திங்கள், 30 ஜூலை, 2018

1130. சசி -15: மீண்ட காதல்

மீண்ட காதல்
சசி 


''நான் செய்ததெல்லாம் தப்பிதம்! மன்னித்துவிடுங்கோ! உங்களுக்கு என் மேலே அவ்வளவு அன்பு இருக்கும்னு தெரிஞ்சு கொள்ளாதது என்னுடைய பிசகுதான்! எழுந்திருங்கோ! காபி ஆறிப் போகிறது. பாதாம் ஹல்வா பண்ணியிருக்கேன். சீக்கிரமா வந்து சாப்பிட்டாத்தான், உங்களுக்கு என் மேலே கோபம் இல்லேன்னு அர்த்தம். அப்பத்தான் என் மனசு திருப்தி அடையும்'' என்று கூறியவாறு, என் மனைவி ஒரு காதல் பார்வையை என் மீது செலுத்திவிட்டுச் சடக்கென்று என் கையை கெட்டியாகப் பிடித்துச் சமையலறைக்கு இழுத்துக் கொண்டு போனாள்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! அன்று காலையில் எங்களுக்குள் நடந்த சண்டையை நீங்கள் அறி வீர்களானால், உங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

புது வருஷம் பிறக்கப் போகிறதே, குடும்ப சம்பந்தமாக ஏதாவது ஒரு நல்ல தீர்மானமாகச் செய்துகொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்கலாமே என்ற உத்தேசத்துடன், மங்களத்தைக் கூப்பிட்டு, ''இந்த வருஷம் புதிதாக என்ன தீர்மானம் செய்து கொள்ளலாம்?'' என்று கேட் டேன். ''என்ன தீர்மானம் செய்து கொண்டால் என்ன? அதன்படி ஒரு தடவையாவது நீங்கள் நடந்து கொண்டதுண்டோ?'' என்று என்னையே திருப்பிக் கேட்டாள்.

''போனதை விட்டுத் தள்ளு! இந்த வருஷம் சிக்கனமாக இருக்கலாமென்று பார்க்கிறேன்...''

''என்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுங்களேன்! செலவு எல்லாம் என்னால்தானே? நான் தொலைந்தால், எல்லாப் பணமுமே உங்களுக்கு மிச்சம்!''

இதற்கு நான் பதில் சொல்ல, அதற்கு அவள் பதில் சொல்ல, கடைசியில் அவள் தன் தலையில் படார், படார் என்று போட்டுக் கொண்டு சமையலறைக்குப் போய்விட்டாள். நான் என் அறைக்குப் போய்விட்டேன்.

சாதாரணமாக, எங்களுக்குள் சண்டை ஏற்பட்டால், குறைந்தது ஒரு வாரமாவது நீடித்திருக்கும். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டோம். அப்படி இருக்க, சண்டை நடந்த தினமே அவள் மேற்கூறியவாறு என்னிடம் மன்னிப்புக் கேட்டு வந்தால், ஆச்சரி யமாக இருக்காதா?

ஆனால், என் ஆச்சரியமெல்லாம் சிறிது நேரத்திற்குள்ளாகவே பறந்துபோய்விட்டது. ஆமாம், அவளுக்கும் பக்கத்து வீட்டுக்காரிக்கும் நடந்த சம்பாஷணையை நான் ஒட்டுக்கேட்டுவிட்டேன்!

''இவ்வளவு சீக்கிரமாகவா உங்களுக்குள்ளே சமாதானம் ஏற்பட்டுவிட்டது?'' என்று பக்கத்து வீட்டுக்காரி ஜன்னல் வழியாக என் சம்சாரத்தைக் கேட்டாள். அதற்கு என் சம்சாரம், ''உனக்காக நான் என் உயிரையும் விடத் தயார்! நான் செய்ததெல்லாம் தப்பிதம். மன்னித்துவிடு!' அப்படின்னு என் புருஷர் ரொம்பக் கேட்டுக்கொண்டார். 'சரி'ன்னு நானும் சமாதானமாகி விட்டேன்'' என்று பதில் சொன்னாள்.

அப்போதுதான் எனக்கு விஷயமே புரிந்தது. நான் கோபித்துக் கொண்டு என் அறைக்குப் போனதும், 'மனைவியை வெல்வது எப்படி?' என்ற புஸ்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். ''எப்படிப்பட்ட சண்டையாக இருந்தாலும், 'உனக்காக நான் உயிரையும் விடத் தயார்! நான் செய்ததெல்லாம் தப்பிதம்! மன்னித்து விடு!' என்று மனைவியிடம் சொல்லிவிட்டால், அவள் கோபம் தணிந்து, மீண்டும் காதலுடன் நடந்துகொள்வாள்'' என்று அதில் போட்டிருந்தது.

அதைப் படித்தபோது எனக்கு ஆத்திரமே உண்டாயிற்று. ''உனக்காக என் உயிரையும் விடத் தயார்! நான் செய்ததெல்லாம் தப்பிதம்! மன்னித்து விடு!'' என்ற வாக்கியத்தை ஆத்திரமாகவும் பரிகாசமாகவும் பல தடவை உரக்கச் சொல்லிச் சிரித்தேன்.

என் மனைவி அதை அறைக்கு வெளியேயிருந்து ஒட்டுக் கேட்டிருக்கிறாள். உண்மையிலேயே நான் அவ்வாறு மன்னிப்புக் கேட்டுப் புலம்புகிறேன் என்று தீர்மானித்துக் கொண்டு, என்னிடம் அன்போடு பேச வந்திருக்கிறாள், தன் கோபத்தையெல்லாம் மறந்து!

[நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்



ஞாயிறு, 29 ஜூலை, 2018

1129. பாடலும் படமும் - 40

இராமாயணம் - 12
யுத்த காண்டம், வருணனை வழிவேண்டு படலம்


[ ஓவியம்: கோபுலு ]

அண்ட மூலத்துக்கு அப்பால் 
  ஆழியும் கொதித்தது; ஏழு

தெண் திரைக் கடலின் செய்கை 
  செப்பி என்? தேவன் சென்னிப்

பண்டை நாள் இருந்த கங்கை 
  நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான்

குண்டிகை இருந்த நீரும் 
  குளுகுளு கொதித்தது அன்றே.

[ அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும்  கொதித்தது-
அண்டத்தின்   அடிப்பகுதியில்  உள்ள  பெரும் புறக்  கடலும்
கொதித்தது (என்றால்); 
ஏழு தெண்திரைக்  கடலின் செய்கை செப்பிஎன்-  உலகத்திலுள்ள   தெளிந்த   அலைகளையுடைய ஏழுகடல்களின்   செய்கையைச்   சொல்ல என்ன இருக்கிறது?;
தேவன்   சென்னிப்  பண்டை  நாள்   இருந்த  கங்கை
நங்கையும்  பதைத்தாள்-  சிவபிரானுடைய சென்னியில் வெகு
காலமாக வீற்றிருந்த கங்கையாகிய பெண்ணும்  பதைபதைத்தாள்;
பார்ப்பான் குண்டிகை இருந்த நீரும்- அந்தணர் தலைவனான பிரமனது
கமண்டலத்தில் இருந்த  தண்ணீரும்; 
குளு  குளு கொதித்தது அன்றே - குளு குளு வென ஒலித்துக் கொதிக்கலாயிற்று. ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

சனி, 28 ஜூலை, 2018

1128. காந்தி - 37

31. பூஜை வேளையில் கரடி
கல்கி 

கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( தொகுதி 2 )என்ற நூலின்  31-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
"பண்டித மோதிலால் நேருவை எப்போது கைது செய்து விட்டார்களோ, அப்போது தேசபந்து தாஸையும் சீக்கிரத்தில் கைது செய்து விடுவார்கள். பிறகு என்னையும் அதிக காலம் வெளியில் விட்டு வைத்திருக்க மாட்டார்கள்!" என்று மகாத்மா ஆசிரம வாசிகளிடம் உற்சாகத்துடன் கூறினார். "அப்படி எங்களையெல்லாம் கைது செய்து விட்டாலும் ஆமதாபாத் காங்கிரஸை நிறுத்திவிடக் கூடாது. எப்படியும் காங்கிரஸ் நடந்தே தீரவேண்டும்" என்றும் தெரிவித்தார்.

