திங்கள், 10 பிப்ரவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 32

மதுரை சோமு - 4 

              



பிப்ரவரி 9.  மதுரை சோமு அவர்களின் பிறந்தநாள்.

மதுரை சோமு அவர்களை நானும், என் குடும்பத்தினரும் ரசிக்கத் தொடங்கினது : திருப்புகழ் மூலமாக. 50-களில் என்று நினைவு. திருச்சி ரேடியோ ‘தில்லைநகரிலிருந்து’ என்று ஒரு அருணகிரிநாதர் விழாவை ஒலிபரப்பும். அதில்தான் நாங்கள் ஆலத்தூர் சகோதரர்கள் போன்றோரின் முழு நீளத் திருப்புகழ் கச்சேரிகளைக் கேட்டு மகிழ்வோம். மதுரை சோமுவும் அங்குப் பாடுவார். 

நான் கடைசியாய் அவர் கச்சேரியை ...80-களில் --கேட்டதும் ஒரு திருப்புகழ் விழாவில் தான். வடபழனியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 - சமயம் அருணகிரிநாதர் விழா நடக்கும். பிரபல இசைக் கலைஞர்கள் வந்து பங்கேற்பர். அந்த விழாவில் ஒரு நாள் மதுரை சோமு பெயரை ...அவரைக் கேட்காமலேயே --போட்டு விடுவார்கள்! அவரும் தவறாமல் வந்து பாடுவார். அத்தகைய கச்சேரி ஒன்றுக்குத் தான் நான் அந்த வருஷம் சென்றிருந்தேன். நான் போனபோது சோமு அவர்கள்  திருப்புகழ்களில் வெவ்வேறு அங்க தாளங்களில்  ‘ராகம் தானம் பல்லவி’-கள் எப்படி மறைந்திருக்கின்றன என்று விளக்கிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு , ஒரு திருப்புகழைப் பவானி ராகத்தில் , அமைத்து, முதலில் ராகத்தை விஸ்தாரமாய் ஆலாபனை செய்தபிறகு திருப்புகழைப் பாடினார் . அன்றைய ஸ்பெஷல் அதுதான்!  அப்படி ஒரு அற்புதமான பவானியை நான் அதற்குப்பிறகு கேட்கவில்லை! முதலில் ‘கர்நாடக’ முறையில் ஆலாபனை: பிறகு, ‘கைகளை நாகசுரம் வாசிப்பது போல் சைகை செய்து, நாகசுரப் பாணியில் ரவைச் சங்கதிகள்; பிறகு , கையை தூக்கி ( வடக்கு என்ற பொருளில்) காட்டி, ஹிந்துஸ்தானி இசை முறையில் ! அடடா! அடடா! என்று நான் வியந்துகொண்டிருந்தபோது, குடும்ப நண்பர் , வடபழனி திருப்புகழ் சபைத் தலைவர் அமரர் சம்பந்தம் ஒரு பாட்டு முடிந்ததும் என்னை சோமுவுக்கு ஒரு மாலை போடச் சொன்னார். நானும் மாலை போட்டு விட்டு, சோமு அவர்களை ‘நீலமணி’ ராகத்தைக் ‘கொஞ்சம்’ ஆலாபனை செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். எனக்கு ஒரு நப்பாசை: அவர் ஆலாபனை செய்துவிட்டுச்  ‘சடாரென்று’ ஒரு திருப்புகழை நீலமணியில் பாட மாட்டாரா என்று! அப்படி நடக்கவில்லை! நீலமணியில் ஓரிரு நிமிஷங்கள் நீந்திய சோமு , பிறகு ‘என்ன கவி பாடினாலும்’ என்ற ஆதிசேஷ ஐயரின் பாடலைப் பாடினார். 

மறக்கமுடியாத அனுபவம். அதுவே நான் கடைசியாகச் சோமு அவர்களைக் கேட்டது. 

இப்போது, 1989 -இல், தன் 70-ஆம் வயதில் மதுரை சோமு மறைந்தவுடன் விகடனில் வந்த ஒரு கட்டுரையைப் பாருங்கள் .

சங்கீத சிங்கம்
மதுரை சோமு பற்றி அவருடன் நெருக்கமாகப் பழகியவரும், இசை யிலும் எழுத்திலும் அறிஞருமான மீ.ப.சோமு சொன்னது...

"1941-ம் வருஷம், திருச்சி வானொலியில் நான் அறிவிப்பாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம் அது. ஒரு நாள், சங்கீத மேதை சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையின் நிகழ்ச்சியை அறிவிப்பு செய்யவேண்டிய பணி இருந்தது. சித்தூரார், தான் பாடவிருக்கும் கீர்த்தனையின் பெயரைச் சொல்லி விட்டு, தன் பின்னால் இருந்த ஒரு சிறுவனைப் பார்ப்பார். அந்தச் சிறுவன் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்ததும், அடுத்த கீர்த்தனையின் பெயரைச் சொல்வார். இப்படி அந்தச் சிறுவன் அங்கீகரித்தவைதான் அன்று பட்டியலாகியது. சித்தூராரின் நம்பிக்கைக்குரிய அந்தச் சிறுவன் - சிஷ்யன்தான் மதுரை சோமு என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்.

தனது குரு உட்கார இடம் பண்ணித் தருவதிலிருந்து, அவருக்கு வியர்க்கும்போது மேல் துண்டால் துடைத்துவிடுவதுவரை சோமுவின் குருபக்திக்கு எல்லையே கிடையாது.

ஒரு நாள், வானொலியில் கச்சேரி செய்ய குருவுடன் வந்த சோமுவையே கேட்டேன்... "நீங்கள் ஒரு தனிக் கச்சேரி செய்யவேண்டியது தானே?' என்று. அதற்கு சோமு, 'தலை இருக்க வால் ஆடக்கூடாது, சார்!' என்று மிகவும் அடக்கத்துடன் கூறினார். இது நடந்து சில காலம் கழித்து, ஒரு நாள் என்னைப் பார்க்க, சோமு வீட்டுக்கு வந்தார். 'நான் இப்போது தனிக் கச்சேரி செய்கிறேன். என் கச்சேரியைக் கேட்க நீங்கள் வரவேண்டும்' என்று அழைத்தார். அவர் கச்சேரியைக் கேட்டு மெய்ம்மறந்தேன். வெறும் தம்புரா மீட்டி, புன்சிரிப்பை மட்டுமே வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்குள் எப்பேர்ப்பட்ட அற்புதமான இசை வல்லமை குடிகொண்டிருந்தது என்பதை உணர்ந்தேன். இதை மனத்தில் கொண்டு, அவரை 'இசை பயில்வான்' என்று நான் குறிப்பிட்டதை அவர் மிகவும் ரசித்தார். பலவீனம் என்பதே இல்லாத சத்தான குரல்; எவ்வளவு உச்சத்துக்குப் போனாலும் அந்தக் குரல் சன்னமடையாது. கீச்சிடாது. அதேசமயம் கீழே இறங்கும்போது, சுருதி பிசகாமல் ஸ்வர ஸ்தானத்தை தொட்டு நின்று பேசும்.

1963-ல் இருந்து சென்னை தமிழிசைச் சங்கத்தின் நிபுணர் குழுவில் என்னோடு உடன் அங்கம் வகித்துப் பணியாற்றினார் மதுரை சோமு. 'இசைப் பேரறிஞர்' பட்டத்துக்குக் கலைஞர்களைத் தேர்ந் தெடுப்பது முதல் விழா நிகழ்ச்சிகளை அமைப்பதுவரை எல்லா செயல்களிலும் என்னோடும், தமிழிசை சங்க நிர்வாகிகளோடும் கருத்து ஒருமித்து மிகவும் பண்பாட்டுடன் நடந்துகொள்வார்.

மதுரை சோமு இசைப் புலமை, குரல் வளம் இரண்டும் இணைந்த ஒரு சிங்கம். அவர் கர்னாடக ரசிகர்களுக்கும் பாடினார்; ஜனரஞ்சக ரசிகர்களுக்கும் பாடினார். அவர் மறைந்துவிட்டாலும், கேட்பவர்களுக்குப் பொருள் புரியும்படி பாடிய அவருடைய கம்பீரமான குரல் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்!"

[ நன்றி : விகடன் ]


      


கடைசியாக, 2004 -இல் தினமணி கதிரில் வந்த ஒரு கட்டுரை .








[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:



4 கருத்துகள்:

R.Subramanian சொன்னது…

Pasupathy Sir, a big thank you for these wonderful articles

Unknown சொன்னது…

I think Somu is thelast vidwan to have konnakol as upa pakavadyam inhis concerts

Radhakrishnan சொன்னது…

shall I get the translation of this article in English 🙏

Pas S. Pasupathy சொன்னது…

Sorry, Sri Radhakrishnan. I don't have the time. Perhaps, if you make this request at Rasikas.org in the Madurai Somu thread, https://www.rasikas.org/forums/viewtopic.php?f=12&t=159&start=150 , someone else may do the translation. Some of my posts have been translated in that site in various threads.