திங்கள், 5 செப்டம்பர், 2016

ஐயன்பெருமாள் கோனார்

ஐயன்பெருமாள் கோனார் 

செப்டம்பர் 5. ஆசிரியர் தினம்.



பள்ளியில் நான் ‘பார்த்த’ , இன்றும் போற்றுகின்ற ஆசிரியர்கள் பலர்; ஆனால், நான் பார்க்காத ஆசிரியர் ஒருவரும் இருந்தார். அவர்தான் ‘கோனார் நோட்ஸ்’ எழுதிய திரு ஐயன்பெருமாள் கோனார்.

பிறகு, நான் பள்ளிப் படிப்பை முடித்தபிறகுதான் அவருடைய படத்தைப் பார்த்தேன்!

ஆனந்த விகடன் 1957-இல் ‘ஆசிரிய ரத்தினங்கள்’ என்ற தொடரில் பல ஆசிரியர்களின் படங்களையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் இட்டது.

 விகடன் பொக்கிடத்தில்  இதைப் பற்றி உள்ள குறிப்பு:

ழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! மாணவர்களுக்குக் கல்வியறிவோடு ஒழுக்கத்தையும் போதித்து அவர்களை நல்லதொரு குடிமகனாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள்தான் வருங்கால சமுதாயத்தின் ஆணி வேர். அப்படித் தன்னலமற்ற சேவை மனப்பான்மையோடு கல்விப் பணி ஆற்றிய ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை 'ஆசிரிய ரத்தினங்கள்' என்னும் தலைப்பில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது விகடன். அவர்களைக் கோட்டுச் சித்திரமாக வரைந்து நம் முன்னே கொண்டு நிறுத்தியவர் இறையருள் ஓவியர் சில்பி. 

இங்கே படத்தில் இருக்கும் ஆசிரிய ரத்தினம் திரு. ஐயன் பெருமாள் கோனார். திருச்சி ஜோஸப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் கொண்டு வந்ததுதான் பிரபல 'கோனார் நோட்ஸ்'.


http://www.badriseshadri.in/2005/09/15-2-1920-1-9-2005.html
-இலிருந்து மேலதிகத் தகவல்:

செயிண்ட் ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில்தான் ஐயன்பெருமாள் கோனார் என்பவர் தமிழாசிரியராக இருந்துவந்தார்.

கோனார், 1937-ம் ஆண்டு முதல், பதினோராவது வகுப்புக்கு "எக்ஸ்பிளனேட்டரி தமிழ் நோட்ஸ்" என்ற பெயரில் ஒரு தமிழுரை எழுதி முதலில் தாமாகவும் பின் சில பதிப்பாளர்கள் மூலமும் வெளியிட்டு வந்தார். ஆனால் 1943-44(?) சமயத்தில் கோனாருக்கும் பதிப்பாளருக்கும் பண விஷயத்தில் பிரச்னை. இதனால் கோனார் பிரிந்து பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக கோனார் உரைகளைப் பதிப்பிக்க முடிவு செய்தார்.

தொடர்ந்து பழனியப்பா ஆங்கிலப் பாடத்துக்கும் நோட்ஸ் கொண்டுவந்தார். ஆனால் நாளடைவில் கோனார் தமிழுரை - கோனார் நோட்ஸ் தமிழகம் முழுவதும் பெரியதொரு பிராண்ட் ஆனது. ஒவ்வொரு வகுப்புக்கும் தமிழ்ப் பாடத்துக்கு உரை வந்தது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் செல்வத்தை ஈட்டித்தந்தது.

பழனியப்பா பிரதர்ஸ் 1946-ல் சென்னைக்குப் பெயர்ந்தது. 1969-ல் ஐயன்பெருமாள் கோனார் இறந்தார்.

இணையத்தில் கண்டது:


திரிசிரபுரம் அர்ச் சூசையப்பர் கலாசாலைத் தமிழாசிரியர் உயர் திருவாளர் வித்துவான் திரு. ஐயன்பெருமாள் கோனார்  அவர்கள் பாடியவை. 

அறுசீர் விருத்தம்:

சீர்சான்ற வேதசிவா கமங்களினுண் மைப்பொருள்சேர்
    செவ்வி வாய்ப்ப 
ஏர்சான்ற மனக்குறைக ளிவையெனமேற் கோள்நிறுவி
   யெவரு மெச்ச . - -
நேர்சான்ற வேல்முருகன் முறையீடாச் செப்புமிந்நூ
   னெறியிற் றந்தான்
பேர்சான்ற திரிசிரமா புரம்வாழும் முனிசாமிப்
  பெரியோன் மாதோ,

இப்பெரிய நூலதனை வாசிப்போர் தமிழ்மொழியி
   னேற்றத் தோடே .
ஒப்பரிய மயில் வீரன் அருள்பெற்று நலந்திகழு
   முயர்வு கொண்டு –
செப்பரிய நான்மறையி லாகமத்திற் சாத்திரத்திற்
  சிறக்கக் கூறும்
மெய்ப்பொருளி னுண்மையுணர்ந் துயர்ஞானச் செல்வர்களாய்

  விளங்கு வாரே. . - .

ஒரு பிரபலமான குறும்பா:

வள்ளுவரும் மாணவராய் ஆனார்.
திருக்குறளில் தேர்வெழுதப் போனார்
முடிவு வெளியாச்சு...
அந்தோ ஃபெயிலாச்சு…
பாவம் அவர் படிக்கவில்லை கோனார்!


[ நன்றி : விகடன் ] 

கருத்துகள் இல்லை: