப்புசாமி கலவரத்துடன், "என்னடா ரசம் சத்தம்?" என்றார். "போபால் காஸா?"
"போபால் காஸுமில்லை, நேப்பால் காஸுமில்லை. பொட்டுவோட பொலி காளைதான் செருமுது!" என்று வாசலுக்கு ஓடி, எட்டிப் பார்த்துவிட்டு வந்தான்.
"பொட்டுவோட பொலி காளையேதான். காலைக் காலை மண்ணில் அடிச்சுக்கிட்டுச் செருமுது! நீங்களும் ஒரு எதிர்ச் செருமல் கொடுங்க, தாத்தா! அப்பத்தான் அதுக்கு ஒரு பயம் இருக்கும்."

அப்புசாமியின் கலவரக் கண்கள் மேலும் சிலோன் ஆயின.
ரசகுண்டு அவரருகே வந்து, அவரது ஜிப்பாவுக்குள் கை விட்டு, அவர் மார்பைச் சந்தனம் தடவுவது போல நீவி விட்டான்.
"என்ன தாத்தா, டீசல் ஜெனரேட்டராட்டமா மார்பு டங்கணக்கான் டங்கணக்கான்னு அடிச்சுக்குது. நாளைக்குப் பொலி காளையோடு மோதி, எப்படித்தான் அதை மண்டியிட வைக்கப் போறீங்களோ? பாட்டி வேறு உங்களைப் பெரிசா நம்பிக்கிட்டிருக்காள். இந்தத் தெருவைப் பிடித்த பீடையை நீங்கள் விரட்டி அடித்துவிடப் போறீர்களாம்."
பெருமூச்சு விட்டார் அப்புசாமி. "அவள் நினைப்பாள்டா; நல்லா நினைப்பாள். நான் அல்லவா நாளைக்குச் சாகணும்!"

......சீதாப்பாட்டியின் தெருவில் பால்காரப் பொட்டு என்னும் புள்ளி இருந்து வந்தான். எல்லாக் கட்சிக் கொடிகளும் அவனுடைய மாட்டுக் கொட்டகையில் ஸீஸனுக்குத் தகுந்தபடி பறக்கும். காலைச் சாய்த்துச் சாய்த்து நடப்பான். அரசியலிலும் நல்ல சாய்கால் உள்ளவன்.
ஆகவே, அவன் வம்புக்கு யாரும் போவதில்லை. பால் வியாபாரத்தைத் தவிர, பொலி காளை விவகாரம் வைத்துக் கொண்டிருந்தான்.
பட்டப் பகலில் அந்தப் பொலி காளை செய்யும் கற்பழிப்பும் - அனுமதி பெற்ற கற்பழிப்பு - உடந்தையாக வில்லன்கள் கும்பல் போல் ஏழெட்டுச் சங்கிலி முருகன்கள், அந்தக் கற்பழிப்புக்குப் பலியாகும் பசு ஓடி விடாமல் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொள்ள, பசு பலாத்காரத்துக்கு உள்ளாகும்.
சில பசுக்கள்சில வேளைகளில் நாலு கால் பிராணியா, எட்டுக் கால் பிராணியா என்று குழப்புகிற அளவு கீழே தரையோடு தரையாகச் சட்னி மாதிரி பொலி காளையால் அழுத்தப்பட்ட பதிப்பாகி, எலும்பு முறிந்து குற்றுயிரும் குலையுயிருமாய் - புத்தூர் போய்க் காலைக் கட்டிக்கொண்டு வருவதும் உண்டு.


இந்த அசிங்கங்கள் தெருவில் வேண்டாமென்று சீதாப்பாட்டி பலதரம் பால்காரப் பொட்டுவைக் கூப்பிட்டு எச்சரித்துப் பார்த்தாள்.
அவன் அவளை மதிக்கிறவனாக இல்லை. நீலக் காட்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

அப்புறந்தான் அலங்காநல்லுர் விவகாரத்தில் அப்புசாமி மாட்டிக் கொண்டார்.

