புதன், 4 டிசம்பர், 2013

சங்கத் தமிழ் வளர்த்த நங்கை : கவிதை

சங்கத் தமிழ்வளர்த்த நங்கை
பசுபதி



[ Picture Source : Wikipedia ] 

கோபுர தரிசனம்2013 தீபாவளி மலரில் வெளியான கவிதை.



சங்கத் தமிழ்வளர்த்த நங்கை


பண்டைத் தமிழகத்தின் பாவலர்கள் பலர்நடுவில்
வண்டமிழ் ஒளிபரப்பும் மங்கைமணி ஒருவருண்டு.
சங்கத் தமிழ்வளர்த்த நங்கையந்த ஔவையின்
மங்காப் புகழ்மழையில் மனம்நனைப்போம்; மகிழ்வுறுவோம்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றாலும்
மற்றோரைப் புழ்ந்திடுவோர் வையகத்தில் ஒருசிலரே.
பரணரென்ற பெரும்புலவர் தரமறிந்து புகழவ்வை
பெருமையைப் போற்றிடுவோம்; கரங்களைக் குவித்திடுவோம்.

புலவரவ்வை சென்றிருந்தார் புரவலனின் அவைக்களம்;
பலமணிகள் காத்திருந்தும் பரிசொன்றும் கிட்டவில்லை.
ரவுத்திரம் பழகென்ற புதுமொழிக் கிலக்கணமாய்
அவதாரம் அன்றெடுத்தார் ஔவைப் பிராட்டியார்!
தனைமறந் தானோ?வேந்தன் எனைத்தான் அறியானோ?
வனத்திலோர் மரமிலையா மழுவேந்து தச்சருக்கு?
வித்தையுண்டு என்கையில்!வீறுகொண்டு கூவினார்.
எத்திசையில் சென்றாலும் எமக்குண்டு சோறென்ற
செருக்குள்ள புலமைமுன்நம் சிரங்களைத் தாழ்த்திடுவோம்!
அறச்சீற்றம் அன்றுகண்டோம்; ஆனந்தம் இன்றுமுண்டு!

அதியனுடன் போர்தொடுக்க ஆசைகொண்டான் தொண்டைமான்;
அதையறிந்த ஔவையார் அங்குச்சென்றார்; தொண்டையனின்
போர்க்கலங்கள் குவியல்கண்ட புலவர் புகழ்ச்சியென்னும்
போர்வையுள்ள பாடலொன்றால் புத்திமதி புகட்டினார்.
பார்வையிட்ட வேல்வாள்கள் பளபளத்தல் புகழ்ந்தார்!
போரறிந்த படைக்கலங்கள் கூர்மின்னு மாஎன்ன?
புரிந்துகொண்ட தொண்டைமான் போர்தொடங்கா முடிவுசெய்தான்.
அரசியலில் பாடலொன்றால் ஔவைசெய்த புரட்சியிது!
பார்வரலா றின்றுவரை பாராத அருமையது!
போர்மேகம் விரட்டுகவிப் புயலவ்வை பெருமையிது!

                   (வேறு)
துங்க நெல்லி பெற்ற அவ்வை தூது சென்று பண்டைநாள்
அங்க தத்தால் போர்நி றுத்தி அற்பு தம்நி கழ்த்தினாள்.
சங்க கால அவ்வை முன்பெம் தலைகள் என்றுந் தாழுமே
தங்க மான பாக்கள் தந்த நங்கை நினைவு வாழுமே!  

=========================  


தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்

5 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

சங்கத் தமிழ்வளர்த்த நங்கையந்த ஔவையின்
மங்காப் புகழ்மழையில் மனம்நனைப்போம்///போற்றுவோம் மகிழ்வோம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அவ்வை புகழ் சொல்லும் அருமையான கவிதை.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

ELANDHAI சொன்னது…

புறநானூற்றுப் பாடலுக்குப் பொருத்தமான கவிதை
இலந்தை

Pas S. Pasupathy சொன்னது…

இங்கு வந்து, கருத்துரைத்த யாவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.