செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு -2 : காந்தி மகான் கதை

காந்தி மகான் கதை
இரா.நக்கீரன்




[கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டு விழா 2010-ஆம் ஆண்டில் பல இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது .

.அவர் நினைவில் சில மடல்கள். இது விகடனில் வந்த ஒரு கட்டுரை ]


'முப்பக்கம் சூழ்ந்த கடல்
முத்திருக்கும் ஆழ்ந்த கடல்
இப்பக்கம் வந்தாலும்
இமயம் வடக்கினிலே
கட்டாத கோட்டையுண்டு
கடலும் மலைகாவல்
எட்டாது அசலானுக்
கிடங்கொடுக்கா திந்நாடு'


- என்று தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையிலிருந்து இந்திய விடுதலைக் காவியத்தின் நாயகனான காந்தி மகானின் கதை ஆரம்பமாகிறது. காந்தி மகான் பாரிஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்து போக வேண்டுமென்றபோது அவரது அன்னை, சீமைக்குப் போவதனால் உண்டாகும் கெடுதிகளைக் கூறி, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும் என்று மறுப்புத் தெரி வித்தபோது, காந்திஜி கீழ்க்கண்ட வாறு தம் அன்னைக்குச் சத்யப் பிரமாணம் செய்து தந்துவிட்டுப் பயணமானார்.

'அம்மா தாயே பெத்தவளே
நான் அப்படி மகனல்ல
அண்டமிடிஞ்சு விழுந்திட்டாலும்
ஆணைமீறுவேனோ?
கனவில்கூடக் கள்ளுக்குடியைக்
கருதிடவே மாட்டேன்
கஸ்தூரிபாயிதவிர ஒருத்தியைக்
கையால் தொடமாட்டேன்
மாமிசந்தின்னு முட்டை குடிக்க
வாய்திறக்க மாட்டேன்
மாதாவேயிது தவறுவதில்லை
மகாதேவன் சாட்சி'




இந்த வரிகளிலே காந்திஜியின் வருங்கால இலட்சியத்தின் சத்ய ஒளி பிரகாசிப்பதைப் பார்க்கி றோம்.

தென்னாப்பிரிக்காவிலே காந்தி மகானுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அநேகம். அவற்றில், நிறவெறி பிடித்த முரட்டு வெள்ளைக்காரன் அண்ணலைத் தனது பூட்ஸ் காலால் உதைத்ததும் ஒன்று. அந்தக் கொடுமையைக் கவிதை யிலே கவிஞர் வடித்துள்ளார்.


'கருப்புப் பூட்சால்
எட்டி உதைச்சான்
காந்தி மகாத்மாமேல்
கட்டின தலைப்பா
தட்டிவிட்டான்
காந்திமகாத்மா மேல்'


அப்போதும் அந்தக் கொடிய வன் மீது காந்தியண்ணலுக்குச் சினமேற்படவில்லை. மாறாக, பகைவனுக்கு அருளும் மேலான பண்பு தவழ்கிறது அவரது முகத்தில்.

'சாந்தம் பொங்கி
வழியுது ஐயா
காந்திமகானுக்கு
சனங்களைக் கண்டு
கருணை பெருகுது
காந்தி மகானுக்கு!'


இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக் கும் ஏற்பட்ட வகுப்பு வாதக் கலகத் தைப் பற்றிக் குறிப்பிடுகையில்...

'என்னத்துக்காக அடிச்சுக்கறான்
என்பது கூடத் தெரியாமல்
சின்னத்தனமான சண்டையிலே
செத்து விழுந்தது தேசச்சனம்'


- என்று மக்களின் அறியாமையை விளக்கிச் சாடியுள்ள போக்கானது, இன்றைய நிலையில் கூடப் பொருத் தமாகத்தானே இருக்கிறது?

நவகாளிக்குப் பயணமான காந்திஜியைப் பற்றிக் குறிப்பிடும் கவிதை வரிகள் இலக்கிய நயம் உடையவை.

'முள்ளும் மொரும்பும்
நிறைந்த வயல்
மொய்க்கும் கொசுக்கள்
நிறை காட்டில்
கல்லும் பயந்து நடுங் கிடவே
கடுமத வெறி
கொண்டவர் நாட்டில்
போதிமரத்து நிழல்வீற்ற
புத்தன் புறப்பட்டுப்
போனது போல்
ஆதியில் ராமச் சந்திரனும்
ஆரணியவாசம் போனது போல்
பாதுகைதன்னையும்
தான்கழட்டி
பரதன்கையில் கொடுத்துவிட்டு
மோதிக்கிழிக்கிற முள்காட்டில்
முன்னர் நடந்த கதை போலே
காந்தி மகானும் தன் செருப்பை
கழட்டித்தூர வைத்துவிட்டு
சாந்திவிளக்கும் திருவடியாம்
தாமரைப்பாதம் தடம்படவே' '


செல்கிறார் என்று படிக்கும்போது நமது மெய் சிலிர்க்கவில்லையா?

எல்லாவற்றுக்கும் சிகரமான தாக அமைந்திருப்பது காந்தி மகானின் துர்மரணம். புற்றிலிருந்து பாம்பானது பதுங்கி வந்து கடிப்ப தைப் போல், பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த அண்ணலைக் கும்பிடுங் கரங்க ளால் கொன்று தீர்த்தானே கொடியவன். அவன் துப்பாக்கியி லிருந்து புறப்பட்ட குண்டுகள், அண்ணலை மட்டுமா துளைத்தன? இல்லவேயில்லை. எந்தச் சமுதா யத்தின் விடுதலைக்காகப் பாடு பட்டு, அல்லும் பகலும் தொண் டாற்றினாரோ அந்தத் தொண் டுக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்ட ஒவ்வொருவரது நெஞ்சையுமே அந்தக் குண்டுகள் 12துளைத்தன.

'வழியை அமைத்துக்
கொடுத்த மகான்
வந்த கடமை முடிந்ததென்றே
அழியும்உடம்பை அழித்துவிட்டே
ஆதிபரம்பொருள் ஆகிவிட்டார்'


- என்று கூறி காந்தி மகான் சரிதையை முடித்து வைத்துள்ளார் கவிஞர்.

காந்திமகானின் கதையைக் காவியமாக்கிய பெருமை, கவிஞர் சமுதாயத்தின் பெருமையாகும். அந்தப் பெருமைக்கு வித்திட்ட சிறப்பு, கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களுடையது.

வானமும் பூமியும் உள்ள மட்டும், வாரிதியாழிகள் உள்ள மட்டும், ஞானமும் நீதியும் உள்ள மட்டும், ஞாயந் தரையினில் உள்ள மட்டும்... காந்தி மகான் கதையும் சிரஞ்சீவித்துவம் பெற்றிருக்கும்.



[நன்றி: ஆனந்த விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொ.சுப்பு: மற்ற பதிவுகள்

மகாத்மா காந்தி

1 கருத்து:

இன்னம்பூரான் சொன்னது…

கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் 'காந்தி மஹான் கதை' யை பல தடவை நேரில் கேட்ட என்னை, மறுபடியும் 'அந்த நாளும் வந்திடாதோ' என்று கலங்க வைத்து விட்டீர்கள்.