ஞாயிறு, 16 டிசம்பர், 2018

1194. சங்கீத சங்கதிகள் - 166

தோடி அடகு
‘எல்லார்வி’


இது ‘எல்லார்வி’ ( எல்.ஆர். விசுவநாத சர்மா)  -இன் ஒரு கட்டுரை. ’எல்லார்வி’ பேராசிரியர் ‘கல்கி’க்கு அம்மான்சேய் உறவு. பல சங்கீத வித்வான்களைப் பற்றிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

 மேலே உள்ள படம் எஸ்.ராஜம் வரைந்தது. ‘ஸ்ருதி’ என்ற ஆங்கில இதழில் 1986-இல் இந்தக் கட்டுரை சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு ராஜம் வரைந்த கோட்டோவியம் இது!  ஓர் அரிய படம் தான் !

இவர் எழுதிய ‘ கலீர் கலீர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘ ஆடவந்த தெய்வம்’.
” எல்லார்வி” 


அவருடைய  கட்டுரை இதோ!




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 15 டிசம்பர், 2018

1193. பி.ஸ்ரீ. - 24

மெய்விளங்கிய அன்பர்கள் :  சிவ வேட்டை
பி.ஸ்ரீ.



1948-இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்னொரு கட்டுரை.




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:


பி. ஸ்ரீ படைப்புகள்

புதன், 12 டிசம்பர், 2018

1192. சங்கச் சுரங்கம்: தீம்புளி நெல்லி

தீம்புளி நெல்லி 
பசுபதி



[ ‘ சங்கச் சுரங்கம் -3 ‘ என்ற என் புதிய நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை! நூல் கிட்டுமிடம்:
LKM Publication, 10, Ramachandra Street, T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241; கைபேசி : 99406 82929. 
கூடவே என் சங்கச் சுரங்கம் -1, 2 தொகுதிகளும் அங்கே கிட்டும். ] 

[ சங்கச் சுரங்கம் -3 -இன் பொருளடக்கம் ]

========


எனக்கு உச்சி குளிர்ந்து விட்டது. குளிர வைத்தவள் என் தமிழ் மாணவி மஞ்சுளா. தொலைபேசி மூலம் அவள் கேட்ட வேண்டுகோள் தான் காரணம். 
” சார், நீங்கள் போன மாதம் நெல்லிக்கனி வரும் ஒரு சங்கப் பாடல் பற்றி எங்களுக்குச் சொன்னீர்களே? அதை மீண்டும் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்து விளக்கிச் சொல்ல முடியுமா?”  என்று கேட்டாள் மஞ்சுளா. வாரமொரு முறை என் வீட்டிற்கு வந்து அவள் சங்கப் பாடல் ஒன்றைக் கேட்பதே பெரிய விஷயம்? மீண்டும் கேட்பதா? என்ன விஷயம் என்று விசாரித்தேன். 
“ஒன்றும் இல்லை, சார். எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் புதிதாகச் சித்த, இயற்கை மருந்துகள், ஊறுகாய், மூலிகைப் பொருள்கள் போன்றவற்றை விற்கும் ஒரு கடை தொடங்கி இருக்கிறார். முக்கியமாக அவருக்கு ஊரில் ஒரு நெல்லிக்காய்த் தோப்பே இருப்பதால் நெல்லிக்காய் இருக்கும் சகல பொருள்களையும் --- ஊறுகாயிலிருந்து திரிபலா போன்ற மருந்துகள் வரை ---- அவர் விற்க எண்ணியிருக்கிறார். நம் ஊரில் அவர் கடையை அறிமுகம் செய்ய  என் தந்தையும், நானும்  பல நண்பர்களை எங்கள்  வீட்டிற்கு அழைத்திருக்கிறோம். அடுத்த வாரம் , ஞாயிறன்று ஒரு சிறு மதிய உணவு. நெல்லிக்காய்ச் சாதம்,  சாம்பார், பச்சடி, ஊறுகாய் என்று உணவு ‘சகலம் நெல்லிக்காய் மய’மாய். இருக்கும்! அப்போது முதலில், உணவுக்கு முன், நீங்கள் அந்த நெல்லிக்காய்ப் பாடலை எல்லோருக்கும்  சொன்னால் நன்றாய் இருக்குமே என்று கேட்டேன்!  அப்புறம் …. ஜெயா மாமிக்குச் சொல்லுங்கள், உணவுக்குப் பின் இரண்டு ஊறுகாய் பாட்டில்களும், ஒரு பை நிறைய நெல்லிக்காய்களும் எல்லோருக்கும் உண்டு! “ என்றாள் மஞ்சுளா.  

பின்னே என்ன? ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்தது,  எனக்குக் கிட்டப்போகும்  நெல்லிக்காய் ஊறுகாயை விடவா பெரிய விஷயம்? ( அடடா, “உங்கள் மாணவி தானே? மேலும் இரண்டு பாட்டில்கள் கேளுங்களேன்?” என்று ஜெயா அப்போது சொன்னது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. )   
அடுத்த வாரம். ஞாயிறு. எனக்குத் தெரிந்த பல தம்பதிகள்  மஞ்சுளா வீட்டில் கூடி இருந்தனர்.  அங்கிருந்த இளைஞர்கள் அவளுடைய கல்லூரி நண்பர்கள் போலும். ”சரி, என் பேச்சைக் கேட்டால் ஒருவேளை மேலும் சில மாணவர்களை என் தமிழ் வகுப்பிற்குச் சேர்க்க முடியுமோ” என்று எனக்கு ஒரு நப்பாசை பிறந்தது. 

தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினேன்.
“ நான் குறிப்பிடப் போகும் பாடல் குறுந்தொகையில் உள்ளது. மதுரைக் கண்டரதத்தன் என்ற புலவரின் இந்த ஒரு பாடல் தான் அந்நூலில் உள்ளது.  
பனிக் காலத்தில் வருவேன் என்று சொல்லிப் போனான் ஒரு தலைவன். இன்னும் வரவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள் அவள் தோழி. 

“ தலைவன் குறித்த பருவத்தில் நிச்சயம் வருவான்! கவலைப் படாதே! வட திசையிலிருந்து வீசும் வாடைக் காற்று மேகங்களைத் தென்திசையில் துரத்தும். அப்படிப்பட்ட தண்பனிக் காலத்தில் தலைவன் உன்னை விட்டு விட்டு எப்படி தனியாக இருப்பான்? நிச்சயம் உன்னிடம் வருவான்! அவனுடைய நாட்டில் மரையா என்ற ஒரு வகை மானினம் உள்ளது. தன்னினத்து பெண்மானிடம் மிகுந்த ஆசையுடைய அந்த மரையா இனத்து ஆண்மான் முதலில் நிறைய  நெல்லிக் காய்களைத் தின்னும். பிறகு, மலையில் உள்ள சுனை நீரில் விழுந்திருக்கும் மலர்களைத் தன் மூச்சுக் காற்றால் விலகச் செய்து, பின் அந்நீரைக் குடிக்கும். முதலில் உண்ணும்போது  புளிப்பாக இருக்கும் நெல்லிக்காய் நீரைக் குடித்தவுடன் இனிக்கும் அல்லவா? அந்த நெல்லிக்காய் போன்றதுதான் தலைவனுக்கு உன்னிடம் உள்ள காதலும்! முதலில் புளிப்பது போல் இருந்தாலும் கடைசியில் இனிக்கும்! “ என்கிறாள் தோழி.     


புரி மட மரையான் கரு நரை நல் ஏறு 
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது 
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து 
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன் 
நம்மை விட்டு அமையுமோ மற்றே -- கைம்மிக 
வட புல வாடைக்கு அழி மழை 
தென் புலம் படரும் தண் பனி நாளே ?
     --   மதுரைக் கண்டரதத்தன்,  குறுந்தொகை, 317 
[ நரை – பெருமை, வெண்மை ; வாடை – வடகாற்று ] 

பொழிப்புரை: விரும்புகின்ற அழகுடைய மரையா என்ற மானினத்தின் கருமையும், பெருமையும் உள்ள நல்ல ஆண் மான் , இனிய புளிப்புடைய நெல்லிக் காயைத் தின்னும். பிறகு அருகில் (நீரில்) உள்ள தேன்நிரம்பிய  அழகிய மலர்களைத் தன் சூடான மூச்சால் விலக்கி, பிறகு உயர்ந்த மலையில் உள்ள சுனை நீரைக் குடிக்கும். அத்தகைய நாட்டுடைய தலைவன், வாடைக் காற்றால் மேகங்கள் தெற்கில் போகும் தண்பனிக் காலத்தில் நம்மை விட்டுப் பிரிந்திருப்பானா? இல்லை, நிச்சயமாய் இங்கு வருவான் . “ 

என் பேச்சு முடிந்ததும் யாவரும் கைதட்டினர். பிறகு  மஞ்சுளா  எழுந்து நின்று, “சூப்பர், சார்! புளிக்கும் நெல்லிக் காய் தின்றுவிட்டு ‘ஜில்லென்று ‘ தண்ணீரைக் குடித்தால் இனிப்பாக மாறும் என்று அந்தக் காலத்தில் ஆண்மானுக்குக் கூடத் தெரிந்திருக்கிறதே ! ‘ என்றாள் . கூட்டத்தில் இருந்த பெண்கள் கூட இருந்த ஆண்களைப் பார்த்துக் கேலியாக நகைத்தனர்.   
”ஆம், இந்தக் காலத்தில் , இங்கிருக்கும் பெண்மான்களுக்கும் அது தெரிந்திருக்கும் அல்லவா? “ என்றேன் நான்.

சில இளைஞர்களும், பெண்களும் கைகளைத் தூக்கி “நாங்கள் அப்படிச் செய்த அனுபவமே இல்லையே? நெல்லிக்காய் ஜாம் ஒன்றைத்தான் ரொட்டியில் தடவிச் சாப்பிட்டு எங்களுக்குப் பழக்கம்! எப்போதாவது நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறோம்! அவ்வளவுதான்! ” என்று சொல்லவே, மஞ்சுளா உடனே அங்கே மருந்துக் கடை முதலாளி கொண்டு வைத்திருந்த ஒரு கூடையிலிருந்து நெல்லிக் காய்களையும், ‘ஐஸ் வாட’ரையும் அவளுடைய நண்பர்கள் யாவருக்கும் கொடுத்தாள். ( ஏனோ தெரியவில்லை - - மஞ்சுளா மட்டும் நெல்லிக்காய் தின்னவும் இல்லை, நீர் குடிக்கவும் இல்லை என்பதைக் கவனித்தேன்.) ’தீம் புளி நெல்லி மாந்தி’ நீர் குடித்த எல்லோரும் தங்களுக்கு இனிப்புச் சுவை தோன்றியதை ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில், மஞ்சுளா என்னிடம் வந்து, “ சார், மன்னிக்கவும், நீங்கள் இங்கிருந்து எல்லோருடன் பேசிவிட்டு , நிதானமாக உணவு அருந்திவிட்டு, மெதுவாகப் போகவும். நானும் என் நண்பர்களும் பக்கத்தில் உள்ள ஒரு தமிழ்ச் சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இப்போது போய்விட்டுப் பிறகு வந்து சாப்பிடுகிறோம். வயிறு கொஞ்சம் காலியாய் இருக்கும் போதுதான் சரியாகப் பாட முடியும் . அதனால் தான்” என்றாள்.

 ” ஓ? அப்படியா? தாராளமாய்ப் போ! போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்! ஆனால், நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு, குளிர்நீரைக் குடித்து விட்டுப் போனால் , பலருக்கும் தொண்டை கட்டிக் கொண்டு, பாட முடியாமல் போகுமே! “ என்றேன்.

“உஷ்! சார், மெள்ளப் பேசுங்க, சார்! அதனால் தானே நான் இன்று இந்த விருந்தை ஏற்பாடு செய்தேன்? நான் மட்டும் நெல்லிக்காயும் சாப்பிடவில்லை! ‘ஐஸ் வாட’ரும் குடிக்கவில்லை!” என்று சொல்லிக் ‘களுக்’ கென்று சிரித்தாள் மஞ்சுளா.

அடப் பாவமே! ’என் ‘ சங்கப் பாடல் இப்படியா பயன்பட வேண்டும்?




 ~*~o0O0o~*~

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 




ஞாயிறு, 9 டிசம்பர், 2018

1191. பரலி சு.நெல்லையப்பர் -3

பாரதி நினைவு - முதல் சந்திப்பு
பரலி சு. நெல்லையப்பர் 



’சக்தி’ இதழில் 1946-இல் வந்த ஒரு கட்டுரை.




 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:
பரலி சு.நெல்லையப்பர்

பாரதி

வெள்ளி, 7 டிசம்பர், 2018

1190. சங்கீத சங்கதிகள் - 165

கமலாவும், கர்நாடக சங்கீதமும் 
கடுகு


 ’கடுகு’, ’அகஸ்தியன்’ என்ற புனைபெயர்களில் எழுதுகிற நகைச்சுவை எழுத்தாளர்,  பி.எஸ்.ரங்கநாதன் சாரின் படைப்பு  இதோ.

2010 -இல் ‘தேவன்’ தினத்தன்று சென்னையில் அவரைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. பின்னர் அவருடன் மின்னஞ்சல் தொடர்பு இருந்தது.  'இசை'த் தொடர்பாக அவருடைய ஒரு படைப்பு வேண்டுமென நான் கேட்டபோது, அவர் எனக்கு அனுப்பிய கதை இது. 




இன்று கர்நாடக இசை உலகில் முன்னணியில் இருப்பவர்கள் கமலாவிற்கு, அதாவது என் அருமை மனைவிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். கமலாவிற்குக் குரல் வளமும், இசை ஞானமும், கற்பனா சக்தியும் இருந்திருந்தால், அவள் எல்லாரையும் சாப்பிட்டு இருப்பாள். துரதிர்ஷ்டம். இந்த மூன்றும் அவளுக்குத் துளிக்கூட இல்லை. அதைவிட துரதிர்ஷ்டம்! இந்த மூன்றும் தன்னிடம் இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருப்பது தான். நினைப்பதோடு இருந்தால் பரவாயில்லையே.  பாடவும் ஆரம்பித்து விடுவாள்!

அதுவும் டிசம்பர் வந்துவிட்டால் போதும், எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிடும்.

"ஏன்னா, உங்களைத்தான், பரணிலிருந்து ஆர்மோனியத்தை எடுத்துக் கொடுங்கள். நாலு நாள் சாதகம் பண்ணினால், திருவையாறு போனால் பாட முடியும்'' என்பாள். பரணிலிருந்து ஆர்மோனியத்தை எடுக்கும்போது அதில் வாசம் செய்யும் எலிக் குடும்பம் தாறுமாறாக ஓடிக் கீழே குதித்து ஓடும். அதைக் கண்டு பயந்து கமலா கத்துவாள். இந்தக் கத்தலைக் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்கள், "கமலா மாமி, சங்கீதம் சாதகம் செய்கிறாள்'' என்று பேசிக் கொள்வார்கள்!


ஹார்மோனியத்தை சுருதி கூட்டிக் கமலா பாட ஆரம்பிப்பாள். அதைக் கர்நாடக இசை என்பதைவிட கர்நாடக இ(ம்)சை என்று கூறுவதுதான் சரி.

அப்போது நான் ரேடியோவை உரக்கப் போட்டு விடுவேன்.
உடனே கமலா, "அடடா... கொஞ்ச நேரம் நிம்மதியாகப் பாட முடியாது... உங்களைத்தான்! நான் பாடறது காது கேட்கலை?'' என்பாள்.

"கேட்கிறது கமலா, நல்லா கேக்கிறது. அதனால்தான் ரேடியோவைப் போட்டேன்'' என்று முணுமுணுத்து விட்டு, ரேடியோவை நிறுத்துவேன்.



இரண்டு நிமிஷம்கூட "ஸ ப ஸ' என்று பாடியிருக்க மாட்டாள். அதற்குள் ஹார்மோனியத்தின் ஏதோ ஒரு கட்டை சுயாட்சி பெற்று, தன்னிச்சையாக உரிமைக் குரலை எழுப்பும். (கமலாவின் கட்டைக் குரலுக்கு ஆர்மோனியக் கட்டையின் குரல் எவ்வளவோ தேவலாம் என்பேன்.)

கமலா உடனே, 5 கட்டை சுருதியில், "உங்களைத் தானே'' என்று கத்துவாள். கமலா பாடும் போது சுருதி சேராது. ஆனால் இப்படிக் கத்தும் போது சுருதி சுத்தமாகச் சேரும்!

"உங்களைத் தானே. இதைக் கொஞ்சம் சரி செய்யுங்களேன்.''நான் அதை சரி செய்வேன்.

மறுபடியும் கமலா, "ரார வேணுகோபாலா'' என்று ஆரம்பிப்பாள். அதற்குள் அதன் "பெல்லோஸ்' பிய்ந்து விடும். கமலாவின் சொந்தப் பாட்டியின் ஆர்மோனியம் அது.


"எல்லாம் இங்கிலீஷ் ரீட்'' என்பாள் கமலா.
"ஆனானப்பட்ட இங்கிலீஷ்காரனே போய்விட்டான். நீ என்னமோ இங்கிலீஷ் ரீட் என்று உசத்தியாகப் பேசறியே'' என்பேன்.

"ஐயோ, உங்கம்மா உசத்தியா பேசறதை விடவா நான் பேசறேன். "எங்காத்து கடிகாரம் அசல் ஜெர்மன் கடிகாரம்' என்று சொல்லிப் பெருமையடிச்சுப்பாரே, அந்தக் கடியாரத்தின் அழகு எனக்குத் தெரியாதா? ஏழு பதினாலு, ஒன்பது இருபது போன்ற சமயத்தில் சரியாக 13 தடவை மணி அடிக்குமே... அடியம்மா. கடிகாரம்னா அந்த மாதிரி எங்கே கிடைக்கும்? ஹூம்.'' என்பாள்.

கமலாவின் சங்கீதத்திற்கு சுருதி முக்கியமோ இல்லையோ, என்னை வசைப் ‘பாட’ வேண்டுமென்றால் என் அம்மாவிடம் ஆரம்பிப்பது முக்கியம். (பெரியவர்களுக்கு முதல் இடம் கொடுக்கிறாளோ?)

அதன் பிறகு கமலா மூக்கைச் சிந்தி அழ ஆரம்பிப்பாள். பல சமயம் இந்தக் கண்ணீரைத் துடைக்கப் புது புடவையே வாங்க வேண்டியிருக்கும்!

"நான் பாட உட்கார்ந்தால் உங்களுக்குப் பொறுக்காதே. சங்கீத சீஸன் வந்தால் அவரவர் அகாடமி என்ன, அண்ணாமலை மன்றம் என்ன என்று போகிறார்கள். நமக்கு அதெல்லாம் கொடுப்பினை இல்லையே. உம்... அது நாம் வந்த வழி... ஊரெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் புதுப்புது டிசைனில் புடவை வாங்கிக்கிறா, நமக்குப் பழைய பாஷன்தான். இதுமாதிரி நாலு கச்சேரிக்குப் போனால் தானே, எது புது பாஷன் என்று தெரியும்? நான் என்ன உங்க அக்காவா?'' என்று சொல்லி மூக்கால் அழுவாள். (யு ஆர் ரைட், அழுகை சுருதி சுத்தமாக இருக்கும்!)

கமலா சிறிது நேரம்  அழட்டும். அப்போது தான் அவளுக்குச் சந்தோஷம்! அதுவரை கமலாவின் இசைப் பயிற்சியின் துவக்க கால அனுபவங்களை  (சரியாகப் படிக்கவும். துக்க காலம் இல்லை)  பார்க்கலாம்., துவக்க காலப் பயிற்சிகளை அவளுடைய வீட்டார் பல சமயம் பெருமையுடன் கூறிய விவரங்களில், சக்கைகளை நீக்கிவிட்டு, அதாவது 99 சதவிகிதம் போக மீதியுள்ள சாரத்தைப் பார்க்கலாம்!

முன்பிறவி, முன்ஜன்மம், மறுபிறவி போன்றவைகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
கமலாவின் அப்பா முற்பிறவியில் ஒருவருக்குக் கடன் பட்டிருக்கிறார். அதை இந்த ஜன்மத்தில் அடைப்பதற்காகத்தான் அவரைக் கமலாவின் பாட்டு வாத்தியாராக ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவரும் கடனுக்குத் தானே என்று ஏனோ தானோ என்று சொல்லிக் கொடுத்து இருக்கிறார் மறக்காமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு!

ஒரு நாள் கமலாவிற்கு சங்கீத சிட்சை ஆரம்பித்தது. (இந்த சிட்சை என்ற வார்த்தைக்குத் தண்டனை என்ற அர்த்தமும் இருப்பதையும் அதன் பொருத்தத்தையும் எண்ணி எண்ணி வியக்கிறேன்.) கமலாவின் சங்கீத சிட்சை, இசைக்கு மட்டுமல்ல, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் தண்டனை தான்.

அடுத்த நாளே என் அருமை மாமியார், "ரேடியோவில் பாடினா பணம் சுமாராகத்தான் கொடுப்பார்கள். சபா கச்சேரிதான் கமலா செய்யப் போகிறாள்'' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

என் மைத்துனன் தொச்சு, "அக்கா வந்து தமிழிசை சங்கத்தில் பாடட்டும். அங்க இருக்கிற கான்டீனில்தான் பஜ்ஜி பிரமாதமாக இருக்கும்'' என்று யோசனை கூற ஆரம்பித்தான்.

