ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

சொற்களைச் சுவைப்போம் - 2: உயிர்த்தொடர், மெய்த்தொடர்

சொற்களைச் சுவைப்போம் - 2: உயிர்த்தொடர், மெய்த்தொடர்
பசுபதி


“ சார்! நான் ஆங்கிலத்தில் வேகமாகத் தட்டச்சுச் செய்யக் கணினியில் பயில்கிறேன்  என்பது உங்களுக்குத் தெரியுமோ?”

“ ஓ! தெரியுமே! உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ புதிதாகக் கற்றுக் கொண்டது போலத் தெரிகிறதே? ”

“ ஆமாம், சார், என் ஆசிரியர் மிகச் சுவையான சில வாக்கியங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வோரு வாக்கியத்திலும் 26 ஆங்கில எழுத்துகளும் இருந்ததே அவற்றின் விசேஷம். அதனால், தட்டச்சுச் செய்ய நல்ல பயிற்சியாகவும் இருந்தது;  அதே சமயம், மிகச் சுவையாகவும் இருந்தது. ஆமாம், இதே மாதிரி தமிழில் வாக்கியங்கள் உண்டா?”

“ எல்லா எழுத்துகளும் கொண்ட அத்தகைய சொற்றொடர்களை ஆங்கிலத்தில் ‘பான்கிராம்’ ( Pangram) என்பர். ( 'எல்லா எழுத்து’ என்ற பொருள்). ஒவ்வொரு மொழியிலும் இத்தகைய பான்கிராம்களைக் கண்டுபிடித்தல் சுவையான சொல்லாட்டம் தான்!

ஆனால் ஒவ்வொரு மொழிக்கும் உள்ள தனித்தன்மைகளை வைத்துத்தான் இம்மாதிரி சொல் விளையாட்டுகளை நாம் அணுக வேண்டும். சரி, ஒன்று செய்கிறேன். தமிழில் முதலில் எளிதில் விளையாட, இந்தச் சொல்லாடலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறேன்.

ஆய்த எழுத்தை நீக்கி விட்டு, தமிழில் உயிரெழுத்துகள் 12 என்று கொண்டால், அவை:  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ . சரியா?”

“சரி!”

“ இந்தப் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களோ, அவை உள்ள உயிர்மெய் எழுத்துகளோ வரும்படி, ஓர் அழகான  வாக்கியமோ, சின்னக்  கவிதையோ, குழந்தைகள் பாட்டோ, எழுத முயல்வது தான் இந்த ஆட்டத்தின் முதல் பகுதி. இதை ‘ உயிர்த்தொடர்’ என்றழைக்கலாம்.

நம் உதாரணங்கள் எழுத்தெண்ணிக்கையில் குறுகக் குறுக அழகு அதிகம்! சொற்றொடரில் 12 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்! “

“ இதோ, என் ’உயிர்த்தொடர்’ முயற்சி. ஒரு காட்சி. 


ஒரு பௌர்ணமி நாள்.

பூஞ்சோலை.

நீ எங்கே?                                       ( 1)

“ இம்மாதிரி, தமிழில் 18 மெய்யெழுத்துகள். க,ச,ட,த,ப,ற (வல்லினம்), ய,ர,ல,வ,ழ,ள (இடையினம்) ங,ஞ,ண,ந,ம,ன (மெல்லினம்). எல்லா  (18) மெய்யெழுத்துகளோ, அவை வரும் உயிர்மெய் எழுத்துகளோ  வரும்படி ஒரு வாக்கியமோ, ஒரு சிறு கவிதையோ, ஒரு விளம்பரமோ  எழுத முயல்வது  இந்த ஆட்டத்தின் இரண்டாம் பகுதி. அத்தகைய சொற்றொடரை ‘மெய்த்தொடர்’ என்றழைக்கலாம். நம் சொற்றொடர்கள் குறுகக் குறுக அழகு அதிகம்! 18 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்! “

“ இதோ, என் முயற்சி.. 22 எழுத்துகள் உள்ள ஒரு ‘மெய்த்தொடர்’ ”

தமிழியலிசை ஞானம் பெற

நீ ஒரு கடவுளை வணங்கு.   ( 2)


“ சார், தமிழிலும் இம்மாதிரி சொல்லாட்டங்கள் விளையாடலாம் என்று பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”

“ ஒன்று கவனித்தாயா?  ‘உயிரெழுத்தில்’ கவனம் செலுத்திய (1) -இல்10 மெய்யெழுத்துகளும் உள்ளன!  அதே மாதிரி, ‘மெய்த்தொடரான’ (2) -இல்
7 உயிரெழுத்துகளும் உள்ளடங்கி உள்ளன!  அதனால், இன்னும் கொஞ்சம் யாராவது முயன்றால், மெய்யும், உயிர்மெய்யும் கலந்த  பதினெட்டே எழுத்துகளில் எல்லா உயிர்(12) + மெய்(18)  எழுத்துகளையும்   அடக்க வாய்ப்புண்டு!”

யாராவது அத்தகைய ஓர் அற்புத பொருள் பொதிந்த வாக்கியத்தை/சொற்றொடரை இங்கே இடுவார்களா என்று பார்ப்போம்!
கொஞ்சம் நீளமாக இருந்தாலும் வரவேற்கப்படும் !

தொடர்புள்ள பதிவுகள்:
சொல்விளையாட்டு


26 கருத்துகள்:

Muthu சொன்னது…

மிகச் சிறந்த விளையாட்டு - இது எப்படி? (மெய்த்தொடர்)
ஒரு பௌர்ணமி நாள். பூஞ்சோலை. நீ எங்கே?
ர்,ப்,ண்,ம்,ன்,ஞ்,ச்,ல்,ங்,க்: 10 மெய்யெழுத்துக்கள் வருகின்றனவே - தவறாகப் புரிந்து கொண்டு விட்டேனோ?
http://muthuputhir.blogspot.com/2012/09/25.html

Pas S. Pasupathy சொன்னது…

@Muthu Muthusubramanyam
வருகைக்கு மிக்க நன்றி, நண்பரே.

“பன்னிரண்டு உயிரெழுத்துகளோ, அவை உள்ள உயிர்மெய் எழுத்துகளோ வரும்படி எழுதும் சொற்றொடர் தான் ‘ உயிர்த்தொடர்’. :

பொதுவாக உயிரெழுத்து ஒரு வாக்கியத்தில் எல்லா இடங்களிலும் வரமுடியாது.
(பழங்காலத்தில், புணர்ச்சி விதிகளைப் பயன்படுத்தினால், வாக்கியத்தின் முதல் எழுத்துத் தான் உயிரெழுத்தாய் இருக்க முடியும்!) அதனால் உயிரோ, உயிர்மெய்யெழுத்தோ வரலாம் என்ற விதி,

(1)-ஐச் சோதியுங்கள். எல்லா 12 உயிர்களும்
( உயிராகவோ, உயிர்மெய்யில் ஒளிந்தோ) இருக்கும். கூடவே 10 மெய்யெழுத்துகள் வருவது. (பின்னர் நான் சுட்டியது போல்) ஒரு ‘போனஸ்’.
அவ்வளவுதான். உயிர்த்தொடரில் எல்லா (12) உயிர்களும் (உயிராகவோ, உயிர்மெய்யாகவோ) வரவேண்டும்). எவ்வளவு மெய்யெழுத்துகள் வந்தன என்பது முக்கியமில்லை.....அப்போது.

இது போலவே மெய்த்தொடரில் (2) -இல் எல்லா (18) மெய்யெழுத்துகளும் வரவேண்டும் ( மெய்யாகவோ, உயிர்மெய்யாகவோ) .

சரியா?

ChandarSubramanian சொன்னது…

உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்)

அந்நாளில் சீருள் - பூஞ்
செந்தேனைக் கொண்டோள் ஔவை!

பண்பாடி ஈர்க்கும் - பூம்
பெண்வேங்கைச் சொற்கோ ஔவை!

தன்வாழ்வில் மீளும் - ஊழ்
வென்றேழ்மை கொன்றோள் ஔவை!

பண்வானின் மீனுன் - பூ
வெண்மேன்மைப் பொற்போ ஔவை?

Pas S. Pasupathy சொன்னது…

சபாஷ், சந்தர்!

Unknown சொன்னது…

காளமேகக் புலவரின் "தாதி தூதோ தீது" என்னும் தகர வருக்கச் செய்யுளை அடிப்படையாகக் கொண்டு ஓர் உயிர்த்தொடர்:

தௌததெத்தாதி தைத்தூதோ தீதொத்துதே

தௌததெத்தாதி — தௌத தெத்துத் தாதி — தௌதம் தெற்றுத் தாதி
தௌதம் — வெள்ளி, துவைத்த ஆடை
தெற்று — இழைத்த, உடுத்திய
தைத்தூது — தைத்திங்களில் செல்லும் தூது
தீதொத்துதே — தீதினை ஒத்துதே

Pas S. Pasupathy சொன்னது…

@Ms. Tamil

உங்கள் தமிழார்வம் அருமை. இத்தகைய மறுமொழிகளே தமிழுக்கு உண்மையான அணிகலங்கள்.

