கொத்தமங்கலம் சுப்பு
If you are already a Follower of my blog , thanks for reading!
பார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...
If you are already a Follower of my blog , thanks for reading!
தமிழிசை மாநாடு
சின்ன அண்ணாமலை
தமிழிசை இயக்கம் தோன்றிய நேரம். சிதம்பரத்தில் முதல் தமிழிசை மாநாடு நடைபெற்று பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இயற்கையாகவே தமிழ் உணர்ச்சி அதிகமுள்ள எனக்கு, அச் செய்திகள் எனது உள்ளத்தில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிற்று. சிதம்பரத்தில் நடந்தது போல ஒரு பெரிய மாநாடு சொந்த ஊரான தேவகோட்டையில் நடத்த வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. இரவு பகல் அதே கனவு. கண்டவர்களிடமெல்லாம் தமிழ் இசை மாநாட்டைப் பற்றியே பேச்சு. இதில் எனக்கு மிகுந்த உற்சாகமூட்டியவர் என் அருமை நண்பர் திரு. டி.ஆர். அருணாசலம் அவர்கள். ஆகவே அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். இருவரும் கையிலிருந்து செலவு செய்து சில நோட்டீஸ்கள் அச்சடித்து தமிழிசை மாநாடு நடைபெறப் போவதாக விளம்பரம் செய்தோம். ஊரில் பரவலாகக் கொஞ்சம் ஆதரவு கிடைக்கும் போலிருந்தது. சங்கீத வித்வான்கள் அனைவருக்கும் கடிதம் போட்டோம். இலக்கியப் புலவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பினோம். அனைவரின் பதில்களும் உற்சாகமூட்டக் கூடிய வகைகளாக இருந்தன. அடுத்தது மாநாட்டிற்காக நிதி வசூல் தொடங்கினோம். வீடு வீடாகச் செல்லும்போதுதான் தமிழிசையைப் பற்றி பலருக்கு புரியவில்லை என்று தெரிந்தது. இத்தனைக்கும் அந்த ஊரில் மாதம் தவறாமல் நடைபெறும் பல கல்யாணங்களில் சங்கீத கச்சேரிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
"எதுக்குத் தமிழில் பாடவேண்டும்?'', "இதற்கு ஏன் மாநாடு?'', "தமிழில் பாட முடியுமா?'' , "தமிழில் பாட பாட்டுக்கு எங்கே போவது?'', "இசையில் ஏன் பாஷை விவகாரம்?'' என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டுப் பலர் எங்களை அதைரியப்படுத்தினார்கள். ஆனால் எங்களுடைய தமிழுணர்ச்சி அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவிடவில்லை.
திட்டங்கள் பிரமாண்டமானதாகப் போடப்பட்டன. ஆனால் நிதி வசூல் எப்படிச் செய்வதென்று தெரியவில்லை. பல பேர் மாநாட்டை கைவிடும்படி உபதேசம் வேறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்ன வந்தாலும் சரி, எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்று உறுதி பூண்டோம். சுமார் பத்தாயிரம் ரூபாய் வசூலானால் மாநாடு சிறப்பாக நடைபெறும் என்று திட்டம் போடப்பட்டது. ரூபாய் பத்தாயிரத்துக்கு எங்கே போவது? இந்நிலையில் மாநாட்டுக் காரியங்களில் தானாக வந்து உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டு அல்லும் பகலும் எங்களுடன் பணிபுரிந்து வந்த அன்பர் ஒருவர், "இராஜா. சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களிடம் சென்று முயற்சிக்கலாமே'' என்றார்.
நானும் திரு. டி.ஆர். அருணாசலம் அவர்களும் தீவிர காங்கிரஸ்காரர்கள். பலமுறை ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களை மேடையில் தாக்கிப் பேசி இருக்கிறோம். ஆகவே காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள், ராஜா சர் அவர்கள் வாசற்படி ஏறுவதே தவறு என்பதாக நினைப்பவர்கள். அப்படியிருக்க, அவரிடம் எப்படிப் போவது? ஆயினும் அந்த அன்பர் விடவில்லை. "இது காங்கிரஸ் விஷயம் இல்லையே; தமிழ் சம்பந்தப்பட்டதுதானே, தமிழுக்காகச் செல்லலாமே'' என்றெல்லாம் நியாயங்களை எடுத்துரைத்து, எங்களை ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் கூட்டிச் சென்றார்.
ராஜா சர் அவர்கள் எங்கள் இருவரையும் வெகு அன்பாக வரவேற்று, எங்கள் தோள்மேல் கைபோட்டு மாநாட்டைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டார். நாங்கள் நிதி வேண்டுமென்று கேட்கவில்லை. ஏனோ கேட்பதற்கு எங்கள் மனம் துணியவில்லை.
காபி சாப்பிட்டதும் நாங்கள் போய் வருகிறோம் என்று கிளம்பினோம். ராஜா சர் எங்களிடம் ஒரு கவரைக் கொடுத்து "இதில் எனது அன்பளிப்பு இருக்கிறது; மாநாட்டைச் சிறப்பாக நடத்துங்கள்'' என்று சொன்னார்கள். விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.
கவரைப் பிரித்துப் பார்த்தோம். அப்படியே திகைத்துக் கல்லாய் சமைந்து நின்றோம்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதில் இருந்தது ரூபாய் பத்தாயிரம்.
ஆயிரம் ரூபாய் பரிசு
தமிழிசை இயக்கம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். தேவகோட்டையில் ஒரு கல்யாண வீட்டில் அரியக்குடி ராமனுஜ ஐயங்கார் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வெகுநேரம் அரியக்குடி தெலுங்கிலேயே பாடிக் கொண்டிருந்தார். நான் தமிழிசை இயக்கத்தின் காரியதரிசி. ஆகவே அரியக்குடியிடம், "தயவு செய்து தமிழில் பாடவும்'', என்று சீட்டு எழுதிக் கொடுத்தேன். அரியக்குடி சீட்டை வாங்கிப் பார்த்து விட்டுப் புன்முறுவல் பூத்தார். பாடுவதாகச் சைகை செய்தார். நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் பாடப்போகும் தமிழ்ப்பாட்டை எதிர்பார்த்திருந்தேன். பாட ஆரம்பித்தார் அரியக்குடி. அதுவும் என்னைப் பார்த்தே பாட ஆரம்பித்தார்,
""யாரடா குரங்கு நீ--இங்கே வந்த
யாரடா குரங்கு நீ''.
அருணாசலக் கவிராயர் கீர்த்தனைதான். நான் அரியக்குடியை முறைத்துப் பார்த்தேன்.
"இது தமிழ் பாட்டுதானே?'' என்று சொல்லிவிட்டு அதைப் பாடி முடித்தார். அந்தப் பாட்டு முடிந்ததும் என்னை அருகில் வரும்படி அரியக்குடி கூப்பிட்டார். சென்றேன். ""கோபப்படாதீர்கள் சும்மா தமாஷ் செய்தேன். இனி பூராவும் தமிழ்ப் பாட்டுத்தான்'' என்று சொல்லி சுமார் இரண்டு மணி நேரம் தமிழிசையை முழக்கிச் சபையை மெய்மறக்கச் செய்தார்.
கச்சேரி முடிந்ததும் நான் அவர் அருகில் சென்று நன்றி சொன்னேன். அரியக்குடி என்னைப் பார்த்து, "இசைக்கு மொழி அவசியமா?'' என்று கேட்டார். "அவசியம்தான்,'' என்றேன்.
"எதனால்?'' என்றார்.
"நம் முன்னோர்கள் இசையில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே,'' என்றேன். "எப்படி'' என்றார்.
"இசைதான் முக்கியம் என்றால் நம் முன்னோர்கள் வாய்ப்பாட்டுக்காரர்களை நடுவில் வைப்பார்களா? ஒரு சாதாரண வித்வான் பாடினாலும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி போன்ற பெரியவர்கள் பக்கவாத்தியமாகத்தானே உட்காருகிறார்கள்? இசைதான் முக்கியம்; மொழி முக்கியம் இல்லை என்றால் ராஜமாணிக்கம் பிள்ளையைத்தானே நடுவில் வைக்க வேண்டும். இதிலிருந்தே மொழி முக்கியமென்று தெரியவில்லையா'' என்றேன்.
அரியக்குடி அன்றிலிருந்து தமிழ்ப் பாட்டு நிறையப் பாட ஆரம்பித்தார். இந்தச் சம்பவத்தை ஒரு சபையில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் அரியக்குடியே சொன்னார். உடனே ராஜா சர் அகமகிழ்ந்து அப்போதே எனக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார்.
If you are already a Follower of my blog , thanks for reading!
If you are already a Follower of my blog , thanks for reading!
கடமை - கடைசிவரை
மூலம்: பி.ரேவ்ஸ்கி தமிழாக்கம்: சாருகேசி
ஜனவரி 30. 'சாருகேசி'யின் நினைவு தினம்.
If you are already a Follower of my blog , thanks for reading!
இரா.நாகசாமி: வியத்தகு பன்முக ஆளுமை
டி.எஸ்.சுப்ரமணியன்
அண்மையில் (23-1-2022 -இல்) மறைந்த அறிஞர் நாகசாமியைப்பற்றித் 'தமிழ்-ஹிந்து'வில் வந்த ஒர் அஞ்சலிக் கட்டுரை.
இவர் தன் குழுவுடன் ( பல சிறுவர்கள்) டொராண்டோவிற்கு வந்து, நடத்திய " சம்பந்தர்" போன்ற நாட்டிய நாடகங்கள் நினைவுக்கு வருகின்றன.
===
தை மாதம் 10-ம் நாள் (ஜனவரி 23-ம் தேதி, 2022) அன்று காலமானார் இரா.நாகசாமி (91). அவர் ஒரு மகத்தான மனிதர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கரைகடந்த புலமை பெற்றவர். கல்வெட்டியல், தொல்லியல், அகழாய்வு, தமிழ் பிராமி, வட்டெழுத்து, நாகரி, கிரந்தம் போன்ற எழுத்துருக்கள், பல்லவர் மற்றும் சோழர் காலத்துச் செப்புத் திருமேனிகள், செப்பேடுகள், நாணயவியல், நடுகற்கள், ஓலைச்சுவடிகள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஆழ்ந்த புலமை கொண்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்துவத்துடன் செயல்பட்டவர்.
1966 முதல் 1988 வரை 22 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்தவர் நாகசாமி. ஆகம விதிகளை நன்கு அறிந்தவர். கோயில் கட்டிடக் கலையில் புலமை பெற்றவர் நாகசாமி. தமிழுக்கு அவர் ஆற்றிய மிகப் பெரிய தொண்டு எதுவெனில், தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகள், அவற்றில் உள்ள அரிய செய்திகளைப் பற்றி தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதுதான். அந்தப் பணியை அவர் செய்ய பல உத்திகளைக் கையாண்டார்.
நாகசாமி குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் பூங்குன்றன் இப்படிக் கூறுகிறார்: “ ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் எபிகிராஃபி’ என்ற நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலமாக நாகசாமி ஏற்படுத்தினார். அதில் சரித்திரம், தமிழ் இலக்கியம், தொல்லியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களைச் சேர்த்தார். அவர்களுக்கு ஒரு வருட காலம் கல்வெட்டியலில் மிக விரிவாகப் பயிற்சி கொடுத்து, முதுகலைப் பட்டம் வழங்கினார். பட்டம் பெற்றவர்களை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முழு நேர ஊழியர்களாகப் பணியமர்த்தினார். இந்த ஒரு வருட காலம் படிப்பு வெறும் வகுப்பறையில் நடக்கவில்லை. மாணவர்களை கோயில்கள், மலைகள், மாதா கோயிலில் உள்ள மணிகளில் உள்ள கல்வெட்டுகள் என எங்கெல்லாம் பழங்கால எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்தனவோ, அங்கெல்லாம் கூட்டிச்சென்று, அவற்றைப் படிக்கக் கற்றுக்கொடுத்துக் களப் பயிற்சி கொடுப்பார்.”
பல்லவர், சோழர் காலத்து செப்புத் திருமேனிகளின் வடிவமைப்பு, அவற்றின் நகை அலங்காரங்கள், உடைகள், சிகை அலங்காரங்கள், முத்திரைகள் போன்றவற்றைப் பற்றி மிக நுணுக்கமாக அறிந்தவர் நாகசாமி. அர்த்தநாரீஸ்வரர் (மாதொரு பாகன்) செப்புத் திருமேனியை அவர் விவரிக்கும்போது, கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கும். அர்த்தநாரீஸ்வரர் செப்புத் திருமேனிகளில், ஆணின் தோள் திண்மையாகவும், பெண்ணின் தோள் நளினமாகவும், ஆணின் கால் வலுவானதாகவும், பெண்ணின் கால் மென்மையாகவும் இருப்பதையும், திருமேனிகளில் உள்ள உடைகள், அலங்காரம், சிகை அமைப்பு எல்லாவற்றையும் எவ்வாறு வேறுபடுத்தித் தமிழகச் சிற்பிகள் காண்பித்தனர் என்பதையெல்லாம் சுவைபட விவரிப்பார்.
தமிழ் இலக்கியத்தில் மிக்க புலமை படைத்தவர் நாகசாமி. ஆதலால், செப்புத் திருமேனிகளைப் பற்றி அவர் விவரிக்கும்போது, அவற்றைப் பற்றி தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள்காட்டிப் பேசுவார். சம்ஸ்கிருதத்திலும் மிக்க புலமை பெற்றவர். அந்தப் பின்புலத்தால் அவரால் சோபிக்க முடிந்தது.
போளுவம்பட்டி அகழாய்வின்போது கிடைத்த, செம்பினால் செய்யப்பட்ட ஒரு எருதினைப் பற்றி, ‘கவின்மிகு சோழர் கலைகள்’ அல்லது ‘Masterpieces of Chola Art’ என்று, தான் எழுதிய நூலில் நாகசாமி கூறும்போது, ‘‘கோவைக்கு அருகில் போளுவம்பட்டி என்ற இடத்தில் நடந்த அகழாய்வில், உள்ளங்கைக்குள் அடக்கக் கூடிய ஒரு சிறிய எருதின் உருவம் கிடைத்தது. அவ்வூர் மக்கள், இவ்வகழாய்வு செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், இதேபோன்று மற்றுமொரு எருது கிடைத்தது என்றும், குழந்தைகள் விளையாடியபோது அது தொலைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டனர். இவ்விரண்டு எருதுகளின் உருவங்களும் ஒரு மரபை நமக்கு உணர்த்துகின்றன. முற்காலத்தில் ஊர்ப்புறங்களில் ஆண்டுதோறும் உழுதொழிலைத் தொடங்கும்போது, ஊர் மக்கள் அனைவரும் கூடி, ஒரு வயலில் முதன்முதலில் உழுவார்கள். இதை விழாவாக எடுப்பார்கள். இதை ‘பொன் ஏர் பூட்டுதல்’ என்று சொல்வார்கள். உலோகத்தால் சிறு வடிவில் ஓர் ஏர் செய்து, அதை இரு எருதுகள் இழுப்பதுபோல் செய்து, அவ்வயலில் ஒரு குழியில் புதைத்து, பின்னர் உழுதொழிலைத் தொடங்குவார்கள். இதற்காகச் செய்யப்பட்ட எருதுகள்தான் போளுவம்பட்டியில் கிடைத்தவை. ஆதலால், உலோகத்தால் இதுபோன்ற உருவங்களும் செய்துள்ளனர்” என்றார்.
கல்வெட்டியலை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றியவர் நாகசாமி என்பதற்கு அவரது செயல்பாடுகளே சான்று. தொல்லியல் துறையில் நாகசாமியின் சாதனைகள் குறித்து, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், கா.இராஜன் இப்படிக் கூறுகிறார்: “அவர் ஒரு தனி மனித சேனை. அவர் அறைக்குள் கிடந்த ஆசிரியர் அல்லர். தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், செப்பேடுகள். நடுகற்கள், ஓலைச்சுவடிகள், நாணயங்கள் போன்றவற்றை ஆராய்ந்தார். நடுகற்களைப் பற்றிய அவரின் ஆராய்ச்சி பல்லவர்களின் சரித்திரத்தை மேலும் ஆராயத் துண்டியது. அதுவரை, பல்லவர்களின் வரலாறு, அரச மரபினரைப் பற்றிய செப்பேடுகள், கல்வெட்டுகள் மூலம் எழுதப்பட்டுவந்தது. ஆனால், நாகசாமியின் அயராத முயற்சிகளால், செங்கம் பகுதியில் உள்ள சாதாரண மக்களால் எழுப்பப்பட்ட நடுகற்கள் மூலம், பல்லவர் வரலாறு, சமூகக் கண்களோடு கூடிய வரலாறாக மீளாய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டது. இது நாகசாமியின் பெரிய சாதனையாகும்.”
நாகசாமியின் அகழாய்வு சாதனைகளைப் பற்றி தொல்லியல் ஆய்வாளர் சுப்பராயலு நம்மிடம் பேசினார். “செங்கம் பகுதியில் உள்ள நடுகற்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, அவை தந்த செய்திகளை அச்சில் ஏற்றியதும், பூலாங்குறிச்சியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், விழுப்புரம் அருகில் ஜம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட அதியமான் நெடுமான் அஞ்சி பற்றிய தமிழ்–பிராமி கல்வெட்டுச் சொற்கள், கங்கைகொண்ட சோழபுரம், கோவலன்பொட்டல் போன்ற இடங்களில் நாகசாமி செய்த அகழாய்வுகள் என்று அவரது சாதனைகள் பெரும் பட்டியலாக நீளும். பற்பல தமிழ்–பிராமி, வட்டெழுத்துகள் பொறித்த கல்வெட்டுகளைப் படித்து அவற்றில் உள்ள செய்திகளையெல்லாம் வெளி உலகுக்கு எடுத்துக்கூறியவர் நாகசாமி” என்றார்.
பல பெரிய, சிறிய நூல்களையும், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருப்பவர் நாகசாமி. அவர் எழுதிய ‘மாமல்லை’, ‘ஓவியப்பாவை’, ‘உத்தரமேரூர்’, ‘கலவை’, ‘கவின்மிகு சோழர் கலைகள்’, ஆங்கிலத்தில் எழுதிய ‘Masterpieces of Early South Indian Bronzes’, ‘Tamil Nadu’, ‘The Land of Vedas’, ‘Tarangampadi’, ‘Gangaikonda chozhapuram’, ‘Kailasanatha Temple’ (காஞ்சிபுரம்), ‘Mirror of Tamil and Sanskrit’ உள்ளிட்ட ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவரது வியக்கத்தகு பன்முகப் புலமையை என்றும் பறைசாற்றும். நாகசாமி, புகைப்பட நிபுணரும்கூட. தான் எழுதும் நூல்களுக்குத் தானே புகைப்படம் எடுப்பார். ஆவணப்பட ஒளிப்பதிவுக் கலைஞரும்கூட. இந்திய விமானப் படையில் பணியாற்றியவர். விமானத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை அதிலும் ‘டைகர் மாத்’ விமானத்தில்கூட சரிசெய்வார். கடினமான யோகாசனங்களையும் அநாயாசமாகச் செய்வார். பல நாட்டிய நாடகங்களை நடத்தியவர். ஆர்மோனியம் வாசிப்பார். வரைபடம் வரைவதிலும் வல்லவர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் நாகசாமிக்கும் இடையிலான நட்பு குறித்து இந்தியத் தொல்லியல் துறையில் பணியாற்றிய தியாக.சத்தியமூர்த்தி கூறும்போது, “சங்க காலத்தைச் சேர்ந்த இடங்களைத் தெரிவுசெய்து, நாகசாமி அகழாய்வு நடத்தினார். குறிப்பாக, கரூர், கொற்கை, அழகன்குளம் அகழாய்வுகளைக் குறிப்பிடலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாகசாமியின் அருமை நன்கு தெரிந்திருந்தது. தொல்லியல் விஷயங்களைப் பற்றி நாகசாமியிடம் அவர் அடிக்கடி ஆலோசனை கேட்பார்” என்றார். இதேபோல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறும்போது, ‘‘கருணாநிதியும் நாகசாமியும் நல்ல நண்பர்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். இருவரிடத்திலும் நல்ல புரிதல் இருந்தது” என்றனர்.
- டி.எஸ்.சுப்ரமணியன், ஃப்ரண்ட்லைன் இதழின் முன்னாள் உதவி ஆசிரியர். தொடர்புக்கு: cholamurals@gmail.com
தொடர்புள்ள பதிவுகள்:
If you are already a Follower of my blog , thanks for reading!