ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

தேவன் - 9 : தேவன் நூற்றாண்டு விழா -1

தேவன் நூற்றாண்டு விழா -1
செப்டம்பர் 8, 2013.

தேவன் நூற்றாண்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

எழுத்தாளர் சாருகேசி மிக்க அக்கறையுடன் விழா நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார். இசை நிகழ்ச்சியில் தொடங்கி, மதிய உணவுச் சுவையுடன் நிறைபெற்றது.
கோபுலு, ’நகுபோலியன்’ பாலு, பசுபதி, சந்தர் , அம்பை, .., கங்காதர்

தேவனின் நெருங்கிய நண்பர்,  91-ஆண்டு இளைஞர் கோபுலு விழாவில் கலந்துகொண்டது எல்லோரையும் பெரிதும் மகிழ்வித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரைப் பார்த்து , அவரைப் பற்றி நான் எழுதிய ஒரு வாழ்த்து வெண்பாவைச் சமர்ப்பித்ததை அவர் நினைவு கூர்ந்தார். "சார், அதை மீண்டும் நான் இந்த விழாவிலும் படிக்கிறேன்" என்று சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டேன்.  மணியம் செல்வன், நடனம் போன்ற ஓவியர்களும் அங்கு வந்து அவர் ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர்.
கங்காதர், பசுபதி

விழாவில் 'தேவனி'ன் குறுந்தொடர்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றிப் பேசினேன்.

நடுவில் நான் படித்த/ பாடின :-) சில கவிதைகளை இங்கு இடுகிறேன்.

. தேவன் எனும்மகா தேவன் 

( "நந்த வனத்தில் ஓர் ஆண்டி " மெட்டு )

தேவன் எனும்மகா தேவன் -அவர்
  தீட்டும் படைப்பில் நகைச்சுவை ஜீவன்
பூவென மென்மை  சிரிக்கும்  - அவர் 
  தூவும்மேற் கோள்கள் விழியை விரிக்கும்    1

சாகா வரம்பெற்ற சாம்பு -- அவன் 
  சகதர் மிணியோ அழகான வேம்பு !
வாகாய்த் துலக்குவான் துப்பு -- சாம்பு 
  வந்தாலே வேகாது துஷ்டரின் ‘பப்பு’!       2

மானேஜர் செய்தார்தி ருட்டு -- சாம்பு
  வாசனை மோந்துடைத் தானவர் குட்டு !
ஆனால் கிடைத்ததோ திட்டு! -- துப்(பு)
  அறியத் தொடங்கினான் வேலையை விட்டு!    3

காகம் கிளையிலுட் கார -- பின்
  கனியொன்று கீழே விழுவது போல 
யோகம் கொடுத்தது வெற்றி -- சாம்பு 
  உச்சம் அடைந்தான் உலகப்ர சித்தி !           4

கள்ளநோட் அச்சிட்ட குண்டன் -- அவனைக் 
  கைதாக்க சாம்பு பறந்தனன் லண்டன் 
வெள்ளைக் கமிஷனர் பின்னர் -- சாம்பு
  மேதையை மெச்சிக் கொடுத்தாரே ‘டின்னர்’ !   5 

புன்னகை வாழ்வினில் வேண்டும் -- அதைப் 
  போற்றும் எழுத்தினை நாமும் வளர்த்தால் 
இன்னோரு தேவன் வரலாம் -- பல‌
  இன்பப்  படைப்புகள்  மீண்டும் தரலாம் !          6


கோபுலு சார் பற்றி:
( முன்பே இங்கு நான் எழுதியது தான்! )
கோபுலு

நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,
ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்
சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிடும்
கோபுலு ஓவியர் கோ

சி.ஐ.டி சந்துரு பற்றி:

துருவும் கூர்மை விழிமுகம்;
. துப்பறி தொழிலில் தனிரகம்;
இரும்புக் கரத்தால் பேசுவான்
. எதிரி உடலை வீசுவான்
தெருச்சீ ராளம் புசிப்பான்;
. திருவாய் மொழியும் ரசிப்பான்
திருடும் நபர்க்குச் சத்துரு;
. தேவன் படைத்த சந்துரு! 


பிறகு விவரமாக எழுதுகிறேன். முதலில் , விழா அழைப்பிதழைப் பாருங்கள்!






( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள் :

தேவன் படைப்புகள்

7 கருத்துகள்:

Siva Suryanarayanan சொன்னது…

அருமையான ஆனந்தக் களிப்பு!

சிவசூரி.

கோமதி அரசு சொன்னது…

தேவன் அவர்களைப் பற்றி நீங்கள் எழுதி பாடிய பாடல் அருமை.

கோபுலு அவர்களைப்பற்றிய கவிதை சந்துரு பற்றிய கவிதை, மற்றும் படங்கள்
பகிர்வும் தேவன் அவர்களைப்பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை.
நன்றி சார்.

பெயரில்லா சொன்னது…

இதென்ன ’ஞாபக மறதி’? விழாவில் நீர் நுழைந்த கண முதல் உம்மை விடாமல் தொற்றிக்கொண்டு உம் பக்கத்திலேயே அமர்ந்து உம்மை வேறெதையும் உருப்படியாகக் கவனிக்க விடாமல் கவனத்தைக் கலைத்துத் தொடையில் கிள்ளித் தொணதொணப்பதற்கு ஏறக்குறையச் சமமாகப் பிடுங்கிக்கொண்டே யிருந்தானே ஒரு புள்ளி, அவனைக் குறிப்பிடத் தவறி விட்டீர்களே!

Pas S. Pasupathy சொன்னது…

அதெப்படி மறக்க முடியும்? 2010-இல் தேவன் நினைவு தினத்தில் பங்கேற்க நான் வந்தபோதும், என் பக்கத்தில் உட்கார்ந்து எனக்கு ஊக்கமளித்த நகுபோலியன் சாரை எப்படி மறக்க முடியும்? மேலும், தேவனைப் பார்த்து, அவர் ஆசியுடன் ஒரு கட்டுரையை விகடனில் எழுதியவராயிற்றே அவர் ?

Thangamani சொன்னது…

அமரர்.தேவன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டது மிக்கமகிழ்ச்சி.
திரு.கோபுலு அவர்கள்,திரு.நகுபோலியன் அவர்களுடன்
படத்தில் பார்த்து மகிழ்ந்தேன்.உங்கள் கவிதைகள் சூப்பர்!
தேவன் நாவல்கள் சில வாங்கினேன்.படிக்கின்றேன்.
உங்கள் பேச்சை கேட்க முடியுமா?

அன்புடன்,
தங்கமணி.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி! என் பேச்சுப் பதிவு கிட்டினால், சொல்கிறேன்.

Unknown சொன்னது…

மகிழ்ந்தேன்