புதன், 20 ஏப்ரல், 2016

'சிட்டி' சுந்தரராஜன் - 1

சிட்டி என்றொரு தகவல் பெட்டகம்
 திருப்​பூர் கிருஷ்​ணன்

ஏப்ரல் 20. மணிக்கொடிக் கால எழுத்தாளர், தமிழறிஞர்  ” சிட்டி’ என்ற பி.ஜி.சுந்தராஜன் அவர்களின் பிறந்த தினம்.

அவர் நினைவில், டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ‘தினமணி’யில் 2011-இல் எழுதிய கட்டுரை இதோ!
=====


இடைக்கால இலக்கியத்தில் இளம்சூரியர், முதுசூரியர் என்ற இரட்டைப் புலவர்களின் படைப்புகள் உண்டு. இருவருமே மாற்றுத் திறனாளிகள். ஒருவருக்குக் கால் ஊனம். ஒருவர் பார்வையற்றவர். இருவரில் ஒருவர் வெண்பாவின் முதல் இரண்டடிகளைச் சொல்ல, மற்றவர் கடைசி இரண்டடிகளைச் சொல்ல, அவர்கள் இருவரும் இணைந்து இயற்றிய இனிய வெண்பாக்கள் பல, தமிழை நிரந்தரமாய் அலங்கரிக்கின்றன.

இருவர் சேர்ந்து இலக்கியம் படைக்க முடியுமா? முடியும் என்று, அன்றைய இரட்டைப் புலவர்கள் போல் பிற்காலத்தில் சாதித்துக் காட்டியவர் ஒருவர் உண்டு. அவர் சிட்டி என்கிற பி.ஜி. சுந்தரராஜன். அன்றைய இரட்டைப் புலவர்கள் நிரந்தரமான இரட்டையர்கள். சிட்டியோ அவ்வப்போது பலருடன் இணைந்து இரட்டையரில் ஒருவராக இலக்கியம் படைத்தவர். எல்லோருடனும் இணக்கமாக இணைந்து பழகும் அவரது இனிய பண்பு நலனுக்கு அவரது இந்தப் போக்கே சான்று.

கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து, "கண்ணன் என் கவி' என்ற பாரதி ஆய்வு நூல், தி.ஜானகிராமனுடன் இணைந்து, "நடந்தாய் வாழி காவேரி' என்ற பயண நூல், சிவபாதசுந்தரத்துடன் இணைந்து, தமிழ்ச் சிறுகதை, நாவல் வரலாறுகள், பெ.சு. மணியுடன் இணைந்து "அறிஞர் வ.ரா. வாழ்க்கை வரலாறு' என அவர் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றும் மணி மணியானவை.

பி.எஸ்.கோவிந்தசுவாமி - வெங்கலெட்சுமி இணையருக்கு 1910- ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி பிறந்தார்.

சிட்டி என்ற தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் இலக்கிய அறிஞர் ஒருவர் கிடைத்திராவிட்டால், தமிழின் தற்கால இலக்கிய வரலாறு (முக்கியமாகச் சிறுகதை, நாவல் வரலாறு) பதிவு பெறாமலேயே போயிருக்கும். தற்கால இலக்கியத்தின் உ.வே.சா. என்று சிட்டியைச் சொல்லலாம்.

விருப்பு வெறுப்பில்லாமல் பரந்த பார்வையுடன் எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் மதிப்புக் கொடுத்து அவை பற்றிய தகவல்களைப் பதிவு செய்தவர் அவர். மணிக்கொடி எழுத்தாளர்களையும் அவரால் பாராட்ட முடிந்தது (சிட்டியே மணிக்கொடி எழுத்தாளர்தான்). அண்ணாவின் "செவ்வாழை' சிறுகதையையும் சிறந்த சிறுகதை என்று அவரால் பட்டியலிட முடிந்தது. அவரது படிப்பறிவு பிரமிக்கவைக்கும் அளவு அசாதாரணமானது. மூச்சு விடுவது, படிப்பது இரண்டுமே அவருக்கு உடலோடு ஒட்டியிருந்தன.

இணைந்து எழுதிய படைப்பிலக்கியம் அல்லாத நூல்கள் தவிர, தனியே படைப்பிலக்கியமாகவும் படைத்தவர் அவர். அவரது "அந்திமந்தாரை', "தாழை பூத்தது' ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகள், "கவிதையாம் கவிதை', "காதலுக்கு விடுமுறை' முதலிய கவிதைத் தொகுதிகள் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. கவிதையில் அதிகத் தேர்ச்சியை அவர் காட்டியதாகச் சொல்ல முடியாவிட்டாலும், சிறுகதைகளில் அவரால் கூடுதல் கலைநேர்த்தியைப் புலப்படுத்த முடிந்தது. "மண்ணாங்கட்டி', "சில விஷயங்கள் இன்னும் சில விஷயங்கள்' போன்ற கட்டுரை நூல்களையும் பல மொழிபெயர்ப்பு நூல்களையும் படைத்தவர்.

பழைய இலக்கியத்திலும் நாட்டமுள்ளவர். சிலப்பதிகாரக் காப்பியத்தை ஆய்வுசெய்து, "கண்டெடுத்த கருவூலம்' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார். சிவபாதசுந்தரத்தின் உதவியோடு, முதல் கவிதை நாவலான "ஆதியூர் அவதானி' என்ற படைப்பை வெளிக்கொண்டு வந்தவர்.

பி.எஸ்.ராமையா, சிதம்பர சுப்பிரமணியன், க.நா.சு., கொத்தமங்கலம் சுப்பு, தீபம் நா.பார்த்தசாரதி, சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன் போன்ற முன்னோடி எழுத்தாளர்களின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவர்.

தி.ஜானகிராமன் என்ற அற்புதமான எழுத்தாளர் தமிழுக்குக் கிடைத்ததற்குச் சிட்டியும் ஒரு காரணம். தன்னை ஊக்குவித்தவர் சிட்டி என்று தி.ஜா. பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். சிட்டி, வானொலியில் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். அய்யம்பேட்டையில் பள்ளி ஆசிரியராயிருந்த தி.ஜானகிராமன், வானொலிப் பணிக்கு வந்துசேர்ந்ததற்கும் கூட சிட்டிதான் காரணம்.

தி.ஜா. பற்பல சித்தர்களைத் தேடித் தேடி நடந்தவர். சிட்டியோ சித்தர்களில் எல்லாம் பெரிய சித்தர் காஞ்சிப் பரமாச்சாரியார் என்று நிறைவடைந்து விட்டவர். பரமாச்சாரியாரின் பரம பக்தரான சிட்டி, தம் குருவைக் குறித்து ஓர் ஆங்கில நூலும் எழுதியுள்ளார்.

ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழி எழுத்தாளரான சிட்டியின் இன்னொரு குறிப்பிடத்தக்க ஆங்கில நூல், தீரர் சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு. சத்தியமூர்த்தியின் புதல்வி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்திய "வாசகர் வட்டம்' என்ற பதிப்பகத்திலிருந்து பல நல்ல தமிழ் நூல்கள் வெளிவந்ததற்கு சிட்டியின் யோசனைகளும் ஒரு காரணம்.

சிட்டி ஆங்கில எழுத்தாளர் உட்ஹவுசின் பரம ரசிகர். உட்ஹவுஸ் தனக்கு எழுதிய பதில் கடிதம் ஒன்றை பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.

சிட்டிக்குக் கடிதம் எழுதுவதில் அலாதிப் பிரியம். அவர் எழுத்தாளர் கிருத்திகாவுக்கு எழுதிய இலக்கியக் கடிதங்கள் எல்லாம் எண்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் எழுதி அனுப்பப்பட்டவை. அந்த மிக நீண்ட கடிதங்களுக்கு கிருத்திகாவும் அதே நீளத்தில் பதில் எழுதிவந்தார். அந்தக் கடிதங்கள் புத்தகமானால் அது ஓர் இலக்கியப் பொக்கிஷமாக அமையும். காவேரி என்ற பெயரில் எழுதும் லெட்சுமிகண்ணனுக்கும் சிட்டி தொடர்ந்து கடிதங்கள் எழுதிவந்தார்.

சிட்டியை ஒரு "தகவல் பெட்டகம்' என்று சொல்லலாம். பழைய தகவல்கள் பலவற்றை அறிவதற்காக நிறைய ஆய்வாளர்கள் அவரை வந்து சந்திப்பதுண்டு. அவர் இல்லம், அவரைத் தேடி வரும் ஆய்வாளர்களாலும் தற்கால இலக்கியப் படைப்பாளிகளாலும் எப்போதும் நிறைந்திருந்தது.

சிட்டிக்கு சங்கீதத்திலும் மிகுந்த நாட்டமுண்டு. "மோகமுள்' எழுதிய தி.ஜா.வை அவர் கொண்டாடியதற்கு அவரது இந்த சங்கீத நாட்டமும் ஒரு காரணமாகலாம். சிட்டி மதுரை மணியின் பரம ரசிகர். ரசிகர் என்று சொல்வதை விடவும் மதுரை மணியின் பரம பக்தர் என்றே சொல்லலாம்.

"சாதாரண' ஆண்டில் (தமிழ் வருடம்) பிறந்த சிட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ் எழுத்தாளரும் சிட்டியின் உறவினருமான நரசய்யா "சாதாரண மனிதன்' என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார்.

சிட்டியின் அதிர்ஷ்டங்களில் ஒன்று அவரது குடும்பம். அவரது மனைவி ஜானகியும் அவரது ஐந்து புதல்வர்களும் ஒரு புதல்வியும் இன்னும் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரின் அபார மேதைமையை மதித்தார்கள். சிட்டியின் புதல்வர்கள், புதல்வி, பேரன், பெயர்த்தி போன்ற பலரும் கூட ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் எழுதும் எழுத்தாற்றல் உடையவர்கள். சிட்டியின் மூத்த புதல்வர் விஸ்வேஸ்வரன், கு.சின்னப்ப பாரதியின் நாவல்கள் உள்படப் பல தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மொழி பெயர்ப்பாளர்.

சிட்டி 2000-இல் தம் 96-ஆம் வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து காலமானார். அதன் பின் ஓராண்டுக்கு மாதந்தோறும் சிட்டி குடும்பத்தினர் இலக்கிய விழா எடுத்துத் தங்கள் தந்தையை நினைவு கூர்ந்தார்கள். அமரர் சிட்டிக்கு இப்போதும் ஆண்டுக்கொரு முறை அவரது குடும்பத்தினர் விழா எடுக்கிறார்கள்.

அடக்கம், கடின உழைப்பு, விருப்பு வெறுப்பில்லாத பண்பு, அபார மேதைமை ஆகியவற்றையெல்லாம் தனித்தனியே நினைவுகூரத் தேவையில்லை. சிட்டி என்ற ஒரே ஓர் எழுத்தாளரை நினைவு கூர்ந்தால், அந்தப் பண்புகள் அத்தனையையும் நினைவு கூர்ந்ததாகத்தான் பொருள்.

[ நன்றி: தினமணி ]

பி.கு.

கேள்வி: மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது,  மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்  சென்னை ரேடியோவில் என்ன பாடிக் கொண்டிருந்தார்?

பதில்: சிட்டியின் வலைப்பூ -வைப் படித்து அறிக!

தொடர்புள்ள பதிவுகள்:

'சிட்டி' சுந்தரராஜன்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மஞ்சரி-யில் சிட்டி அவர்களின் எழத்தோவியங்களைப் படிக்கும் வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கும் இவ்வரிய செய்திகளைப் பதிவு செய்த தங்களுக்கும் தமிழுலகம் கடப்பாடுடையது.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி. மஞ்சரியை நான் படிக்காததால் இந்த வாய்ப்புக் கிட்டவில்லை.