கமலா இவைகளை எல்லாம் சட்டை செய்யாமல் கருமமே கண்ணாயிருப்பாள். எல்லோரும் சமம் என்ற தத்துவத்திலும் அவளுக்கு ஈடுபாடு உண்டு. ஆகவேதான் ஆரோகணம், அவரோகணம் என்ற தாரதம்மியங்களைப் புறக்கணித்து விட்டு, ஸ்வரங்களை ஏழாகப் பிரிக்காமல், ஒரே ஸ்வரமாக அல்லது ஒரே அபஸ்வரமாகப் பாடுவாள்.
அவளுக்கு எல்லா ராகங்களும், ஒரே ராகம் தான். முகாரியின் சாயல் கொண்ட அந்த ராகத்தின் பெயர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை, பாலமுரளியால் கூட!

"கமலா. பச்சைத் தண்ணிகிட்டேயே போகாதே. இந்த ஏப்ரல் பனி உடம்புக்கு ஆகாது. தொண்டை கட்டிக்கும்...ஆமாம்..உங்களைத்தான். வால் மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் எல்லாம் பத்து பத்து கிலோ வாங்கிப் போடுங்கோ. கஷாயம் பண்ணிக் கொடுக்கணும் குழந்தைக்கு (ஹாஹாஹஹா! கமலா குழந்தையாம்!) தொண்டை தான் முக்கியம்'' என்று என் மாமியார் பிராட்காஸ்ட் செய்வார்.

கமலாவிற்குத் தொண்டை கட்டிவிடுமோ என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம், தொண்டை கட்டினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வித்தியாசமே தெரியாது. ரேடியோ ரிப்பேர் ஷாப்பில் வரும் கொர கொர ஒலியைக் குயிலோசையாக்கும் "இனிய' குரல் கமலாவிற்கு.
கமலாவிற்கு அரங்கேற்றம் நடத்தத் தீர்மானித்து அண்ணாமலை மன்றமா, தீவுத்திடலா (கூட்டம் சமாளிக்கப் பெரிய இடம் வேண்டாமா?) என்றெல்லாம் யோசித்து, தலைமை வகிக்க சினிமா ஸ்டாரா, அல்லது செம்மங்குடி போன்ற வித்வானா என்று அலசி கடைசியில் உள்ளூர் பிள்ளையார் கோவிலில் சிக்கனமாக அரங்கேற்றினார்கள்.

"அக்கா பாட்டு அரங்கேற்றத்திற்கு சரியா நூறு பேர் வந்திருந்தாங்க'' என்று என்னிடம் கூறியிருக்கிறான் தொச்சு. (கமலாவின் உறவினர்களில் மீதிப் பாதிப் பேர் ஏன் வரவில்லை என்பது தெரியவில்லை.)

"கச்சேரி முடிந்து போன போது எண்ணியிருந்தால் 101 பேர் போயிருப்பார்கள். ஆமாம், பிள்ளையார் கூடக் கோவிலை விட்டு ஓடியிருப்பார்'' என்று நான் சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு நவராத்திரி கொலு சமயங்களில், "மாமி, ஒரு பாட்டுப் பாடுங்கள்'' என்று யாராவது சொன்னால் பாடியதைத் தவிர, கமலா வேறு சந்தர்ப்பத்தில் பாடியதில்லை. இருந்தாலும் வீட்டில் இருக்கும் போது பாடாமல் இருப்பாளா? இதைத்  தவிர்க்க  நான் அடிக்கடி கமலாவை ஷாப்பிங் அது இது என்று பல இடங்களுக்கு அழைத்துப் போகிறேன்.
இதோ கமலா அழுகையை நிறுத்தி விட்டாள்!. பாட ஆரம்பிக்கப் போகிறாள்.

"கமலா... கிளம்பு, கடைக்கு. பாம்பே சேலில் எட்டு ரூபாய்க்கு நூறு புடவைகளோ 100 ரூபாய்க்கு 8 புடவைகளோ தருகிறார்களாம், கிளம்பு'' என்று கத்தினால்தான் நான் பிழைப்பேன்!

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

’கடுகு தாளிப்பு’ : கடுகு சாரின் வலைப்பூ