மகாத்மா அப்பொழுது உற்சாகத்தின் சிகரத்தில் இருந்தார். இது ஆசிரம வாசிகளிடம் அவர் அவ்வப்போது குதூகலமாகப் பேசியதிலிருந்தும் உரக்கச் சிரித்ததிலிருந்தும் வெளியாயிற்று. பண்டித நேரு முதலியவர் கைது செய்யப்பட்டதனால் அலகாபாத்துக்கு யாரையாவது அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அலகபாத்தில் அப்போது "இன்டிபென்டெண்ட்" என்னும் தினப்பத்திரிக்கை பிரபலமாயிருந்தது. நேரு குடும்பத்தினர் அதை நடத்தினார்கள். அதன் ஆசிரியர் ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் மதுரையைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளர். (தற்சமயம் பிரபல எழுத்தாளராயிருக்கும் ஸ்ரீ போத்தன் ஜோசப்பின் சகோதரர்.) அதோடு, மகாத்மாவிடம் மிக்க பக்தி கொண்டவர். அவர் ஆசிரியராயிருந்த "இன்டிபென்டெண்ட்" மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்தது. எனவே, நேரு குடும்பத்தாருடன், ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பும் கைது செய்யப் பட்டார். பண்டித மோதிலால் நேருவுக்கு ஆறு மாதமும் ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்புக்கு இரண்டு வருஷமும் சிறைவாசம் விதிக்கப்பட்டதாக மறு நாளே செய்தி வந்தது. (அப்போதெல்லாம் அரசியல் வழக்குகள் சட் பட்டென்று தீர்ந்து போயின. ஏனெனில் ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் கோர்ட்டுகளில் வக்கீல் வைத்து வழக்காட மறுத்தனர். ஆகவே மாஜிஸ்ட்ரேட்டுகள் உடனுக்குடன் தீர்ப்புக்கூறித் தண்டனை விதித்தார்கள்.)

"இண்டிபெண்டெண்ட்" பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவதில் உதவி செய்வதற்காக யாரையாவது அனுப்பும்படி ஸ்ரீ மகாதேவ தேஸாய் மகாத்மாவுக்குத் தந்தி யடித்திருந்தார். அதற்கிணங்க மகாத்மா ஸ்ரீ பியாரிலாலையும் ஸ்ரீ தேவதாஸையும் அலகாபாத்துக்கு உடனே புறப்படச் சொன்னார். ஸ்ரீ தேவதாஸ் அலகாபாத்தில் கைது செய்யப்படக் கூடும் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஸ்ரீ தேவதாஸ் மகாத்மாவிடம் விடை பெற்றுக் கொள்வதற்காக வந்து நமஸ்காரம் செய்தார். அப்போது மகாத்மா உரக்கச் சிரித்த வண்ணம் ஸ்ரீ தேவ தாஸுக்கு ஆசி கூறியதுடன் அவர் நமஸ்கரித்து எழுந்ததும் அவர் முதுகில் பலமாக ஒரு 'ஷொட்டு'க் கொடுத்தார். அதன் சத்தம் ஆசிரமம் முழுவதும் கேட்டது! அதிலிருந்து ஆசிரம வாசிகள் அனைவரும் மகாத்மா எவ்வளவு குதூகலமாயிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

உண்மையிலேயே மகாத்மா குதூகல மடையக்கூடிய முறையில் தேசமெங்கும் அப்போது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. லார்ட் ரெடிங்கின் சர்க்கார் கையாண்ட முறைகள் மகாத்மாவின் மனதுக்கு உகந்த முறையில் தேசமெங்கும் சாத்வீகச் சட்டமறுப்பு இயக்கம் நடப்பதற்குச் சாதனமாயிருந்தன.

"தேசீயத் தொண்டர்படை திரட்டுவது சட்ட விரோதம்" என்று அதிகார வர்க்கத்தார் உத்தரவிட்டனர். உடனே ஒவ்வொரு முக்கியமான நகரத்திலும் பிரபல தலைவர்கள் தொண்டர் படையில் சேர்ந்து கையொப்பம் இட்டார்கள். சேர்ந்தவர்களின் பெயர்கள் பத்திரிகையில் உடனுக்குடன் பிரசுரிக்கப்பட்டன; அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டன.

சிற்சில நகரங்களின் காங்கிரஸ் ஆதரவில் பொதுக் கூட்டங்கள் கூட்டக் கூடாதென்று அதிகாரிகள் உத்திர விட்டனர். உடனே அந்த நகரங்களில் குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். வேறு சில இடங்களில் 144-வது பிரிவின் பிரகாரம் பேசக் கூடாது என்று அதிகாரிகள் சில பிரபல தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு உத்திரவு போட்டார்கள். அத்தனைய உத்திரவை மீறிப் பேசப் போவதாக மேற்படி தலைவர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள்.

இவ்வாறு தேசமெங்கும் பிரபல காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் சட்டமறுப்புச் செய்து சிறை புகுவதற்குச் சர்க்கார் நடவடிக்கைகளே வசதி செய்து கொடுத்தன. அந்த வசதிகளைத் தலைவர்களும் ஊழியர்களும் நன்றாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். ஆனால் எங்கேயும் கலகம், கலவரம் எதுவும் நிகழவில்லை. பொது மக்களின் உள்ளத்தின் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆயினும் அவர்கள் பெரிய பெரிய சமூகத் தலைவர்களும் பிரமுகர்களும் சிறைபுகும் அதிசயத்தைக் கண்டு திகைத்துப்போயிருந்தார்கள். அவர்களுடைய உற்சாகத்தை வேண்டாத வழிகளில் பிரயோகிக்கவில்லை.-இந்த நிலைமை காந்திஜிக்கு எல்லையற்ற உற்சாகம் அளித்ததில் வியப்பில்லை அல்லவா?

மேலும் மேலும் நாலா பக்கங்களிலிருந்தும் பலர் கைதியான செய்திகள் வந்துகொண்டே யிருந்தன. பண்டித நேரு கைதியானதற்கு மறுநாள் கல்கத்தாவில் தேசபந்துதாஸின் தர்மபத்தினி ஸ்ரீ வஸந்தி தேவியும் அவருடைய சகோதரி ஸ்ரீமதி ஊர்மிளா தேவியும் கைதியானார்கள்! இவ்விதம் இரண்டு பெண்மணிகள்!-அதிலும் எத்தகைய பெண்மணிகள்,-சிறைப்பட்ட செய்தி இந்தியா தேசத்தையே ஒரு குலுக்கு குலுக்கிப் போட்டது.


மகாத்மா சந்தோஷத்தினால் குதித்தார். ஆசிரமத்துப் பெண்மணிகளைப் பார்த்து "உங்களில் யார் யார் சர்க்கார் விருந்தாளிகளாகத் தயார்?" என்று கேட்டார். எல்லாரும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். அவர்களில் சிலர் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் சிறை அநுபவம் பெற்றவர்கள். அவர்களைப் பார்த்து மகாத்மா, "இந்தத் தடவை வங்காளத்துச் சகோதரிகள் உங்களை முந்திக் கொண்டு விட்டார்களே!" என்று பரிகாசம் செய்தார்.

பத்தாந்தேதி இரவு பத்து மணிக்குமேல் மகாத்மா படுத்துத் தூங்கிய பிறகு, "தந்தி! தந்தி!" என்ற குரல் கேட்டது. மகாத்மா விழித்து எழுந்தார். மற்றவர்களை முந்திக்கொண்டு அவரே வாசலில் போய்க் கையெழுத்துப் போட்டுத் தந்தியைப் பிரித்துப் படித்தார். எதிர்பார்த்தபடியே தந்தியில் மிக மிக முக்கியமான செய்தி இருந்தது.

தேசபந்து தாஸ், மௌலானா ஆஸாத் ஸஸ்மால், பத்மராஜ் அக்ரம்கான் ஆகியவர்கள் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டதாகச் செய்தி கூறியது. தேசபந்து தாஸ் அந்த மாதக் கடைசியில் ஆமாதாபாத்தில் நடப்பதற்கிருந்த காங்கிரஸ் மகாசபையில் தலைமை வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே; இது மிக முக்கியமான செய்தி அல்லவா? அந்தச் செய்தியைக் கேட்டு விட்டு ஆமதாபாத்திலிருந்து தலைவர்கள் வந்தார்கள். (காங்கிரஸை முன்னிட்டு அப்போது குஜராத் தலைவர்கள் அனைவரும் ஆமதா பாத்தில் தங்கியிருந்தார்கள்.) ஸ்ரீ வல்லபாய், ஸ்ரீ மாவ்லங்கர், தயால்ஜி, கல்யாண்ஜி முதலியவர்கள் வந்தார்கள். மேலே நடக்கக்கூடிய சம்பவங்களைப் பற்றியும் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியும் அவர்கள் மகாத்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்றிரவு ஆசிரமத்தில் 'சிவராத்திரி' கொண்டாடப் பட்டது. மறுநாளும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தலைவர்கள் சிறை புகுந்த செய்திகள் வந்து கொண்டிருந்தன. சென்னையிலிருந்து ராஜாஜி தாம் வேலூரில் 144-வது பிரிவை மீறியதாகத் தந்தி அனுப்பினார். "மிகவும் சந்தோஷம். உங்களுக்குப் பூரண தண்டனை கிடைக்குமாக!" என்று மகாத்மா பதில் தந்தி அடித்தார். அடுத்த சில நாளைக்குள் கல்கத்தாவில் இரண்டாயிரம் தொண்டர்கள் சிறைப்பட்டார்கள். டில்லியில் ஜனாப் ஆசப் அலி முதலியவர்கள் சிறை புகுந்தார்கள். பஞ்சாப்பில் மிச்சமிருந்த ஆகா ஸப்தார், ஸத்தியபால் முதலிய வர்களும் சிறைப்பட்டார்கள். தேசமெங்கும் சிறைப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரம், இரண்டாயிரம், பதினாயிரம், இருபதினாயிரம், என்று போய்க் கொண்டிருந்தது.

இந்த நிலைமையைக் கண்டு வைஸ்ராய் லார்டு ரெடிங் திகைத்தார்; திணறினார். தம்முடைய திகைப்பையும் திணறலை யும் வெளியிட்டுச் சொன்னார். கல்கத்தாவில் டிசம்பர் 14-ஆம் தேதி லார்டு ரெடிங்குக்கு ஐரோப்பிய வர்த்தக சங்கத்தார் உபசாரம் அளித்தனர். அதற்குப் பதில் சொல்லும்போது லார்ட் ரெடிங் தமது திகைப்பைப் பின்வரும் வார்த்தைகளில் வெளியிட்டார்:-

"சமூகத்தில் ஒரு பகுதியாரின் காரியங்கள் எனக்கு அர்த்தமாகவில்லை யென்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து இதைப்பற்றி யோசித்தும் எனக்கு அது விளங்கவில்லை. சர்க்காரைச் சண்டைக்கு இழுக்கும்படியாக, வேண்டுமென்று சிலர் சட்டங்களை மீறுகிறார்கள்; தங்களைக் கைது செய்யும்படி சர்க்காரைக் கட்டாயப் படுத்துகிறார்கள். இதில் அவர்களுக்கு என்ன லாபம் கிட்டப் போகிறது என்று யோசித்துப் பார்க்கிறேன். இன்னமும் எனக்குத் திகைப்பாக வும் குழப்பமாகவுமே இருக்கிறது!"

இவ்விதம் லார்ட் ரெடிங் பகிரங்கமாகச் சொன்னார். அவர் தமது ஆங்கிலப் பேச்சில் Puzzled and Perplexed என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். இந்த வார்த்தைகள் ஒத்துழையாமை இயக்கத்தின் சரித்திரத்தில் மிகப் பிரபலமாயின. "மகாத்மாவின் இயக்கம் லார்ட் ரெடிங்கைத் திகைத்துத் திண்டாடிப் போகும்படிச் செய்தது" என்று ஆயிரக் கணக்கான மேடைகளில் காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் பெருமிதத்தோடு எடுத்துச் சொன்னார்கள்.

இப்படி லார்ட் ரெடிங் திகைத்துத் திணறி நின்ற வேளையில் பூஜை வேளையில் கரடியை விட்டு அடித்ததுபோன்ற ஒரு முயற்சி நடைபெற்றது. இந்தியாவின் அரசியலில் "மிதவாதிகள்" என்ற ஒரு பிரிவினர் இருந்தனர். கொஞ்ச காலமாக அவர்கள் இருந்த இடம் தெரியாமலிருந்தது. இப்போது அவர்கள் "நாங்களும் இருக்கிறோம்" என்று முன் வந்தார்கள். "நிலைமை மிஞ்சி விட்டது. இதை இப்படியே விட்டிருந்தால் வெள்ளம் தலைக்கு மேலே போய்விடும். உடனே ராஜிப் பேச்சுத் தொடங்கவேண்டும். நாங்கள் ராஜி செய்து வைக்கிறோம். இருதரப்பினரும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!" என்று கூறிக்கொண்டு மிதவாதப் பிரமுகர்கள் ராஜி செய்து வைப்பதற்கு முன் வந்தார்கள். இவ்விதம் பூஜைவேளையில் புகுந்த கரடியின் கதி என்ன ஆயிற்று என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வியாழன், 26 ஜூலை, 2018

1127. சங்கீத சங்கதிகள் - 158

எம்.எஸ்.ஸும் தமிழிசையும்
பசுபதி 

மே 2018 ‘இலக்கியவேல்’ இதழில் வந்த ஒரு கட்டுரை.






   

 பி.கு.
" மரகத வடிவும்" ( திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்) ஒலிப்பதிவு:

அந்த இசைத்தட்டின் பின்பக்கம் : ( "விதிபோலு முந்த" என்று இருக்க வேண்டும். இது திருச்செந்தூர் திருப்புகழ் )



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
பசுபடைப்புகள்
சங்கச் சுரங்கம் 

செவ்வாய், 24 ஜூலை, 2018

1126. கி.வா.ஜகந்நாதன் - 28

தவளையின் புலம்பல்
கி.வா.ஜகந்நாதன்



1943-இல் சுதேசமித்திரனில் வந்த ஒரு கட்டுரை.




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்: 
கி.வா.ஜகந்நாதன்

திங்கள், 23 ஜூலை, 2018

1125. ந.பிச்சமூர்த்தி - 3

ஆகாசத்தையல்
ந.பிச்சமூர்த்தி 




‘சக்தி’ இதழில் 1944-இல் வந்த ஒரு கதை.






 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
ந.பிச்சமூர்த்தி

ஞாயிறு, 22 ஜூலை, 2018

1124. பாடலும் படமும் - 39

இராமாயணம் - 11
யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்



ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து, உவகை கூர,

'ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந் நாள்

வாழும் நாள், அன்றுகாறும், வாள் எயிற்று அரக்கர் வைகும்

தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே; தந்தேன்' என்றான்.


[ ஆழியான் அவனை நோக்கி- ஆணையாகிய   சக்கரத்தை உடைய   இராமபிரான்  வீடணனைப் பார்த்து; 
அருள் சுரந்துஉள்ளத்திலே கருணை   பொங்க; 
உவகை கூறி - மகிழ்ச்சி மிக; 
ஏழினோடு ஏழாய்   நின்ற உலகும்-   ஏழுடன்   ஏழாகிய பதினான்கு  உலகங்களும்;   
என் பெயரும் எந்நாள் வாழும் நாள் அன்று   காறும் -   எனது  பெயரும் எத்தனை காலம் இருக்குமோ அக்காலம்   வரை;   
வாள்   எயிற்று அரக்கர் வைகும்-   ஒளிபொருந்திய   பற்களை  உடைய அரக்கர்கள் வாழும்; 
தாழ்கடல் இலங்கைச்  செல்வம் - ஆழமான கடல் நடுவே உள்ள   இலங்கையின்   அரசுச்செல்வம்;   
நின்னதே தந்தேன்   என்றான் -   உனக்கே உரிமை உடையதாகக் கொடுத்தேன் என்று கூறினான். ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

சனி, 21 ஜூலை, 2018

1123. காந்தி -36

30. சிறைகள் நிரம்பின
கல்கி

கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( தொகுதி -2) என்ற நூலில்  30-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

பம்பாய்க் கலகங்கள் மகாத்மாவுக்கு ஆத்ம வேதனையை உண்டு பண்ணியிருந்தன. ஆனால் அந்தக் கலகங்கள் நிறுத்தப் பட்ட விதம் அவருக்குத் திருப்தியை அளித்தது. போலீஸ் முயற்சியினாலும் இராணுவ நடவடிக்கைகளினாலும் கலகம் அடக்கப்பட்டிருந்தால் அதில் மகாத்மாவுக்குச் சிறிதும் திருப்தி ஏற்பட்டிராது. ஆனால் சமூகத் தலைவர்களின் முயற்சிகளினாலேயே கலகங்கள் நின்று அமைதி ஏற்பட்ட படியால் மகாத்மாவுக்கு மீண்டும் சாத்வீகச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனாலும் அதற்கு முன்னால் சில முன் ஜாக்கிரதையான ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம் என்பதைக் கண்டார். நவம்பர் 23-ஆம் தேதி பம்பாயிலே கூடிய காரியக் கமிட்டியாரிடம் அந்த ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார்.

முந்தைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மாகாணங்களுக்குப் பொதுஜனச் சட்ட மறுப்புத் தொடங்கும் உரிமை கொடுத்திருந்தது அல்லவா? அந்த உரிமையை எந்த மாகாணமும் உபயோகிக்க வேண்டாம் என்று காரியக் கமிட்டி தீர்மானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பர்தோலியில் தாம் இயக்கம் தொடங்கும்போது தேசத்தில் மற்ற இடங்களில் எல்லாம் அமைதியைப் பாதுகாத்து வந்தால் அதுவே தமக்குப் பெரிய உதவியாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.

இன்னொரு முக்கியமான திட்டத்தையும் காரியக் கமிட்டியின் முன்பு மகாத்மா பிரேரேபித்தார். அதாவது தேசமெங்கும் பல தொண்டர்படை ஸ்தாபனங்கள் அப்போது இருந்தன. அந்த ஸ்தாபனங்களை யெல்லாம் ஒரே அமைப்பின்கீழ் கொண்டு வரவேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள், கிலாபத் தொண்டர்கள், கால்ஸா (சீக்கியத்) தொண்டர்கள் என்று தனித்தனி அமைப்பாயிராமல் ஒரே அகில இந்தியத் தேசீய தொண்டர் படை ஸ்தாபனம் ஆக்க வேண்டும். இதில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு தொண்டரிடமும் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதிகளில் முக்கியமானவை :

1. "தொண்டர் படைத் தலைவர்களின் கட்டளைக்குத் தயங்காமல் கீழ்ப்படிந்து நடப்பேன்.
2. சொல்லிலும் செயலிலும் அஹிம்சா தர்மத்தைப் பாது காப்பேன்.
3. அமைதியைப் பாதுகாக்கும் கடமையைச் செய்வதில் ஏற்படும் அபாயங்களுக்குத் தயங்காமல் உட்படுவேன்."

இந்தமாதிரி வாக்குறுதி கொடுத்த தொண்டர்களைக் கொண்ட படைகளை நாடெங்கும் அமைத்து விட்டால், பம்பாயில் நடந்தது போன்ற கலவரம் வேறெங்கும் உண்டாகாமல் தடுக்கலாம் என்றும், அப்படி ஏற்பட்டாலும் உயிர்ச் சேதமில்லாமல் உடனே அமைதியை நிலை நாட்டி விடலாம் என்றும் மகாத்மா தெரிவித்தார். இதை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டியார் அவ்விதமே தீர்மானம் செய்தார்கள்.

இந்தக் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் சிலருக்குப் பொது ஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடுவதில் அதிருப்தி இருந்தது. முக்கியமாக, தேசபந்து தாஸும், ஸ்ரீ வி ஜே. படேலும் பொதுஜனச் சட்ட மறுப்பைத் தள்ளிப் போடுவதை ஆட்சேபித்தார்கள். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவுங் கூடத் தங்கள் கட்சியை எடுத்துச் சொன்னதின் பேரில் ஸ்ரீ வி. ஜே. படேலைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டார்கள்.

பம்பாயில் காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்த பிறகு மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆசிரமத்திலும் அதிருப்தி கொண்ட ஒரு கூட்டத்தார் மகாத்மாவின் வரவுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் சூரத் ஜில்லாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களுந்தான். அந்த ஜில்லாவில் பர்தோலி ஆனந்த் தாலூகாக்களில் நவம்பர் 23-ஆம் தேதியன்று பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. பம்பாய்க் கலவரம் காரணமாக மகாத்மா அதை ஒத்திப் போட்டுவிட்டார். "பம்பாயின் குற்றம் காரணமாக எங்களைத் தண்டிப்பானேன்?" என்று சூரத் ஜில்லாக்காரர்கள் கேட்டார்கள். மகாத்மா பழையபடி அவர்களுக்குத் தம் கொள்கைகளை விளக்கிச் சொன்னார்.

"சுயராஜ்யம் சூரத் ஜில்லாவுக்கு மட்டும் நாம் கோர வில்லையே? இந்தியா தேசத்துக்கே கேட்கிறோமல்லவா? ஆகையால் இந்தியா தேசமெங்கும் அஹிம்சை பாதுகாக்கப் பட்டால்தான் பர்தோலியில் நான் இயக்கம் நடத்த முடியும்" என்றார். அவ்விதம் இந்தியா தேச மெங்கும் அமைதியை நிலை நாட்டுவதற்காகத் தேசீயத் தொண்டர் படை திரட்டும் திட்டம் போட்டிருப்பதைப் பற்றியும் கூறினார். "அந்த வேலை நடக்கிறபடி நடக்கட்டும். அதற்கிடையில் பர்தோலி தாலூக்காவுக்கு நான் வந்து சுற்றிப் பார்க்கிறேன். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதற்கு வேண்டிய எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக் கிறார்களா என்று தெரிந்து கொள்கிறேன்" என்றார்.

மகாத்மா வருவதாகச் சொன்னதே சூரத் ஜில்லாக்காரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. மகாத்மாவும் பர்தோலிக்குச் சென்று சில தினங்கள் சுற்றுப் பிரயாணம் செய்தார். கிராமம் கிராமமாகப் போய்ப் பார்த்தார். அங்கங்கே பார்த்ததும் கேட்டதும் மகாத்மாவுக்குத் திருப்தி அளித்தது. சட்ட மறுப்புப் போருக்கு அவர் கூறிய நிபந்தனைகள் பெரும்பாலும் நிறைவேறி யிருந்தன.

பர்தோலி தாலூகாவில் சகல ஜனங்களும் கதர் உடுத்தியிருப்பதை மகாத்மா கண்டு மகிழ்ந்தார். ஒரு கிராமத்திலாவது சர்க்கார் பள்ளிக்கூடம் நடைபெறவில்லை யென்றும், தேசீய பாடசாலைகளுக்கே எல்லாப் பிள்ளைகளும் போகிறார்கள் என்றும் அறிந்தார். தாலூகாவில் ஒரு கள்ளுக்கடை கூடக் கிடையாது. எல்லாவற்றையும் அடியோடு மூடியாகி விட்டது. சர்க்கார் கோர்ட்டுகளுக்கு யாருமே போவதில்லை. தகராறுகளைப் பஞ்சாயத்துக்களின் மூலமாகவே தீர்த்துக்கொண்டார்கள். இவையெல்லாம் காந்திஜிக்கு மிக்க உற்சாகத்தை அளித்தது. பிரயாணத்தின் போது அங்கங்கே கண்ட சில குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும்பாடி மகாத்மா எச்சரித்தார்.

உதாரணமாக ஒரு கிராமத்தில் சாதி ஹிந்துக்கள் ஒரு பக்கமாகவும் தீண்டாதார் இன்னொரு பக்கமாகவும் நின்றிருந்தார்கள். மகாத்மா இதைக்குறிப்பிட்டுக் காட்டியதும் எல்லாரும் ஒரே இடத்தில் கலந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

பர்தோலி சுற்றுப் பிராயணத்தினால் மொத்தத்தில் மிகவும் உற்சாகத்தை அடைந்து மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்கு திரும்பி வந்தார். தேசமெங்கும் அமைதி காக்கத் தகுந்த தேசீயத் தொண்டர் படைகள் அமைக்கப் பட்டவுடனே பர்தோலியில் இயக்கம் ஆரம்பித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருடைய உள்ளத்தில் ஏற்பட்டது.


ஆனால் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி திரும்பி வந்தாரோ இல்லையோ, தேசமெங்கும் சிறிதும் எதிர்பாராத புதிய நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. அந்த நிலைமையும் மகிழ்ச்சி தரத்தக்க நிலைமைதான். தேசமெங்கும் தொண்டர் படை அமைப்பதற்குச் செய்த ஏற்பாட்டின் காரணமாக அந்த விசே ஷ நிலைமை உண்டாயிற்று. லார்ட் ரெடிங் சர்காரின் ஆத்திர புத்தியினாலும் அந்தப் புதிய நிலைமை ஏற்பட்டது. பம்பாயில் வேல்ஸ் இளவரசர் வந்து இறங்கிய அன்றைக்கு ஆரம்பித்த கலவரம் மகாத்மாவின் மனதைப் புண்பாடுத்தியதல்லவா? அதைக் காட்டிலும் அதிகமாக அந்தக் கலவரத்தின் பூர்வாங்கமான பாரிபூரண ஹர்த்தால் லார்ட் ரெடிங்கின் மனதைப் புண்பாடுத்தியது. பம்பாயில் மட்டுமல்ல; அதற்குப் பிறகு வேல்ஸ் இளவரசர் சென்ற பெரிய நகரங்களில் எல்லாம் பரிபூரண ஹர்த்தால் நடைபெற்றது. நல்ல வேளையாக அங்கெல்லாம் கலவரங்கள் ஒன்றும் விளயவில்லை. மகாத்மாவின் உண்ணாவிரதமே எச்சரிக்கையா யிருந்து மற்ற இடங்களில் கலவரம் நடைபெறாமல் காப்பாற்றியது.

ஆனால் பம்பாய்க் கலவரத்தைப் பற்றி லார்ட் ரெடிங் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. பம்பாயில் ஹர்த்தால் பரிபூரணமாக நடந்ததையும் இன்னும் மற்ற இடங்களில் நடந்து வருவதைப் பற்றியுந்தான் அவருக்கு ஆத்திரம் உண்டாயிற்று. "வேல்ஸ் இளவரசரை இப்போது வரவழைக்க வேண்டாம்!" என்று சிலர் யோசனை கூறியதற்கு மாறாக, லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசரைப் பிடிவாதமாக வரச் செய்திருந்தார். வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்யும்போது இந்தியப் பொதுமக்களிடையே அமுங்கியுள்ள இராஜ பக்தி பொங்கி எழுந்து ததும்பும் என்றும், அதன் பயனாக மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் பறந்து போய்விடும் என்றும் அப்பாவி லார்ட் ரெடிங் நம்பியிருந்தார்! அந்த நம்பிக்கை அடியோடு பொய்த்துப் போகும்படி தேசத்தில் காரியங்கள் நடந்து வந்தபடியால் லார்ட் ரெடிங்கின் ஆத்திரம் பொங்கிற்று. அந்த ஆத்திரத்தை எப்படிக் காட்டுவது, மகாத்மாவின் வளர்ந்து வரும் சக்தியை எந்த இடத்திலே தாக்குவது என்று லார்ட் ரெடிங் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

பம்பாயில் நடந்தது போல் நடந்து விடாமல் தேசமெங்கும் அமைதியைப் பாதுகாப்பதற்காகத் தேசீயத் தொண்டர் படைகளை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானித்த தல்லவா? அதன்படி தேசத்தின் பல பாகங்களிலும் தொண்டர் படைகள் அமைக்கத் தொடங்கினார்கள்.

"தொண்டர் படைகளை அமைப்பது சட்ட விரோதமான காரியம்" என்று லார்ட் ரெடிங்கின் சர்க்கார் ஒரு பெரிய வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அமைதியைக் காப்பதற்காகத் தொண்டர் படைகள் ஏற்படுகின்றன என்பதை அதிகார வர்க்கத்தார் ஒப்புக்கொள்ளவில்லை. சர்க்காரை எதிர்க்கவும் சட்ட மறுப்பு இயக்கத்தைப் பலப் படுத்தவுமே தொண்டர் படைகள் அமைக்கப்படுவதாக அதிகார வர்க்கத்தார் சொல்லி, தொண்டர் படைகளைச் சட்ட விரோத ஸ்தாபனங்கள் ஆக்கினர்.

அதே சமயத்தில் வேறு சில அடக்குமுறை பாணங்களும் அதிகார வர்க்கத்தின் தூணியிலே யிருந்து வெளிவந்தன. 'இராஜத்வே ஷக் கூட்டச் சட்டம்' என்று ஒரு சட்டம் இருந்தது. அதன்படி இராஜாங்கத்துக்கு விரோதமான பொதுக் கூட்டங்களைக் கூட்டக் கூடாதென்று தடுக்கலாம்.. மீறிக் கூட்டம் போட்டால் பலாத்தாரமாய்க் கலைக்கலாம். அல்லது கைது செய்யலாம். இதைத் தவிர, பழைய 144-வது பிரிவும் இருந்தது. தனிப்பட்ட தலைவர்கள் மீது வாய்ப்பூட்டு உத்திரவு போட இது உதவிற்று. இவ்விதமாக அந்தப் பிரசித்தி பெற்ற 1921-ஆம் வருஷத்து டிசம்பர் மாத ஆரம்பத்தில் இந்தியா தேசமெங்கும் எல்லாவித அடக்குமுறைச் சட்டங்களையும் அதிகார வர்க்கம் பிரயோகித்தது. இவ்விதம் ஏற்பட்டுள்ள புதிய நிலைமையில் என்ன செய்வது என்று நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் யோசனை கோரி மகாத்மாவுக்குத் தந்திகள் வந்தன.

அதிகார வர்க்கத்தாரின் அடக்குமுறையை எதிர்க்க வேண்டியதுதான் என்று காந்திஜி யோசனை கூறினார். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிக்கும் விஷயம் வேறு; அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் விஷயம் வேறு. முன்னது இந்தியா தேசத்தின் சுதந்திரத்துக்காக; இரண்டாவது ஜீவாதார உரிமையை நிலைநாட்டுவதற்காக. அங்கங்கே அமைதிக்குப் பங்கம் நேரும் என்ற பயம் இல்லாவிட்டால் தனிப் பட்ட தலைவர்களும் தொண்டர்களும் அநியாய உத்தரவுகளை மீறலாம் என்று மகாத்மா தெரிவித்தார். அவ்வளவுதான். தேசமெங்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. சில நாளைக்குள் அந்தப் புத்துணர்ச்சி பொங்கிப் பெருகி அலைமோதிப் பரவியது.

பம்பாய்க் கலவரம் காரணமாகப் பர்தோலி இயக்கத்தை மகாத்மா நிறுத்தி வைத்ததால் தேசத்தில் உண்டான மனத் தளர்ச்சி பறந்து போய்விட்டது.

டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி காந்தி மகாத்மா பர்தோலியிலிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் லாகூரில் டிசம்பர் 4-ஆம் தேதி லாலா லஜபதி ராய் கைது செய்யப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது. லாலாஜியுடன் பண்டித சந்தானம், டாக்டர் கோபிசந்த் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிந்தது. லாலாஜிக்குப் பதிலாக ஜனாப் ஆகா ஸப்தார் பஞ்சாப் மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் லாகூரிலிருந்து வந்த செய்தி கூறியது. எல்லாவற்றிலும் முக்கியமாக லாகூரில் ஒருவித கலவரமோ, குழப்பமோ ஏற்படவில்லை.

இதைப்பற்றி மகாத்மா தமது சகாக்களிடம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, லக்ஷ்மணபுரியிலிருந்து ஒரு செய்தி வந்தது. அங்கே பண்டித ஹரகர்நாத மிஸ்ரா, மௌலானா ஸலாமதுல்லா, சௌதரி கலிகுஸூமான் ஆகியவர்கள் கைதியானார்கள். லக்ஷ்மணபுரியிலும் அமைதி நிலவியது.

மறுநாள் 7-ஆம் தேதியன்று கல்கத்தாவில் ஸ்ரீ ஜிஜேந்திர லால் பானர்ஜியும், அஸ்ஸாமில் ஸ்ரீ பூக்கர்ன, ஸ்ரீ பர்தொலாய் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தி கிடைத்தது. 7-ஆம் தேதி இரவு மகாத்மா ஆசிரமவாசிகளுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். பர்தோலியில் பிரயாணம் செய்தது போல் ஆனந்த் தாலுகாவில் 12-ஆம் தேதி பிரயாணம் தொடங்கப் போவதாகத் தெரிவித்தார். பிறகு எல்லாரும் தூங்கப் போனார்கள்.

இரவு 11 மணிக்கு "தந்தி!" "தந்தி!" என்ற கூக்குரல் எல்லாரையும் எழுப்பிவிட்டது. காந்தி மகானும் விழித்துக் கொண்டார். இரண்டு தந்திகள் அலகாபாத்திலிருந்து வந்திருந்தன. பண்டித மோதிலால் நேரு, பண்டித ஜவாஹர்லால் நேரு, பண்டித சாமலால் நேரு, ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் ஆகியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், உடனே மகாத்மாவின் குமாரர் ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அனுப்பவேண்டுமென்றும் ஸ்ரீ மகா தேவதேஸாய் தந்தி அடித்திருந்தார்.

இந்த முக்கியமான செய்திக்குப் பிறகு தூக்கம் ஏது? பண்டித மோதிலால் ஐக்கிய மாகாணத்தில் இணையில்லாத செல்வாக்கு வாய்த்திருந்தவர். அதிகார வர்க்கத்தாரும் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஆகவே பண்டித மோதிலால் நேருவைக் கைது செய்தது சாதாரண விஷயம் அல்ல.பண்டித மோதிலாலைக் கைது செய்தார்கள் என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் தீவிர அடக்குமுறையைக் கையாளத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் அர்த்தம். ஆகையால், அடுத்தாற்போல் தேசபந்து தாஸையும் கைது செய்யலாம். ஏன்? மகாத்மா காந்தியைக் கைது செய்வதும் சாத்தியமேயாகும்.

இந்த எண்ணங்கள் எல்லாம் மகாத்மாவின் மனதில் மின்னல்போலத் தோன்றின. உடனே காந்திஜி என்ன செய்தார் தெரியுமா? ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அழைத்து உடனே அலகாபாத்துக்குப் புறப்படச் சொன்னார். பிறகு "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுத உட்கார்ந்தார். அந்த கட்டுரையின் தலைப்பு "அன்பு-பகைமை அல்ல" என்பது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதத்துக்கு நம்முடைய பதில் ஆயுதம் அன்புதானே தவிர, பகைமை அல்ல என்ற கருத்துடன் மகாத்மா "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுதினார். ஒருவேளை, தம்மைக் கைது செய்துவிட்டாலும் இந்தியப் பொது மக்கள் அன்பு நெறியையே கடைப்பிடிக்கவேண்டும் என்று அதில் குறிப்பாகத் தெரிவித்தார்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வெள்ளி, 20 ஜூலை, 2018

1122. எலிப் பந்தயம் : கவிதை

எலிப் பந்தயம் 
பசுபதி


வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா! — உன்றன்
. . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் !
சூழ்ந்திருக்கும் உன்குடும்பம் அன்புக் குருகி — உன்னைச்
. . . சுற்றிவந்து ஏங்குவதைப் பாரு துரையே! (1)

எரிச்சலுடன் எழுந்திருந்து காபி குடித்து — மனையை
. . . ஏறெடுத்தும் பார்த்திடாது போகும் மனிதா!
கரிசனத்தைக் காபியுடன் சேர்த்துக் கொடுக்கும் — வண்ணக்
. . . கைவளைகள் கொஞ்சுவதைப் பாரு கணவா ! (2)

காலையிதழ் வாரவிதழ் தேடிப் பிடித்தே — அதில்
. . . கண்புதைத்துக் காலமதைப் போக்கும் மனிதா!
காலருகே சுற்றிவரும் சின்னக் குழந்தை — அந்தக்
. . . கண்சிரிப்பில் கொஞ்சநேரம் மூழ்கி எழய்யா! (3)


சந்தையிலே பங்குகளின் புள்ளி விவரம் — போன்ற
. . . சங்கதிகள் நாளுமுருப் போடும் மனிதா!
சந்ததமுன் துக்கசுகம் பங்கு பெறுவாள் — அவள்
. . . சந்தையில்காய் வாங்கப்பை தூக்கு தலைவா! (4)

நள்ளிரவில் கண்விழித்துக் கணினி வழியாய்த் — தொலை
. . . நாட்டிலுள்ள நண்பனுடன் பேசும் மனிதா!
பள்ளிதந்த வேலையதில் மூச்சுத் திணறும் — உன்றன்
. . . பையனுக்கும் கொஞ்சம்வழி காட்டி விடய்யா! (5)


சாலையோரம் தள்ளிநின்று வாழ்வைச் சுவைப்பாய் ! — உன்றன்
. . . சம்பளமே சாரமென்று நம்பி விடாதே !
காலைமுதல் மாலைவரை ஓடும் மனிதா! — இங்கே
. . . காலத்தேர் கருணையின்றிச் சுற்றும் விரைவாய்! (6)

[ ‘திண்ணை’ இதழில் 2001-இல் வெளியானது ]

தொடர்புள்ள பதிவுகள் :

புதன், 18 ஜூலை, 2018

1121. வ.ரா. - 5

வ.ரா.
ப.ராமஸ்வாமி



‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை.



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.ரா.

செவ்வாய், 17 ஜூலை, 2018

1120. வேங்கடசாமி நாட்டார் -2

தொல்காப்பியம்
மு.வேங்கடசாமி நாட்டார் 



‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை.





 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
வேங்கடசாமி நாட்டார்

ஞாயிறு, 15 ஜூலை, 2018

1119. பாடலும் படமும் - 38

இராமாயணம் - 10
சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.




பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து
                             பொங்கி,
மெய்யுறவெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை
                            விட்டான்;
ஐயனுக்கு, அங்கி,முன்னர், அங்கையால் பற்றும்
                            நங்கை
கை எனல் ஆயிற்றுஅன்றே-கை புக்க மணியின்
                            காட்சி !

கைபுக்க மணியின்காட்சி - (இராமபிரான்) கையில்புகுந்த அந்தச் சூடாமணியின் தோற்றம்; 

ஐயனுக்கு அங்கி முன்னர் - அந்த இராமபிரானுக்கு, (திருமணக் காலத்தில்) அக்கினி முன்னிலையில்;

அம்கையால் பற்றும் நங்கை கைஎனல் ஆயிற்று - அழகிய கையினால் பிடிக்கப்பட்ட பிராட்டியின் கையைப் போல விளங்கியது; (ஆதலின்)  

பயந்த காமம் பைபைய பரிணமித்து உயர்ந்து பொங்கி - (அதனால்) உண்டான ஆசை உணர்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்து மேன்மேல் எழுதலால்; 

மெய் உற வெதும்பி - உடல் நன்றாய் வெப்பமுற்று; 

உள்ளம் மெலிவுறும் நிலையை விட்டான் - மனம் தளர்ச்சியடைகின்ற தன்மையை நீக்கினான் ]


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

சனி, 14 ஜூலை, 2018

1118. காந்தி -35

29. "என் மதம்"
கல்கி

கல்கி’ யின்‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( தொகுதி 2 ) என்ற நூலில்   29-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. ]
===
மகாத்மா காந்தி "எங் இந்தியா"வுக்குக் கட்டுரை எழுதி முடித்துச் சிறிது நேரத்துக்கெல்லாம் மௌலானா ஆஸாத் ஸோபானி திரும்பி வந்து சேர்ந்தார். தாம் காந்தி குல்லா அணியாததால் விபத்து ஒன்றுமில்லாமல் தப்பிப் பிழைத்து வந்ததாக அவர் சொன்னார். பார்ஸிகளும் கிறிஸ்துவர்களும் காந்தி குல்லா அணிந்தவர்களைக் குறிப்பிட்டுத் தாக்கி அடிப்பதாகத் தெரிவித்தார்.

மற்றொரு பக்கத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு பார்ஸிகளையும் கிறிஸ்துவர்களையும் தாக்குவதாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் சர்க்காருடைய அநுமதி பெற்றுத் துப்பாக்கிகளும் ரிவால்வர்களும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். ஹிந்துக்கள்-முஸ்லிம்களிடம் தடிகள்தான் ஆயுதங்களாக இருந்தன. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக யிருந்தனர். இவ்விதமாக இருதரப்பிலும் பலாத்காரச் செயல்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகமாகி வந்தன.

சில பார்ஸி இளைஞர்கள் துப்பாக்கி சகிதமாக ஸ்ரீ கோவிந்த வஸந்த் என்னும் மிட்டாய்க் கடைக்காரரின் வீட்டுக்குள் பலாத்காரமாகப் புகுந்து அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் செய்தி மகாத்மாவின் ஜாகையை எட்டியபோது அந்த ஜாகையில் வசித்த மகாத்மாவின் சகாக்கள் பெருங் கவலையில் ஆழ்ந்தார்கள். அந்த மாதிரி முரட்டுப் பார்ஸி இளைஞர்கள் சிலர் மகாத்மாவின் ஜாகைக்குள்ளும் புகுந்து அவரைத் துன்புறுத்த முற்பட்டால் என்ன செய்கிறது? மகாத்மாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் பிறகு பம்பாயில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதில் சந்தேகமில்லை. ஹிந்து-முஸ்லிம்கள் அப்போது பார்ஸிகளின்மீது பழிவாங்கத் தொடங்குவதை யாராலும் நிறுத்த முடியாது.

இப்படிக் காந்தியின் சகாக்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் மகாத்மாவோ தன்னைப் பற்றிச் சிந்திக்கவே யில்லை. இந்தப் பலாத்காரப் பிசாசின் தாண்டவத்தை நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியே சிந்தனை செய்தார். அவர் வெளியேறிச் சென்று ஜனங்களுக்கு நற்போதனை செய்வதால் பலன் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றவில்லை. முதல் நாள் அவ்விதம் செய்து பார்த்ததில் பலன் ஏற்படவில்லையல்லவா?

மகாத்மாவின் அநுதாபமெல்லாம் பார்ஸிகள் பக்கத்திலேயே இருந்தது. ஏனெனில் முதலில் அவர்களைப் பலாத்காரமாகத் தாக்கத் தொடங்கியவர்கள் ஹிந்து-முஸ்லிம்கள்தான். முதலில் தாக்கியது மட்டும் அல்ல; செய்யத் தகாத மதத் துவேஷக் காரியம் ஒன்றையும் செய்து விட்டார்கள். பார்ஸிகள் தங்களுடைய மதத்தைத் தொந்தரவின்றிக் கடைப்பிடிப்பதற்காக ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் இந்தியாவைத் தேடி வந்தவர்கள். அராபிய முஸ்லிம்கள் பாரஸீகத்தை வென்றபோது, முஸ்லிம் ஆட்சியில் மத சுதந்திரம் இராது என்று இந்தியாவுக்கு அவர்கள் வந்தார்கள். இந்தியாவில் அவர்கள் கோரிய மத சுதந்திரம் கிடைத்தது. பார்ஸிகள் அக்னி தேவனைக் கடவுள்என்று பூஜிப்பவர்கள். ஆகையால் என்றும் அணையாத தீயை அவர்கள் தங்கள் கோயிலில் வைத்து வளர்த்துப் பூஜித்து வந்தார்கள். வேல்ஸ் இளவரசர் விஜயத்தன்று நடந்த களேபரத்தில் ஹிந்து முஸ்லிம்கள் அந்தப் பார்ஸிக் கோயிலில் புகுந்து அணையா நெருப்பை அணைத்து விட்டார்கள். இதுதான் பார்ஸி சமூகத்தினருக்கு என்றுமில்லாத ஆத்திரத்தை மூட்டிவிட்டது. தங்கள் மத சுதந்திரத்துக்குப் பங்கம் நேரிடுவதைப் பொறுப்பதைக் காட்டிலும், பம்பாயிலுள்ள பார்ஸிகள் அனைவரும் உயிரை இழக்கத் தயாராகக் கிளம்பி விட்டார்கள். இந்த விவரங்களை அறிந்த காந்திஜி பார்ஸிகள்மீது குற்றம் இருப்பதாக எண்ணவில்லை. இந்த நிலைமைக்குக் காரணம் ஹிந்து-முஸ்லிம்கள் என்றே கருதினார்.

அன்று இரவு வெகு நேரம் வரையில் பம்பாய்ப் பிரமுகர் அடிக்கடி வந்து மகாத்மாவிடம் கலவர நிலைமையைப் பற்றிச் சொல்லி வந்தார்கள். இரவு வந்த பிறகும் கலவரங்கள் அடங்கின வென்று தெரியவில்லை. பார்ஸி-கிறிஸ்துவ சமூகத்தினரிடமிருந்து மகாத்மாவுக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அவரால் தங்கள் சமூகத்துக்கு நேர்ந்த இன்னல்களைப் பற்றி அக்கடிதங்களில் எழுதியிருந்ததுடன் மகாத்மாவை வெகுவாக நொந்திருந்தார்கள். சிலர் வசைமாரியும் பொழிந்திருந்தார்கள். சொத்துக்களைப் பறிகொடுத்தவர்களும் அடிபட்டவர்களும் உறவினர்களை இழந்தவர்களும் வேதனைப்பட்டு எழுதியிருந்தார்கள். இதெல்லாம் மகாத்மாவின் மனவேதனையை அதிகமாக்கி விட்டன.

அன்றிரவு கடைசியாக வந்த ஸ்ரீ ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் காந்திஜியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். இரவு பத்தரை மணிக்கு மகாத்மா படுத்தார். ஆனால் அவர் தூங்கவில்லை. தூக்கம் எப்படி வரும்? அதே அறையில் மகாத்மாவின் காரியதரிசியான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரும் படுத்திருந்தார். அவர் சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார்.


இரவு மணி 3-30 இருக்கும். மகாத்மா எழுந்து மின்சார விளக்கைப் போட்டார். உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸும் விழித்துக் கொண்டார். "பென்ஸிலும் காகிதமும் கொண்டு வாரும்!" என்றார் மகாத்மா. உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கொண்டு வந்தார். மகாத்மா விரைவாக ஏதோ எழுதினார். பிறகு ஸ்ரீ கிருஷ்ணதாஸிடம் கொடுத்து அதன் பிரதிகள் மூன்று எடுக்கச் சொன்னார். மகாத்மா எழுதியது பம்பாய் வாசிகளுக்கு ஒரு விண்ணப்பம். அதில் மிகக் கடுமையான ஒரு விரதத்தைத் தாம் எடுத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார். பம்பாயில் கலவரம் நிற்கும் வரையில் தாம் உணவருந்தா விரதம் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். விண்ணப்பத்தின் முழு விவரம் பின்வருமாறு:-

"பம்பாய் நகரின் ஆடவர்களே! பெண்மணிகளே! சென்ற இரண்டு தினங்களாக என் மனம் படும் வேதனையை நான் வார்த்தைகளால் உங்களுக்கு விவரிக்க முடியாது. இரவு 3-30-க்கு அமைதியான மன நிலையில் நான் இதை எழுதுகிறேன். இரண்டு மணி நேரம் தியானமும் பிரார்த்தனையும் செய்த பிறகு நான் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். அதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

பம்பாயில் உள்ள ஹிந்து-முஸ்லிம்கள் பார்ஸிகளுடனும் கிறிஸ்துவர்களுடனும் சமாதானம் செய்து கொள்ளுகிற வரையில் நான் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் உட்கொள்ளப் போவதில்லை.

சென்ற இரண்டு தினங்களில் பம்பாயில் நான் பார்த்த சுயராஜ்யம் நாற்றம் எடுத்து என் மூக்கைத் துளைக்கிறது. பம்பாயில் கிறிஸ்தவர்கள், பார்ஸிகள்-யூதர்கள் சிறு தொகையினர். பெரும்பாலானோரான ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமை மேற் கண்டவர்களுக்குப் பெரும் அபாயமாய் முடிந்திருக்கிறது. ஒத்துழையாதாரின் அஹிம்சையைவிட மோசமாகிவிட்டது. அஹிம்சை என்று வாயால் சொல்லிக்கொண்டு நம்முடன் மாறுபட்டவர்களை நாம் துன்புறுத்தி யிருக்கிறோம். இது கடவுளுக்குத் துரோகமாகும். கடவுள் ஒருவரே. சிலர் வேதத்தின் வாயிலாகவும் சிலர் குர்-ஆன் மூலமாகவும் வேறு சிலர் (பார்ஸிகள்) ஸெண்டவஸ்தா மூலமாகவும் கடவுளை அறியப் பார்க்கிறார்கள். ஆனால் எல்லாரும் அறியப் பார்க்கும் கடவுள் ஒருவரேதான். அவர் சத்தியத்தின் வடிவம்; அன்பின் உருவம். இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கவே நான் உயிர் வாழ்கிறேன். இல்லாவிட்டால் உயிர் வாழ்வதிலேயே எனக்கு விருப்பமில்லை. நான் எந்த இங்கிலீஷ்காரனையும் வெறுக்க முடியாது; வேறு எந்த மனிதனையும் வெறுக்க முடியாது. இங்கிலீஷ்காரன் இந்தியாவில் அமைத்திருக்கும் ஸ்தாபனங்களை எதிர்த்து நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் அமைப்பை நான் கண்டிக்கும்போது அந்த அமைப்பை நடத்தும் மனிதர்களை வெறுக்கிறேனென்று தப்பாக நீங்கள் உணரக்கூடாது. நான் என்னை நேசிப்பது போலவே இங்கிலீஷ்காரனையும் நேசிக்கிறேன். இதுதான் என் மதம். இதை நான் இந்தச் சமயத்தில் நிரூபிக்கா விட்டால் கடவுளுக்குத் துரோகம் செய்தவனாவேன்.

பார்ஸிகளைப் பற்றி நான் என்ன சொல்ல? பார்ஸிகளின் கௌரவத்தையும் உயிர்களையும் ஹிந்து-முஸ்லிம்கள் பாதுகாக்கா விடில், சுதந்திரத்துக்குச் சிறிதும் தகுதியற்றவர்களாவோம். சமீபத்திலேதான் அவர்கள் தங்களுடைய தாராள குணத்தையும் சிநேகப் பான்மையையும் நிரூபித்தார்கள். பார்ஸிகளுக்கு முஸ்லிம்கள் முக்கியமாகக் கடமைப் பட்டிருக்கிறார்கள். கிலாபத் நிதிக்குப் பார்ஸிகள் ஏராளமாய்ப் பணம் உதவியிருக்கிறார்கள். ஆகையால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு பூரண பச்சாதாபம் காட்டினாலன்றி பார்ஸிகளின் முகத்தில் என்னால் விழிக்க முடியாது. இந்தியக் கிறிஸ்துவர்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்தாலன்றி கிழக்காப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் ஸ்ரீ ஆண்ட்ரூஸின் முகத்தை என்னால் பார்க்க முடியாது. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் தற்காப்புக்காகவோ, பழிவாங்குவதற்காகவோ செய்திருக்கும் காரியங்களை நாம் பொருட்படுத்தக் கூடாது.

என் நிமித்தமாகவே பம்பாயிலுள்ள இந்தச் சிறுபான்மைச் சகோதர சகோதரிகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டங்கள் நேர்ந்து விட்டன. அவர்களுக்குப் பூரண பரிகாரம் செய்து கொடுப்பது என் கடமை. ஒவ்வொரு ஹிந்து முஸ்லிமின் கடமையும் ஆகும். ஆனால் என்னைப் பின்பற்றி வேறு யாரும் பட்டினி விரதம் தொடங்க வேண்டாம். இதய பூர்வமான பிரார்த்தனையின் காரணமாக உபவாசம் இருக்கத் தோன்றினால்தான் உபவாசம் இருக்கலாம். அதற்கு அந்தராத்மாவின் தூண்டுதல் அவசியம். ஆகையால் ஹிந்து முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டாம். அவரவர்கள் வீட்டிலிருந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்கட்டும்.

என்னுடைய சகாக்கள் என்பேரில் அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை. அது வீண்வேலை. அதற்குப் பதிலாக நகரெங்கும் சென்று கலகம் செய்பவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முயலவேண்டும். நம்முடைய போராட்டத்தில் நாம் முன்னேறி வெற்றி பெற வேண்டுமானால் முதலில் நம்முடைய இருதயங்களைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

என் முஸ்லிம் சகோதரர்களுக்கு விசே ஷமாக ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். நான் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பரிபூரணமாகப் பாடுபட்டு வருகிறேன். கிலாபத் இயக்கத்தை ஒரு பரிசுத்த இயக்கமாகக் கருதி அதில் ஈடுபட்டிருக்கிறேன். அலி சகோதரர்களிடம் என்னைப் பூரணமாக ஒப்புவித்திருக்கிறேன். பம்பாயில் நடந்த இந்த நாள் இரத்தக்களரியில் முஸ்லிம்கள் அதிகப் பங்கு எடுத்திருப்பதாக அறிந்து என் மனம் வருந்துகிறது. ஒவ்வொரு முஸ்லிமையும் நான் மன்றாடி வேண்டிக்கொள்கிறேன். இந்த இரத்தக் களரியைத் தடுத்து நிறுத்த அவர்கள் முழு முயற்சியும் செய்யவேண்டும்.

கடவுள் நமக்கு நல்லறிவையும் நல்ல காரியத்தைச் செய்வதற்கு வேண்டிய தைரியத்தையும் அளிப்பாராக.
இங்ஙனம், உங்கள் ஊழியன், 'எம். கே. காந்தி'
மேற்கண்ட விண்ணப்பத்தை மகாத்மா காந்தி எழுதிக்கொடுத்தார். அதை இங்கிலீஷ், குஜராத்தி, மராத்தி. உருது ஆகிய நாலு பாஷைகளிலும் அச்சிட்டுப் பம்பாய் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விநியோகித்தார்கள். இந்த முயற்சிக்கு ஒரு நாள் முழுதும் ஆகி விட்டது. பலன் இன்னும் தெரிந்தபாடில்லை. மகாத்மாவோ தண்ணீரைத் தவிர வேறொன்றும் அருந்த வில்லை. ஒரு நிமிடங்கூடச் சும்மா இருக்கவும் இல்லை. ஊழியர்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள். தாங்கள் செய்த காரியங்களைச் சொல்லி விட்டு, செய்ய வேண்டியதற்கு யோசனை கேட்டுக் கொண்டு போனார்கள். "உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்ததிலிருந்து என் மனம் அமைதி யடைந்திருக்கிறது. களைப்பே தெரியயவில்லை!" என்று மகாத்மா அடிக்கடி தம் சகாக்களிடம் உண்ணாவிரதம் ஆரம்பித்ததோடு மகாத்மா நிற்கவில்லை. ஸ்ரீ தேவதாஸ் காந்திக்குத் தந்தி கொடுத்து வரவழைத்தார். தம்முடைய உண்ணாவிரதத்தினாலும் பம்பாய்க் கலகம் நிற்காமற் போனால் அஹிம்சையை நிலை நாட்டுவதற்காகத் தமது குமாரனைப் பலியாக அனுப்பப் போவதாகச் சொன்னார்.

இதைக் கேட்ட மகாத்மாவின் சகாக்கள் பெரிதும் வருத்த மடைந்தார்கள். அமைதியை நிலை நாட்டுவதற்காகப் பிரம்மப் பிரயத்தனம் செய்தார்கள். ஸ்ரீமதி சரோஜினி நாயுடு, மௌலானா ஆஸாத் ஸோபானி, ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ பரூச்சா ஆகியவர்கள் பம்பாய் நகரமெல்லாம் பம்பரம் போலச் சுழன்றார்கள். ஜனங்களின் பலாத்காரம் காரணமாக மகாத்மா பட்டினி கிடப்பதை எடுத்துரைத்தார்கள். எங்கேயாவது கலகம் நடக்கும் போலிருப்பதாகச் செய்தி வந்தால் அந்த இடத்துக்குப் பறந்து ஓடினார்கள். ஜனங்களிடம் பேசிக் கலகம் நேராமல் தடுத்து அமைதியை நிலை நாட்டினார்கள்.

மறுநாள் 20-ஆம் தேதி மகாத்மாவின் ஜாகையில் பம்பாய்ப் பிரமுகர்களின் கூட்டம் ஒன்று நடந்தது. ஹிந்து, முஸ்லிம், பார்ஸி பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அமைதி நிலைநாட்டும் வழிகளைப் பற்றி விவாதங்கள் நடந்தன. பார்ஸிகள் சிறு பான்மையாரானபடியாலும், முதலில் தாக்கப்பட்டவர்களான படியாலும், சமாதானத்துக்குப் பார்ஸிகள் சொல்லும் நிபந்தனை களை மற்ற வகுப்பார் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று காந்திஜி சொன்னார். அதை முதலில் மற்றவர்கள் மறுத்தார்கள். மகாத்மா வற்புறுத்தியதால் இணங்கினார்கள். பார்ஸிகளிடம் சமாதானம் ஏற்படுத்தும் பொறுப்பை ஒப்புவித்ததும் அவர்களும் நியாயமான நிபந்தனைகளையே சொன்னார்கள். மற்றவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

அன்று சாயங்காலம் மோட்டார் லாரிகளில் ஹிந்து- முஸ்லிம்-பார்ஸி பிரமுகர்கள் கோஷ்டி கோஷ்டியாக ஏறிக்கொண்டு நகரெங்கும் சுற்றினார்கள். சமூகங்களுக்குள் நல்லபடியான சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்துக் கொண்டே போனார்கள். இவ்விதம் எல்லாப் பிரமுகர்களும் தீவிர முயற்சி செய்ததின் பயனாக, இரண்டு நாளில் பம்பாய் நகரமெங்கும் பூரண அமைதி ஏற்பட்டு விட்டது.

21-ஆம் தேதி இரவு பம்பாயில் பலாத்கார நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை என்று தெரியவந்தது. 22-ஆம் தேதி காலையில் மகாத்மாவின் ஜாகையில் மறுபடியும் எல்லா சமூகப் பிரதிநிதிகளும்கூடி மகாத்மாவை உணவு அருந்தும்படி கேட்டுக் கொண்டார்கள்.

"இந்த அமைதி நீடித்திருப்பதற்குப் பிரயத்தனம் செய்வதாக நீங்கள் அனைவரும் சேர்ந்து வாக்குறுதி கொடுத்தால் என் விரதத்தை முடிவு செய்கிறேன்" என்று மகாத்மா கூறினார். அவ்வாறே பிரமுகர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அதன் பேரில் சில திராட்சைப் பழங்களையும் ஒரு ஆரஞ்சுப் பழத்தையும் அருந்தி மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை முடிவுசெய்தார்! பம்பாய் மக்கள் அனைவரும் அந்தச் சந்தோஷச் செய்தியைக் கேட்டுப் பெருமூச்சு விட்டு மகிழ்ந்தார்கள்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]