Unknown சொன்னது…

ஓரிரு quick-and-dirty programs எழுதி, tamilvu.org தளத்தில் தரப்பட்டுள்ள திருக்குறள் பதிப்பில் எழுத்தெண்ணிக்கையை கணக்கிட முயன்றேன்.

11 உயிரெழுத்துகள் கொண்ட குறட்பாக்கள்: 18, 1147.
3 உயிரெழுத்துகள் கொண்ட குறட்பாக்கள்: 786, 849.

16 மெய்யெழுத்துகள் கொண்ட குறட்பாக்கள்: 30, 500, 867, 903, 957, 1049, 1060, 1299.
4 மெய்யெழுத்துகள் கொண்ட குறட்பா: 1041.

முழுப்பட்டியல் இங்கே.

நன்றி.
அர்விந்த்

Pas S. Pasupathy சொன்னது…

அருமை, அர்விந்த்.

மேலும், உங்கள் முயற்சி தேவைப் படலாம்.... வரப்போகும் கட்டுரைகளில்!:-)) provided I don't run out of steam!

Pas S. Pasupathy சொன்னது…

11 -உயிரெழுத்துகளும், 16-மெய்யெழுத்துகளும் கொண்ட குறள்களை முன்னோடிகளாய்க் கொண்டு, அவற்றை நன்கு ஆய்ந்து, பிறகு எல்லா 12 உயிர்களோ அல்லது 18 மெய்களோ வரும் குறள் வெண்பாக்கள் இயற்ற முயலலாம்.

Pas S. Pasupathy சொன்னது…

அர்விந்த்,

எளிய வாக்கியங்களைத் தேட/இயற்ற , கொன்றைவேந்தன், ஆத்திசூடி, வெற்றிவேற்கை, முதுமொழிக் காஞ்சி போன்ற நீதி நூல்களில் அதிகமான உயிர்களோ, மெய்களோ இருக்கும் நூற்பாக்களைக் கண்டுபிடித்தல் உதவும். ( முதலில் அங்கே உயிர்த்தொடரோ, மெய்த்தொடரோ இருக்கிறதா என்பது தெரியும்), இப்படிப்பட்ட ஆய்வுகளை எவரும் செய்ததாகத் தெரியவில்லை!

Jayaraman Kiruthi Vasan சொன்னது…

சிறந்த சொல்லாட்டம். பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…

> 11 -உயிரெழுத்துகளும், 16-மெய்யெழுத்துகளும் கொண்ட
> குறள்களை முன்னோடிகளாய்க் கொண்டு, அவற்றை நன்கு
> ஆய்ந்து, பிறகு எல்லா 12 உயிர்களோ அல்லது 18 மெய்களோ
> வரும் குறள் வெண்பாக்கள் இயற்ற முயலலாம்.

ஆம் ஐயா. "தாதி தூதோ தீது" பாடலில் 10 உயிரெழுத்துகள் அமைந்திருந்தது உயிர்த்தொடர் அமைப்பதை எளிதாக்கியது.

> எளிய வாக்கியங்களைத் தேட/இயற்ற , கொன்றைவேந்தன்,
> ஆத்திசூடி, வெற்றிவேற்கை, முதுமொழிக் காஞ்சி போன்ற
> நீதி நூல்களில் அதிகமான உயிர்களோ, மெய்களோ இருக்கும்
> நூற்பாக்களைக் கண்டுபிடித்தல் உதவும்.( முதலில் அங்கே
> உயிர்த்தொடரோ, மெய்த்தொடரோ இருக்கிறதா என்பது தெரியும்)

வெற்றிவேற்கையில் ஒரு மெய்த்தொடர் கிடைத்தது. :-)
ஆனால் அந்த நூற்பா நீளமானது!


இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே
இருவரும் பொருந்த வுரையா ராயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி யீர்வதோர் வாளா கும்மே. (75)


இதில் உயிரெழுத்துகளும் 11 அமைந்துள்ளன.

தாங்கள் குறிப்பிட்ட நூற்பாக்களை, உயிர்/மெய் எழுத்துகளின் எண்ணிக்கை வரிசையில் அமைத்துள்ளேன்:

கொன்றைவேந்தன்: உயிர், மெய்
ஆத்திசூடி: உயிர், மெய்
வெற்றிவேற்கை: உயிர், மெய்
முதுமொழிக் காஞ்சி: உயிர், மெய்

இவற்றில் ஏதேனும் மாற்றம் / திருத்தம் தேவையெனில் சுட்டிட வேண்டுகிறேன். வரப்போகும் கட்டுரைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :-)

நன்றி.
அர்விந்த்

Pas S. Pasupathy சொன்னது…

அர்விந்த், ஆய்வு மிக அருமை!

நாம் படைப்பது ஒரு புறம் இருக்கட்டும்; ஆனால், இயற்கையாக நம் முன்னோர் இலக்கியத்தில் எந்தக் குறுகிய பாடல்/சொற்றொடர்/நூற்பா உயிர்த்தொடராகவோ, மெய்த்தொடராகவோ இருக்கிறது என்பதை நிர்ணயிக்கும் பணியில் இது ஒரு நல்ல முதல் படி.

இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். ஒரு நூற்பா தொடரைக் கொடுக்காவிட்டால், எந்த இரு நூற்பாக்கள்
( இரு ஆ.சூடி? இரு மு.மொ.கா?....இரு கொ.வே ?) எல்லா உயிர்களையோ, எல்லா மெய்களையோ தமக்குள் வைத்துள்ளன? அப்படி இருந்தால், அந்த இரு நூற்பாக்களும் (பொருளில்) ஒன்றுக்கொன்று தொடர்புள்ளனவாக இருந்தால் மேலும் அழகாகவும் இருக்கும் அல்லவா? இப்படி கண்டுபிடிக்க முடிந்தால், சொல்லவும்.

Pas S. Pasupathy சொன்னது…

ஒரே அதிகாரத்தில் இருக்கும் இரு குறள்கள் ஓர் உயிர்த்தொடரையோ, மெய்த்தொடரையோ கொடுக்குமானால், இரண்டையும் (ஆசு, தனிச்சொல்)சேர்த்து ஒரு நல்ல, பொருள் தொடர்ச்சி உள்ள நாலடி வெண்பாவாக்க வாய்ப்பு உண்டு.

Unknown சொன்னது…

> ஒரே அதிகாரத்தில் இருக்கும் இரு குறள்கள் ஓர் உயிர்த்தொடரையோ,
> மெய்த்தொடரையோ கொடுக்குமானால், இரண்டையும் (ஆசு, தனிச்சொல்) சேர்த்து ஒரு நல்ல,
> பொருள் தொடர்ச்சி உள்ள நாலடி வெண்பாவாக்க வாய்ப்பு உண்டு.

ஓரிரு எழுத்துகள் குறைந்தாலும் தனிச்சொல்லில் இட்டு நிரப்பலாம் என்று தோன்றுகிறது.

புதன்கிழமை வரை வெளியூர் வாசம் ஐயா. திரும்பி வந்தவுடன் "இரு நீதி நூற்பாக்கள் / குறட்பாக்கள்" எழுத்தெண்ணிக்கையைத் தொடர்கிறேன்.

நன்றி.
அர்விந்த்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அர்விந்த். அவசரமே இல்லை! மெதுவாகச் செய்யுங்கள்.

Unknown சொன்னது…

> ஒரே அதிகாரத்தில் இருக்கும் இரு குறள்கள் ஓர் உயிர்த்தொடரையோ,
> மெய்த்தொடரையோ கொடுக்குமானால், இரண்டையும்
> (ஆசு, தனிச்சொல்)சேர்த்து ஒரு நல்ல, பொருள் தொடர்ச்சி உள்ள
> நாலடி வெண்பாவாக்க வாய்ப்பு உண்டு.

இவ்விரண்டு குறள்களாகத் தேடியதில்
6 உயிர்த்தொடர்களும்
66 (!) மெய்த்தொடர்களும்
ஒரு 29 எழுத்து உயிர்+மெய்த்தொடரும்
கிடைத்தன.