அப்புசாமியின் போதாத காலந்தான், அவர் அலங்காநல்லூர் போய்ச் சல்லிக்கட்டு பார்க்க ஆசைப்பட்டது.

"எவனெவனோ வெள்ளைக்காரன் எல்லாம் வந்து வேடிக்கை பார்க்கிறான். வீர விளையாட்டு வீர விளையாட்டுன்னு..."

”அலங்காநல்லூர் போகணுமா அலங்காநல்லூர்! நம்ம தெருவிலே நடக்கிறதே ஒரு நாஸ்ட்டி மெனஸ்! அப்ஸீனிடி டு த கோர். அந்தப் பால்காரப் பொட்டுவை ஓர் அதட்டல் போட்டு அவனுடைய ஸ்டட் புல்லை வேறு எங்காவது கொண்டு போகச் சொல்ல தில்
இல்லாதவருக்கு, அலங்காநல்லூர் என்ன கேடு?" என்றாள் சீதாப்பாட்டி சுடச்சுட.

அப்புசாமி அதே சுடச்சுட, "பொட்டு என்ன பொட்டு. அவனைப் பொளந்து வெச்சுடுவேன். காளை இன்னாம்மே காளை? இந்தப் பொலி காளையென்ன, இதனுடைய பாட்டன், முப்பாட்டன் காளையையெல்லாம் கீழே போட்டுப் பட்டுனு ஒரே மிறி மிறிச்சுக் காட்டறேன் பார்க்கறியா?" என்று கிரிகிரி காட்டினார்.

அவரது போதாத காலம், தெருப்பக்கம் அந்தச் சமயம் பார்த்துப் பால்காரப் பொட்டு போய்க் கொண்டிருந்தான். அவன் காதில் "பொலி காளை, பொட்டு" என்று விழுந்தவுடன் ஓசைப்படாமல் உள்ளே வந்து, அப்புசாமியும், சீதாப்பாட்டியும் பேசியது முழுவதையும் எந்தவித நவீன 'பக்கிங்' கருவிகளும் இல்லாமல், நேர் காது மூலமாகவே கேட்டுக் கொண்டுவிட்டான்.

"நீ ஆம்புளைன்னா, நம்ம பொலி காளை மேலே கையை வைச்சிப் பார்ரா!" என்று ஏக வசனத்தில் பேச, அப்புசாமி மனைவியின் முன்னிலையில் தம் மானம் போவதா என்று ஓர் அவசர புத்தியில், "பந்தயமடா! மைதானத்திலேயே வேணுமின்னா ஏற்பாடு செய்! உன் பொலி காளையைப் பிடிச்சுக் காட்டறேன்" என்று கூவினார்.
இதற்குள் தெருவில் அக்கம் பக்கத்தினர் வேறு கூடி, அப்புசாமியின் தைரியத்தைப் பாராட்டி, ஊக்கம் கொடுத்து அவரைப் பலிகடாவாக்கி விட்டார்கள்.

போட்டி தினம். சூரியன் வழக்கம் போலச் சரியாகக் கிழக்கே உதித்துவிட்டுத் தப்பான பிளாட்பாரத்துக்கு வந்துவிட்ட ரயில் மாதிரி திருதிருவென்று விழித்தது. நாம் ஒரு கால், லேட்டாக உதித்துத் தொலைத்து விட்டோமா? மாமூலாக நான் உதிக்கும் போது அப்புசாமி, கட்டிலில் துப்பட்டிக்குள் அல்லவா இருப்பார்? இன்றைக்குக் குளித்து ஈரம் சொட்டச் சொட்டக் கண்ணை மூடி ஏதோ சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாரே! வாய் என்னவோ முணுமுணுக்கிறதே!
சீதாப்பாட்டி நெற்றிக் குங்குமத்தை அழுத்தமாக வைத்துக்கொண்டு வெளியே வந்தாள். முணுமுணுத்துக் கொண்டிருந்த அப்புசாமியின் அருகில் ஓசைப்படாமல் வந்தாள். 'ஸ்பெஷலாக ஏதோ மந்த்ராஸ் சாண்ட் செய்கிறார் போலிருக்கிறது' என்று அவர் அருகே மதிப்புடன் நெருங்கினாள்.

அப்புசாமியின் உதடுகள் "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு... ஆறிலும் சாவு, நூறிலும் சாவு...." என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
ரசகுண்டு, "பெப்பர பெப்பர பெப்!" என்று பெரிய ஊதலை ஊதிக்கொண்டு வந்து சேர்ந்தான். "தாத்தா! இப்பவே சொல்லிட்டேன். அப்பப்போ கைக்கு மண்ணு தடவிக்கணும். பார்த்தீங்களா, இந்தச் சின்னச் சிமிழைக் கையிலே வெச்சுக்கங்க. இதிலேதான் நீங்க ஜெயிக்கிற ரகசியமே இருக்கு!"
அப்புசாமி ஆவலுடன் கண்ணைத் திறந்தார். "ஏண்டா ரசம்! ஏதாவது வசிய மையா? பொலிகாளை தானாக வந்து என் முன்னாலே மண்டியிட்டுடுமா?"
"தாத்தா! இந்தச் சிமிழ்லே இருக்கிறது மந்திரக் களிம்பு இல்லை. ரோஜனம் தெரியுமா, ரோஜனம். அந்தப் பொடி. கைக்குத் தடவிக்கிட்டா நல்லா கிரிப் இருக்கும். குரங்குப்பிடி மாதிரி கப்புனு கொம்பைப் பிடிக்கிறீங்க. மளுக்! ஒரே திருப்பு. லெப்டுலேயோ, ரைட்டுலேயோ, லாரிக்காரன் ஸ்டியரிங்கை ஒடிக்கிற மாதிரி ஒரே ஒடி! மளுக்! மாடு காலி!"

அப்புசாமி ரோஜித்தவாறே ரோஜனத்தை வாங்கிக் கொண்டார். "அடியே சீதே! நான் மாட்டைப் பிடிச்சுத்தான் ஆகணுமா? நீ கற்புள்ள பொம்மனாட்டி தானே? ஏதாவது அவ்வையார் மாதிரி ஒரு பாட்டுப் பாடி மழை, புயல், குளிர் வரவழைக்க முடியுமா, பாருடி! கிரிக்கெட் மாட்ச்சின் போதெல்லாம் அந்தக் காலத்திலே நம்ம ஊர்ப் பத்தினிகள் மழை வரவழைச்சு எத்தனையோ ஆட்டத்தை டிரா பண்ணியிருக்காங்க!"
சீதாப்பாட்டி சிரித்தாள். "உங்கள் வீரத்தைக் காட்ட சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு யூ ஷுட் பி ஹாப்பி. ரசம், எத்தனை மணிக்குப்பா மைதானத்துக்கு மாடு வருது? நிறையப் பேர் மாட்டுக்கு மாலை போடுவாங்களில்லையா? என் சார்பாக ஒரு மாலை தர்றேன், போட்டுடுப்பா."

அப்புசாமி அலறினார். "சீதேய்! அடியே கியவி! நீ போடற மாலை மாட்டுக்கு இல்லேடி! என் மரணத்துக்கு!"
"ஆல் ரைட்! எனக்கு இன்னிக்கு வேலை இருந்தாலும் கட்டாயம் மைதானத்துக்கு வந்துடறேன். ஸீ யூ."
"சீதே... என்னை நீ ஸீ பண்ண முடியாதுடி. என் குடலைத்தான் நீள நீளமாய் மைதானம் பூரா வடாம் பிழிந்தது போல் பார்க்கலாம்."
.........மைதானம், கும்பல், குதூகலம் - அப்புசாமி நீங்கலாக.
ரசகுண்டு தேர்ந்தெடுத்த சில இசைத் தட்டுகளைப் போட்டுக் கொண்டிருந்தான்.

கண்டசாலா பாடிக்கொண்டிருந்தார்.
"துணிந்தபின் மனமே
துயரம் கொல்லாதே..."

அப்புசாமிக்கு அத்தனை படபடப்பிலும் ஆறுதலாக இருந்தது. 'கண்டசாலா நல்ல மனுஷன்! கொல்லாதே, கொல்லாதேன்னு அனுதாபமா பாடறார். ஆனால், அது அந்தப் பொலி காளைக்குப் புரியுமா? கொல்லாது விடுமா?'
திடீரென்று அவர் மூக்குக்கிட்டே ஓர் உஷ்ண வீச்சு!

பொட்டுவின் பொலிகாளை! அவருக்குச் சரியாக ஆறடி தூரத்தில்.
கழுத்து நிறைய மாலைகளைப் போட்டுக் கொண்டு, காலால் மைதானத்து மண்ணைக் குழி பறித்தவாறு, அவரைப் பார்த்து ஆயிரம் மில்லி அடித்துவிட்டு வந்ததைப் போலச் சிவப்பாக முறைத்தது.
பால்காரப் பொட்டு தன் கையிலிருந்த கயிற்றை எந்த நிமிஷத்திலும் விட்டு விடலாம். தாரை, தப்பட்டை, மைக், கை விசில், குலவை, டப்பாங்குத்து!
பால்காரப் பொட்டு அப்புசாமியைப் பார்த்து 'உய்ய்' என்று ஒரு விசில் அடித்தான். "யோவ்! வஸ்தாத்! வுடட்டுமாய்யா கயிற்றை!"
வாய் வார்த்தை வாயிலிருக்கும் போதே காளையின் கயிற்றை விட்டுவிட்டான்.

அப்புசாமி பழங்கால சந்திரபாவுவாக மாறி ஜகா வாங்குவதற்குள், காளை வேகமாக வந்து அவரை ஒரு மோதல்...
"ஆ! சீதே!" என்று அவர் அலறினதுதான் தெரியும். அதற்குள் இரண்டு மூன்று போலீஸ் ஜீப்புகள் மைதானத்துக்கு வேகமாக வந்தன.
அடுத்த நிமிடமே அவை பொலி காளையைச் சுற்றி வளைத்துக் கொண்டு, காளை எங்கேயும் ஓட முடியாமல் செய்துவிட்டன. ஜீப்பிலிருந்து இறங்கிய சிறிய போலீஸ் பட்டாளம், காளையின் கயிற்றைப் பிடித்து, அதை அருகிலிருந்த மரத்தில் கொண்டு கட்டியது. சில நிமிஷங்களில் பால்காரப் பொட்டு கை கட்டிக்கொண்டு வினயமாக வந்து நின்றான்.

"தப்பு அவர் மேலதாங்க. அவர் தானுங்க சவால் விட்டார். டீ சாப்பிடறீங்களா? போர்ன்விடாவா?" என்றான் போலீஸ் அதிகாரியிடம் - சத்யராஜ் பாணியில்.

போலீஸ் அதிகாரி சொன்னார். "நாங்கள் இப்போது வந்தது, நீங்க ஏன் இங்கே ஜல்லிக்கட்டு நடத்தினீங்க என்பதை விசாரிக்கிறதுக்கு அல்ல. அதற்குத்தான் நீங்க ஏற்கனவே பர்மிஷன் வாங்கியிருக்கீங்களே. வைரக் கம்மல் திருட்டு விஷயமா விசாரிக்க வந்திருக்கிறோம். உன் பொலி காளை கழுத்திலேயிருக்கிற மாலைகளையெல்லாம் நீயே கழற்று! நீ நிரபராதின்னா உன்னை விட்டுடிறோம். இல்லேன்னா... உன்னையும் உன் பொலி காளையையும் அரெஸ்ட் பண்ணறதைத் தவிர வேறு வழியில்லை."
"சார், மில்லி கில்லி அடிச்சீட்டு வந்தீங்களா...?"

உதட்டில் ஒரு தட்டுத் தட்டினார் போலீஸ்காரர். "இது சினிமா போலீஸ் அல்ல, அசல் போலீஸ். கழற்றுப்பா முதலிலே மாலைங்களை."
பால்காரப் பொட்டு, ஆயுளில் முதல் தடவையாகச் சற்றே பயத்துடன், தன் காலையின் கழுத்தில் பலரும் போட்ட மாலைகளைக் கழற்றினான். ஒரு குறிப்பிட்ட மாலையில் சிறிய துணி முடிச்சு!
இன்ஸ்பெக்டர் அதை எடுத்துப் பிரித்தார். ஒரு ஜோடி வைரத் தோடுகள் பளபளத்தன.

"சார்! சார்! எனக்கு ஒண்ணும் தெரியாது, சார்!"
......அப்புசாமி கால் கை கட்டுடன் படுத்திருந்தார். "சீதே! உன்னை நான் புரிஞ்சுக்காத முட்டாள்! பொலி காளை மாட்டுக்கு நீயும் மாலை போடப் போறேன்னதும் எனக்கு உன் மேலே எவ்வளவு ஆத்திரம் வந்தது தெரியுமா?" என்றார்.

"உங்கள் ஆத்திரம் நியாயமான ஆத்திரந்தான். நான் மாலைக்குள் என் வைரத் தோட்டை வைத்து, அதை மாட்டுக் கழுத்திலே போட்டுப் பால்காரப் பொட்டுவை மாட்ட வைப்பேன் என்பதை, புவர் மேன், நீங்கள் எப்படி ஊகித்திருப்பீர்கள்? ஆனாலும், நான் கொஞ்சம் ஓவராகவே ரிஸ்க் எடுத்துக் கொண்டுவிட்டேன். சப்போஸ், போலீஸ் மட்டும் காளையை ரவுண்டப் பண்ண இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தால் என் நெற்றிப் பொட்டு கதி என்னாயிருக்கும்?"

அப்புசாமி அலுத்துக் கொண்டார். "உன் நெற்றிப் பொட்டுதான் உனக்குப் பெரிசு! என் குடல் என்னாயிருக்கும்னு கவலைப்படறியா?"
- முற்றும்
------------
[ நன்றி:  appusami.com  ]

தொடர்புள்ள பதிவுகள்:
பாக்கியம் ராமசாமி

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

1137. பாடலும் படமும் - 42

இராமாயணம் - 14
யுத்த காண்டம், நாகபாசப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]

உழைக்கும்;   வெய்து   உயிர்க்கும்;   ஆவி   உருகும்;
                                  போய் உணர்வு சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான், ‘இலக்குவா! 
                                  இலக்குவா!’ என்று
அழைக்கும்;  தன்  கையை  வாயின்,  மூக்கின்  வைத்து
                                  அயர்க்கும்; ‘ஐயா!
பிழைத்தியோ!’ என்னும்-மெய்யே பிறந்தேயும் 
                                   பிறந்திலாதான்

[ மெய்யே     -  உண்மையாக; 
பிறந்தேயும்  பிறந்திலாதான்  - 
பிறந்திருந்தும்    வினை   வசத்தால்    பிறவாதவனாகிய    இராமன்;
உழைக்கும்  -  வருத்தப்படுவான்; 
வெய்து உயிர்க்கும் - பெரு மூச்சு விடுவான்;  
ஆவி  உருகும்  -  உயிர் உருகுவான்;  
உணர்வு போய் சோரும் -  அறிவு   நீங்கிச்  சோர்வான்;   
இழைக்குவது   அறிதல் தேற்றான் -  செய்வது  இன்னது  என்று  அறிந்து  தெளியாதவனாய்;
இலக்குவா,  இலக்குவா   என்று    அழைக்கும்  -  இலக்குவனே,
இலக்குவனே என்று பலமுறை  அழைப்பான்;  
தன் கையை  மூக்கின் வைத்து - (தனது) கையை (இலக்குவனது) மூக்கின் மேல் வைத்து (மூச்சு உளதா) (என்று பார்த்து); 
அயர்க்கும்  -  வருந்துவான்;  
ஐயா - ஐயா;
பிழைத்தியோ என்னும் - (நீ) பிழைப்பாயோ என்று கூறுவான்.]

  
தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்