சனி, 11 ஆகஸ்ட், 2018

1136. காந்தி -39

33. தாஸ் - ஆஸாத் தலையீடு
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( இரண்டாம் பாகம்)  என்ற நூலில் வந்த  33-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே இந்நூலில் உள்ளன ]
===

இந்தியாவின் சரித்திரத்திலேயே மிக முக்கியமான வருஷம் 1921-ஆம் வருஷம். அந்த வருஷத்திலேதான் இந்தியா தேசத்தில் இமயமலை முதல் கன்னியா குமரி வரையில் மக்கள் விழித்தெழுந்தனர். அன்னிய ஆட்சியை எதிர்த்து நிற்கத் துணிந்தனர். அந்தத் துணிச்சலை மக்களுக்கு உண்டாக்கிய ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நடத்தியவர் மகாத்மா காந்தி. அந்த வருஷத்தில் மகாத்மாவுக்கு அடுத்தபடியாக இந்திய மக்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்களுடைய போற்றுதலுக்கு உரியவராயிருந்த தலைவர் யார் என்று கேட்டால், வங்காளத்தின் முடிசூடா மன்னராக அப்போது விளங்கிய தேசபந்து சித்தரஞ்சனதாஸ் அவர்கள்தான். அவர் நெடுநாளைய தேசபக்தர். ஸ்ரீ அரவிந்த கோஷ் மீது புரட்சி இயக்க வழக்கு நடந்த போது அவர் பக்கம் ஆஜராகி வாதித்துப் புகழ் பெற்றவர். வருஷத்திற்கு ஆறு லட்சம் ரூபாய் வக்கீல் தொழிலில் அவருக்கு வருமானம் வந்தது என்பது தேசத்தில் பிரசித்தமாயிருந்தது. அப்படிப் பட்ட வருமானமுள்ள தொழிலை அவர் ஒத்துழையாமை இயக்கங் காரணமாகக் கைவிட்டார் என்பது இந்திய மக்களை ஆச்சரியக் கடலில் மூழ்க அடித்து, அவரிடம் எல்லையற்ற பக்தியையும் மதிப்பையும் அளித்திருந்தது. அத்தகைய மாபெருந் தியாகி அந்த வருஷத்தில் ஆமதாபாத்தில் நடப்பதற்கிருந்த காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசனராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். நாகபுரி காங்கிரஸுக்குப் பிறகு 1921-ஆம் வருஷம் முழுவதும் அவர் மகாத்மாவைப் பரிபூரணமாக ஆதரித்து நின்றார். இதனால் வங்காளம் ஒத்துழையாமை இயக்கத்தில் முதன்மை ஸ்தானம் வகித்தது. நெடுகிலும் அவருக்குப் பக்க பலமாக நின்று வேலை செய்த முஸ்லிம் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத். தேசபந்து தாஸ் வங்காள மாகாண காங்கிரஸுக்கும் மௌலானா ஆஸாத் வங்காள கிலாபத் கமிட்டிக்கும் தலைவர்களா யிருந்தார்கள்.

வேல்ஸ் இளவரசர் டிசம்பர் கடைசி வாரத்தில் கல்கத்தா வருவதாகத் தேதி குறிப்பிடப் பட்டிருந்தது. இளவரசர் சென்றிருந்த மற்ற இந்திய நகரங்களில் போலவே கல்கத்தாவிலும் மாபெரும் ஹர்த்தால் நடத்தும்படி காங்கிரஸ் – கிலாபத் ஸ்தாபனங்கள் ஏற்பாடுகள் செய்துவந்தன. இந்த நிலையில் வங்காள மாகாண சர்க்கார் தேசீயத் தொண்டர் படைகளைச் சட்ட விரோத ஸ்தாபனங்கள் என்று தெரியப்படுத்தினார்கள். இதற்காக 1906-ஆம் வருஸத்தில் பலாத்காரப் புரட்சி ஸ்தாபனங்களைப் கலைப்பதற்காகச் செய்யப்பட்ட 'கிரிமினல் லா அமெண்ட்மெண்ட் ஆக்ட்' என்னும் சட்டத்தை உபயோகப் படுத்தினார்கள். இளவரசர் விஜயம் செய்யும்போது ஹர்த்தால் நடப்பதைத் தடுக்கவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம்.