Program-இல் ஒரு பிழையினால் ஆய்த எழுத்தும் உயிர் எழுத்தாக எண்ணப்பட்டிருந்தது! அதைத் திருத்திப் பட்டியல்களை மீண்டும் தயாரித்துள்ளேன். இந்தப் பிழையின் தாக்கம் சிறிதுதான்—முக்கியமாய், மேல்/கீழ் வரிசைகளில் எந்த மாற்றமும் இல்லை. பாடல்களில் தென்பட்ட ஓரிரண்டு தட்டச்சுப் பிழைகளையும் திருத்தியுள்ளேன். வேறு பிழைகள் கண்டாலும் சுட்டிட வேண்டுகிறேன்.

(அடுத்து இவ்விரண்டு நீதி நூற்பாக்களில் எழுத்தெண்ணிக்கை;
பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலிலும்
தேடத் திட்டமிட்டுள்ளேன்.
)

Pas S. Pasupathy சொன்னது…

ஆகா! வள்ளுவர் ‘உயிருக்கு’ மேலாக ‘மெய்யை’யே நேசிக்கிறார் போலும்! அசை போடவைக்கும் ஆய்வு! இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் உங்கள் ஆய்வைப் போற்றாமல் இருக்க முடியாது! வாழ்க!

Unknown சொன்னது…

நன்றி ஐயா. தங்கள் வழிகாட்டுதலே எனக்குக் கிடைத்த பெரும் பேறு.

கீழுள்ள தேடல்களில் உயிர்த்தொடரோ, மெய்த்தொடரோ கிடைக்கவில்லை.

பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்: உயிர், மெய்

இவ்விரண்டு நீதி நூற்பாக்கள்:

ஆத்திசுடி: உயிர், மெய்
கொன்றைவேந்தன்: உயிர், மெய்
முதுமொழிக் காஞ்சி: உயிர், மெய்

வெற்றிவேற்கையில் சில நூற்பாக்கள் பல அடிகளுடன் இருப்பதால், *குறுகிய தொடர்* கிடைக்காதென்று இவ்விரண்டாய்த் தேடவில்லை.

பட்டினத்தாரின் பூரண மாலை, நெஞ்சொடு மகிழ்தல், திரு. கி. வா. ஜ. வின் தமிழ்ப் பழமொழிகள் மென்பிரதி கிடைக்காததால் wikiquote பழமொழிகள் போன்ற நூல்களிலும் தேடினேன். உயிர் / மெய்த் தொடர்கள் கிடைக்கவில்லை.

அன்புடன்,
அர்விந்த்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அர்விந்த். உங்கள் ஆய்வைக் கொஞ்சம் அசை போட வேண்டியிருக்கிறது.
இந்த நீதிகளில்/குறள்களில் ( பழைய ஆய்வுகள் உட்பட) எந்தெந்த உயிர்/மெய்கள் விடுபட்டிருக்கின்றன என்பதை வலதுபக்கத்தில் ஒரு நகவளைவிற்குள் அல்லது வேறு விதமாகவோ காட்டமுடியுமா? அப்படிச் செய்தால், அந்த விடுபட்ட எழுத்துகள் எளிதாக நாம் இந்தத் தொடர்களை மாற்றியோ, சொற்களைச் சேர்த்தோ முழுமை அடையச் செய்ய முடியும் வழிகளைச் சுட்டலாம். இரு குறள்களை எத்தகைய தனிச் சொற்களை வைத்து நான்கடி வெண்பாவாக ஆக்கலாம் என்றும் சொல்லலாம்.

Unknown சொன்னது…

விடுபட்ட எழுத்துகளை நகவளைவிற்குள் காட்டி,

இவ்விரண்டு நூற்பாக்கள்:

திருக்குறள்: உயிர், மெய், உயிர்+மெய்
ஆத்திசுடி: உயிர், மெய், உயிர்+மெய்
கொன்றைவேந்தன்: உயிர், மெய், உயிர்+மெய்
முதுமொழிக் காஞ்சி: உயிர், மெய், உயிர்+மெய்

ஒவ்வொன்றாய்:

திருக்குறள்: உயிர், மெய், உயிர்+மெய்
ஆத்திசுடி: உயிர், மெய், உயிர்+மெய்
கொன்றைவேந்தன்: உயிர், மெய், உயிர்+மெய்
முதுமொழிக் காஞ்சி: உயிர், மெய், உயிர்+மெய்

இவற்றைத் தயாரிக்கும்போது, பள்ளி நாள்களை நினைவுபடுத்தும் ஒரு சுவையான தட்டச்சுப் பிழையைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் கண்டேன்: ஔ-வை (8 தேடல் முடிவுகள்) Vs. ஒ-ள-வை (267 தேடல் முடிவுகள்).

Unknown சொன்னது…

விடுபட்ட எழுத்துகளை நகவளைவிற்குள் காட்டி,

இவ்விரண்டு நூற்பாக்கள்:

திருக்குறள்: உயிர், மெய், உயிர்+மெய்
ஆத்திசுடி: உயிர், மெய், உயிர்+மெய்
கொன்றைவேந்தன்: உயிர், மெய், உயிர்+மெய்
முதுமொழிக் காஞ்சி: உயிர், மெய், உயிர்+மெய்

ஒவ்வொன்றாய்:

திருக்குறள்: உயிர், மெய், உயிர்+மெய்
ஆத்திசுடி: உயிர், மெய், உயிர்+மெய்
கொன்றைவேந்தன்: உயிர், மெய், உயிர்+மெய்
முதுமொழிக் காஞ்சி: உயிர், மெய், உயிர்+மெய்

இந்தத் தேடலுக்காக எழுதிய நிரல்களின் ஒரு வடிவை இங்கு வெளியிட்டுள்ளேன்: http://mstamil.com/pangram

அன்புடன்,
அர்விந்த்
[அக்டோபர் 24-இல் எழுதியது இப்பக்கத்தை அடையத் தவறியதால் மீண்டும் இடுகிறேன்.]

Unknown சொன்னது…

இந்தப் பட்டியல்களைத் தயாரிக்கும்போது, பள்ளி நாள்களை நினைவுபடுத்தும் ஒரு சுவையான தட்டச்சுப் பிழையைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் கண்டேன். இன்றைய தேதிக்கு அத்தளத்தில் "ஔ-வை" என்று தேடினால் 9 தேடல் முடிவுகளும், "ஒ-ள-வை" என்று தேடினால் 97 தேடல் முடிவுகளும் கிடைக்கின்றன.

குருநாதன் ரமணி சொன்னது…

உயிர்த்தொடர் இல்லறம்
(இன்னிசை அளவியல் வெண்பா)

அன்றைய ஆசையால் இன்றுநான் ஈடேறி
உன்னுடன் ஊக்கமாய் என்கரம் ஏந்தினேன்
ஐயையேநீ ஒட்டுவதால் ஓங்கிநாம் ஔவைசொல்
வையமென வாழ்ந்திடுவோம் வா!

மெய்த்தொடர் இல்லறம்
(பஃறொடை வெண்பா)

அக்கிவண்டு அங்கம்பொன் அச்சமேன் அஞ்சாதே! ... ... [அக்கி = கண்]
அட்டியின்றி அண்மைவா அத்தானென் அந்தஸ்தில் ... ... [அட்டி = தாமதம்]
எப்பொழுதும் அம்மணியாய் ஒய்யாரம் சர்வமும்!
மல்லிகையே எவ்விதமும் தாழ்விலை; உள்ளத்தில்
வற்றாத இன்பமே வா!

--ரமணி, 01/10/2015

*****

வைத்தீஸ்வரன் சொன்னது…

கோலமிகு கௌரி கொலுவிற்கு ஈடில்லை எனக் கூறாய், கிளியே

ELANDHAI சொன்னது…

பதினெட்டு எழுத்துகளில் பதினெட்டு மெய்யும் பன்னிரெண்டு உயிரும் வருமாறு எழுதியுள்ளேன். சற்றுச் சிரமத்தோடுதான் செய்ய முடிந்த து.

ங ப் போல் வளை என்பார்கள். உறவோடு ஒட்டிக்கொள்ளும் நேயமிக்கது அது. அந்தக்கருத்தை எடுத்துக்கொண்டு எழுதியது.
குறள் தாழிசை
“ங” வென ஞேயரே நாண மீறுதோ
கௌளி சொலூடு பிழை.
ங போல நேயமுள்ளவரே, அதைப்போல நேயத்தை வெளிக்காட்ட நா.ணம் மீறுகிறதோ? கௌளி சொல்லில் சகுனம் பார்க்கிறீரோ? கௌளி சொல்லினூடே பிழையுண்டு.
உயிரெழுத்துகள்

அ,எ,அ,ஏ,அ,ஏ,ஆ,அ,ஈ, ஓ, ஔ, இ, ஒ,ஊ,உ, இ, ஐ

மெய்யெழுத்துகள்

ங், வ், ந், ஞ், ய், ர், ந், .ண் ம், ற் த் க்,ள், ச், ல், ட், ப் , ழ்