புதன், 14 ஏப்ரல், 2021

1850. இன்று புதிதாய்ப் பிறந்தோம்: கவிதை

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

பசுபதி




"இன்று புதிதாய்ப் பிறந்தோம் – எம்
   எஞ்சிய வாழ்விற் கிதுவே முதல்நாள் ”
என்றே தினமும் உரைப்போம் ! – நம்
    யந்திர வாழ்வின் சுமையைக் குறைப்போம்!

துன்பத்தின் வேரைத் தகர்ப்போம் ! – நம்
   சோர்வை மறக்கக் கரங்கள் இணைப்போம் !
அன்பின் பெருமை உணர்வோம்! – எமை
   ஆளும் நெறியாய் அவிரோதம் ஏற்போம்!

பார்க்க ஒளிர்ந்திடும் யாவும் – பொற்
   பாளத் துகள்கள் எனவெண்ணல் வேண்டா!
தேர்வுகள் செய்திடக் கற்போம்! – நல்ல
   தேன்மலர் தேடிடும் வண்டுகள் போல!

முப்பால் தினமும் குடிப்போம்! – நம்
   முன்னோரின் நூல்களைப் பட்டாய் மதிப்போம்!
ஜப்பான் மொழியையும் கற்போம் – மேலைச்
   சாத்திரச் சாற்றை வாழ்வில் கலப்போம்!

மின்வான் தனிலே உலாவி – விண்
   மீன்கள் பறித்துத் தமிழில் பதிப்போம்!
வன்பால் சகத்தினை மாற்றி – நம்
   வாழ்வின் வளத்தைப் பெருக்குவோம் வாரீர்!

[ தினமணியில் 2016-இல் வந்த கவிதை ] 

தொடர்புள்ள பதிவுகள் :

கருத்துகள் இல்லை: