ஞாயிறு, 22 அக்டோபர், 2017

877. அ.மாதவையா - 1

தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர்: அ.மாதவையா 10
ராஜலட்சுமி சிவலிங்கம்


அக்டோபர் 22. அ.மாதவையாவின் நினைவு தினம்.
=====

முன்னோடி தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா (A.Madhaviah)  பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் (1872) பிறந்தார். அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதல் மாணவராகத் தேறி, அக்கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார்.

* நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியில் 3 ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.

* உப்பு சுங்க இலாகா தேர்வில் முதலிடம் பெற்றவர், ஆந்திராவின் கஞ்சம் மாவட்டத்தில் உப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பணி நிமித்தமாக குதிரையில் பல மைல்கள் பயணம் செய்வார். குதிரை சவாரி மிகவும் பிடிக்கும்.

* கடமை வீரர், கடும் உழைப்பாளி, கொடையாளி, நகைச்சுவை உணர்வு உடையவர். ‘மாதவையா களங்கமற்ற அதிகாரி. ஒரு எலுமிச்சை பழத்தைக்கூடக் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டார்’ என்பார்களாம் சக ஊழியர்கள். கர்னாடக சங்கீதம், நாட்டுப்புற இசை இரண்டையும் விரும்பிக் கேட்பார்.


* இவர் பணியாற்றிய பல ஊர்களில் மருத்துவ வசதி கிடையாது என்பதால், தன் பிள்ளைகளுக்கு இவர்தான் குடும்ப வைத்தியர். மருத்துவப் புத்தகம், முதலுதவிப் பெட்டி, மருந்துகள் எந்நேரமும் அவரது வீட்டில் இருக்குமாம்.

* தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். தெலுங்கும் தெரியும். 20 வயது முதல் பத்திரிகைகளுக்கு எழுதினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். சங்க இலக்கியம் முதல் அனைத்து செவ்வியல் படைப்புகள், அரிய ஆங்கில இலக்கிய நூல்கள் என ஒரு நூலகம் வைக்கும் அளவுக்கு நூல்களை சேகரித்திருந்தார்.

* இவரது நண்பர் சி.வி.சுவாமிநாத ஐயர் தொடங்கிய ‘விவேக சிந்தாமணி’ பத்திரிகையில் ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடரை எழுதினார். இது 1903-ல் ‘முத்துமீனாட்சி’ என்ற நாவலாக வெளிவந்தது. தனது புகழ்பெற்ற ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலின் முதல் 2 பகுதிகளை 1898-1899ல் எழுதினார். 1924-ல் எழுதத் தொடங்கிய 3-ம் பாகம் முழுமை அடையவில்லை.

* ‘இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடலுக்காக பாரதிக்கு 2-ம் பரிசு கிடைத்தது.

* ‘பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையை 1925-ல் தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள், ஏராளமான கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.


* சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.

[ நன்றி : tamil.thehindu.com  ]

தொடர்புள்ள பதிவுகள்:
அ. மாதவையா: விக்கி

கருத்துகள் இல்லை: