செவ்வாய், 10 ஜூலை, 2018

1114. சி.சு.செல்லப்பா - 3

"எழுத்து” சி.சு.செல்லப்பா - 2
வல்லிக்கண்ணன்



"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1

( தொடர்ச்சி )

4

சி.சு. செல்லப்பாவை நான் முதன் முதலாகப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. 1945ஆம் வருடம். அப்போது திருச்சியில் இருந்து 28 மைல்கள் தள்ளி உள்ள துறையூர் என்கிற சிற்றுரரில், கிராம ஊழியன்' என்னும் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இரு முறை இதழ்நடந்து கொண்டிருந்தது. அதில் நான் பணியாற்றி வந்தேன். அதே சமயம் என்னுடைய இதயஒலி எனும் கையெழுத்துப் பத்திரிகையும் வளர்த்து வந்தேன். திருச்சி மாவட்ட கையெழுத்துப் பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைந்த 'முதலாவது மாநாடு ' நடத்தினார்கள். அதற்கு வரவேற்புக்குழுத்தலைவராக எனக்குபொறுப்பளித்தார்கள்.

ஸ்ரீரங்கம் ஊரில் நடைபெற்ற அம் மாநாட்டுக்கு 'ஆனந்தவிகடன் உதவிஆசிரியர் நாடோடி, 'பாரததேவி நாளிதழ் ஆசிரியர் கே. அருணாசலம், மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன் முதலியவர்கள் வந்திருந்தார்கள். சிட்டியுடன் அவர் நண்பர் செல்லப்பாவும் வந்தார். அப்போதுதான் முதன்முறையாக நான் அவரைப் பார்த்தேன். சிட்டி அறிமுகப்படுத்தினார். அவ்வளவு தான். செல்லப்பா அம்முறை என்னுடன் சகஜமாகப் பேசிப் பழகவில்லை.

அக்காலக்கட்டத்தில் சி.சு.செல்லப்பா வத்தலக்குண்டு ஊரில் வசித்து வந்தார். கையால்காகிதம்செய்து, தக்ளி'யில் நூல் நூற்பது போன்ற காந்தி வழிக்குடிசைத் தொழில் முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயல்புகளில் இதுவும் சேரும். படிப்பு, எழுதுவது, இலக்கியம் பற்றிப் பேசுவது, பத்திரிகைகளில் வேலை பார்ப்பது என்பனவற்றில் அவர்காட்டி வந்த உற்சாகத்தையும் செயலூக்கத்தையும் கைத்தொழில் போன்ற இதர முயற்சிகளிலும் ஈடுபடுத்தி மகிழ்ந்தார்.

பஞ்சினால் அழகு அழகான சிறுபொம்மைகள், பறவைகள், முயல்குட்டி, நாய் போன்றவை செய்வதில் கைதேர்ந்தவர் அவர். நவராத்திரி சமயத்தில் பொம்மைக் கொலு வைத்து, வயர் மாட்டி சின்னச் சின்ன பல்புகள் கொண்டு அலங்காரம் செய்து ஒளியேற்றுவதில் அவர் அதிகமான உழைப்பையும் நேரத்தையும் செலவிடுவது உண்டு.

வத்தலக்குண்டில் அவர் வீட்டின் பின்பக்கம் காலிஇடம் அதிகம் இருந்தது. அதைப் பண்படுத்தி காய்கறிப் பயிர்கள் வளர்ப்பதிலும், முருங்கை தென்னை கொய்யா வாழை முதலிய மரங்கள் வளர்ப்பதிலும், அவற்றிலிருந்து பலன்கள் பெறுவதிலும் அவர் தீவிர முனைப்புக் காட்டி உழைத்திருக்கிறார்.

'வாடிவாசல் என்ற அவருடைய சிறப்பான நெடுங்கதையை அவர் புத்தகமாக வெளியிட விரும்பினார். அதில் மாட்டுச் சண்டை சம்பந்தமான படங்கள்சேர்க்க ஆசைப்பட்டார். அதற்காக, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சி விரட்டு (ஜல்லிக்கட்டு) - மாடுகளுக்கும் மனிதருக்கும் நிகழும் சண்டை- காட்சிகளை படம் பிடிக்கத் தீர்மானித்தார். அவரேகாமிராவை கையாண்டு, விரும்பிய கோணங்களில் எல்லாம் போட்டோ எடுத்தார். அவற்றை அவரே தன் வீட்டில் இருட்டறை அமைத்து, கழுவி, பிரிண்ட் போட்டு, படங்களாக்கினார். அதற்குத் தேவையான பயிற்சிகள் பெறுவதில் அவர் சலிப்பில்லாமல் காலம் செலவிட்டிருந்தார்.

இப்படி புதுமைகள் பண்ணுவதிலும், புதியன கற்றுக் கொள்வதிலும் செல்லப்பா தனது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.

சிறுகதைகளையே எழுதிக் கொண்டிருந்த செல்லப்பா இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட நாட்டம் கொண்டார். அதற்காக அமெரிக்க, ஐரோப்பிய இலக்கிய விமர்சன நூல்களைப் படிப்பதில் தீவிரமாக முனைந்தார். அமெரிக்கன் லைபிரரி, பிரிட்டிஷ் லைபிரரிகளிலிருந்து பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து, வீட்டில் உட்கார்ந்து விடாமுயற்சியோடு படித்தார். ஐந்தாறு நாட்கள் சேர்ந்தாற்போல வீட்டை விட்டு வெளியே எங்கும் போகாமல் விமர்சன நூல்களைப் படிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். அவர் இந்தச் சமயத்தில் திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெரு வீட்டில் மாடியில் வசித்தார். மாடியை விட்டுக் கீழே இறங்காமல் இப்படி அநேக நாட்கள் படிப்பில் கழித்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.

ஒரு கால கட்டத்தில், பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஒரு ஆய்வு மாணவனின் ஊக்கத் தோடு படித்தறிவதில் உற்சாகம் காட்டினார் செல்லப்பா.

 செல்லப்பாவின் மனஉறுதி, வைராக்கியத்தோடு ஒரு காரியத்தை செய்து முடிக்கும் குணம், எண்ணியதைச்செய்து தீர்க்கும் விடாப்படியான தன்மை, கொள்கைப் பிடிப்பு, நட்பு உணர்வு முதலிய பண்புகள் வியந்து போற்றப்பட வேண்டியன ஆகும்.
5
செல்லப்பா தானே சொந்தமாக இலக்கிய விமர்சனத்துக்கு என்று ஒரு பத்திரிகை நடத்தத் துணிந்தார். அதற்கு வித்தியாசமாக - அதுவரை எவரும் எண்ணாத விதத்தில் - எழுத்து என்று பெயர் வைத்தார். இதற்காகப் பலரும் அவரைக் கேலி செய்தார்கள்.

இதில் என்ன தவறு.இருக்கிறது? இங்கிலீஷில் ரைட்டிங், நியூரைட்டிங் என்றெல்லாம் பெயர்வைத்து இதழ் நடத்தவில்லையா? அதே மாதிரிதான் இதுவும் என்று செல்லப்பா பதிலளித்தார்.

அவர் காட்டிய வழியில் பின்னர் பலரும் பத்திரிகைகளுக்கு வித்தியாசமான பெயரை வைக்கத்துணிந்தார்கள். நடை, கசடதபற, ங், ஐ, அஃ என்றெல்லாம்.

உண்மையான சிறுபத்திரிகை (லிட்டில் மேகசின்) நடத்துவதிலும் செல்லப்பாதான் முன்னோடியாய், வழிகாட்டியாய் செயல்பட்டிருக்கிறார். "எழுத்து பத்திரிகை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்காது. சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட குறைந்த எண்ணிக்கையில் தான் பிரதிகள் அச்சிடப்படும் என்று அறிவித்துக் கொண்டு, அவ்விதமே செயலாற்றினார். பன்னிரண்டு வருட காலம் அப்படி, தனித்தன்மை உடைய ஒரு பத்திரிகையை நடத்தியது மாபெரும் சாதனையாகும்.

அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களும் நஷ்டங் களும் அதிகமாகும். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக அவர் ஊர்ஊராக அலைந்து திரிந்தார். ரயிலிலும், பஸ்ஸிலும், நண்பர்களின் சைக்கிள் பின்னால் அமர்ந்தும், நடந்தும் போய், படிப்பில் ஈடுபாடு உடைய அன்பர்களை அணுகி, எழுத்து பத்திரிகை பற்றி எடுத்துச் சொல்லி செல்லப்பா இதழை வளர்க்கப் பாடுபட்டார். அது இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுவதாகும். அந்தப்பத்திரிகையே தனி இலக்கிய வரலாறு ஆகத் திகழ்வதும் ஒரு விசேஷம் ஆகும்.

அதே போல் தான் அவர் புத்தக வெளியீட்டில் ஈடுபட்டதும். வணிகப் பிரசுரகர்கள் தனது எழுத்துக்களை புத்தகமாக வெளியிட முன்வரவில்லை என்றதும், தானே தன்னுடைய எழுத்துக்களை நூல்களாக்குவது என்று செல்லப்பாதீர்மானித்தார். அதற்காக எழுத்து பிரசுரம் ஆரம்பித்தார். குறிப்பிடத் தகுந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.

அவர் தன்னுடைய நூல்களை வெளியிட்டதுடன் நில்லாது, தான்மதிப்பும் மரியாதையும், அன்பும்நட்பும் கொண்டிருந்தவர்களின் எழுத்துக்களையும் புத்தகமாக்க முன்வந்தார். வ.ரா. ந. பிச்சமூர்த்தி, சிட்டி எழுத்துக்களை புத்தகங்களாக்கினார். எனது சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுத்து பிரசுரம்’ ஆக வெளியிட்டது அவருடைய விசால மனப்பண்பை வெளிப்படுத்தியது.

பின்னர், 'தீபம்’ இதழில் நான் தொடர்ந்து எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைகளை நானே தான் புத்தகமாக வெளியிடுவேன் என்று அவராகவே கூறி, 1977ல் எழுத்து பிரசுரம்’ ஆகப் பிரசுரித்தார்.

அதனால் அது 1978ல் சாகித்ய அகாடமிப் பரிசைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

 'அந்தப் புத்தகத்தின் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டின. பணத்தை நான் வேறு வகைகளில் செலவிட்டு விட்டேன். உங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அது என் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது” என்று செல்லப்பா சொன்னார்.

'நீங்கள் எனக்கு பணம் தரவேண்டாம் என்றேன்.

”அது முறையாகாது. நான் எப்படியும் தந்து விடுவேன்' என்று அவர் தெரிவித்தார்.

 சில வருடங்களுக்குப் பிறகு செல்லப்பாஎன்னைத் தேடிவந்து ஆயிரம் ரூபாய் தந்தார். இது ஒரு பகுதி தான். பாக்கியை பிறகு தருவேன்’ என்றார்.

 'இதுவே போதும்” என்று சொன்னேன்.

”அது நியாயமில்லை”  என்று கூறிச் சென்றார். அநேக வருடங்களுக்குப் பிறகு செல்லப்பா ஒருநாள் எதிர்பாராத விதமாக, தன் மனவியையும் அழைத்துக் கொண்டு வந்தார். ”அதை இவரிடம் கொடு’ என்றார்.

அம்மா ஆயிரம் ரூபாய் கட்டை அளித்தார்.

”இப்பதான் என்மனச்சுமை தீர்ந்தது. புத்தகம் முழுதும் விற்று, வந்த பணத்தை நானே செலவுபண்ணிவிட்டேன். உங்களுக்கு பணம் தரவில்லையே என்று உறுத்தல் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. முன்பு ஒரு பகுதி கொடுத்தேன். மேலும் கொடுக்க முடியவில்லையே என்ற மனவேதனை. நீங்கள் ஒரு தடவை கூட பணம் வேண்டும் என்று கேட்கவில்லை. அதனாலேயே என் மன உறுத்தல் அதிகமாயிற்று. இப்பதான் என்மனசுக்கு சமாதானமாயிற்று, “ என்று செல்லப்பா சொன்னார்.

அவரது அன்பும் நட்பு உணர்வும் என் உள்ளத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்தின.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: