சனி, 20 ஜூலை, 2019

1325. பாடலும் படமும் - 72

கிருஷ்ண அவதாரம்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 



" மோது மறலி" என்று தொடங்கும் திருப்புகழில்   பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிறார் அருணகிரிநாதர்.

சூது பொருதரும னாடு தோற்றிரு
     வாறு வருஷம்வன வாச மேற்றியல்
          தோகை யுடனுமெவி ராட ராச்சிய ...... முறைநாளிற்

சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி
     ராளு முரிமைதரு மாறு கேட்டொரு
          தூது செலஅடுவ லாண்மை தாக்குவ ...... னெனமீள

வாது சமர்திருத ரான ராட்டிர
     ராஜ குமரர்துரி யோத னாற்பிறர்
          மாள நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப

வாகை விஜயனடல் வாசி பூட்டிய
     தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம
          மாயன் 

சூது பொரு தருமன் நாடு தோற்று ... சூதுப்போர் செய்த
தருமபுத்திரன் தன் நாட்டைச் சூதில் இழந்து,

இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று ... பன்னிரண்டு
ஆண்டுகள் காட்டில் வாழும் வாழ்க்கையை பாண்டவர்கள் ஏற்றுக்
கொண்டு வசித்தபின்,

இயல் தோகை உடனுமெ விராடராச்சியம் உறை நாளில் ...
கற்பியல் உடைய மயில் போன்ற மனைவி திரெளபதியுடன் விராட
நாட்டில் (ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்து) காலம் கழித்து
வந்த நாளில்,

சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ... பசுக்களைக்
கொள்ளை அடித்துக் கொண்டு விராட நாட்டிலிருந்து
துரியோதனாதியர் செல்ல, அப்பசுக்களை எதிர்ச் சென்று மீட்டுவந்து,

ஆளும் உரிமை தருமாறு கேட்டு ... அரசாட்சி உரிமையைத்
தரும்படி கேட்பதற்காக,

ஒருதூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என மீள ...
ஒப்பற்ற தூதனாகக் கண்ணணை அனுப்ப, போருக்கு உரிய வலிய
ஆண்மையோடு தாக்குவேன் (ஆனால் அரசுரிமையைத் தரமாட்டேன்)
என்று துரியோதனன் கூற, தூதினின்றும் வெற்றியின்றி கண்ணன்
மீண்டும் வரவும்,

வாது சமர் திருதரானராட்டிர ராஜ குமரர் துரியோதனால்
பிறர் மாள ... வலிய வாது பேசிப் போருக்கு வந்த திருதராஷ்டிர
ராஜனுடைய குமாரர்களும், துரியோதனன் காரணமாகப் போரிட்ட
மற்றவர்களும் இறக்க,

நிருபரொடு சேனை தூட்பட ... பிற அரசர்களோடும்
சேனைகள் எல்லாம் தூள்பட்டு அழிய,

வரி சாப வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை ... வரிகள்
பொருந்திய காண்டீபம் என்ற வில்லினால் வெற்றியைக் கொண்ட
அர்ச்சுனனுடைய வலிய குதிரைகள் பூட்டிய ரதத்தை

முடுகு நெடு மால் பராக்ரம மாயன்  ... வேகமாகச் செலுத்திய
பெரிய திருமால், வல்லமை பொருந்திய மாயன் ,



திருமங்கையாழ்வாரின் பாசுரம் இதோ.

துவரிக் கனிவாய் நிலமங்கை 
  துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள்,
இவரித் தரசர் தடுமாற 
  இருள்நாள் பிறந்த அம்மானை,
உவரி யோதம் முத்துந்த 
  ஒருபா  லொருபா லொண்செந்நெல்,
கவரி வீசும் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே.


பதவுரை

துவரி கனி வாய் - இலவம் பூப்போலவும் கொவ்வைக்கனி போலவும் சிவந்த அதரத்தையுடையளான
நிலம் மங்கை - பூமிப்பிராட்டியானவள்
துயர் தீர்ந்து - (பாவிகளைச் சுமப்பதனாலுண்டான) துக்கம் தொலைந்து
உய்ய - சுகப்படும்படியும்,
பாரதத்துள் - பாரதப் போரில்
இவரித்த - எதிரிட்ட
அரசர் - ராஜாக்கள்
தடுமாற - நிலைகுழம்பும்படியாகவும்
இருள் நாள் - இராப்பொழுதில்
பிறந்த - திருவவதரித்த
அம்மானை - ஸ்வாமியை ( கிருஷ்ணனை )
ஒரு பால் - ஒரு புறத்தில்
உவரி ஓதம் - கடலலைகள்
முத்து - முத்துக்களை
உந்த - ஒதுக்கித்தள்ளவும்
ஒரு பால் - இன்னொருபுறத்தில்
ஒண் - அழகிய
செந்நெல் - செந்நெற்பயிர்கள்
கவரி வீசும்  - சாமரம் போல் வளைந்து வீசவும் பெற்ற
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்திலே
அடியேன் கண்டுகொண்டேன்

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

தசாவதாரம் 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

கருத்துகள் இல்லை: