ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

1146, பாடலும் படமும் - 44

இராமாயணம் - 16
யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]


'சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம்  மேவி,

நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி  நீரால்,

எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, 

உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?'

[ சினத்தொடும் கொற்றம் முற்றி-  சினத்தோடு நின்று
வெற்றியை முழுமையாக எய்தி; 
இந்திரன் செல்வம் மேவி இந்திரனுடைய செல்வத்தை அடைந்து; 
நினைத்தது முடித்து நின்றேன் - நினைத்ததைச்  செய்து  முடித்து  நின்ற யான்;
நேரிழை   ஒருத்தி   நீரால் -  (இப்போது)  பொருந்திய அணிகலன்களை  அணிந்த  (சீதை  என்கின்ற)  ஒருத்தியின் காரணமாக,  
( அந்நிலையிழந்து); 
எனக்கு  நீ  செய்யத்தக்க கடன் எலாம் - எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக் கடன்களை எல்லாம்;  
ஏங்கி  ஏங்கி  உனக்கு நான் செய்வதானேன்  -  வருந்தி  வருந்தி  உனக்கு யான்  செய்யும் நிலைமையை அடைந்தேன்;  
என்னின்  யார்  உலகத்து   உள்ளார்?- என்னைவிட இழிந்தவர்கள் இவ்வுலகத்து யாருளர்?]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: