திங்கள், 21 ஜூன், 2010

'தேவன்’:கண்ணன் கட்டுரை -1

அவனவன் வேலையை...
தேவன்


ஒரு சின்னப் பையன் எழுதுவது போன்ற நடையில் பல அரிய விஷயங்களை 'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் விகடனில் தேவன் எழுதி வந்தார். 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை 50-களில் பலரைக் கவர்ந்தன. நூல் வடிவில் வெளியாகாத ‘தேவனின்’ கட்டுரைத் தொடர்களில் இது ஒரு மிகச் சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். கோபுலு அவர்களும் இதற்கு விசேஷமாகப் படங்கள் வரைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
======

(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)
(17.2.52)
எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் பெரம்பை ஆட்டி, ''அவனவன் வேலையை அவனவன் செய்யுங்களேண்டா! உருப்படறதுக்கு வழி பிறக்கும்''னு அடிக்கடி கூச்சல் போடறார். நாலு பேர் கவனிக்கணும்னா இவர் யோசனை பலிக்காது! பள்ளிக்கூடத்துப் பசங்களானாலும் சரி, பார்லிமென்ட்லே ஒக்கார்ர மந்திரியானாலும் சரி... பேர் எடுக்கணும்னா பிறத்தியான் கார்யத்தைச் செய்யணும். அப்பத்தான் பத்ரிகேலே அவா பேர் பெரிசா வரும்.

இல்லாட்டா, கொல்ருல் வெச்சுண்டு மந்திரிகள் எதுக்காக அஸ்திவாரக் கல் நடறா? கொத்து மேஸ்திரியைவிட மந்திரி நன்னாக் கட்டி விடுவாரோ? பெரிய இஞ்சினீர், நாடகத்திலே நடிச்சுட்டு எத்தனை புகழ் வாங்கி விடறார்! அப்புறம், ஒரு நெஜ வக்கீல் சங்கீதக் கச்சேரி பண்ணிட்டு எல்லார்கிட்டேயும் ஸர்ட்டிபிகேட் வாங்கிடறார். பசங்க மாத்திரம் அவனவன் பாடத்தைப் படிச்சுண்டு இருந்துட்டால் யார் கவனிக்கப் போறா? பக்கத்துப் பையன்கள்கிட்டே பேசினாலும் வாத்தியார் கவனிச்சு, முதுகிலே ரெண்டு அறையாவது வைப்பார்!

எதுக்குச் சொல்ல வந்தேன்னா, ஒலகம் அப்படி ஆயிடுத்து. நாய் மனுஷனைக் கடிச்சா, அதைக் கேட்கிறவா இல்லை; மனுஷன் நாயைக் கடிச்சுட்டா, விழுந்து விழுந்து பார்க்கறா. பத்திரிகையிலே எழுதிப்பிடறா. ஆகையினாலே, பட்டணத்திலே அவனவன் வேலையைச் செய்றவனைக் காண்றது, பலசரக்குக் கடையிலே காப்பிக் கொட்டையைக் காண்ற மாதிரி அரிதா ஆயிப் போச்சு! கேளுங்கோ இந்தக் கதையை!

முந்தா நாள் தேனாம்பேட்டை யிலே யாரோ ஒருத்தர் வீட்டுக் கொழாயிலே ஜலம் வரதா ஒருத்தன் சொன்னான்னு ஜனங்கள் திரள் திரளா அதை வேடிக்கை பார்க்கப் போனா. 'பொழலேரியிலேயே தண்ணியில்லாத போது, கொழாயிலே வருமா?'னு எங்கப்பா மாத்திரம் போகல்லே. நானும் மாமாவும் மாத்திரம் போனோம்.

அந்தத் தேனாம்பேட்டை வீட்டுக்காரர் எங்களையெல்லாம் பார்த்து, ''யாரோ வெஷமக்காரன் பொய் வதந்தி கிளப்பியிருக்கான். ஐயோ பாவம்! இவ்வளவு தூரம் நடந்து வந்தேளே!''ன்னு வருத்தப் பட்டு, கண்ணாலே ஜலம் விட்டார். அப்றம் அவரை விசாரிச்சதிலே, அவரோட ஆறு பிள்ளைகளும் பத்திரிகைக்கு எழுதி பிரபலமான பேர்னு பெருமையாச் சொல்லி, அதை விவரமாவும் மாமாவிடம் சொன்னார்.

''மூத்தவன் இப்போ டெல்லியிலே அரசியல்லே இருக்கான்; ரொம்ப கெட்டிக்காரன். அவன் கையைச் சொடக்கினான்னா மந்திரி சபையே கலைஞ்சுடும்'' னார். ''அடிக்கடி சொடக்கு வாரோ?''னு கேட்காம, ''எழுத்தாளர்னேளே!''ன்னு கேட்டேன்.

''ஓ! அவன் அரசியல் கட்டுரைகள் அடிக்கடி பத்திரிகையிலே பிரபலமா வருதே! இரண்டாவது பையன் கிரிக்கெட்லே யமனே தான்! அவன் 'ஸ்போர்ட்ஸ்' கட்டுரைகள் வாராவாரம் கொடுத் துண்டு வரான், ஒரு தினசரிலே!''

''பேஷ், பேஷ்!''

''மூன்றாவது பெண்; புக்காத்திலே இருக்காள். வாரப் பத்திரிகையிலே 'சித்தியின் சிங்காரம்'னு ஸ்திரீகள் பகுதி, அவள் பேரிலே தவறாமே வரது...''

''சபாஷ்!''

''நாலாவது பயல் கார்ப்பரேஷன் ஜனன - மரண ஆபீஸ்லே குமாஸ்தா. சக்கைப் போடு போட றான். ஒன்பது பத்திரிகைகளுக்கு அவன் வார பலன் பகுதி எழுதறான். நல்ல கற்பனை போங்கோ! ஒரு பத்திரிகையிலே வராப்லே இன்னொண்ணுக்குக் கொடுக்க மாட்டான். புதுசு புதுசா இருக்கும்.''





''பலே, பலே! அப்றம்..?''

''அஞ்சாவது பையன் நடிகனா இருக்கான். போன வாரம் கூட அவன் கட்டுரை 'சோக நடிப்பைச் சிரிக்காமல் செய்ய வேண்டுமா?'ன்னு பார்த்திருக்கலாமே!''

''ஆறாவது பையனும்...''

''இல்லை; பெண் அவள். அவளுக்கு ஏழு குழந்தைகள். இதோடே அவள் 'சுக வாழ்வு'ன்னு வைத்தியப் பகுதி ஒண்ணு விடாமே...''




மாமா ரொம்பச் சந்தோஷப்பட்டுண்டு, ''போறது! உங்க பசங்க அத்தனைபேருமே பத்திரிகை மூலம் பிரபலமாயிருக்கா!''ன் னார்.

அவர், ''இன்னொரு பய இருக்கான். அவன்தான் பிரயோசனமில்லே''னு சொன்னார். அப்போ அவர் மொகம் அப்பா 'மார்க்கெட்' லேருந்து வாங்கிண்டு வர கறிகாய்கள் மாதிரி ஒரேமிக்க வாடி வதங்கிப் போயிருந்தது.

''ஏன் ஸார்! அவன் என்ன பண்ணிண்டிருக்கான்?''

''அவனைக் கவனிக்கற பேர் இல்லை ஸார்! ஒரு பத்திரிகையிலே உதவி ஆசிரியரா இருக்கான். அவன் வேலையைச் செஞ்சுண்டு வரான். அவனாலே ஒரே ஒரு ஒபயோகம்... அவன் அண்ணன் - அக்காமார்களுக்குத் தவறாமே கட்டுரைகள் எழுதித் தந்துடறான். வேற ஒரு ப்ரயோஜனமுமில்லை, ஸார்!'' அப்படீன்னார் அவர்.

ஆகையாலே, இந்தக் காலத்திலே அவன் அவன் தொழிலைச் செஞ்சு பிரபலமாகி விடறது என்கிறது மட்டும் கிடையாது! அப்படி ஆயிடுத்து ஒலகம்!

[நன்றி: ஆனந்த விகடன்; ஓவியம் :கோபுலு ]


தொடர்புள்ள சில பதிவுகள் :

கண்ணன் கட்டுரை -2

கண்ணன் கட்டுரை -3

கண்ணன் கட்டுரை -4

தேவன்: படைப்புகள்


தேவன் நினைவுகள்

மிஸ்டர் ராஜாமணி : கதைகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

கருத்துகள் இல்லை: