செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தி.ஜானகிராமன் - 3

கங்கா ஸ்நானம்
தி.ஜானகிராமன் 



தி,ஜா. விகடன் தீபாவளி மலர் ( 1956) -இல் எழுதிய கதை.
====

[ விகடன் - 56 தீபாவளி மலர் ] 


கங்கா நதி சுழித்து ஓடுவதைப் பார்த்துக்கொண்டு நின்றார் சின்னசாமி. முக்கால் தென்னை உயரம் இருக்கும் போலிருந்தது கரை. அங்கு உள்ள மாடி வீட்டு விளக்கின் நீலவொளி மங்கலாக நீர் மீது விழுந்திருந்தது. நீருக்கும் ஊருக்குமாக அலைந்தது நினைவு. காசி, கங்கை என்ற பிரக்ஞை இல்லை அவருக்கு.
''ஏன்னா?''
''ம்..?''
''ரண்டு கும்மாணம் காவேரி இருக்குமாங்கறேன் அகலம்?''
''ம்ம், இருக்கும்.''
துரையப்பா சிரிப்பது போலிருந்தது அவருக்கு. ஒரு தடவை முதுகு உதறிற்று.

''இன்னும் அதையே நினைச்சிண்டிருக்காப்போலிருக்கு?'' என்று நீரில் கால் அலம்பிக் கொண்டே அவர் முகத்தைப் பார்த்தாள் அவள்.
''ம்?''
''ஸ்நானம் பண்ணலியா? எத்தனை நாழி நிக்கறது?''
''ம்ம்'' என்று படி இறங்கினார் அவர். ''காசிக்குப் போனாலும் கர்மம் விடாதும்பா! இவன் நமக்கு முன்னாடியே வந்து நிக்கறானே! நினைக்க நினைக்க ஆச்சர்யமா இருக்கு. அந்த மூவாயிரம் போக, மிச்சம் ஆயிரம் ரூபாதானே இங்கே நம்மைக் கொண்டு வந்திருக்கு. அக்காவுக்காக நாம இங்க வரவாவது? அவன் முன்னாடியே வந்திருக்கவா வது? தெய்வம்தான் 'என்ன பண்ணப் போறார், பார்ப்போம்'னு விளையா டறதா?''
''எனக்கும் ஒண்ணும் புரியத் தான் இல்லை. ஸ்நானத்தைப் பண்ணிப்பிட்டு யோசிச்சுக்கலாமே! ஜாகைக்காரர் கிட்ட சொல்லி, சாமானை எடுத்துண்டு, வேறு இடம் பார்த்துண்டு போயிட்டாப் போறது. கங்கா மாதா ஏதாவது வழி கொடுப்பா!''


லடக் லடக்கென்று ஒரு படகு ஓசையிட்டுக் கொண்டே கடந்து போயிற்று.
சின்னசாமி படிகளில் இறங்கி முழுகினார்.
''அப்பாடா, ஸ்படிகம் மாதிரி இருக்கும் ஜலம்'' என்று நீரைக் கையில் எடுத்து விட்டார். உடம்பு புல்லரித்தது. நீரின் தட்பம், சந்தர்ப்பங்கள் கேலி செய்கிற விசித்திரம் - இரண்டும்தான்!
சாமான்களை வண்டியிலிருந்து உள்ளே கொண்டு வைத்து, 'அப்பாடா' என்று உட்கார்ந்ததும், ஜாகைக்காரர் வந்து பேச்சுக் கொடுத்தார்.
''எந்த ஊர் உங்க ளுக்கு?''
''சவுக்கநத்தம்.''
''தஞ்சாவூர் ஜில்லாவா?''
''ஆமாம்!''
''எங்களுக்கும் தஞ்சாவூர் ஜில்லாதான், ஸ்வாமி! சொல்லிக்கிறதுக்கு இப்ப ஒண்ணு மில்லை. தாத்தா நாள்ளேருந்து காசி மனுஷாளாப் போயிட் டோம். சப்தலோகம் போனா லும் குலதெய்வம் போயிடுமோ? காசி க்ஷேத்ரம்தான். இப்ப காசிதான் ஊரு. அதுக்காக? குடும்ப தெய்வம் வைத்யநாதன் இல்லியோ?''
மூன்று நாள் அழுக்கை உடம்பிலிருந்து தேய்த்துக்கொண்டு இருந்த சின்னசாமிக்குச் சிரிப்பு வந்தது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் மடியில் வளர்த்த ஊரை நினைத்து நினைத்து ஜாகைக்காரர் மாய்ந்து போனதும் ஏங்கியதும்...



''போன தடவை வைத்தீஸ்வரன் கோயில், சீயாழி, மாயவரம், கும்ப கோணம், திருவாரூர்... ஒரு ஊர் விடலை. திருவாரூருக்குப் பக்கம் தானேய்யா, நேத்திக்கு வந்திருக்காரே, அவர் ஊரு?'' என்று பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த உதவிக்காரரைக் கேட்டார்.
''ஆமாம். விளாஞ்சேரியாமே! உங்களுக்குத் தெரியுமோ?'' என்று சோடா பாட்டில் மூக்குக் கண்ணாடியை நிமிர்த்திக்கொண்டே திரும்பினார் உதவிக்காரர்.
''விளாஞ்சேரியா? என் அக்காவை அந்த ஊரில்தான் கொடுத்திருந்தது. அவ பணத்திலேதான் ஸ்வாமி நாங்கள் காசிக்கு வந்திருக்கோம்...''
''அப்படின்னா இவரையும் தெரிஞ்சிருக்கும்...''
''யாரு?''
''நேத்திக்குக் காலமே வந்தார் பிரயாகையிலிருந்து! துரையப்பானு பேராம். கோயிலுக்குப் போயிருக்கார், பூஜை பார்க்க.''
''துரையப்பாவா?'' - தலையில் இடியைத் தள்ளினாற் போலிருந்தது சின்னசாமிக்கு.
''ம்.''
''கறுப்பா, ரெட்டை நாடியா?''
''ம்.''
''நெத்தியிலே... வலது நெத்தியிலே தழும்பு இருக்கோ?''
''அவரேதான்! ஸ்வாமி விஸ்வேஸ்வரருக்கு ராத்திரி பூஜை பார்த்துட்டு வந்துடுவார்.''
''ஹ்ம்.''
சின்னசாமிக்கு ஒன்றும் ஓட வில்லை. துரையப்பா சிரிப்பது போல் இருந்தது. பேய் மாதிரி சிரிப்பு. ''இவன் எங்கே வந்தான்? இங்கு வரவேண்டும் என்று எப் படித் தோன்றிற்று? அதுவும் நான் வரும்போதா? அதே ஜாகையா?'' என்று மனம் கேள்வி கேள்வியாகக் கேட்டுக் கலங்கிற்று.

கரையேறித் தலையைத் துவட்டிக்கொண்டு, பையிலிருந்து பட்டை எடுத்து உடுத்திக்கொண்டு, மீண்டும் இறங்கிக் காலை அலம்பி விபூதியைப் பூசிக்கொண்டு ஜபத்திற்கு உட்கார்ந்தார்.
அக்கா 'காசி... காசி...' என்று புலம்பிக்கொண்டே இருந்தாள். விளாஞ்சேரியில் அவள் புருஷனுடன் வாழ்ந்து, மூன்று வருஷம் குடித்தனம் நடத்திவிட்டு, நாலாவது வருஷம் பிறந்த வீட்டுக்குத் திரும்பிவிட்டாள். நல்லவேளையாக அப்பா, அம்மா இல்லை இந்த வேஷத்தைப் பார்க்க! எண்ணி ஏழு நாள் படுக்கையில் கிடந்தார் அவள் புருஷன். எட்டாம் நாள்...
காட்டு வழியில் அலைகிற புது ஆளைப்போல, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தாள் அவள். மூன்று வருஷம் வீட்டோடு முடங்கிக் கிடந்தவளை, 'துடைகாலி... துடைகாலி' என்ற அவமானத்தில் குன்றிக்கொண்டு இருந்தவளை, ஏக்கமும் நோயும் தின்று வந்த சுருக்கு...
புருஷனுக்கு இருந்த நிலத்தை விற்கச் சொன்னாள். அது நாலாயிரம் ரூபாயாக மாறி வந்தது.
முதல் நாள் வரையில் பிரக்ஞை இருந்தது.
''சின்னசாமி, நான் இப்படிக் கிடக்கிறது துரையப்பாவுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா வந்திருப்பார். அவருக்கு என்ன பாக்கி இவர் கொடுக்கவேண்டியது?''
கணக்குப் பார்த்ததில், மூவாயிரத்து நாற்பத்தேழு ரூபாய் என்று வந்தது.
''அவர்கிட்ட போய் தள்ளிக் கிள்ளிக் கேட்டு மன்றாட வாண்டாம். பைசாமாறா ஜாடாக் கொடுத்துவிடணும், தெரிஞ்சுதா?''
''உடம்பு தேறி வரட்டும், அக்கா! இப்ப என்ன அந்தக் கவலை?''
''தேறாதுடா, சின்னசாமி. எனக் குத் தெரியாதா? இந்தக் கடனைத் தீர்த்துக் கண்ணாலே பாத்துட்டுப் போயிடலாம்னு நெனச்சேன். நடக்கலே. கொண்டு கொடுத்துடு!''
''சரி.''
''அப்புறம்... காசி... காசின்னு கோட்டை கட்டிண்டிருந்தேன். அதுவும் நடக்கலே. நீயும் அவளுமாப் போய் கங்கா ஸ்நானம் பண்ணிப்பிட்டு என்னையும் நினைச்சிண்டு - ஆமாம்... ரயில் சார்ஜ், க்ஷேத்ரச் செலவு எல்லாம் இதிலேருந்து எடுத்துக்கவேண்டியது. நீ ஒரு பைசா உன் கையி லேருந்து போடப்படாது...''
மறுநாள், வீட்டில் ஒரு நபர் குறைந்துவிட்டது. அர்த்தமில்லாமல் பிறந்து, வாழ்ந்து, மடிந்து... புருஷன் வாங்கின இந்தக் கடனைத் தீர்க்கத்தான் பிறந்தாயா?
ஒரு மாதம் கழித்து, மூவாயிரத்துச் சொச்சத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார் சின்னசாமி.
விளாஞ்சேரிக்குப் போகும்போது அஸ்தமித்துவிட்டது. குளு குளுவென்று காற்று. துரையப்பா வீட்டுத் திண்ணையையும் வாச லையும் பார்த்துக்கொண்டே யிருக்கவேண்டும் - வழவழவென்று... சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார் துரையப்பா.
''யாரு?''
''நான்தான்.''
ஆளோடிக்கு மேல் அரிக்கேன் விளக்கு தொங்கிற்று.
''நான்தான்னா..?''
''சின்னசாமி.''
''அட, சின்னசாமியா?''
''ஆமாம், மாமா!''
''வா, வா, எப்ப வந்தே?''
''இப்பதான்.''
''என்னடாது? சுந்தராம்பா...''
''ஆமா! அவ்வளவுதான் பிராப்தம்.''
''என்ன உடம்புக்கு?''
''உடம்பு என்ன? ஏக்கம் தான்!''
''த்ஸ... என்னமோ போ! அவனும் கொடுத்து வைக்கல்லே, நீயும் கொடுத்து வைக்கல்லே...''
அரை மணி, ஊர்ப் பேச்செல்லாம் பேசினார்கள்.
''எங்கே இப்படி இவ்வளவு தூரம்?''
''கணக்குத் தீர்க்கலாம்னு வந்தேன், மாமா.''
''ஆமாம். பிரமாதக் கணக்கு!''
''முத நாள் கூப்பிட்டு கணக்கெல்லாம் பார்க்கச் சொன்னா அக்கா. கடனோட போறமேனு அவளுக்குக் குறைதான்.''
''த்ஸ... பிரமாத கடன்!''
''மூவாயிரத்து நாற்பத்தேழு ஆயிருந்தது அப்ப.''
''ம்.''
''அப்புறம் ஒரு மாசம் ஆயிருக்கே?''
''ஆமா, ஒரு மாச வட்டியிலே இன்னொரு கிராமம் வாங்கப் போறேன். அசடு! பணம் கொண்டு வந்திருக்கியா என்ன?''
''ஜாடா கொண்டு வந்திருக்கேன், மாமா.''
''இதுக்காகவா வந்தே இவ்வளவு தூரம்? ஒரு லெட்டர் போட்டா நானே வந்து வாங்கிண்டு போகமாட்டேனா... நன்னா அலைஞ்சே, போ!''
''அழகாயிருக்கே! நான் வந்து கொடுக்கிறது, மரியாதையா...''
''சரிடா சரி, காலமே வரவு வச்சுக்கலாம், போ.''
''அப்ப பணத்தை வாங்கி வெச்சுக்குங்கோ. காலமே வரவு வச்சுக்கலாம். நானே இங்கதான் படுத்துக்கப் போறேன். காத்து கொட்றது இங்கே.''
''இப்ப என்னைக் கிளப்பணும் உனக்கு. ம்... சரி, கொடு.''
சின்னசாமி பணத்தைக் கொடுத்ததும், உள்ளே போய்ப் பூட்டி வைத்துவிட்டு வந்தார் துரை யப்பா.
''சரி, உள்ள வாயேன். கால் அலம்பிண்டு சாப்பிட்டுடலாம்.''
சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் நடுநிசி வரையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஊர் ஆறரை மணிக்கே தூங்கிவிடுகிற வழக்கம். சலசலப்பு கூட நின்றுவிட்டது. சுவர்க்கோழி மட்டும் கத்திற்று. மாட்டு மணி எங்கோ ஒலித்தது. எங்கோ குழந்தை அழுதது.
திண்ணையில் படுக்க ஒரு ஜமக்காளத்தையும் தலையணையையும் கொடுத்துவிட்டு, கதவைத் தாழிட்டுக்கொண்டு போனார் துரையப்பா. சின்னசாமி படுத்துக் கொண்டார். நினைவு அலைந்தது. துரையப்பா பெரிய மனுஷன், பெரிய மனுஷன்தான்! எவ்வளவு மரியாதை... விட்டுக் கொடுக்கிற தன்மை... சாயங்காலம் சின்னசாமி பஸ்ஸிலிருந்து விளாஞ்சேரி முக்கில் இறங்கி வந்தபோது, துரையப்பாவின் அன்னதானத்தைப் பற்றித்தான் யாரோ பேசிக் கொண்டு இருந்தார்கள். யார் எப்போது போனாலும் துரையப்பா வீட்டில் சாப்பாடு கிடைக்குமாம்.
ஜிலுஜிலுவென்று வீசின காற்று கூட நின்றுவிட்டிருந்தது. சின்னசாமி அயர்ந்துவிட்டார்.
காலையில் முறுக முறுக வார்த்துப் போட்ட தோசை நாலு. கடைசித் தோசைக்குத் தயிர். ஏன் என்று கேட்கிற காபி. எல்லாம் முடிந்து கூடத்திற்கு வந்தால், வெயில் தெரியாத ஜிலுஜிலுப்பு. வெயில் தெரியாத தரை. சின்னசாமிக்கு நெஞ்சு குளுகுளுவென்றது.
துரையப்பா உள்ளேயிருந்து பத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து எதிரே உட்கார்ந்து மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண் டார். பத்திரத்தைப் பார்த்தார். கணக்குப் போட்டுவிட்டு நிமிர்ந் தார்.
''வரவு வச்சுப்பிடலாமா?''
''ம்'' என்றார் சின்னசாமி.
''பணத்தை எடு.''
''நீங்கதானே வச்சிருக்கேள்?'' என்று, அவர் எங்கோ நினைத்துக் கொண்டு பேசுகிறதைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் சின்னசாமி.
''நான் வச்சிருக்கேனா?''
''ஆமாம், மாமா! ராத்திரி வாங்கி வச்சேளே?''
''என்ன வாங்கி வச்சேன்?''
''என்ன மாமா இது? மூவாயி ரத்து நாற்பத்தேழு கொடுத்தேனே! சேப்புக் கடுதாசியிலே, கனக் கடுதாசியிலே பொட்டணமா கட்டியிருந்துதே?''
''என்னடா சின்னசாமி விளையாடறே, பச்சைக்குழந்தை மாதிரி!''
''விளையாடறேனா? என்ன மாமா இது?''
''மாமாவாவது, மருமானாவது? எடுடா, நாழியாச்சு! நான் களத்துக்குப் போகணும்.''
''பீரோவைத் திறந்து பாருங்கோ, மாமா!''
''என்னடா இது, பணம் கொண்டு வரலையா நீ?''
சின்னசாமிக்கு வயிற்றைக் கலக்கிற்று. மாமா சும்மாவாவது விளையாடுகிறார் என்ற நினைவும் போகவில்லை.
''எடுத்துண்டு வாங்கோ, மாமா!''
''என்னடா, எடுத்துண்டு வாங்கோ, எடுத்துண்டு வாங்கோன்றியே... விளையாட்டு வேடிக்கைக்கு இதுவா நேரம்?''
''மாமா, நிஜமாவா சொல்றேள்?''
''சரி, நான் எழுந்து போகட்டுமா? எனக்கு வேலை இருக்கு.''
''மாமா... மாமா..!''
''நல்ல மாமா, போடா!''
சின்னசாமிக்குப் பகீர் என்றது.
''சேப்புப் பொட்டணம், மாமா...''
''சரிடா, ரயில்லே வந்தியோ, பஸ்ஸிலே வந்தியோ?''
''பஸ்ஸிலே!''
''எங்கே வச்சிண்டிருந்தே?''
''பையிலே..! ஜாக்கிரதையா வச்சுண்டு, உங்ககிட்டே கொடுத்தேனே! காலமே வரவு வச்சுக்கலாம்னு சொல்லி, நீங்க கூட 'என்னைக் கிளப்பணும் உனக்கு'னு சொல்லிண்டே வாங்கி உள்ளே கொண்டு பூட்டி வச்சேளே?''
''அடப் பாவி! நெஜம் மாதிரி சொல்றயே!'' என்றார் துரையப்பா. பேயறைந்தாற்போலிருந்தது அவர் முகம். ''இங்க வந்து பார்டா பாரு... உடம்பெல்லாம் கூசறதே எனக்கு...'' என்று உள்ளே போய் பீரோவைத் திறந்து போட்டார். இருப்புப் பெட்டியைத் திறந்து போட்டார். பெட்டிகளைத் திறந்து போட்டார். ''பார்றா, பாரு.... உன் கண்ணாலே பாரு.''
மண்டையில் ஓங்கி அடித்தாற் போல நின்றார் சின்னசாமி. அம்மாமியிடம் சொன்னார். வெளியே ஓடினார். கணக்குப் பிள்ளை, பட்டாமணியத்திடம் முறையிட்டார். நாக்கு உலர, உதடு துடிக்க, உடல் நடுங்கிற்று. ஊரில் இருக்கிற ஏழு ஆண்களும் வந் தார்கள். துரையப்பா பைத்தியம் பிடித்தாற்போல உட்கார்ந்திருந்தார் சாய்வு நாற்காலியில்! கூடத்திலுள்ள அலமாரிகள் திறந்து கிடந்தன. துணிகளும் பாத்திரங்களும் வெளியே கிடந்தன. யாரும் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.
''என்ன மாமா? என்னமோ சொல்றானே இவன்!'' என்றார் பட்டாமணி.
''என்னமோ விளையாடறான்னு நெனச்சேன் முதல்லே. நிஜம் நிஜம்னு சத்யம் பண்றான். எனக்கு இடி விழுந்தாப்ல ஆயிடுத்து. உக்காந்துட்டேன். நீங்க வீடு முழுக்கச் சோதனை போட்டுடுங்கோ.''
கர்ணமும் பட்டாமணியமும் எல்லாவற்றையும் மீண்டும் விசாரித்தார்கள். சின்னசாமி வாய்விட்டு அழுதுவிட்டார்.
''நீங்க இப்படி மோசம் பண்ணு வேள்னு நினைக்கலே, மாமா'' என்று குரல் கம்மித் தழுதழுத்தார் சின்னசாமி.
''அடப் பாவி! வாய் அழுகிப் போயிடும்டா! அன்னதாதாடா! மகான்டா! மலை மலையா அன்னத்தைக் கொட்டியிருக்கார் மனுஷன். சொல்லாதேடா!'' என்றார் கணக்குப் பிள்ளை.
தொலைவில் இருளில் கங்கைப் பாலத்தில் ரயில் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தது. அயலூரிலிருந்து வந்து விளாஞ்சேரியில் இப்படி மாட்டிக்கொண்டு... யார் யாரிடமோ முறையிட்டு, அழுது, கெஞ்சி... எது பலித்தது?
துரையப்பா கோர்ட் ஏறிவிட்டார். ஜட்ஜ் தீர்ப்பு செய்த லக்ஷணம்... வட்டியில்லாமல் முதலாவது கொடுத்துவிடுவது என்று ராஜியாகப் போகச் சொல்லி... அதற்கு மாட்டேன் என்று சொன்னபோது, முழுவதற்கும் செலவு உள்பட தீர்ப்புக் கூறி விடுவதாக அவர் பயமுறுத்தி... கடைசியில் ராஜிக்கு ஒப்புக்கொண்டு, தம் சொந்தப் பணத்தைக் கொடுத்து...
''நாலு வருஷமாகிவிட்டது இந்த நாடகம் எல்லாம் நடந்து! அக்காவின் இரண்டாவது ஆசையை நிறைவேற்றி விடவேண் டும் என்று வந்தால், தெய்வம் முதல் நாளே, அதுவும் அதே ஜாகையில் இவனை இறக்கிச் சிரிக்கிறதே...'' என்று சிந்தனையில் லயித்தார் சின்னசாமி.
''போகலாமா?'' என்று எழுந்தாள் மனைவி.
''ம்.''
சின்னசாமி எழுந்தார். இரண்டு படி ஏறியதும், ''இரு, நான் ஜபமே பண்ணவில்லை. துரையப்பாவை நினைத்து நினைத்து குரோதப்பட்டுண்டே இருந்தேன்'' என்று மீண்டும் இறங்கி ஸ்நானம் செய்தார். ''அவன் பாவத்துக்கும் சேர்த்து முழுக்குப் போடுங்கோ'' என்றாள் அவள்.
கரையேறி வரும்போது... ''அவரைப் பார்த்து பழசெல்லாம் கிளற வாண்டாம். 'உன் பாவத் துக்கும் முழுக்குப் போட்டுட்டேண்டா'ன்னு நினைச்சுண்டு சாதாரணமா பேசுங்கள். அவர் இன்னும் கோயில்லேருந்து வரலேன்னா, மூஞ்சியிலே முழிக்கிறதுக்கு முன்னாடி வேற ஜாகைக்குப் போயிடுவோம்'' என்றாள்.
''எப்படியிருக்கோ, வா பார்க்கலாம்'' என்று வடக்கே கண்ணைத் திருப்பி, ஒளிவீசும் ஸ்நான கட்டங்களைப் பார்த்துக்கொண்டு படியேறினார் சின்னசாமி.

[ நன்றி : விகடன்; ஓவியம் : ஸாரதி, கோபுலு ]
====
தொடர்புள்ள பதிவுகள்:

தி.ஜானகிராமன்

3 கருத்துகள்:

இராய செல்லப்பா சொன்னது…

எப்பேர்ப்பட்ட எழுத்துச் சிற்பி தி.ஜானகிராமன்! தமிழனாய்ப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். காவிரி தந்த எழுத்துலக ஜாம்பவான்களில் தி.ஜா.வுக்கு என்றும் கம்பீரமான இடம் உண்டு. நினைவுபடுத்திய தங்களுக்கு மிக்க நன்றி!
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Babu சொன்னது…

அருமையான அழகான எழுத்து நடை. பகிர்ந்ததிற்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.- பொன்மலை பாபு