அந்த நோக்கத்தை அறிந்து, மேற்படி அநியாயச் சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்யக் காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தார்கள். ஒவ்வொரு நகரத்திலும் பிரபல காங்கிரஸ் தலைவர்கள் தங்களைத் தொண்டர் படையில் பதிவு செய்து கொண்டு அதை விளம்பரப் படுத்தினார்கள். பண்டித நேரு முதலியவர்கள் ஐக்கிய மாகாணத்தில் செய்ததுபோல் கல்கத்தாவில் தேசபந்துதாஸ், மௌலானா ஆஸாத் முதலியவர்கள் சட்டத்தை மீறினார்கள். அவர்கள் உடனே கைது செய்யப்பட்டார்கள். வங்காளிகள் உணர்ச்சி மிக்கவர்கள்; தேசீயப் போரில் எப்போதுமே முன்னணியில் நின்றவர்கள். தேசபந்து தாஸும் அவருடைய மனைவியும் சகோதரியும் கைது செய்யப்பட்ட போது வங்காளிகளின் மனோநிலை எப்படியிருக்கும் என்று கேட்கவேண்டுமா? ஒரே கொந்தளிப்புத்தான். ஆகவே நாட்டின் மற்ற எந்தப் பகுதியைக் காட்டிலும் அதிகமான தேசத் தொண்டர்கள் டிசம்பரில் சிறைப்பட்டார்கள்.

வருஷந்தோறும் டிசம்பர் கடைசியில் கவர்னர் ஜெனரல் பதவி வகிப்பவர் கல்கத்தாவுக்குச் சென்று அங்கு வசிக்கும் ஏராளமான ஐரோப்பியர்களின் மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி லார்டு ரெடிங் கல்கத்தா சென்றார். வேல்ஸ் இளவரசர் விஜயமும் அதே சமயத்தில் சேர்ந்து கொண்டது. கவர்னர் - ஜெனரல் லார்ட் ரெடிங்கும், வங்காள கவர்னர் லார்ட் ரொனால்ட்ஷேயும் காங்கிரஸ் தலைவர்களைத் தாக்கிப் பேசினார்கள். அந்தப் பேச்சில் ஒன்றில் தான் லார்ட் ரெடிங் "எனக்கு ஒன்றும் புரியவில்லை; என் மனம் குழம்புகிறது" என்றார். மொத்தத்தில் அவர்களுடைய பேச்சுக்களில் கவலை தொனித்தது. கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம் நடைபெறுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்ற ஆவலும் வெளிப்பட்டது.

இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலேதான் பண்டிதமாளவியா ராஜி பேசுவதற்காகக் கல்கத்தா சென்றார். அங்கே மூன்று முறை லார்ட் ரெடிங்கைப் பேட்டிகண்டு பேசினார். அந்தப் பேச்சுகளிலிருந்து ராஜிசெய்து வைக்க இடம் இருக்கிறது என்று கருதினார். மகாத்மாவிடமிருந்து பதில் இன்னும் வரவில்லை. பதில் வரும் வரையில் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. சிறைக்குள்ளேயிருந்த தேச பந்து தாஸ்- மௌலானா ஆஸாத் இவர்களைப் பார்த்துப் பேசுவதற்குச் சென்றார். ரெடிங்குடன் தாம் நடத்திய சம்பாஷணையைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தார். மாளவியாவின் மத்தியஸ்தப் பேச்சுக்கு அவர்கள் செவி கொடுத்தார்கள். ஒருவாறு அவருடைய கட்சியை ஒப்புக்கொண்டார்கள். "அப்படியானால், உங்கள் அபிப்பிராயத்தை மகாத்மாவுக்குத் தெரிவியுங்கள்" என்றார் மாளவியா. "சரி" என்றார்கள் தாஸும், ஆஸாதும். மகாத்மாவுக்கு ஒரு தந்திச் செய்தி எழுதினார்கள். அது வங்காள கவர்மெண்டின் அநுமதியடன் அவசர 'லைன்கிளியர்' தந்தியாக மகாத்மா காந்திக்கு அனுப்பப்பட்டது. அந்த அவசரத் தந்தியின் வாசகம் பின் வருமாறு:--

கல்கத்தா
19-12-29
பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தியானால் ஹர்த்தாலை வாபஸ் பெறலாம் என்று நாங்கள் சிபார்சு செய்கிறோம்:--

(1) காங்கிரஸ் எழுப்பியிருக்கும் எல்லாப் பிரச்னைகளையும் பற்றி ஆலோசிக்கச் சர்க்கார் மகாநாடு கூட்டவேண்டும்.
(2) சமீபத்தில் வெளியான சர்க்கார் அறிக்கையையும் போலீஸ் மாஜிஸ்ட்ரேட் உத்தரவுகளையும் வாபஸ் வாங்க வேண்டும்.
(3) புதிய சட்டத்தின் கீழ்ச் சிறைப்பட்ட எல்லாக் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

கல்கத்தா பிரஸிடென்ஸி ஜெயில் சூபரிண்டெண்டு மேற்பார்வைக்கு உடனே பதில் அனுப்புங்கள்.
சி. ஆர். தாஸ்
ஏ.கே. ஆஸாத்
மேற்கண்ட தந்தி மகாத்மாவைத் திடுக்கிடச் செய்து விட்டது.

