படவிமரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படவிமரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஏப்ரல், 2015

கல்கி - 7: சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ : பட விமர்சனம்
கல்கி

ஏப்ரல் 16.
சார்லி சாப்ளினின் பிறந்ததினம்.
டிசம்பர் 25. சாப்ளினின் நினைவு தினம்.

1931- இல் வந்த சாப்ளின் படம் ‘ சிட்டி லைட்ஸ்’.


1932-இல்  ஆனந்த விகடனில் , கே.ஆர். சர்மா சாப்ளினின்  இரு தோற்றங்களை உடனே வரைந்தார்!  ( சி.வி.மார்க்கன் ( மார்க்கபந்து) என்ற ஓவியருக்குப் பின்னர் விகடனில் சேர்ந்தவர் சர்மா என்று தெரிகிறது.)

[ நன்றி: விகடன் ] 

1933-இல்  இந்தப் படம் பற்றி 'கல்கிதன் ‘ஆடல் பாடல்’ பகுதியில்
எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி: 

'சார்லி சாப்ளின் பெயர் பெற்ற ஹாஸ்ய நடிகராயிற்றே? இந்தக் கதை சோகரஸம் பொருந்தியதாகவல்லவோ இருக்கிறது?' என்று மேற்படி காட்சியைப் பாராதவர்கள் கேட்கலாம். ஆமாம்; சோகரஸம் பொருந்திய இந்தக் கதையிலேதான் ஆரம்ப முதல் கடைசி வரையில் பார்ப்பவர்கள் குலுங்கக் குலுங்கச் சிரிக்கும்படி பண்ணுகிறார் சார்லி. இந்தக் கதையை சினிமா காட்சியில் பார்க்கும்போது சிரிப்பும் கண்ணீரும் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது.


எந்த உணர்ச்சியையும் வாய்ப் பேச்சினால் உண்டாக்குவதைவிட அதிக தீவிரமான அளவில் நடிப்பினால்தான் உண்டாக்க முடியும் என்பது சார்லியின் கருத்து. இதை முன்னிட்டுத்தான் இக் காட்சியின் ஆரம்பத்தில் டாக்கி பரிகசிக்கப்பட் டிருக்கிறது போலும்!

குபேர பட்டணமான நியூயார்க்கில், ஆயிரம் தையலுடன் கூடிய கந்தல் துணி உடுத்தியவனும், வீடு வாசலற்றவனும், ஜீவனத்துக்கு வழியில்லாத வனுமான ஒரு நாடோடியைத் தமது கதாநாயகனாகவும், ஏழைக் குருட்டுப் பெண் ஒருத்தியை கதாநாயகியாகவும் அமைத்துக்கொண்ட சார்லியின் தைரியந்தான் என்ன? தற்கால நாகரிக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வளவும் கடூரமாக அவர் பரிகசிக்கிறார்?



தமிழ்நாட்டிலுள்ள நடிக சிகாமணிகளுக் கெல்லாம் ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். 'ஸிடி லைட்ஸ்' என்னும் காட்சியைப் பார்க்க மட்டும் தப்பித் தவறிப் போய்விட வேண்டாம். அதைப் பார்த்தால் ஒருவேளை, 'நாமும் பவுடர் பூசி வேஷம் போடுவதா? வேண்டாம் நமக்கு இந்த நாடகத் தொழில்!' என்று தீர்மானித்து விடக் கூடும். ஆகவே, ஜாக்கிரதை!

[ நன்றி : விகடனின் ‘காலப் பெட்டகம்’ ]

தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி படைப்புகள்

’கல்கி’யைப் பற்றி

சனி, 25 ஆகஸ்ட், 2012

கல்கி - 3: மீசை வைத்த முசிரி! திரைப்பட விமர்சனம்

பக்த துகாராம்


ஐம்பதுகளில் ஒரு நாள்.

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபல சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமண்ய ஐயரைப் பார்த்தேன்.

அப்போது  பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பர் “  நல்லாப் பார்த்துக்கோ! இந்த ‘மழ மழ’ முக முசிரி ஒரு காலத்தில் ஒரு ’கரு கரு’ மீசை வைத்திருந்தார், தெரியுமா? ” என்று சொன்னவுடன் நான் திடுக்கிட்டேன். ஏனென்றால்,  நான் சிறுவயதில் கேட்டு, ரசித்த எந்தச் சங்கீத வித்வானும் மீசை வைத்துக் கொண்டு இருந்ததாக நினைவில்லை.

அப்போது இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டேன்.

இப்போது ? அறுபதாண்டுகளுக்குப் பின்? அந்த நினைவு வரவே ‘மீசை வைத்த முசிரி’யைத் தேடினேன்.

1938-ஆம் ஆண்டு ’ஆனந்த விகடன்’ தீபாவளி மலரில்  “ பாண்டுரங்கா” என்ற தலைப்பில் மீசை வைத்த முசிரி சுப்பிரமண்ய ஐயரின் ஓர் அழகான முழுப் பக்கப் படத்தைப் பார்த்தேன்.  அதன் அடியில் கீழ்க்கண்ட வரிகள் :.

                                                       முசிரி
 சங்கீத உலகிலிருந்து முசிரி சுப்பிரமண்ய ஐயர் தமிழ் டாக்கி உலகத்திற்குப் போனபோது, அதனால் என்ன லாப நஷ்டம் ஏற்படுமோ என்று சங்கீதாபிமானிகள் கவலை கொண்டிருந்தார்கள். முசிரி துகாராமைப் பார்த்த பிறகு, அந்தக் கவலை நிவர்த்தியாயிற்று. முசிரி டாக்கியில் நடிக்கப் போனதினால், டாக்கி உலகத்துக்கு லாபம். சங்கீத உலகத்துக்கு நஷ்டமில்லை என்று ஏற்பட்டது. முசிரிக்கோ லாபமுமில்லை, நஷ்டமும் கிடையாது. துகாராம் படத்துக்காகவே மீசையை வளர்த்து, படம் முடிந்தவுடன் மீசையையும் எடுத்து விட்டாரல்லவா! ஆனால், இனிமேல், முசிரி சுப்பிரமணிய ஐயர்வாள் சங்கீத மேடையில் அமர்ந்து, கன்றின் குரலைக்  (1) கேட்டுக் கனிந்துருகும் பசுவைப் போல் குழைந்து உருகும் போது மட்டும்  அவரை நாம் நம்ப மாட்டோம். ஸாவேரியில் அவர் ‘எத்தனை சொன்னாலும்’ (2) கேட்க மாட்டோம். காம்போதியில் ‘திருவடி சரணம்’ (3 )என்று கதறினாலும் மாட்டோம். ‘பாண்டுரங்கா!’ என்று பெருமூச்சு விட்டாலும் முடியாது. அவ்வளவும் ’நடிப்பு’ என்றுதான் சொல்வோம்.

[ கல்கி குறிப்பிட்டவை இவைதான் என்று நினைக்கிறேன் :

(1) ‘ என்றைக்குச் சிவ கிருபை’ என்ற நீலகண்ட சிவனின் முகாரி ராகக் கிருதியில் வரும் ‘கன்றின் ‘ என்று தொடங்கும் அனுபல்லவி.
(2) ‘எத்தனை சொன்னாலும்’ என்பது சுப்பராம ஐயரின் பதம்.
(3) ‘திருவடி சரணம்’ கோபால கிருஷ்ண பாரதியின் கிருதி . ]


இப்படி எழுதியவர் ‘கல்கி’யாய்த்தான் இருக்கும் என்று எண்ணிய எனக்குக்
‘கர்நாடகத்தின்’ ‘துகாராம்’ திரைப்பட  விமர்சனத்தைப் படிக்க ஆவல் பிறந்தது.


1938-இல் வெளிவந்த ‘ பக்த துகாராம்’   சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமண்ய ஐயர் நடித்த ஒரே திரைப்படம்  என்பது என் ஆவலுக்கு ஒரு காரணம். பொதுவாக, அந்த நாள் திரைப்படங்களைக் ‘கிழி கிழி’ என்று கிழிக்கும் கல்கி எப்படி/எதனால் துகாராமை விட்டு வைத்தார் என்றறிந்து கொள்வதும் இன்னொரு காரணம்.


  ‘கல்கி’ யின் நீண்ட விமர்சனத்தில் முசிரியைப் பற்றியும், சங்கீதத்தைப் பற்றியும் உள்ள சில பகுதிகள் ( மீசையைப் பற்றியும் தான்! ) இதோ:


முசிரி துகாராம்

கல்கி

     முசிரி சுப்பிரமண்ய ஐயர் நம்மை மறுபடியும் ஏமாற்றி விட்டார்!


சென்ற சில காலமாகவே அவர் நம்மை ஏமாற்றுவது சகஜமாயிருந்து வருகிறது. உடம்பு சரியில்லையென்றும், தொண்டை சரியில்லையென்றும் சொல்லிக் கச்சேரிக்கு வராமல் ஏமாற்றி வருகிறார். சென்ற மாதக் கடைசியில் கூட மயிலாப்பூர் ரஸிக ரஞ்சனி சபைக்கு இம்மாதிரி ஒரு ஏமாற்றத்தை அளித்தார்.

''இந்த இலட்சணத்தில் டாக்கி என்ன வேண்டிக் கிடக்கிறது? அது மட்டும் வெளியாகட்டும். வெளுத்து வாங்கிவிடலாம்'' என்று நான் கர்வம் கட்டிக் கொண்டிருந்தேன். முசிரி டாக்கியில் சேர்ந்தார் என்று பிரஸ்தாபம் காதில் விழுந்தது முதலே, எனக்கே இம்மாதிரி ஆசை கொஞ்சம் இருந்தது. ''சங்கீத வித்வானாய் இலட்சணமாய்ப் பேசாமல் பாடிக் கொண்டிருக்க கூடாதா? டாக்கியிலும் கீக்கியிலும் சேர்ந்து ஏன் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்!'' என்ற நினைவு ஒரு புறம் ''வெறுமனே இவரைப் பாராட்டிப் பாராட்டி சலித்து விட்டது. ஒரேயடியாய்த் தீர்த்துக் கட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வரட்டும்'' என்னும் ஆவல் ஒரு பக்கம்.

டாக்கி எடுக்க ஆரம்பித்த பின், அதற்கு நேரிட்டு வந்த இடையூறுகளைப் பற்றி வெளியாகி வந்த வதந்திகள் அந்த ஆசையை அதிகப்படுத்தி வந்தன. ''சரிதான், கடைசியில், சரியாக மாட்டிக் கொள்ளப் போகிறார்'' என்று எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் பலிப்பதற்கின்றி என்னை மனுஷ்யர் அடியோடு ஏமாற்றிவிட்டாரே! ஒரு நல்ல முதல் தர டாக்கியை எப்படியோ கொண்டு வந்து விட்டாரே!

இந்தப் படத்தை 'முசிரி துகாராம்' என்று சொல்வது முற்றிலும் பொருந்தும். ஆரம்பம் முதல் முடிவு வரையில் முசிரிதான் பிரதானமாக விளங்குகிறார். படத்தின் சிறப்புக்கெல்லாம் இவர்தான் காரணம் என்று சொல்லுவதே அநாவசியம். இந்த டாக்கிக்கு டைரக்டர் யார் என்னும் விவரம், முதலில் காட்டும் பெயர் அட்டவணையில் காணப்படவில்லை. (ஐந்தாறு டைரக்டர்களின் கைமாறியதாகக் கேள்விப்பட்டோம்.) ஆனால், முசிரியைப் பற்றிய வரையில் அவரே டைரக்டராகவும் இருந்திருக்கிறார் என்று ஊகிக்க இடமிருக்கிறது.


முதலில், வேஷப் பொருத்தத்தை சொல்லுங்கள்! முசிரி டாக்கிக்காக மீசை வளர்த்துக் கொள்கிறார் என்று கேள்விப்பட்டபோது நமக்கெல்லாம் பரிகாசமாயிருந்தது. மீசையுடன் சென்னையில் சபை முன்னால் வருவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான் அப்போதெல்லாம் கச்சேரிகளுக்கு மட்டம் போட்டு விட்டார் என்றும் சொன்னார்கள். ஆனாலும் அதிலிருந்தே டாக்கி வெற்றி பெறுவதில் அவர் எவ்வளவு சிரத்தையுடன் இருக்கிறார் என்று ஒருவாறு தெரிந்தது. இப்போது, திரையில் பார்த்தால், ''ஆகா! என்ன பொருத்தம்! என்ன வேஷப் பொருத்தம்! என்ன மீசைப் பொருத்தம்!'' என்று ஆச்சரியப்பட வேண்டியவர்களாகிறோம். மீசை ஒன்று மட்டும் பொய் மீசையாயிருந்திருக்கும் பட்சத்தில், படமே ஒரு கேலிக் கூத்துப்போல் நமக்குத் தோன்றியிருக்கக்கூடும். முசிரி அதற்கு இடம் வைக்கவில்லை.

மீசைதான் இஷ்டப்பட்டால் வளர்த்துக் கொள்ளலாம், அது அவரவர்கள் கையில் உள்ள விஷயம். ஆனால், நடிப்புக் கலையை இஷ்டப்பட்டால் வளர்த்துக் கொண்டுவிட முடியும்? இந்த பாகவதர் - கச்சேரி வித்வான் - இவ்வளவு இயற்கையாகவும் அழகாகவும் நடிக்க எங்கே கற்றுக் கொண்டார்? எப்போது கற்றுக் கொண்டார்? ஆச்சரியமாகவல்லவா இருக்கிறது?


இறைவனுடைய பக்தி பரவசத்தில் சதா ஈடுபட்ட ஒரு பரம பக்தரிடம் நாம் எதிர்பார்க்கும் சாந்தம், கருணை, சகிப்புத் தன்மை முதலிய உயர் குணங்களெல்லாம் இவரிடம் பூரணமாய்ப் பொலிந்திருப்பதைக் காண்கிறோம். குடும்ப வாழ்க்கையில் தாமரை இலைத் தண்ணீரைப்போல் பட்டும் படாமலும் ஈடுபட்டிருப்பதை வெகு தெளிவாகத் தம் நடை உடை பாவனைகளினால் உணர்த்துகிறார். இதனால் எப்போதும் ஒரே நிதானமாய், நிர்விகல்ப சமாதியிலேயே இருந்து விடவில்லை. பரபரப்புக் காட்ட வேண்டிய இடங்களில், உணர்ச்சி பொங்கும்படி நடிக்க வேண்டிய இடங்களில், அவ்வாறே நடிக்கிறார். ஆனால் இதெல்லாம் நடிப்பு என்று நம்புவதுதான் நமக்குக் கஷ்டமாயிருக்கிறது. உண்மை சம்பவங்கள் என்றே தோன்றிவிடுகிறது. படத்தின் ஆரம்பத்தில், ''ஜீஜா! ஏன் குழந்தையை அடிக்கிறாய்?'' என்று அவர் கூறும் போதே, அந்தக் குரலின் கனிவு நம்மை உருக்கிக் கண்ணில் ஜலம் வருவித்துவிடுகிறது. இப்படி அநேக கட்டங்கள் இருக்கின்றன.

நடிப்புத் திறமை நாம் முசிரியிடம் எதிர்பாராதது, ஆனால் சங்கீத மேன்மையோ எதிர்பார்த்தது. அது எப்படியிருக்கிறது? எதிர்பார்த்ததற்கு அதிகமுமில்லை, குறைவுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

முதன் முதலில் இந்த டாக்கியைப் பற்றிப் பிரஸ்தாபம் ஏற்பட்டபோது ஒருவர் வந்து, ''ஸ்ரீ தியாகராஜா வில் மதனி வேஷத்தில் வந்த சீதா தான் துகாராமின் மனைவியாக வரப் போகிறாளாம். பாவம்! முசிரியை அழ வைத்துவிடுவாள்!'' என்று பரிதாபப்பட்டார். இதைக் கேட்ட இன்னொருவர், ''ரொம்ப நன்றாயிருக்கிறது! முசிரியை இன்னொருவர் அழப் பண்ணுவானேன்? அவரேதான் அழுதுவிடுவாரே!'' என்றார். மூன்றாவது மனுஷர் ஒருவர், ''ஏற்கெனவேயே அழுவார் என்றால், இப்போது கேட்க வேண்டியதில்லை. டாக்கியெல்லாம் கண்ணீராய்த்தானிருக்கும்!'' என்று முத்தாய்ப்பு வைத்தார்.

இது உண்மைதான், துகாராமில் முசிரி அசாத்தியமாகத்தான் அழுதிருக்கிறார். ஆனால், அந்த அழுகையெல்லாம் சுத்தமான கர்நாடக ராகங்களில் அழகாக அமைந்து, ஒரு தடவை இரண்டு தடவை மூன்று தடவை கேட்க வேண்டுமென்று தூண்டக் கூடியதாயிருக்கிறது.

வாழ்க்கையில் கஷ்டத்தை வெறுக்கும் மனிதர்கள் கலைகளில் மட்டும் சோக ரஸத்தை அநுபவிப்பதில் ஏன் இவ்வளவு இன்பமடைகிறார்கள் என்பது சிருஷ்டி ரகசியங்களில் ஒன்று. அதைப் பற்றி சர்ச்சை செய்ய இடம் இதுவல்ல. நவரஸங்களில் எல்லாவற்றையும் விட அதிகமாக ஜனங்கள் ரஸிப்பது சோக ரஸம் என்பதில் மட்டும் சந்தேகம் கிடையாது. சோக ரஸம் இல்லாத எந்த உயர்ந்த இதிகாசமாவது நாடகமாவது காவியமாவது உலகத்தில் உண்டா என்று சொல்லுங்கள்.சோக ரஸத்தைப் பரிபூரணமாய் அநுபவிப்பதற்கு சங்கீதத்தைப் போன்ற சிறந்த சாதனம் வேறில்லையென்பதும் நிச்சயம். சிற்சில ராகங்களை வெறுமனே பாடினாலே நம் உள்ளம் குழைகின்றது, ஊனும் உருகுகின்றது. சோக பாவமுள்ள சாஹித்யமும் சேர்ந்துவிட்டாலோ கேட்க வேண்டியதில்லை. அதுவும், ஒரு நல்ல கதையில் - நல்ல கட்டத்தில் - வருவதாயிருந்தால் சொல்ல வேண்டுமா?

பாபநாசம் சிவனின் சாஹித்யமும், முசிரியின் சங்கீதமும் சேர்ந்து இந்த டாக்கியை சிறந்த சங்கீத மேன்மையுடையதாகச் செய்திருக்கின்றன. மனோகரமான பிலஹரி ராகத்தில் ''ஜய விட்டல ஜய விட்டல'' என்று பாடி முசிரி டாக்கியை ஆரம்பித்து வைக்கிறார். இந்தப் பாட்டில் முசிரியின் சாரீரம் கொஞ்சம் 'இரைச்ச'லாக தொனிப்பதைக் கேட்கிறோம். ஆனால், அடுத்த பாட்டிலேயே இது சரியாகிவிடுகிறது. ஹம்ஸ நாதத்தில், ''நீயே பராமுகமாயின்'' பாடும்போது, ஒரு தூக்குத் தூக்கி விடுகிறார். பின்னால், நாதநாமக்கிரியையில், ''சர்வலோக சரண்ய'' பாடும்போது முசிரியின் சங்கீதமும் சாரீரமும் உச்ச நிலையை யடைகின்றன.

பாட்டுக்கள் கனராகத்திலும், அபூர்வ ராகத்திலும், பழைய கர்நாடக ராகத்திலும், நவீன கர்நாடக ராகத்திலும் மாறி மாறி அமைந்திருக்கின்றன.

''தேவகி ஸ்ரீ வசு

       தேவ குமாரனே!''

என்னும் பாட்டைத் துகாராம் பாடி முடித்ததும், ''இந்த ஒரு பாட்டுப் போதுமே!'' என்று நான் வாய் விட்டு சொன்னேன். ஆனால், என் குரலின் சப்தம் இவ்வளவு பெரியதா என்று சந்தேகம் தோன்றியது. அப்புறம் விசாரித்தால், ஏக காலத்தில், என் அருகில் இருந்தவர்கள் ஐந்தாறு பேரும் அப்படியே சொன்னார்கள் என்று தெரிந்தது. வாய் விட்டு சொல்லாத இன்னும் இரண்டு மூன்று பேரும் ''நாங்களும் அப்படித்தான் நினைத்தோம்'' என்றார்கள்.

மேற்படி பாட்டு குந்தலவராளியில் அமைந்தது. சாதாரணமாய், இந்த ராகத்திலுள்ள பாட்டுக்கள் இங்கிலீஷ் நோட்டுக்கள் போல் தொனிக்கும். ஸ்வரங்களைத் தனித்தனியாகப் பிரித்து உதிர்த்து விடலாம் போல் இருக்கும். அத்தகைய ராகத்தில் இவ்வளவு கமகமும் குழைவும் கொடுத்து இவ்வளவு உருக்கத்தை ஊட்டிப் பாடியிருப்பது முசிரி ஒருவருக்குத் தான் சாத்தியம் என்று சொல்லலாம்.

பாட்டுக்கள் எல்லாம் நன்றாய்த்தானிருக்கின்றன. ஆனால் முசிரி ஏற்கெனவே பிளேட்டுகளில் கொடுத்துப் பிரபலமான மூன்று மெட்டுக்களை இதில் சேர்க்காமலிருந்தால் ஒன்றும் ழுழுகிப் போயிராது. அந்தப் பாட்டுக்களை அப்படியே புகுத்த முடியுமாயிருந்தாலும் பாதகமில்லை. அதே மெட்டுக்களில் அதே மனுஷர் வேறு ஸாஹித்யத்தைப் பாடுவது எனக்கு என்னமோ அவ்வளவு ரஸிக்கவில்லை. மற்றவர்களுக்குப் பிடித்திருந்தால் சரி.

முசிரியைப் பொறுத்த வரையில் நாம் எதிர்பார்த்தற்கெல்லாம் மேலாகவே நடித்துப் புகழ்பெற்றுவிட்டார்.

. . . // . . .

கடைசியாக, இந்தப் படத்திலுள்ள பின்னணி சங்கீதத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். நடிகர்களின் சங்கீதம் உயர்தரமாயிருப்பது போலவே பின்னணி சங்கீதமும் அமைந்திருக்கிறது. பெரும்பாலும் இனிய கோட்டுவாத்திய
சங்கீதத்தைக் கேட்கிறோம். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் ராகங்களை அமைத்திருப்பது மிகவும் அழகாயிருக்கிறது. துகாராம் தூங்கி எழுந்திருக்கும்போது பூபாளம். மும்பாஜியின் காதல் காட்சியின் போது காபி
ராகத்தில் சிருங்கார ரஸ ஜாவளி. கிருஷ்ணன் வரும்போதெல்லாம்  புல்லாங்குழல் . பின்னணி சங்கீதத்தில் இவ்வளவு கவனம்
செலுத்தி அமைத்த தமிழ் டாக்கி மிகவும் அபூர்வம் என்றே சொல்லலாம்.

. . . // . . .


மொத்தத்தில், முசிரி துகாராம் தமிழ் டாக்கிகளுக்குள் ஒரு உன்னத பதவியை வகிக்கிறது என்றே நான் கருதுகிறேன். 'பக்த குசேல'ருக்கு அடுத்தபடியாக உயர்ந்த தமிழ் டாக்கி என்று இதைத்தான் சொல்ல வேண்டும். ஆகையினால்தான் இதற்கு இரண்டு நட்சத்திரம் அளித்திருக்கிறேன்.

[ நன்றி : கல்கி களஞ்சியம், வானதி பதிப்பகம், தொகுப்பு: தி.ஸ்ரீ. ரங்கராஜன் ]

தொடர்புள்ள சில பதிவுகள் :

கல்கி’ கட்டுரைகள்

காளிதாஸ் 

இராஜாம்பாள்: நூல் மதிப்புரை

கல்கி மறைவு: வாசன்

பக்த துகாராம்: ராண்டார் கை

வெள்ளி, 15 ஜூன், 2012

‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்

'தமிழ்ப் பாட்டி’ 
‘கர்நாடகம் ‘ 



தமிழில் முதல் பேசும் படம்: காளிதாஸ்.  அந்தத் திரைப்படம் அக்டோபர் 31, 1931 -இல் சென்னையில் வெளியானது என்று தெரிகிறது.

கல்கி’ கிருஷ்ணமூர்த்தி நவம்பர் 16, 1931 ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘காளிதாஸ்’ படத்தைப் பற்றி, “தமிழ்ப் பாட்டி’ என்ற தலைப்பிலும், ‘கர்நாடகம்’ என்ற பெயரிலும் ஒரு விமர்சனம் எழுதினார். அது இதோ!:
======
பூர்வ ஜன்மத்தில் என்ன பாவஞ்செய்தேனோ தெரியவில்லை; கொஞ்ச நாளாய் அடிக்கடி சென்னைப் பட்டணம் போகவேண்டி வருகிறது. இந்தத் தடவை சென்னைக்குச் சென்றபோது, நகரமெல்லாம் ஒரே அல்லோல கல்லோலமாயிருந்தது. இடை விடாத மழை, சாக்கடைத் தேக்கம், கும்பி நாற்றம், மோட்டார் சேறு, தீபாவளி பண்டிகை, காலணா பத்திரிகை முதலியவைகளோடல்லாமல், புதிதாக 'தமிழ் டாக்கி' வந்திருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அறிந்தேன்.
ஸ்ரீமதி டி.பி.ராஜலக்ஷ்மி





ஸ்ரீமதி டி.பி.ராஜலக்ஷ்மி அம்மாளை இது வரையில் நாடக மேடையில் பார்த்திருக்கிறீர்கள். இப்போது டாக்கியில் வந்து பாருங்கள்' என்று எங்கே பார்த்தாலும் விளம்பரங்கள் காணப்பட்டன. உண்மையென்னவென்றால், நாடகமேடையிலாகட்டும் நடனசாலையிலாகட்டும், அந்த அம்மாளை அதற்கு முன் நான் பார்த்தது கிடையாது. (சொல்ல வெட்கமாய் இருக்கிறது; அவர் பெயரைக் கேள்விப்பட்டது கூட இல்லை. இதனால் அந்த அம்மாளுக்கு ஒருவிதக் குறைவுமில்லை என்பதை அறிவேன். மகாத்மா காந்தி, ’சார்லி சாப்ளின்’ என்பவரைப் பற்றித் தாம் கேள்விப்பட்டதே கிடையாது என்றார். இதனால் காந்திக்குக் குறைவே தவிர, சாப்ளினுக்குக் குறைவுண்டா? ஆகையால் வெட்கப்பட வேண்டியது நான்தான்.)







'இதுவரையில்தான் பார்க்கவில்லை; இப்பொழுதாவது பார்த்து விடலாம்' என்று தீர்மானித்தேன். ஒரு நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு போனேன். பார்த்தேன்; கண்ணில் ஜலம் வரும் வரை பார்த்தேன். திரையில் விழுந்த சலன ஒளி, வைர நகைகளின் ஜொலிப்பு, தூய வெள்ளைப் பற்களின் பளபளப்பு ஆகியவற்றினால் கண் கூசும் வரையில் பார்த்து பிரமித்து நின்றேன்.





ஓகோகோ! மறந்து போனேனோ? 'டாக்கி' என்றாலே வெளியூர் நேயர்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 'டாக்கி' என்பது ஆங்கில வார்த்தை. 'டாக்' என்றால் பேச்சு. பேசும் சினிமா படக் காட்சிகளுக்கு 'டாக்கி' என்று சொல்கிறார்கள். 'தமிழ் டாக்கி' என்று கலப்பு மொழி பேசுவதற்கு என்னுடைய தமிழ் அபிமானம் இடங்கொடுக்கவில்லை. எனவே, 'தமிழ்ப் பேச்சி' என்று பெயர் கொடுக்கலாமென்று முதலில் தீர்மானித்தேன். ஆனால், நான் பார்த்த 'பேச்சி' உண்மையில் 'பாட்டி'யாயிருந்தது. அதாவது, தமிழ்ப் பேச்சு அதில் கிடையாது. விசாரித்ததில், அது தெலுங்கு பாஷை என்று அறிந்தேன். முதலிலும் நடுவிலும் கடைசியிலும் சில தமிழ்ப் பாட்டுக்கள் பாடப் பெற்றன. ஆகையால் நான் பார்த்து, கேட்டு, அனுபவித்த காலட்சேபத்திற்கு, 'தமிழ்ப் பாட்டி' என்று பெயர் கொடுப்பதே பொருத்தமென்று தீர்மானித்தேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிடில் 'தெலுங்குப் பேத்தி' என்று வைத்துக்கொள்ளுங்கள்.





'முன்னுறை' என்று பெரிய கொட்டை எழுத்தில் 'தமிழ்ப் பாட்டி' ஆரம்பமாயிற்று. தமிழ்க் காதல் கொண்ட என் நண்பரின் நெஞ்சில் அந்த ''கரம் ஈட்டியால் குத்துவது போலிருந்தது. ''ஐயையோ! எத்தனையோ அவசரச் சட்டங்கள் போடுகிறார்களே? தமிழ்க் கொலையைத் தடுப்பதற்கு ஒரு சட்டம் போட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?'' என்றார். அத்தகைய சட்டம் பிறந்தால், தமிழ்நாட்டில் உள்ள எத்தனை பத்திரிகாசிரியர்கள், பாடகர்கள் முதலியோருக்குப் பிழைப்புப் போய்விடுமென்று எண்ணியபோது, பெரிய 'காபரா' அடைந்தேன். 'அது போகட்டும். இது என்ன முன்னுரை? எதற்கு முன்னுரை? பார்ப்போம்' என்றேன். அந்த விஷயம் இந்த நிமிஷம் வரை எங்களுக்கு விளங்கவே இல்லை.


பிறகு, ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி அம்மாள் மேடைக்கு வந்து, அதாவது திரையில் வந்து, பாடத் தொடங்கினார்கள். அம்மாளின் பற்களைப் பற்றி முன்னம் புகழ்ந்து சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்களுடைய தொண்டையைப் பற்றி அப்படிச் சொல்வதற்கில்லை. கூடிய சீக்கிரம் அவர்கள் நல்ல டாக்ட ராய்ப் பார்த்துத் தொண்டையை ஆபரேஷன் செய்து குரலைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றிற்று. ஆனால் பக்கத்திலிருந்த நண்பர், ''இல்லை, இல்லை! அவர் குரல் வெகு நன்றாயிருக்கும். டாக்கி இயந்திரத்தின் தப்பு'' என்றார். இயந்திரத்தின் மீது எப்போது பழி விழுந்ததோ, அதற்கு மேல் ஒன்றும் பேசுவதற்கில்லை. இயந்திரத்துக்கு ஆபரேஷன் செய்யமுடியாதல்லவா?


ஸ்ரீமதி ஐந்தாறு தடவை மறைந்து மறைந்து புதிய புதிய உடைகளுடன் வந்து பாடினார். அதில் தேசியப் பாட்டு ஒன்று. 'கை ராட்டினமே காந்தி கை பாணம்' என்று ஆரம்பிப்பது. இந்தப் பாட்டைப் பாடியபோது சபையோர் ஆனந்த பரவசமாகிவிட் டார்களென்று சொல்லலாம். அதிலும், அம்மாள் பாடிக்கொண்டே இராட்டை சுற்றுவது போல் வெறுங் கையைச் சுற்றிக்காட்டியபோது, சபை யோரின் சந்தோஷ ஆரவாரத்தைச் சொல்லமுடியாது. 'இராட்டை சுற்றுவது இவ்வளவு சுலபமா?' என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.


கதராடையின் பெருமையை அம்மாள் உதாரண ரூபமாகவும் விளக்கியது வியக்கத்தக்கதாயிருந்தது. சுமார் இருபது முறை அம்மாள் வெவ்வேறு விதவிதமான வர்ண முள்ள பட்டு, சரிகை உடைகளை அணிந்து வந்தார். தேசியப் பாட்டு பாடும்போது மட்டும் வெள்ளைச் சேலை தரித்திருந்தார். ''பார்த்தீர்களா? இது கதர்'' என்றார் நண்பர். ''கதர் என்பதாக பாவனை'' என்றார் பக்கத்தில் இருந்தவர். சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் டாக்கியில் நடிக்கப் போகலாம் என்று எனக்குத் தோன்றிற்று. பிரசங்கத்துக்கு வரும் போது மட்டும் கதர் அணிந்து வருவோருக்கு இப்போது தேசிய மேடையில் இடமில்லாமல் போய்விட்டதல்லவா? அவர்கள் ஏன் 'டாக்கி' திரைக்கு போகக்கூடாது?


ஆமாம்! டாக்கியில் அதுதான் விசேஷம். அங்கே நடிகர்தான் சர்வாதிகாரி. சபையோர் பல்லை இளித்துக்கொண்டு உட்கார்ந் திருக்க வேண்டியதுதான். நாடக மேடையில் வரும் நடிகரின் பாட்டோ கூத்தோ சபையோருக் குப் பிடியாவிட்டால், ''உள்ளே போ! உள்ளே போ!'' என்று மரியாதையாக எடுத்துச் சொல்லலாம். டாக்கியில் இந்த ஜம்பமெல்லாம் பலியாது. ஒரு பாட்டுப் பாட ஆரம்பித்துவிட்டால், அதை நடுவில் நிறுத்த உங்கள் முப்பாட் டன் வந்தாலும் முடியாது. நீங்கள் வேண்டுமானால் காதைப் பொத்திக் கொள்ளலாம்.


'ஒன்ஸ்மோர்' விஷயமும் இப்படித்தான். நீங்கள் என்னதான் கரடியாய்க் கத்தினாலும் உபயோகமில்லை. உதாரணமாக, ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி அம்மாள் அன்ன நடை போட்டு அற்புத நடனம் செய்தபோது 'ஒன்ஸ்மோர்' சத்தம் என்னையறியாமல் அடி வயிற்றிலிருந்து தொண்டை வரை வந்துவிட்டது. நல்லவேளையாக, அவ்விடத்திலேயே அதை இறுக்கிப் பிடித்து அமுக்கிவிட்டேன். எனக்குப் பின்னால் யாரோ ஓர் அசல் பட்டிக்காட்டுப் பேர்வழி உட்கார்ந்திருந்தார். அவர், ''ஆஹா! எங்கள் ஊரில் பெண்கள் வரட்டி தட்டுவதற்காகச் சாணம் மிதிப்பார்கள். எவ்வளவோ நன்றாயிருக் கும். அதைவிட அல்லவா இது அழகாயிருக்கிறது?'' என்றார். அவருடைய ரஸிகத் தன்மை, பட்டணங்களில் வசிக்கும் படித்த மனிதர்கள் பலருக்கு இல்லையே என்று எண்ணிப் பரிதபித்தேன்.


பாட்டு, தேசியப் பாட்டு, அன்பிற்கினிய பாட்டு, (இதற்கு என்ன அர்த்தமென்று சொல்வோ ருக்குக் காலணா பத்திரிகை ஒன்று இனாம்.) நடனம் முதலி யவை முடிந்த பிறகு, நாடகம் ஆரம்பமாயிற்று. கல்வியில் நமக்கு மிஞ்சியவர் இல்லை என்று கர்வங் கொண்டிருந்த ஒரு ராஜ கன்னிகைக்கு, நுனிமரத்திலிருந்து அடிமரத்தை வெட்டும் ஓர் இடைப் பையனைக் கலியாணம் செய்துவைக்கிறார்கள். மகா பண்டிதன் என்றெண்ணிக் கலியாணம் செய்துகொண்ட கணவன் உண்மையில் மகா மூட சிகாமணியென்பதைப் படுக்கை அறையில் மணமகள் காண்கிறாள். பிறகு, காளி மாதாவைத் தோத்திரம் செய்கிறாள். மாதாவின் அருளால் உண்மையிலேயே அம் மடையன் மகா வித்வானாகி விடுகிறான்.


இடைப் பையன் நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டும் காட்சி நன்றாயிருந்தது. ஆனால், வெட்டிய கிளை கீழே விழும் காட்சியைக் காட்டாமல் ஏமாற்றிவிட்டார்கள். வெள்ளைக் காரனுடைய சினிமாவாயிருந்தால் இப்படிச் செய்வார்களா? ஐந்து மைல் உயரத்திலிருந்து ஆகாய விமானம் எரிந்து விழும் காட்சியைக்கூட அல்லவா காட்டுகிறார்கள்? இதுதான் போகட்டுமென்றால், இடைப் பையன் வெட்டிய கிளை ஒரு பெரிய மண்டப தூண் அளவு பெரிதாயிருந்தது. பையன் தரையிலும், கிளை அவன் மேலும் கிடக்கும் அடுத்த காட்சியில், அந்தக் கிளை சுண்டு விரல் பருமனாய் மாறிவிட்டது.


ஸ்ரீமன் கங்காளராவ் எம்.ஏ. அவர்கள் இடைப் பையன் வேஷத்திற்குத் தகுதியுள்ளவராகவே தோன்றினார். அவருடைய முகமானது சாக்ஷாத் மூட சிகாமணித் தோற்றமளித்தது. காளிமாதா பிரசந்நமாகி இடைப் பையன் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதிய பிறகு, அவன் மகா பண்டிதனாகி விடுகிறானல்லவா? பண்டிதனானதும் முகத் தோற்றம் மாறுதலடைய வேண்டுமே? அதுதானில்லை. அதே அசட்டுச் சிரிப்பு; அதே..!


கடைசியாக நடந்த குறத்தி நடனத்தைப் பற்றி ஒரு வார்த்தை! அடுத்த தடவை, குறவன் - குறத்தி நடனம் செய்ய நேர்ந்தால், அசல் குறவன் ஒருவனையே சுலபமாய் அமர்த்திக் கொள்ளலாமென்று தெரிவித்துக்கொள்கிறேன். 'டாக்கி'யில் குறவனாய் வந்தவன் உண்மையில் குறவனாகவே காணப் படவில்லை. பாவம்! சோற்றுக்கில்லாத குறவர்களுக்கு ஒரு நாளும் அவ்வளவு பெரிய தொந்தி, தொப்பை இராது. சாதாரணமாய் பட்டணங்களில் பிராமணார்த்தம் சாப்பிடும் சாஸ்திரிகளுக்கும், மிட்டாய்க் கடை வைத்திருக்கும் சேட்டுகளுக்கும், லேவாதேவி செய்யும் செட்டியார்களுக்கும்தான் அவ்வளவு பெரிய தொந்தி இருக்கும். குறவர்கள் ஒல்லியாயும், கட்டமைந்த சரீரமுடையவர்களாயும் இருப்பார்கள். இதைக் கவனிக்கும்படி கேட்டுக்கொண்டு, இந்த அரும் பெரும் மதிப்புரையை முடிக்கின்றேன்.
======


பின்குறிப்பு 1:

’கர்நாடகம்’ என்ற புனைபெயரை முதன்முதலில் இந்தக் காளிதாஸ் திரைப்பட விமர்சனத்தில் தான் பயன்படுத்தினார் கல்கி. பிறகு, தன் ‘ஆடல் பாடல்’ பத்தியையும் அதே புனை பெயரில் எழுதத் தொடங்கினார். அதனால்,  “ ‘ஆடல் பாடல்’ பகுதிக்கும் , “கர்நாடகம்” என்ற பெயருக்கும் காரணகர்த்தா டி.பி.ராஜலக்ஷ்மி என்ற அம்மாளே” என்று ஒருமுறை வேடிக்கையாக எழுதியிருக்கிறார் ‘கல்கி’

பின்குறிப்பு 2:


'காளிதாஸ்' படத்துக்கான விகடனின் விமர்சனம் குறித்து வேறொரு பத்திரிகை யில் வெளியான கருத்துக்கு, 'என்ன, எங்கே, எப்பொழுது?' பகுதியில் இடம் பெற்ற விளக்கம்...

பலே பேஷ்! 'தமிழ்ப் பாட்டி'
பலே பலே பேஷ்!
'ம்யூஸ்மென்ட் வீக்லி' என்னும் வாரப் பத்திரிகை, 'வெறுப்பான வியாசங்களைப் பிரசுரிக்கப்படாதென்று நமது சகலபாடியான ஆனந்த விகடனைக் கேட்டுக் கொள்ளுகிறோம்' என்று எழுதியிருக்கிறது. அது குறிப்பிடும் 'வெறுப்பான' வியாசம், சென்ற இதழில் வெளியான 'தமிழ்ப் பாட்டி' என்ற வியாசமாகும். 'பேரும் புகழும் வாய்ந்த நம் தமிழ்நாட்டு நடிகரை நம் சகலபாடியான ஆனந்த விகடன் என்ற மாதாந்தரப் பத்திரிகையில், 'தமிழ்ப் பாட்டி' என்னும் தலைப்பின் கீழ் கண்டித்து எழுதியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது' என்று அது எழுதுகிறது.

உண்மைதான். யாரையாவது, எதையாவது உள்ளதை உள்ளபடி சொல்லிக் கண்டித்து எழுதியதைப் படிக்க வருத்தந்தான் உண்டாகும். இது அஹிம்ஸா தர்மத்துக்கு விரோதமல்லவா?ஆகவே, விகடன் கூறுவதைக் கேளுங்கள்!


மிஸ். டி.பி.ராஜலக்ஷ்மி நடித்த 'காளிதாஸ்' என்னும் பேசும் படக்காட்சி நன்றாயிருந்தது. மிக நன்றாயிருந்தது. ரொம்ப நன்றாயிருந்தது. எவ்வளவோ நன்றாயிருந்தது! எவ்வளவு நன்றா யிருந்ததென்று சொல்லமுடியாது. அளவுக்கு மீறி நன்றாயிருந்தது. ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் சொல்ல முடியாது. மிக மிக மிக, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றாயிருந்தது. போதுமல்லவா?

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி : படைப்புகள்

கினிமா செண்ட்ரலின் கதை ( ஆங்கிலம் )

’காளிதாஸ்’ பற்றி ராண்டார் கையின் நினைவுகள் (ஆங்கிலம்)