செவ்வாய், 10 டிசம்பர், 2013

சொல்லயில் : கவிதை

சொல்லயில் 
பசுபதி





சென்னையில் பாரதி இல்லத்தில் நடந்த 'வானவில் ' பாரதி விழாவில்  இந்தப் பாடலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

கவிஞர் வேழவேந்தன் தலைமை. 
====

கந்தன் மொழியை வேலன் பேரில் 
. . காக்க வந்த சொல்லயில்;
இந்தி யக்க விஞர் வானில்
. . என்றுங் கூவும் பூங்குயில்.
சிந்து வேந்தர் பார திக்கென்
. . சென்னி என்றும் தாழுமே!
. . . செந்த மிழ்க்க விக்கு முன்பென்
. . . சென்னி என்றும் தாழுமே! (1)

சொல்லில் தமிழை ஊற வைத்த
. . சுப்ர மண்ய பாவலன் ;
அல்ல லுற்ற பார தத்தின்
. . ஆன்ம ஞானம் ஆர்த்தவன்.
ஷெல்லி தாசன் முன்னர் என்றன்
. . சென்னி என்றும் தாழுமே !
. . . செக்கி ழுத்த செம்மல் நண்ப!
. . . சென்னி என்றும் தாழுமே! (2)

மின்னும் கண்கள் வீரம் ஒளிரும்
. . மீசை, பாகை உருவினன் ;
கண்ணன் கழலை நண்ணும் கைகள்
. . கனலில் நீட்டும் காதலன்.
சென்னை செய்த வப்ப யன்முன்
. . சென்னி என்றும் தாழுமே !
. . . சித்தன் சக்தி பித்தன் முன்பென்
. . . சென்னி என்றும் தாழுமே! (3)


~*~o0o~*~

*அயில்=வேல்

[ டிசம்பர் 15, 2002 “திண்ணை” இதழில் வெளியான கவிதை ]

தொடர்புள்ள பதிவுகள் :

8 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

மின்னும் கண்கள் வீரம் ஒளிரும்
. . மீசை, பாகை உருவினன் ///அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வரிகள் சிறப்பு...

வாழ்த்துக்கள்...

Pas S. Pasupathy சொன்னது…

@கவியாழி கண்னதாசன், திண்டுக்கல் தனபாலன்:
மிக்க நன்றி. இப்பாடலின் வடிவம் சிலம்பில் உள்ள “கந்துக வரி”யைப் போன்ற ஒன்று. பந்தடித்து விளையாடும் மகளிர் பாடும் “கந்துக(பந்து) வரி” தமிழ் இலக்கியத்தில் முதலில் நாம் காணும் சந்தப் பாடல் என்றே சொல்லலாம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை....

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

அயில்வேல் அரசே ஞானாகரனே நவிலத் தகுமோ

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

ஆனா ரமுதே அயில்வே லரசே

கவிஞர் சவகர்லால் சொன்னது…

அருமையாகவும் சுவையாகவும் உள்ளது.

மீ.விசுவநாதன் சொன்னது…

மிக அருமை.