மாளவியாவிடம் மகாத்மாவுக்கு மிக்க மதிப்பு உண்டு. தாஸ் - ஆஸாத் இவர்களிடம் மிக்க அபிமானம் உண்டு. ஆயினும் அவர்கள் மூவரும் லார்ட் ரெடிங்கின் மாய வார்த்தையில் ஏமாந்துபோய் விட்டார்கள் என்றே காந்திஜி கருதினார். காந்தி மகானுக்குச் சத்தியமே தெய்வம். அஹிம்சையே மதம். நேர்மையே உயிர். ஆயினும் அவர் அரசியலில் மகா நிபுணத்துவம் வாய்ந்தவர். சூழ்ச்சி செய்து அவரை ஏமாற்றி விட முடியாது.

தாஸ் - ஆஸாத் தந்தியில் உள்ள குறை என்ன என்பது மகாத்மாவுக்கு அதைப் படித்த உடனே தெரிந்துவிட்டது. ரெடிங் - ரோனால்ட்ஷே கூட்டத்துக்குத் திடீரென்று காங்கிரஸ் தலைவர்களிடம் அன்பு பிறந்துவிட வில்லை. வேல்ஸ் இளவரசர் பகிஷகாரத்தினால் அவர்கள் பெரிதும் சங்கடத்துக்கு உள்ளாகியிருந்தனர். அதிகார வர்க்கத்தின் மதிப்பே அதனால் போய்விடுவதாயிருந்தது. கல்கத்தா ஒரு நகரத்திலாவது பகிஷ்காரம் தடுக்கப்பட்டால் அவர்களுடைய மதிப்பு ஓரளவு காப்பாற்றப்படும்.

இதற்காக அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அந்தச் சூழ்ச்சியில் மாளவியா விழுந்தது மட்டுமல்ல; தாஸையும், ஆஸாதையும்கூட விழப்பண்ணிவிட்டார். வேல்ஸ் இளவரசர் விஜயத்தை முன்னிட்டே தொண்டர் படைகளைச் சட்டவிரோத ஸ்தாபனங்கள் என்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவை மீறிச் சட்ட மறுப்புச் செய்து காங்கிரஸ் தலைவர்கள் சிறை புகுந்தனர்.

பகிஷ்காரத்தைக் காங்கிரஸ் தலைவர்கள் வாபஸ் வாங்குவதாயிருந்தால், சர்க்கார் தொண்டர் படைகளை ஆட்சேபிக்க வேண்டிய அவசியமே இல்லை. தடை உத்தரவை வாபஸ் வாங்குவதில் அவர்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. இளவரசர் பகிஷ்காரத்தைத் தடுப்பது அவர்களுடைய முக்கிய நோக்கம். காங்கிரஸே பகிஷ்காரத்தை எடுத்துவிடும் பட்சத்தில் சர்க்காரின் நோக்கம் நிறைவேறி விடுகிறது. தடை உத்தரவுக்கு அவசியம் என்ன?

ஆகவே மாளவியாவின் ராஜியை ஒப்புக்கொண்டால் காங்கிரஸ்தான் விட்டுக் கொடுத்ததாகுமே தவிர, சர்க்கார் எந்த விதத்திலும் விட்டுக் கொடுத்தது ஆகாது.

வட்டமேஜை மகாநாடு கூட்டுவதாகச் சர்க்கார் ஒப்புக் கொள்வதைப் பற்றி எந்தவித நம்பிக்கையும் கொள்ளமுடிய வில்லை. வெறும் ஏமாற்றமாகவே முடியலாம். சர்க்கார் கூட்டும் வட்டமேஜையில் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலரையும் மிதவாதிகள் - அதிகார வர்க்க பக்தர்கள் பலரையும் அழைக்க லாம். அழைத்து "சட்ட மறுப்பைக் காங்கிரஸ் கைவிட வேண்டும்; சர்க்கார் கொடுக்கும் சீர்திருத்தங்களைப் பெற்றுத் திருப்பியடைய வேண்டும்" என்று ஒரு அத்தியாயம் உபதேசம் செய்து அனுப்பலாம். இதனால் தேசம் அடையும் நன்மை என்ன? இத்தனை நாளும் தேச மக்கள் செய்த தியாகமெல்லாம் வீண் போனது ஆகாதா?

எனவே, தாஸ் - ஆஸாத் யோசனையை மகாத்மாவினால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆயினும் அவர்கள் பேரில் மகாத்மாவுக்குப் பெருமதிப்பு இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றிக்கு அவர்கள் பெரிதும் காரணமானவர்கள். எனவே, "உங்கள் யோசனையை நிராகரிக்கிறேன்" என்று பதில் அனுப்பிவிட வில்லை. அவர்களுடைய நிபந்தனைகளோடு இன்னும் சில நிபந்தனைகளையும் சேர்க்க வேண்டும் என்று மகாத்மா காந்தி பதில் அனுப்பினார். அந்தப் பதில் தந்தியின் வாசகம் பின்வருமாறு:--

சபர்மதி
19-12-21
உங்கள் தந்தி கிடைத்தது. வட்டமேஜை மகாநாட்டின் தேதியும், மகாநாட்டுக்கு யார் யார் அழைக்கப்படுவார்கள் என்பதும் முதலிலேயே சொல்லப்பட வேண்டும். கராச்சி கைதிகள் உள்பட, 'பத்வா' கைதிகளையும் சர்க்கார் விடுதலை செய்யவேண்டும். உங்களுடைய நிபந்தனைகளோடு மேற்கண்ட நிபந்தனைகளும் நிறைவேற்றப் பட்டால் ஹர்த்தாலை வாபஸ் பெறலாம்.
எம். கே. காந்தி

இந்தத் தந்தியில் மகாத்மா காந்தியின் அரசியல் திறத்தோடு அவருடைய சிநேக தர்மத்தின் சிறப்பையும் நேயர்கள் காணலாம்.

மகாநாடு கூட்டும் தேதி, மகாநாட்டுக்கு யார் அழைக்கப்படுவார்கள் என்பதை லார்ட் ரெடிங் சொல்ல வேண்டி ஏற்பட்டால் அவருடைய நோக்கம் உண்மையானதுதானா என்பது தெரிந்துவிடும். பின்னால் சால்ஜாப்புகள் சொல்லி ஏமாற்ற முடியாது.

அடுத்தபடியாக, உண்மையில் காங்கிரஸின் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் லார்ட் ரெடிங்குக்கு இருக்குமானால், இப்போது கைதியானவர்களை மட்டும் விடுதலை செய்வது போதாது. ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த பிறகு சிறைப் பட்டவர்கள் எல்லாரையும் விடுதலை செய்யவேண்டும். முக்கியமாக, அலி சகோதரர்களை விடுதலைசெய்ய வேண்டும், என்று மகாத்மா வற்புறுத்தினார்.

'பத்வா கைதிகள்' என்பவர்கள் பிரிட்டிஷ் சைன்யத்திலிருந்து உண்மையான முஸ்லிம்கள் ராஜினாமாச் செய்ய வேண்டும் என்றும், சைன்ய சேவை செய்வது மதத்துரோகம் என்றும் அறிக்கை பிறப்பித்த முஸ்லிம் உலமாக்கள் மௌல்விகள் முதலியோர் இதே விதமான குற்றத்துக்காவே அலி சகோதரர்கள் முதலிய கராச்சி கைதிகளும் தண்டிக்கப் ட்டார்கள். அலி சகோதரர் முதலியோரை விட்டு விட்டு மற்றவர்களின் விடுதலையை மட்டும் கோருவதை மகாத்மா விரும்பவில்லை. அது சரியான அரசிய் முறையும் அல்ல, சிநேக தர்மத்துக்கு உகந்ததுமல்ல என்று கருதினார். லார்ட் ரெடிங்குக்கு உண்மையில் காங்கிரஸுடன் ராஜி செய்துகொள்ளும் எண்ணம் இருந்தால் அலி சகோதரர்களை விடுதலை செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்குச் சரியான பதில் வரவில்லை. சர்க்கார் சார்பில் லார்ட் ரெடிங்கும் சொல்லவில்லை; மத்தியஸ்தம் செய்ய முயன்றவர்களும் சொல்லவில்லை. ஆனால் எல்லாருக்கும் மகாத்மாவின் பேரில் கோபம் வந்தது! தேசபந்துவுக்குக்கூடப் பிரமாத கோபம் வந்தது! "நாம் சொன்னதை மகாத்மா காந்தி உடனே அப்படியே ஒத்துக்கொள்ள வில்லையே?" என்று ஆத்திரப்பட்டார். அப்பேர்ப்பட்ட மகா தியாகியான தேசத் தலைவருக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஏன் ஏற்பட்டன என்று யாரால் சொல்லமுடியும்?

ஸ்ரீ தாஸ் சிறைக்குள் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், வெளியிலே அவருடைய ஸ்தானத்தை வகித்து வந்த ஸ்ரீ சியாமசுந்தர சக்கரவர்த்தி என்னும் வங்கத்தலைவர் ஸ்ரீ தாஸைப் பேட்டி காணச் சென்றார். அவரிடம் தேசபந்து தம் மனோ நிலையை வெளியிட்டார். தேசபந்துதாஸ் அச்சமயம் வங்க நாட்டின் முடிசூடா மன்னராக விளங்கியவர். அவருடைய கருத்தை ஆதரிப்பது தம் கடமை யென்று ஸ்ரீ சியாமசுந்தர சக்கரவர்த்தி கருதினார். ஆகையால் பின்வரும் தந்தியை அவர் மகாத்மாவுக்குக் கொடுத்தார்.

கல்கத்தா
20-1-21
வங்காளத்தின் அபிப்பிராயம் வட்ட மேஜை மகாநாட்டின் மூலம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தைக் கைப்பற்றவேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஜனங்களின் சார்பாகப் போரை நிறுத்தி வைக்கிறோம் என்று உறுதி கொடுக்க வேண்டியது நியாயமேயாகும். நீங்கள் கோரும் கைதிகளின் விடுதலையை மகாநாடு கூடுவதற்கு முன்னால் எதிர்பார்க்கலாம். உடனே பதில் தெரிவிக்கவும்.
சியாமசுந்தர்.

இதே மாதிரி இதே தேதியில் பண்டித மாளவியாவும் மகாத்மாவுக்குத் தந்தி கொடுத்தார். "வட்ட மேஜை மகாநாடு பற்றிய விவரங்கள் முடிவானால் ஹர்த்தாலை வாபஸ் பெறவும் ஒத்துழையாமை நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவும் ஒப்புக் கொள்ளவேண்டும்; ஒப்புக்கொள்வதாக உங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டார்.

இதற்குள் கல்கத்தா வந்து சேர்ந்த ஜம்னாதாஸும் குன்ஸ்ரூவும், "மாளவியாவுக்கு நீங்கள் கொடுத்த தந்தியைப் பார்த்து எங்கள் இருதயம் உடைந்து போய்விட்டது! உங்களிடம் சம்பாஷித்ததிலிருந்து ராஜிப் பேச்சுக்கு நீங்கள் தயார் என்ற எண்ணத்துடன் திரும்பி வந்தோம். தயவு செய்து யோசியுங்கள்" என்று தந்தி அடித்தார்கள்.

மேற்கூறிய எல்லாத் தந்திகளுக்கும் ஏறக்குறைய ஒரே விதமாகவே மகாத்மா காந்தி பதில் அனுப்பினார்.

"வட்டமேஜை மகாநாட்டுக்கு நான் நிபந்தனையின்றி வரத் தயார். ஆனால் என்னிடத்திலும் நிபந்தனை எதுவும் கேட்கக் கூடாது. சர்க்காரின் அதிகாரத் துஷ்பிரயோகம் நின்றால் இப்போது நடக்கும் தனிப்பட்ட சட்டமறுப்பு தானே நின்று போகும். வட்டமேஜை மகாநாட்டின் மூலம் காங்கிரஸ் கோரிக்கைகள் நிறைவேறினால் ஒத்துழையாமை இயக்கமும் நின்றுவிடும். மற்றப்படி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக இப்போது ஒப்புக்கொள்ள முடியாது. அப்படிக் கேட்பது நியாயமும் இல்லை."

மகாத்மாவின் இந்தப் பிடிவாதம் மிதவாதிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. லார்ட் ரெடிங்குக்கு அது பெரும் ஏமாற்றமாகவே இருந்திருக்க வேண்டும். ஏன்? தேசபந்துதாஸ் முதலிய சில காங்கிரஸ் தலைவர்கள் கூட மகாத்மாவின் மீது மனஸ்தாபப் பட்டார்கள். "நல்ல சந்தர்ப்பத்தைக் காந்திஜி கைநழுவ விட்டு விட்டார்" என்று சொன்னார்கள். இதிலிருந்து பிற்காலத்தில் பல அரசியல் விளைவுகள் முளைத்து எழுந்தன.
-----------------------------------------------------------

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: