திங்கள், 25 ஜனவரி, 2021

1786. முதல் குடியரசு தினம் - 4

குடியரசு ஜனனம்


ஜனவரி 26. 1950 -இன் பின்னர்  வந்த 'ஆனந்த விகடன்’  இதழில் வந்த தலையங்கமும், குடியரசு தினத்தன்று எடுக்கப்பட்ட சில படங்களும் இதோ! 

====




பாரத நாட்டிற்குச் சென்ற 26-ம் தேதி சரித்திரப் பிரசித்த வாய்ந்த தினமாகும். அன்று கோடி சூரியப் பிரகாசம் கொண்ட சுதந்திர மாளிகையில், பொன்மயமான கொலு மண்டபத்தில் தேச மகா தலைவர்கள், முப்பது கோடி மக்கள் முன் னிலையில் ஜயகோஷ ஆரவாரங்களுக்கிடையே குடியரசுத் திட்டத்தைப் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள். அது முதல் பாரத தேசத்தின் பெயரும் 'பாரதக் குடியரசு' எனத் திகழலாயிற்று.


1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியா சுயராஜ்யம் பெற்ற பிறகு, குடியரசு நிலையை அடைந்தது இரண்டாவது பெரிய சம்பவமாகும்.


இதுவரை 175 வருடங்களாக, பிரிட்டிஷார் தங்களுக்குச் சாதகமான வகையில் அமைந்திருந்த அரசியலே அமுலில் இருந்து வந்தது. அதிகாரத்தை விட்டு அவர்கள் வெளியேறி யதைத் தொடர்ந்து நமக்கான சுதந்திர அரசியலை நாமே தயாரிக்கலானோம். அதற்காக தேசப் பிரதிநிதிகள் கொண்ட ஒரு சபையை அமைத்தோம். புது அரசியலை வகுக்க ஏற்பட்ட சபையாகையால் அதற்கு அரசியல் நிர்ணய சபை என்றே பெயரும் சூட்டினோம்.


சென்ற மூன்று ஆண்டுகளாகவே தேச நிர்வாகம் சுயேச்சையாய் நடந்து வந்தபோதிலும், எல்லாம் பிரிட்டிஷ் மன்னரின் பெயரால் இயங்கி வரலாயிற்று. இப்போது ஏற்பட்டிருக்கும் புது அரசியல் முறை முற்றிலும் சுயேச்சைத் தன்மை பெற்றதாகும். பிரிட்டிஷ் மன்னரில் பெயர் தாங்காமல் தாமே இயங்கக்கூடிய ஜனநாயக அரசியலே இப்போது ஆரம்பமாகி யிருக்கிறது. பிற சுதந்திர நாடுகளின் அரசியல் அமைப்புகளில் காணப் படும் சிறந்த அம்சங்களைக்கொண்டு இந்நாட்டின் தன்மைக்கு ஏற்றவாறு அரசியல் திட்டம் அமைத்திருக்கின்றனர்.


ஆகவே, உலகிற் சிறந்த ஜன நாயக தத்துவங்கள் யாவும் ஒன்று சேர்ந்து உருவெடுத்ததே இந்தியக் குடியரசு என்று கூறலாம். உலகிற் சிறந்த நவரத்தினங்களைக் கொண்டு தயாரித்த இந்தக் குடியரசு ஆபரணத்தையே நமது பாரத அன்னைக்கு 26-ம் தேதியன்று அணிவித்து மகிழ்ந்திருக்கிறோம்


[ நன்றி; விகடன் ]

தொடர்புள்ள பதிவு:

கருத்துகள் இல்லை: